September 06, 2010

Maze மற்றும் உங்களுக்கு ஒரு புதிர்



முதன் முதலில் Maze எனக்கு அறிமுகமானது ஏதோ ஒரு வார இதழ் மூலம்.  கேரட்டை அடைய முயலுக்கு வழிகாட்டுங்கள் அல்லது திருடனைப் பிடிக்கக் காவலருக்கு உதவுங்கள் என்ற ரீதியில் தான் இருக்கும் அவை. எனக்கும் இந்த அளவிலான அறிமுகம் தான் இருந்தது ஒரு நாவலைப் படிக்கும் வரை. 


புத்தகங்களில் இருக்கும் புதிர்களில், மொத்தப் புதிரின் ஏரியல் வியூ இருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் தவறு செய்யலாம். திருத்தலாம். மாறாக, பத்தடி உயரம் கொண்ட சுவர்களால் சூழப்பட்ட, குறுகலானஒரு பாதையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொஞ்ச தூரம் பயணம் செய்தவுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் நேர்ப்படும். சரியான வழியைத் தேர்வு செய்ய வேண்டும். கொஞ்ச தூரத்தில் மேலும் சில சாய்ஸ்கள். சாதாரண மேஸ் கான்செப்ட் தான். ஆனால் இரண்டு அல்லது மூன்று முறைத் திரும்பிவிட்டால் திசையும் பாதையும் மறந்துவிடும். பத்தடிச் சுவர் என்பதால் இலக்கும் கண்ணுக்குத் தெரியப் போவதில்லை. சரியான வழியைப் பிடிக்கும் வரை உள்ளேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான். இவற்றை லைஃப் சைஸ் மேஸ் என்பார்கள்.  அந்த நாவலில் இது மாதிரி ஒரு மேஸ் தான் வரும். ஆபத்தான நீத்தா காட்டுவாசிகளிடம் அகப்படும் இருவர் ஒரு மேஸுக்குள் அனுப்பப் படுகிறார்கள். திக்குத் தெரியாத அந்தப் புதிருக்குள் கொலைப் பசியுடன் காத்திருக்கும் கழுதைப் புலிகள் வேறு. சரியானப் பாதையைத் தேர்ந்தெடுத்து, கழுதைப் புலிகளிடமிருந்துத் தப்பித்து, குறித்த நேரத்துக்குள் மறுமுனைக்கு வந்து சேர வேண்டும். 



இந்தப் புதிர்கள் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளத் தோன்றியது. சிக்கலான மேஸ்களை உருவாக்கியவர்கள் யாரென்று சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பது இல்லை. வழக்கம் போல எகிப்து! மேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது பொழுது போக்கிற்காகத் தான் என்றாலும், பிற்பாடு மத நம்பிக்கைகளுக்காகப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இங்கு labyrinth என்றொரு கான்செப்ட் வருகிறது. மேஸ் போலில்லாமல், labyrinth களில் தெளிவான ஒரே வழி தான். கிளை வழிகள் இல்லை. இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு திருப்பத்துக்கும் உடல் 180 டிகிரி திரும்புவதால் தற்காலிகமாக வெளி உலகை மறக்கிறீர்கள். அதனால் மன அழுத்தமும் குறைகிறது. தவிர இதிலிருக்கும் ஒரே ஒரு வழி பிறப்பைக் குறிக்கிறது. மையப் பொருள் கடவுள். சிக்கலான பாதை கடவுளை அடைவதற்கு எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்களைக் குறிக்க்கிறதாம். இந்து மதத்தில் வரும் எந்திரங்களும் labyrinth தான் என்கிறார்கள். ஆனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட labyrinth பலிபீடமாகப் பயன்படுத்தப்பட்டதாம்(Cretan labyrinth at Knossos). 


இந்தியாவிலும் இந்த மேஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மகாபாரதப் போரின் சக்ரவியூகம் நினைவிருக்கிறதா? நீலகிரியிலும் வட இந்தியாவில் சில குகைகளிம், கோவாவிலும் labyrinth ஓவியங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

அதன் பிறகு மேஸ்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டது பாதுகாப்புக்காக. விலைமதிப்பற்ற ஒரு பரிசு ஒரு தகுதியானவருக்குத் தான் கிடைக்க வேண்டும். இது தான் சாராம்சம். மேற்சொன்னவாறு தண்டனைக்காக எல்லாம் மேஸ்களை உபயோகப்படுத்தினார்களா என்று தெரியவில்லை..:) 
இன்று இந்த மேஸ்கள் சைக்காலஜி, ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளில் பங்கு வகிக்கின்றன. 

மேஸ்களின் பரிமாணங்கள், பாதைகளின் வடிவம், கிளைகள், மொத்தப் புதிரின் வ்டிவம் என்று நிறைய மாதிரி மேஸ்களை வகைப் படுத்துகிறார்கள். ரொம்பக் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம். கீழிருக்கும் புதிரை மட்டும் கண்டுபிடியுங்கள்! 



*

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More