April 28, 2009

நன்றி நன்றி நன்றி!!!

இன்று யதேச்சையாக மின்னஞ்சல் பார்த்த போது தான் இரண்டு பின்னூட்டங்கள் வந்திருப்பது தெரிந்தது. யாரது நம்ம பதிவுக்கு இவ்வளவு நாள் கழித்து பின்னூட்டியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே மின்னஞ்சலைத் திறந்தேன். ஆனந்த அதிர்ச்சி(கள்)! 


பதிவர் லவ்டேல் மேடி அவர்கள் தனது பட்டாம்பூச்சி விருதினை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். "என்னையும் நம்பி..." வசனம் தான் நினைவுக்கு வந்தது. லவ்டேல் மேடி அவர்களுக்கு நன்றி. 

அடுத்த பின்னூட்டம் கிருஷ்ண பிரபு அவர்களிடமிருந்து. வலைச்சரத்தில் அறிமுகப் பதிவராக என் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்றார். ஆம்! பதிவர் அப்பாவி முரு அவர்கள் தனக்குப் பிடித்த பதிவுகளில் ஒன்றாக் எனது பதிவையும் அறிமுகப் படுத்தியிருந்தார். அப்பாவி முரு அவர்களுக்கு நன்றி.

இவர்களின் அங்கீகாரங்கள் மேலும் (ஒழுங்காக..:) ) எழுத உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

விருதளித்த லவ்டேல் மேடி,  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அப்பாவி முரு, தெரியப்படுத்திய கிருஷ்ண பிரபு ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாசித்தும், பின்னூட்டியும் ஊக்கமளித்த அனைத்து நல்லியதயங்களுக்கும் எனது நன்றிகள்!

{}

சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அது இரட்டிப்பாகிறது. அதுவும் அங்கீகாரத்துடன் கூடிய சந்தோஷத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதனால், இந்த பட்டாம்பூச்சி விருதையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் நண்பர் தமிழ்ப்பறவை அவர்களுடன்.

April 24, 2009

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இலங்கை அரசை கோர வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை மறுபடியும் மத்திய அரசு அனுப்பியிருந்தது. எதற்காக? மத்திய அரசின் கவலையை இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லவாம்! தமிழனின் கவலையைச் சொல்ல ஒரு தமிழன் தூதுவனாக கிடைக்கவில்லையா? ஆனால் தமிழ்ப் பிரதிநிதிகளையும் அனுப்ப பயமாகத்தானிருக்கிறது! ஏனென்றால்,

* இங்கே முதலைக் கண்ணீர் சிந்தி கவிதை வடிப்பதும், மத்தியில் பம்முவதுமாய் மக்களை ஏய்த்தவர்களல்லவா நாம்?

* எம்.பிகள் அனைவரும் ராஜினாமா என்று பூச்சாண்டி காட்டி ஒரு சில நாட்களிலேயே அடங்கிப் போனவர்கள் தானே நாம்?

* ஆதரவாக இருப்போம் என்று தமிழர்கள் எதிர்பார்த்த நிலையில் "என்னால் சொல்லத் தான் முடியும்" என்று மனசாட்சியே இல்லாமல் பதிலிறுத்தவர்கள் அல்லவா நாம்?

* தமிழுணர்வு பேசியவர்களை, மத்தியை மகிழ்விப்பதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு கைது செய்தவர்கள் தாமே நாம்? 

* தேர்தல் நெருங்க நெருங்க, ஈழத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டிக்கொள்வதும், ஈழ மக்கள் ஆதரவிற்காக வேலை நிறுத்தம் செய்வதும், ஆனால் மதுக்கடைகளிலும், ஊடகங்களிலும் வேசித்தனமாக திருவிழா கொண்டாட்டங்கள் நடத்துவதுமாக போராடுபவர்கள் அல்லவா நாம்?  

* போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொல்லி திடீர் ஞானோதயமாக உண்ணாநிலை அறிவித்தவர்கள் அல்லவா நாம்?

* வாரிசின் பதவியைக் காப்பாற்ற, அங்கு ஆட்சியில் பங்கு வைத்துக் கொண்டே இங்கு அதை எதிர்த்த சிறந்த பொதுநலவாதிகளல்லவா நாம்? 

* ஈழ ஆதரவும் உண்டு, அதே சமயம் நான்கு சீட் ஐந்து சீட் என்ற பேரமும் உண்டு என்று இரட்டை வேடம் பூண்ட மாபெரும் தமிழ் உணர்வாளர்கள் அல்லவா நாம்?

* எந்த கட்சியை பூண்டோடு ஒழிப்போம் என்று சபதம் போட்டோமோ அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும் தன்மானத் தமிழர்களல்லவா நாம்?

* மூன்றாவது சக்தியாக இருப்போம் என்ற நிலையில், மூச்சுக் கூட காட்டாமல் பதுங்கியிருந்த மாவீரர்களல்லவா நாம்? 

எப்படி அனுப்புவது?

காவிரிப் பிரச்சனைக்கு கூட ஒன்று சேர வேண்டாம். சொந்த இனம் செத்துக் கொண்டிருக்கும் போது கூடவா ஒன்று சேர முடியவில்லை? அப்படி என்ன தான் சாதிக்கப் போகிறீர்கள்? பாரத ரத்னா விருதா? ஆட்சிக் கட்டிலா? இல்லை கடற்கரையில் கல்லறையா? எதுவாக இருந்தாலும் வாரித்தருகிறோம். எங்களவர்களைக் காப்பாற்றுங்கள்!

April 22, 2009

பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் :)))

என் அண்ணன் மகள் திவ்யஸ்ரீயும், மாமா மகள் ஜீவிகாவும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். திவ்யாவிடம் "கண்ணு, ஜீவிகா அக்காவுக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்" என்றேன். திவ்யா முத்தம் கொடுக்கப்போகும்போது, ஜீவிகாவும் அவளைத் தான் சொல்கிறேன் என்று எண்ணிக்கொண்டு முத்தம் கொடுக்கப் போக... இந்த அழகிய காட்சியை நீங்களேபாருங்களேன்.


 

கொசுறு: 

ஜீவிகா மேடம் கரும்பு சாப்டறாங்க.



பின்நவீனத்துவ பிறந்தநாளும் இன்ன பிறவும்!

வெள்ளிக்கிழமை மதியம் மட்டும் அலுவலகத்திலிருந்து பொன்னுசாமிக்கு (சோழிங்கநல்லூர்) போய் சாப்பிடுவது வழக்கம். அப்படி போன வாரம் சென்று திரும்பும் போது வழியில் கண்ட ஒரு காட்சி மனதை உருக்கியது. ஒரு உணகவகத்தின் பெயர்ப் பலகையை கையில் பிடித்துக்கொண்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார் அதன் காவலாளி. எப்படியும் அவருக்கு அறுபது வயதிற்கும் மேலிருக்கும். சென்னையின் வெயிலைப் பற்றி வேறு சொல்லவே தேவையில்லை. அந்த உச்சி வெயிலில் பெயர்ப்பலகையை கையில் ஏந்தியபடி வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார் பெரியவர். பெயர்பலகையைக் கூட பொருத்த துப்பில்லாத அந்த கடை முதலாளிக்கு கிருமிபோஜனம் தான் என்று மனதார சபித்துகொண்டே வந்தோம்!

{}
 
நேற்று நண்பன் பரணிக்கு பிறந்த நாள். கொண்டாட்டங்கள் (?) அனைத்தும் வழமையான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் அஹிம்சை முறையில் நடந்து முடிந்தன.  எங்கள் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு என தனி வரைமுறைகள் இருக்கின்றன. பிறந்தநாள் கொண்டாடுபவனை கை கால்களை பின்புறம் கட்டி மண்ணில் போட்டு உதைக்க வேண்டும். உள்ளாடை நீங்கலாக மற்ற அனைத்தையும் கழற்றிவிட்டு அடி போட வேண்டும். துப்பாக்கி கழுவ வைத்திருக்கும் எண்ணெய் உட்பட கையில் கிடைக்கும் திரவங்கள் அனைத்தையும் வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். எங்கள் வகுப்பு பெண்கள் யாராவது ஒருவருக்கு தொ(ல்)லைபேசி காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள். கிட்டத்தட்ட இப்படி இருக்கும் 
 


இப்படி வழமையான நெறிமுறைகளை மீறி, சுய முரண்பாடுகளுடன் (எங்களுக்கு) கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழாவை பின் நவீனத்துவ பிறந்தநாள் என்றே கருதுகிறோம். :)

நோ நோ! இதுக்கெல்லாம் எதுக்கு கட்டைய தூக்குறீங்க? 

{}
மரியாதை திரைப்படத்தின் இந்த படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஒன்றுதோன்றியது.

{}

நியூட்டனோட தங்கமணி ஒருநாள் அவர்கிட்ட கேட்டாங்களாம் "ஏங்க, நான் எப்படி இருக்கேன்?" அப்படின்னு.

அதுக்கு அவர் சொன்னாராம்.  Tan C / Sin C

தங்க்ஸ்: அப்படின்னா ?

நியூட்டன் : Tan C / Sin C     =    (Sin C / Cos C)  / Sin C =   1/Cos C = Sec C

செக்சி!!!

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! 

குறிப்பு : எஸ் எம் எஸ்ஸில் வந்தது. திரிகோணவியல் அறிந்திராத நண்பர்கள் மன்னிக்க!

*****

April 19, 2009

இவிங்க எப்பவுமே இப்படித்தான்!!!

கல்லூரி இறுதி ஆண்டு. சேகர் தன் சொந்த ஊரில்(கரூர் அருகே ஓரு கிராமம்) திருவிழா என்று விருந்துக்கு அழைத்திருந்தான். விருந்து வெள்ளிக்கிழமை. அதே நாளில் Environmental Science தேர்வு வேறு இருந்தது. செமஸ்டர் தேர்வு இல்லையென்றாலும் இதன் மதிப்பெண்களை வைத்து தான் இன்டெர்னல் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். திருவிழாவா, மதிப்பெண்களா என்று யோசித்துப் பார்த்ததில் திருவிழாவும் அது சார்ந்த மகிழ்ச்சிகளுமே வென்றன. சரவணா, மணி, பரணி, தமிழ் மற்றும் நான் அடங்கிய குழு, சேகர் தலைமையில் புதனன்று மாலையே சேலத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கியது. எட்டு மணிவாக்கில் கரூர் வந்தடைந்தோம். சேகர் தங்கையும் அவள் கல்லூரியில் இருந்து கரூர் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். அனைவரும் சேகர் அப்பா காரில் அவர்கள் ஊருக்கு செல்வதென்று ஏற்பாடு. வந்தவர் சும்மா இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. "சாப்டீங்களா? " என்று கேட்டார். ஏன் அந்த வார்த்தையை கேட்டோம் என்று அவர் நிறைய தடவை வருத்தப்பட்டிருப்பார். நாங்கள் "இன்னும் இல்லை" என்றதும் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு தான் ஆரம்பித்தது எல்லாம்!

சூப் முதல் ஜூஸ் வரை ஒன்று விடாமல் கலந்து கட்டி அடித்தோம். பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த சேகரின் தங்கை எங்களை பார்த்த பார்வை மகா கேவலமாக இருந்தது. "விடுங்க பாஸ்! இவிங்க எப்பவுமே இப்படித்தான்" என்று நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேலையைத் தொடர்ந்தோம். ஒருவழியாக சாப்பிட்டு முடித்து கிளம்பி அவன் வீட்டை அடைந்தோம். அவன் அம்மா தான் வரவேற்றார். அவன் அப்பா செய்த அதே தப்பை அம்மாவும் செய்தார். "இட்லி வச்சிருக்கேன். சாப்டுங்கப்பா!". இந்த வார்த்தை போதாதா ? அடுத்த ரௌண்ட் ஆரம்பமானது. அம்மா மனம் நோகக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ஆளுக்கு ஐந்து இட்லி வீதம் சாப்பிட்ட எங்கள் நல்ல மனதை பாவம் அவன் தங்கை புரிந்து கொள்ளவேயில்லை. இப்பொழுது அவள் பார்வை கோபமாக மாறியிருந்தது. சாப்பிட்டுவிட்டு அவன் பாட்டியை சிறிது நேரம் கலாய்த்துவிட்டு உறங்கச்சென்றோம்.

காலை தீர்த்தம் எடுக்கும் சடங்கு என்று காவிரி ஆற்றிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு நாங்கள் போட்ட ஆட்டத்திற்கு பாட்டி எங்களை அடிக்காமல் விட்டது ஆச்சர்யம் தான்! பின் அங்கிருந்து கோயிலுக்கு! பூஜை முடிந்ததும் சாப்பாடு போட்டார்கள்! (ஐ! ஜாலி!). சாப்பிட்டுவிட்டு பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்த நிழற்கூடையில் அருமையான தூக்கத்தைப் போட்டோம்! 

அடுத்த நாள் தான் நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த விருந்து. 'சைவம் சாப்பிட்றவங்க அந்த வரிசையில் உட்காருங்க' என்ற என் நண்பனின் அம்மாவைப் பார்தது எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது! அசைவப் பந்தியில் அமர்ந்து கட்டு கட்டென்று கட்டிய எங்களை அவன் தங்கை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்டுகொள்ளவேயில்லையே! "மார்க்கெட்னு கூட பாக்கலியே" ரேஞ்சுக்கு சாப்பாடு உள்ளே போய்ய் கொண்டிருந்தது. வந்த நோக்கம் இனிதே நிறைவேறிய திருப்தியுடன் வெற்றிலையையும் போட்டுக்கொண்டு வெற்றி வீரர்களாய் வெளியே வந்தோம்! 

அன்று மாலையே சேலம் திரும்புவது என்று திட்டம். "அப்ப நாங்க கெளம்பறோம்மா" என்று அம்மாவிடம் நாங்கள் சொன்ன வார்த்தைகள்,  தங்கை காதில் தேனாய்ப் பாய்ந்திருக்க வேண்டும்! அப்படி ஒரு சந்தோஷத்துடன் திரும்பிப் பார்த்தாள்! அந்த பாசமலருக்கு நாங்களும் ஒரு "பை" சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தோம். வழியனுப்ப வந்த அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். "பார்த்து போங்கப்பா",  "பத்திரம்" என்று என்னென்னவோ சொன்னார்கள். ஆனால் கடைசி வரை ஒன்றை மட்டும் சொல்லவேயில்லை. "இன்னொரு வாட்டி கண்டிப்பா வரணும்ப்பா"

April 18, 2009

உடன்பிறப்பே...

தேர்தல் களேபரங்கள் ஆரம்பித்துவிட்டதல்லவா? இனி அரசியல் கட்சிகள் அடிக்கும் காமெடிக்கு அளவே இருக்காது. ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கு ஏற்ப காமெடி செய்வார்கள். அவற்றில் போன வாரம் நடந்தவற்றில் சில! 

* சுப்ரீம் ஸ்டார் : தேர்தலைப் புறக்கணிக்கத் தான் நினைத்தோம்.
(எப்பங்க? கூட்டணிக்கு ஆள் சிக்குவதற்கு முன்னேயா? ) 

* சந்திரபாபு நாயுடு : தீப்பெட்டி, சிகரெட் விலை ஏறிவிட்டதால் என் தம்பிகள் சிகெரெட் குடிக்க முடிவதில்லை!
(இத சொல்லியா ஓட்டு கேக்க போறீங்க ?)

* விஜய டி. ஆர் : எங்கள் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுவோர் பட்டியலை தயார் செய்துகொண்டிருக்கிறோம்.
(உங்க ஒரு ஆளுக்கு பட்டியல் எல்லாம் எதுக்கு சார்?)

* நவரச நாயகன் :  நான் விருதுநகரில் நிற்கிறேன்
(ஏனுங்க உங்க வீட்லயே நிக்கலாம்ல? எதுக்கு அங்க போறீங்க? ஓ! தேர்தல்லயா ? அப்ப சரி! )

தமிழ்க்குடிதாங்கி : பண பலத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று நினைக்கிறார்கள். கண்டெய்னர், கண்டெய்னராக பணத்தை கொண்டு வந்தாலும், விமானத்திலேயே பணத்தை கொண்டு வந்து கொட்டினாலும் தி.மு.க. அணி வெற்றி பெற முடியாது.
(ஐயையோ... அப்படியா? அப்ப ஐந்து வருடம் கழித்து என்ன செய்யப் போகிறீர்கள்? )

பொன்முடி :   85 வயதான காலத்திலும், சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருபவர் கருணாநிதி.
(உம்மோடு ஒரே நகைச்சுவையாய் இருக்கிறது போங்கள்)

* தங்கத்தாரகை : எந்தவித பயனுமின்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குச் சொந்தமானப் பணத்தை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
(சாமியோவ், நம்மோடதெல்லம் பத்திரமா இருக்குங்களா?)

* கலைஞர் :  உடன்பிறப்பே... 
(ஐயா, இருங்க கொஞ்சம் சிரிச்சுக்கறேன். இப்பெல்லாம் நீங்க இப்படி ஆரம்பித்தாலே சிப்பு வந்துடுது சிப்பு! )

இவை என் காதில் விழுந்தவை மட்டும் தான். இவற்றை விட பெரிய நகைச்சுவைகள் பல நடந்திருக்கலாம். அவற்றை பின்னூட்டுங்களேன்! 

April 12, 2009

கல்யாண சாவு

சீரங்கன் தாத்தா சம்சாரம் அருக்காணி பாட்டி இறந்து போய்விட்டார். வயிரம் பாய்ந்த கட்டை என்று சொல்வார்களே அந்த மாதிரி ஜீவன் அது. சில நாட்களாக இழுத்துக் கொண்டு கிடந்தது என்று பேச்சு.  கொள்ளுப் பேரன் கொள்ளுப் பேத்தி என்று கொஞ்சியாயிற்று. தாத்தா இருக்கும்போதே சுமங்கலியாய் போய்ச்சேர்ந்துவிட்டார். அதனாலேயே யாருக்கும் அதிகம் துக்கம் இல்லை, தாத்தாவைத் தவிர! கல்யாணச் சாவாம் அது. கொண்டாட வேண்டுமாம்.

தாத்தா பாட்டிக்கு ஐந்து மகள் ஒரு மகன். ஒவ்வொருவருக்கும் வாரிசுகள் இரண்டுக்கு குறையாமல். அவர்களின் மனைவி/கணவன்மார்கள், குழந்தைகள் என்று பெரிய குடும்பம். நிறைய பேர் வெளியூரில் இருந்தார்கள். எல்லோருக்கும் ஆள் அனுப்பப்பட்டது. ரேடியோ, பந்தலுக்கு, சமையல் ஆளுக்கு சொல்லிவிட்டார்கள்.  அரை மணியில் பந்தல் போட்டு, ரேடியோ கட்டியாகிவிட்டது. முதல் பாட்டு வழக்கம் போல "சட்டி சுட்டதடா!". வீட்டருகில் இருந்த பூவரச மரத்தடியில் மூன்று கல் வைத்து அடுப்பு கூட்டி சமையல் வேலையும் ஆரம்பமானது.

செத்துப்போனது ஊர்க்கவுண்டர் சம்சாரம் என்பதால் இழவுக்கு (துக்கத்திற்கு) ஏகப்பட்ட பேர் வர ஆரம்பித்தார்கள். வந்திருந்தவர்களில் ஆண்கள் தாத்தாவிடமும், அவர் மகனிடமும் துக்கம் விசாரித்தார்கள். பேருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அருகில் இருந்த தென்னைமர நிழலில் உட்கார்ந்து அரசியல் பேச ஆரம்பித்தார்கள். பெண்கள் எல்லாம் தாத்தாவின் மகள்களிடமும்,  மருமகளிடமும் கட்டிபிடித்து அழுவதும், மாரடித்து அழுவதுமாய் துக்கம் விசாரித்தார்கள். ஐந்து நிமிடம் தான், அதன் பின் வந்திருந்த பெண்களில் கொஞ்ச பேர் வெளியே வந்துவிட்டார்கள். சரியாக "டீ" தயாராக இருந்தது. அழுது வறண்டிருந்த தொண்டையை நனைத்துக்கொண்டு, இவர்கள் ஒரு புறம் அரட்டையை ஆரம்பித்தார்கள். "எப்படியோக்கா! மாரப்பனுக்கும் (மகன்) தொந்தரவு வெக்காம தானும் இம்ச படாம பாட்டி சீக்கிரம் போய் சேந்துடுச்சு". இந்த மாதிரி!

இன்று பாட்டியை எடுத்தால் தான் நாளை மறு நாள் காரியம் செய்ய முடியும். அதற்கப்புறம் அடுத்த மாதம் பிறந்துவிடுகிறது. ஒரே மாதத்தில் காரியம் செய்துவிட வேண்டும். அதனால் ரெய்ப்பூரில் இருக்கும் மகன் வயிற்றுப் பேரன் வரும் வரை வைத்திருக்க முடியாது. இன்றே எடுப்பது என்று முடிவானது. பாட்டி குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் கூரை மேல் சோறு வீசினார்கள் (பாட்டியின் ஆத்மாவிற்கு உணவளித்து பசியாற்றும் சடங்கு). பெண் வயிற்றுப் பேத்திகள் எல்லோரும் பாட்டியை நல்லவிதமாக வழியனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். மலர்த்தேர் (பல்லக்கு) செய்ய ஆள் கூட்டி வந்தார்கள். ஐந்து கோபுரம் உள்ள தேர் தயாரானது. 

பாட்டியை குளிப்பாட்டி கோடித் துணி அணிவித்து வாசலில் உட்கார வைத்தார்கள். பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் ஒரு சிறு குச்சியில் நெய் நனைத்த துணியை சுற்றி நெய்ப்பந்தம் பிடித்தார்கள். பாட்டியை எடுத்து தேரில் கிடத்தினார்கள். சில பெண்கள் பாட்டியை சுற்றி வந்து ஒப்பாரிப் பாட்டு சொல்லி கும்மியடித்தார்கள். மூத்த மகள் பின்வரும் பாட்டைப் படித்தார்.

கொத்து நெளிவளையம் கொத்துசரம் சங்கிலியும் - நீ பெத்த 
குயிலிக்கு தாரேன்னு கொள்ளையாக சொன்னீங்களே!
குயிலிய தான் மறந்து குளத்திலேயே இறங்குனீங்க
*
அரும்பு நெளிவளையம் அரும்புசரம் சங்கிலியும் - நீ பெத்த
அல்லிக்கு தாரேன்னு ஆசையாக சொன்னீங்களே!
அல்லிய தான் மறந்து ஆத்துலயே இறங்குனீங்க.

மகனும், மருமகன்கள் மூவரும் தேரைத் தூக்கினார்கள். சரியாக "போனால் போகட்டும் போடா" பாட்டு ஒளிபரப்பப்பட்டது. பெண்களில் சிலர் பின்னாடியே அழுது கொண்டு வாசல் வரை சென்றார்கள். அதற்கப்புறம் போகமுடியாது. கான காட்டுக்கு (கானல் காடு - சுடுகாடு) வர பெண்களுக்கு அனுமதியில்லை. 

பாட்டி பிரேதம் இருந்த இடத்தில் அவர் ஃபோட்டோ ஒன்று வைக்கப்பட்டது . சுடுகாட்டுகுப் போய் வந்த ஆண்கள் பாட்டி படத்திற்கருகே வந்து வணங்கி விட்டு கிளம்பினார்கள். "நாளன்னிக்கு சாஸ்திரம் (காரியம்), கான காட்டுக்கு வந்தவங்க எல்லாம் மறக்காம வந்துடுங்கப்பா." ஒருவர் அறிவித்தார்.

முக்கால்வாசிப்பேர் கிளம்பிவிட்டார்கள், இருந்தவர்களில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. ரேடியோக்காரரிடம் சொல்லி டெக் எடுத்து வந்து தங்கப்பதக்கமும் ரத்தக்கண்ணீரும் பார்த்தார்கள். மறு நாள் காலையில் மூத்த பேரன் வந்து சேர்ந்தார். வரும் வரை பா(ட்)டியை வைத்திருக்கவில்லை என்று சத்தம் போட்டார். "பாட்டிக்கு ஏதோ கொற வச்சுட்டேன்.  அதான் நான் வரக்கு (வருவதற்கு) முந்தியே போய்ட்டாங்க" என்று தாத்தாவைக் கட்டிக் கொண்டு அழுதார். அடுத்த நாள் காரியம் முடிந்தது. அனைவருக்கும் புதுத்துணி எடுக்கப்பட்டது. "மறு பிறால்" (மகள்கள் செய்யும் )சடங்குக்காக ஆடு ஒன்று வெட்டி சமைக்கப்பட்டு விருந்து பரிமாறப்பட்டது. மகள்களைத் தவிர அனைவரும் கிளம்பிவிட்டார்கள். 

மூன்று நாள் அமளி துமளியாக இருந்த அந்த வீடு துக்க நிறம் பூண்டது. மகனின் நிம்மதி, பேரனின் கோபம், பேத்தியின் பெருமிதம், குழந்தைகளின் ஆரவாரம் இவைகளுக்கு மத்தியில் அமுங்கிப்போயிருந்த தாத்தாவின் துக்கம் வெளிவர ஆரம்பித்தது. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார் தாத்தா! 

April 09, 2009

கெத்து தான் பசங்களுக்கு சொத்து!

பொண்ணுங்களைப் பொறுத்தவரை பசங்க நிறைய விதம்.

அதிகமா பேசினா - அறுவை
சிரிக்க சிரிக்க பேசினா - ஜொள்ளு
பேசாம இருந்தா - ஜடம்
அளவா பேசினா -         ரோபோ
தமிழில பேசினா  -          பழம்
ஆங்கிலம் பேசினா  பீட்டர்
நல்லா படிச்சா கிறுக்கு
சண்டை போட்டா - ரௌடி
சண்டை போலன்னா - பயந்தாங்கொள்ளி
'அக்கா'னு கூப்பிட்டா - சின்னபையன்.





ஆனா பசங்கள பொறுத்தவரை பொண்ணுங்க ரெண்டே விதம் தான்!

1) சூப்பர் ஃபிகர்,
2) சப்ப ஃபிகர். 

பசங்க எப்பவுமே வெவரம் தான்யா :)))))))))))))


பின்குறிப்பு : இது மொபைலில் எனக்கு வந்த குறுஞ்செய்தி!!! 

April 04, 2009

நாட்டியப் பேரொளி



போன வாரம் எம்.ஜி.ஆர் - பத்மினி நடித்த மன்னாதி மன்னன் படத்தைப் பார்க்க நேர்ந்தது. படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் ஒரு காட்சி வரும். பத்மினிக்கும் எம்.ஜி.ஆருக்கும் நடனப் போட்டி. நடனமாடிக்கொண்டே காலால் சிங்கத்தை வரைய வேண்டும். அதுவும் கீழே பார்க்காமல்! ஆனால் அதிர்ஷ்டவசமாக (எம்.ஜி.ஆருக்கு) பத்மினி கீழே விழுந்துவிடுவார். அதனால் அவர் தோற்றதாக அறிவித்துவிடுவார்கள் கலா அக்கா போன்ற நடுவர்கள். அதன்பின் படத்தைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு பத்மினியைப் பற்றி பேச ஆரம்பித்தோம். அப்பொழுது தெரிந்து கொண்ட தகவல்களையும் பின்னர் வலையில் தேடித் தெரிந்துகொண்ட தகவல்களையும் இங்கே தொகுத்திருக்கிறேன்.

{}

தமிழ் சினிமா தன் வளர்ச்சியில் எத்தனையோ நடிகைகளைக் கண்டிருக்கிறது.  அழகு, நடிப்பு, நடனம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் மிகச்சிலர். அவர்களில் முதன்மையான இடத்தில் திகழ்ந்தவர் பத்மினி.  

1932 ஆம் ஆண்டு ஜூன் 12 தேதி, திருவனந்தபுரத்தைச் சார்ந்த தங்கப்பன் பிள்ளை- சரஸ்வதி அம்மாளின் இரண்டாவது புதல்வியாக பிறந்தார் பத்மினி. இவருக்கு மூத்தவர் லலிதா, இளையவர் ராகினி. ராஜ குடும்பத்தில் பிறந்த பத்மினி தமிழ் சினிமா உலகின் முடிசூடாராணியாகவே விளங்கினார். சிறுவயதிலேயே பரதம், கதகளி மோகினியாட்டம் போன்ற நடனங்களைக் கற்றுத்தேர்ந்த பத்மினியின்  அரங்கேற்றம் பத்து வயதில் நடைபெற்றது. 

{}

1948ல் வெளிவந்த 'கல்பனா' என்ற இந்திப் படத்தில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதலில் வெளிவந்த படம் தமிழில்! 'கன்னிகா' (1947)  என்ற படத்தில் தனது சகோதரி லலிதாவுடன் (சிவ மோகினி நடனம்) திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். அடுத்த ஆண்டில் வெளிவந்த 'வேதாள உலகம்' படத்தில் வரும் பாம்பாட்டி நடனம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதன் பின் இந்த சகோதரிகளின் நடனம் எல்லா படங்களிலும் இடம்பெற ஆரம்பித்தது. 

'மணமகள்' என்ற படத்தில் முழுமையான கதாநாயகி வேடத்தில் நடிக்க ஆரம்பித்த பத்மினி, நடிப்பிலும் தானொரு பேரொளி தான் என்று நிரூபித்தார். அதற்கு கட்டியம் கூறுவது போல் அமைந்த படங்களில் சில தில்லானா மோகனாம்பாள், மங்கையர் திலகம், எதிர்பாராதது, தெய்வப்பிறவி போன்றவை.

இவர் நடிகர் திலகத்துடன் கதாநாயகியாக நடித்த முதல் படம் 'பணம் (1952)'. இதன் பிறகு இந்த ஜோடி கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்து திரையுலகில் கோலோச்சியது. அவற்றில் சில தூக்கு தூக்கி, தில்லானா மோகனாம்பாள், உத்தம புத்திரன், வியட்னாம் வீடு, புதையல், திருவருட்செல்வர் ஆகியவை. உத்தமபுத்திரன் படத்தில் வரும் "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே" என்னும் படகு பாடலை அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியுமா என்ன? 

மக்கள் திலகத்துடன் மதுரை வீரன், ராணி சம்யுக்தா, ராஜராஜன், மன்னாதிமன்னன் போன்ற பல படங்களிலும் காதல் மன்னனுடன் வீரபாண்டிய கட்டபொம்மன், வஞ்சிக்கோட்டை வாலிபன், ஆதிபராசக்தி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.  

வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி-வைஜெயந்தி மாலா போட்டி நடனமும் (கண்ணும் கண்ணும் கலந்து) இடையில் வரும், பி எஸ் வீரப்பா அவர்களின் "சபாஷ்! சரியான போட்டி" என்ற வசனம் வெகு பிரசித்தம். உண்மையிலேயே அது சரியான போட்டி தான். சிங்கமும் புலியும் மோதிக்கொள்வது போல! அந்த பாடலைப் பார்த்தால் குந்தவைக்கும் நந்தினிக்குமான கல்கியின் ஒப்பீடு நினைவுக்கு வருவதாக நண்பர் கூறுவார். 

ஹிந்தியில், மேரா நாம் ஜோக்கர் போன்ற ஒரு சில படங்களிலும் தாய்மொழி மலையாளத்தில் சினேகசீமா போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர இந்தி-ரஷ்ய மொழிப் படமான பர்தேசியிலும் நடித்திருக்கிறார். 

பத்மினியின் புகழ்பெற்ற பாடல்களில் மற்றொன்று திருவருட்செல்வர் படத்தில் இடம்பெற்ற "மன்னவன் வந்தானடி" என்ற பாடல். பரதத்தின் அபிநயம் பிடிக்கும் பொற்சிலைகளுடன் இவரும் ஒரு உயிருள்ள சிலையாக தோன்றியிருப்பார். 

இத்தகைய ஒரு நடிகைக்கு அம்மன் வேடம் கொடுக்காமல் இருப்பார்களா நம்மவர்கள்? ஆதி பராசக்தி மற்றும் சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் பார்வதி வேடமிட்டு நடித்தார். அதிலும் சரஸ்வதி சபதம் படத்தில் நாரதராக வரும் சிவாஜியை உருட்டி மிரட்டியிருப்பார்.

பெரும்பாலும் பரதம் சார்ந்த நாட்டியங்களையே ஆடி வந்த பத்மினி கழைக்கூத்தாடியாக 'ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா (அமரதீபம்) ' என்றும் ஆடிப்பாடியிருக்கிறார். நடனம் ஆடத் தெரியாத பெண்ணாகவும் ஒரு படத்தில் (சித்தி) நடித்திருப்பார்.

{}

திரையுலகின் உச்சத்தில் இருந்தபோதே, 1961ஆம் ஆண்டு மே மாதத்தில், கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு "பத்மினி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற நடனப் பள்ளியை ஆரம்பித்து குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்தார். 

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த பத்மினி பல வெற்றிப்படங்களில் நடித்தார். அவற்றில் ஒன்று தான் காலத்தால் அழியாத காவியமான தில்லானா மோகனம்பாள். கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நாவலை படமாக்கியிருப்பார்கள். முழுப்படம் கூட தேவையில்லை. "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" பாடல் ஒன்றே போதும் பத்மினியின் திறமையச் சொல்ல! பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்தல்!  "அழகர் மலை அழகா இந்த சிலை அழகா" எனும்போது கொடுப்பாரே ஒரு போஸ், இன்றும் எங்கள் ஊர் பெருசுகளுக்கு இந்த பாடலைப் பார்த்தால் கண்ணில் ஒரு மின்னல் வந்து மறையும். அப்புறம் அந்த நலந்தானா பாடல். பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் நலம்தானா என்று அவர் கண்கள் விசாரிக்கும்.

{}

1981 ஆம் ஆண்டு செப்டெம்பரில் பத்மினியின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தவர், நான்கு ஆண்டுகளுக்குப் பின் டைரக்டர் பாசிலின் வேண்டுகோளுக்கு இணங்கி 'பூவே பூச்சூடவா' படத்தில் நடித்தார். ஓரிரு படங்களில் (ஆயிரம் கண்ணுடையாள்) நடித்த பின்  உடல் நிலை காரணமாக திரையுலகில் இருந்து நிரந்தர ஓய்வு பெற்று அமெரிக்கா திரும்பினார். 

2003 ஆம் ஆண்டு, நியூயார்க்கில் நடந்த பன்னாட்டு தமிழ் நடுவம் நிகழ்ச்சியில் சுதா ரகுநாதன் அவர்கள் பாடலுக்கு அபினயம் பிடித்து ஆடினார் பத்மினி. அதுவே அவரின் கடைசி நடன நிகழ்ச்சி. சிறிது காலத்தில் இந்தியா திரும்பி, சென்னையில் வசித்து வந்தார். 2006 ஆம் ஆண்டு திரையுலகத்தினர் நடத்திய கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு விழாவில் கலந்துகொண்டார். இதுவே அவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி! 

{}

பத்மினி -  சில விருதுகள்:

*  1957 ஆம் ஆண்டில் "சிறந்த க்ளாசிக்கல் டான்சர்" விருது (Moscow Youth Festival).
*  1954, 1959, 1961 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் "சிறந்த நடிகை" விருது (Film Fans Association)
* 1965 ஆம் ஆண்டில் தமிழக அரசின் "கலைமாமணி" விருது
* 1968 ஆம் ஆண்டில் தமிழக அரசின் "சிறந்த நடிகை" விருது (தில்லானா மோகனாம்பாள்) 
* 1985 ஆம் ஆண்டு "ஃபிலிம்ஃபேர்" விருது (பூவே பூச்சூடவா).
*  சோவியத் அரசு பத்மினி உருவ ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்தது.

{}

2006 செப்டெம்பர் 24 ல் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார் பத்மினி. தேவலோகத்தில் இருந்து தற்காலிகமாக பூமிக்கு வந்திருந்த ஒப்பற்ற பேரொளி விண்ணுலகம் மீண்டது. தமிழ்த் திரையுலகம் உள்ளவரை ஒரு மோகனாங்கியாக, ஒரு சம்யுக்தாவாக, ஒரு வெள்ளையம்மாவாக, ஒரு பாட்டிம்மாவாக என்றென்றும் வாழ்ந்திருப்பார்!

{}

உங்கள் விமர்சனங்களையும் மேலதிக தகவல்களியும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பிடித்திருந்தால் தமிழ்மணத்தில் வாக்களிக்கவும். :) 

அயன் - ஒரு கலக்கல் காக்டெயில்

நிறைய புத்திசாலித்தனத்துடன் எடுக்கப்பட்ட ஒரு பக்கா கமெர்ஷியல் படம். கள்ளக்கடத்தல் தாதா தாஸ் (பிரபு). அவரிடம் வேலை பார்க்கும் படித்த புத்திசாலி இளைஞன் தேவா (சூர்யா). அவர்களை வீழ்த்திவிட்டு நம்பர் ஒன்னாக வரத்துடிக்கும் இன்னொரு கள்ளக்கடத்தல் ஆசாமி கமலேஷ் (ஆகாஷ்தீப் ஷேகல்). இவர்கள் இடையே நடக்கும் விறுவிறு போராட்டம் தான் அயன். 

படமே, நாயகன் "ஆண்டவன் ஆட்டம்" என்ற படத்தின் திருட்டு டி.வி.டி கடத்தும் காட்சியுடன் ஆரம்பிக்கிறது. அதை சாமர்த்தியமாக பறிக்கிறான் வில்லன். அதற்க்கப்புறம் வைரம் கடத்த காங்கோ செல்கிறான் நாயகன். அங்கும் அவரிடம் இருந்து வைரத்தைப் பறிக்க சதி நடக்கிறது. அதையும் அதற்கப்ப்புறம் வரும் அனைத்து சதிகளையும் சாகசமாக முறியடிக்கிறான் நாயகன். பிறகு வில்லனை போட்டுக்கொடுக்கும் இன்ஃபார்மராக மாறுகிறான். எதிர்பார்த்த மாதிரியே வில்லனை அழித்து தனது அம்மா ஆசைப்படி ஒரு அரசாங்க வேலையில் அமர, படம் சுபம்.

ஆங்கில நாவல்களில் வருமே! நாயகனுக்கு ஒரு ஆபத்து வரும், மாட்டப்போகிறான் என்று நினைப்போம், ஆனால் அதற்கு முன்னரே ஏதாவது ஒரு மாற்று யோசனை செய்திருப்பான் அதனால் தப்பித்துவிடுவான். இது போல தான் படம் முழுக்க! கடத்தல்களுக்கு உபயோகப்படுத்தப்படும் யுக்திகளை நன்கு யோசித்துச் செய்திருக்கிறார்கள். நாவலாசிரியர் சுபா அவர்களுக்குப் பாராட்டுக்கள்! 

சூர்யா, அசத்தலான் நடிப்பும், டைமிங்க் காமெடியுமாகப் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். காதலில் கரைவதாகட்டும், அன்பில் நெகிழ்வதாகட்டும், கோபத்தில் திமிறுவதாகட்டும் சூர்யா சூர்யா தான்! விமான நிலையத்தின் உள்ளே ஆங்கிலத்தில் புலமை காட்டிவிட்டு வெளியே வந்த உடன் சென்னைத் தமிழில் கலாய்க்கிறார்.

பிரபுவுக்கு இது ஒரு நல்ல படம். குறைந்த நேரமே வந்தாலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார். அதுவும் அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி கலகலப்பு. நேர்மை தவறாத சுங்க இலாகா அதிகாரியாக வரும் பொன்வண்ணன், சூர்யாவைப் கையும் களவுமாக பிடிக்க முயலும் காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். சூர்யாவின் நண்பனாக முக்கிய வேடத்தில் விஜய் டி.வி. ஜெகன் நடித்திருக்கிறார். 

இவர் தங்கை தமன்னா. இடையிடையே வந்து சூர்யாவைக் காதலித்துவிட்டுப் போகிறார். வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி வேடம் தான். அழகாக இருக்கிறார்.

எம் எஸ் சரவணனின் கேமரா சென்னையை அழகாகக் காட்டியிருக்கிறது. காங்கோ சண்டைக் காட்சிகளில் கூடவே பயணிக்கிறது. பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. "பள பளக்கிற" பாட்டிற்கு அரங்கமே அதிர்கிறது. அந்த பாட்டில் சூர்யா, கஜினி, வாரணம் ஆயிரம், பேரழகன் பட கெட்டப்புகளில் வருவது அழகு. "விழி மூடி யோசித்தால்" பாட்டு கலக்கல். 

இரைச்சல் இல்லாத பிண்ணனி இசை காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது. ஹாரீஸ் ஜெயராஜுக்கும் சூர்யாவுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை. இசை ரசிக்க வைக்கிறது. 

ஆண்டனியின் படத்தொகுப்பு படத்திற்கு ஒரு பெரிய பலம். படம் அவ்வளவு வேகம். (சில காட்சிகள் சீக்கிரம் மறந்துவிடும் அளவுக்கு வேகம்). 

படத்தின் ஆடை தேர்வுகளில் இளமை துள்ளுகிறது. வில்லன் மட்டும் மனதில் ஒட்ட மறுக்கிறார். வட இந்திய முகம் வேண்டும் என்பதற்காக இவரைத் தேர்வு செய்திருப்பார்கள் போல.

காங்கோவில் வரும் சேசிங் சண்டைக்காட்சி "கேசினோ ராயல்" படத்தை நினைவுபடுத்தினாலும் ரசிக்க வைக்கிறது. பள பளக்கிற பாடலின் நடன அசைவுகள் "ஏத்தி ஏத்தி" பாடலுடையதப் போன்றே இருக்கின்றன. 

படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுவது போல் தோன்றினாலும் வலுவான திரைக்கதை மூலம் அந்த குறையை மறைத்து ஒரு நல்ல விறுவிறுப்பான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் கே வி ஆனந்த்.

அயன் - அயர்ன் செய்ய்ப்பட்ட அழகிய சட்டை :)

April 01, 2009

ரகசியமாய்!

கவிதாயினி ஜேன் மார்ட்டினாவைத் தெரியுமா?  ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் இங்கிலாந்தில் வாழ்ந்த கவிஞர் இவர். இவரின் ஒவ்வொரு கவிதையும் காதல் பேசும். நட்பைச் சொல்லும். அவர் கவிதைகளில் நான் ரசித்த இரண்டை இயன்றவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

காதல்
******
உன்னை அறியாமல் நீயும்
என்னை அறியாமல் நானும்
நம்மை அறியாமல் நம்மை ரசித்தோம்,
ரகசியமாய்! 

நட்பு
*****
சருகாய் உலர்ந்து உதிர்ந்தாலும்
தாங்கும் நிலமாய்
நண்பர்கள்.

எப்படி இருக்கு?

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்! ஜேன் மார்ட்டினாவைப் பற்றிய தவறான தகவல்களைத் தந்ததற்காக மன்னிக்கவும். :) அவர் இங்கிலாந்தில் வாழவுமில்லை. நான் அவரது கவிதையை மொழிபெயர்க்கவுமில்லை. அவர் எனது அலுவலகத் தோழி! அவர் எழுதிய கொலைவெறி கவிதைகள் தான் இவை என்று சொல்லியிருந்தால் முதலிலேயே அப்பீட் ஆகி இருப்பீர்கள். அதற்காகத்தான் இந்த டகால்டி. 

அவர் சில கவிதைகளைத் தந்து கருத்து கேட்டார். (யாரப் பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டாங்க! :( ). "எனக்கு கவிதைகளை எல்லாம் விமர்சிக்கத் தெரியாது. தெரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்" என்று சொல்லியிருக்கிறேன். 

அதனால் உங்கள் மேலான கருத்துக்களையும் விமர்சனங்களையும், நமீதா சின்னத்... இல்லை இல்லை, பின்னூட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More