August 24, 2010

புகைப்படம் - 25-08-2010

தமிழ்நாடு தான். எந்த ஊர் என்று தெரிகிறதல்லவா? கடைசி படத்தில் க்ளூவும் இருக்கிறது.















நன்றி ஹை.

August 23, 2010

எம்.பிக்கள் சம்பளம் - ஒரு அனல் மூச்சு.



ஒரு வழியாக குட்டிக்கரணம் அடித்து 500 சதவீத சம்பள உயர்வை வாங்கியே விட்டனர் எம்.பிக்கள். இப்போது மாதச் சம்பளம் 1.6 லட்சம். சம்பள உயர்வு வேண்டும் என கோஷம் எழுப்பி, அவையை முடக்கி வாங்கிய உயர்வு இது. 

இன்று லஞ்ச்சில் இதைப்பற்றி தான் பேச்சு. அந்த 500 சதவீத உயர்வு எல்லோரிடமும் ஒரு அனல் மூச்சைக் கிளப்பிவிட்டிருந்தது. :) 

சாதாரண கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலையில், 6%, 8% உயர்வு வாங்கவே நிர்ணயிக்கப்பட்ட Goals எல்லாம் முடித்திருக்க வேண்டும், சர்டிஃபிகேஷன் ஏதாவது எழுதியிருக்க வேண்டும், Value-Add ஏதாவது காட்ட வேண்டும், இப்படி ஏகப்பட்ட ஏகப்பட்ட மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் அதற்குத் தகுந்தவாறு வழிமுறைகள் கட்டாயம் இருக்கும். ஒரு தொகுதியின் பிரதிநிதி என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு துறையின் தலைவர் போலக் கொள்ளலாமா? கொண்டால் அந்தப் பதவிக்கு ஏன் மதிப்பீட்டு முறையில் சம்பள உயர்வை நிர்ணயிக்கக் கூடாது? எத்தனையோ எம்.பி க்கள் தொகுதிக்கும் போகாமல் நாடாளுமன்றத்துக்கும் போகாமல் இருப்பது கண்கூடு. அதைவிட குற்றப் பின்புலம் கொண்ட எம்.பிக்கள் எவ்வள்வு பேர்?  அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் எதற்கு சம்பள உயர்வு? 

என்னைக்கேட்டால் அரசியல்வாதிகளுக்கும் ரேட்டிங்க்-சிஸ்டம் ஏதாவது கொண்டு வரலாம். பதவியேற்பின் போது மூன்று ஸ்டார்கள் வழங்கப்படலாம். ஒவ்வொரு தவறுக்கும் ஒன்று பறிக்கப்பட வேண்டும். மூன்று ஸ்டாரும் அவுட் என்றால் பதவி கோவிந்தா... அடுத்து அவர் தேர்தலில் போட்டியிடவே கூடாது. அவர் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயத்துக்கும் ஒரு ஸ்டார் மற்றும் அதற்குத் தகுந்த மாதிரி சம்பள உயர்வு தரப்படலாம். தொகுதி வளர்ச்சி நிதியை அவர் செலவழிக்கும் விதம், நாடாளுமன்றத்துக்கு அட்டென்டன்ஸ், கிரிமினல் ரெக்கார்ட்ஸ் இது மாதிரி விஷயங்களை வைத்து அவரை மதிப்பிடலாம். இதைச் சொன்னதுக்கு நண்பன் சொன்னான் "போயா, டொய்யாலே!"

சரிதான். இந்த மாதிரி ஒரு சிஸ்டம் வருவதற்கு ஒருவரும் அனுமதிக்கப் போவதில்லை. அப்படி வந்தால் ஒருவரும் தொழில் சாரி, அரசியல் பண்ன முடியாது. எல்லாம் ஒரு நப்பாசை தான். மன்னிச்சிடுங்க பாஸ்.

இன்னொருத்தர் சொன்னார். "இதற்கு மேலாச்சும் காசுக்கு ஆசைப்படாம ஒழுங்கா வேலையச் செய்வாங்களா பார்க்கலாம்". 
"ஆமாம், என்னவோ சோத்துக்கு வழியில்லாமல் தான் கொள்ளையடிக்குற மாதிரி சொல்றீங்க?" என்று சொல்லலாம் என்று தோன்றியது.

எல்லாம் ஒரு தொடர் சங்கிலி மாதிரி ஆகிவிட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்குப் பதவி வேண்டும், அதற்கு காசு செலவழிக்க வேண்டும், பதவிக்கு வந்த பின் விட்ட காசைப் பிடிக்க வேண்டும், அடுத்தது மிக முக்கியம், சேர்த்த காசைப் பாதுகாக்க மீண்டும் பதவிக்கு வர வேண்டும். அதற்கு என்ன செய்வது? காசை செலவழித்து பதவியைப் பிடி! 

சரி நீங்க என்ன நினைக்கிறீர்கள் ? எம்.பி களுக்கு இந்தச் சம்பளம் நியாயமானதா? இல்லை அதிகமா? அல்லது எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று நினைக்கிறீர்க்ளா ? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்காக PVR Cinemas Couple Pass காத்துக் கொண்டு இருக்கிறது. ச்சே... வரவர ஓவரா எஃப்.எம் கேட்கிறேன். 

August 18, 2010

அரட்டை - 19-08-2010

நண்பர்களுடனான எனது சனிக்கிழமைகள் விசேஷமானவை. மறுநாள் காலை நான்கு மணி வரை நீளும் இரவுகளை, பேசியேத் தீர்ப்போம். அரிதாக உருப்படியான விஷயங்கள் விவாதிக்கப்படுவதுண்டு. சமீபத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் G.D.P (Gross Domestic Product). மொத்த உள்நாட்டு உற்பத்தி. இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் சரியான முறையில் கணக்கிடப்படுவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஜி.டி.பி பற்றி ஒரு இழவும் தெரியாத்ததால் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அன்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. சிட்டி சென்டரிலிருந்து அறைக்கு வந்து கொண்டிருந்தோம். ஜி.டி.பி யில் ஆரம்பித்த விவாதம் பிளாட்ஃபார்ம் வாசிகள் பக்கம் திரும்பி, அரசின் மெத்தனத்தைச் சாடி, இறுதியாக "அரசாங்கம் இருக்கட்டும், நீ சமூகத்திற்கு என்ன செய்யப் போற?" என்ற கேள்வியில் வந்து நின்றது. 

"இனி இந்தியப் பொருட்களைத் தான் வாங்குவேன்" என்றான் ஒரு நண்பன்.  

"முடிந்த வரை நகரத்தைச் சுத்தமாக வைத்திருப்பேன்" என்றான் இன்னொருவன், புகைத்து முடித்திருந்த சிகரெட்டைத் தெருவில் விட்டெறிந்துவிட்டு!

"நண்பர்களுக்குட் ட்ரீட் கொடுப்பதை விட ஒரு சாரிட்டிக்கு டொனேஷன் கொடுக்கலாம்" என்றேன் நான். 

ஒரு வாரம் ஆகிவிட்டது. சுதேசி நண்பன் லேட்டஸ்ட் நோக்கியா மொபைல் வாங்கியிருக்கிறான். அதற்காக McD யில் ட்ரீட் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

கஷ்டம்! 

{}

முன்னாள் தோழிக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இந்த மாதிரி தருணங்களில் கவிதை எழுதும் வழக்கம் இன்னும் இருக்கிறதா? யாராவது யாப்பிலக்கணம் சொல்லித் தர முடியுமா? 

{}


புதிய தோழி இரண்டு ஜோடி Budgerigar வளர்க்கிறாள். இது ஏதோ Breeding சீசனாம் :). அவைகளுக்குக் கூடு கட்டக் கூடத் தெரியவில்லையாம். அதற்கு என்னிடம் சண்டை பிடிக்கிறாள். என்ன கொடுமை சார் இது ?

{}


உங்களுக்கு Super-Ancient கலாச்சாரங்களைப் பற்றியக் கதைகள் பிடிக்குமா? சிம்பல்ஸ்? பிரமிடின் மர்மங்கள் ? Treasure Hunt கலந்த விறுவிறுப்பான ஆக் ஷன் கதைகள் ? பிடிக்க்குமென்றால் உங்களுக்கு மேத்யூ ரெய்லியின் இந்த நாவல்களை ரொம்பப் பிடிக்கும்.

1) Seven Ancient Wonders
2) Six Sacred Stones
3) Five Great Warriors. 

இதே வரிசையில் படிக்கவும். பட்டாசு பட்டாசு! 

{}

August 17, 2010

நான் மகான் அல்ல!

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மகேஷ் : ரசிகன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? 
  
மகேஷ் என் பெயர். ரசிகன் நான் படித்து வாங்கிய பட்டம்.  :) 

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

அது ஒரு சோக தருணம். (உங்களுக்குத் தான்)

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்? 

எப்பயாச்சும் எழுதுவதே கஷ்டமாயிருக்கிறது. இதில் பிரபலம் வேறா? நெக்ஸ்ட்... 

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வப்போது. பகிர்ந்துகொள்ளும் போது சந்தோஷம் இரட்டிப்பாகுமாம். ஆகிறதா என்று பார்க்க!

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நண்பர்களைச் சம்பாதிக்க. 

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன? 

ஒன்றே ஒன்று தான்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை :  கார்க்கி (தோழி அப்டேட்ஸ் சான்ஸே இல்ல), வானவில் வீதி கார்த்திக் (இளமை எக்ஸ்பிரஸ்னா தலைவர் தான்)  பிரசன்னா (உயிரோட தான் இருக்கானானு தெர்ல),

கோபம் : எழுத்துச் சுதந்திரத்தைத் தனி மனிதத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் எல்லோர் மீதும். 

 9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

தமிழ்ப்பறவை - பரணி - டியர் அண்ணா.. :) 

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

மரண வாக்குமூலமா வாங்குறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... 

டிஸ்கி : தலைப்பு மேட்ச் ஆகவில்லை? 

*

August 10, 2010

லைட் ரூம்

(ஜில்லு, தலைப்பைப் பார்த்துட்டு தப்பா நினைக்கக் கூடாது.)

ஃபிலிம் நெகட்டிவ்களை ப்ராசஸ் (சரியாகச் சொன்னால் டெவலப்) செய்யும் இடம் டார்க்ரூம் என்று தெரியும். அதன் அடிப்படையில், டிஜிட்டல் படங்களைப் ப்ராசஸ் செய்ய லைட்ரூம் என்றொரு மென்பொருள் இருக்கிறது. இப்பொழுது தான் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். Exposure, Clarity, brightness, Contrast என ஏறக்குறைய அனைத்து பண்புகளையும் சுலபமாக மாற்றிக்கொள்ள் முடிகிறது. இதன் முக்கிய அம்சமே Clarity தான். வழக்கமாக படத்திலுள்ள ஒளி இரைச்சலை (Noise) நீக்க முயன்றால், “ஙே” என்றிருக்கும். ஆனால் இங்கு படத்தின் தரத்துக்கு எந்தப் பங்கமுமின்றி Clarity ஐ அதிகப்படுத்த முடிகிறது. இன்னொரு முக்கிய அம்சம் Presets. ஃபோட்டோஷாப்பில் முக்கி முனகி ப்ளாக் & வைட் மாற்றுவதற்குள் என் சிஸ்டத்தில் அரை மணி ஆகும். இங்கு ஒரே க்ளிக்கில் பல்வேறு வகையான எஃபெக்ட்களைத் தெரிவு செய்ய முடியும். 

நன்றாக இருக்கிறது. 

லைட்ரூமில் மாற்றிய ஒரு புகைப்படம்.



ஏற்காட்டில் ஒரு கடைக்கார ஆயா. நிறைய அவர்களை நேரம் போரடித்துவிட்டேன்.

August 05, 2010

எந்திரன் - முன்னோட்டம்.

சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" படித்திருக்கிறீர்களா? அழகான அறிவியல் கதை. நிலா என்ற அழகியும் ஜீனோ என்ற இயந்திர நாயும் சேர்ந்து கொண்டு செய்யும் சாகசங்கள் தான் கதை. ஜீனோ அநியாயத்துக்குப் புத்திசாலி. புத்தகம் படிக்கும், கவிதை நெய்யும், லாஜிக்கல் ரீசனிங்கில் வித்தை காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகள் என்ற உன்னதத்தைப் பெற்று படைப்பின் உச்சத்தை அடையும். தானாகவே சிந்திப்பது, நிலாவின் மேல் மையல் கொள்வது, தடவிக்கொடுத்தலில் இருக்கும் அன்பை உணர்வது, பயம் கொள்வது என்று அட்டகாசம் செய்யும்.

இயந்திரன் என்ற பெய்ரைக் கேட்டவுடன் அப்படிப்பட்ட செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரம் செய்யும் சாகசங்கள் தான் படம் என்று தெரிந்தது. பாடல்களும் ட்ரெய்லரும் அதை உறுதிப்படுத்துகின்றன. பார்க்கலாம் அறிவியலும் மசாலாவும் ஒன்று சேரப் போகின்றன. 160 கோடி பட்ஜெட் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் செய்யலாம். ரஜினியின் முகத்தை விதவிதமான லைட்டிங்கில், விதவிதமானக கோணங்களில் என்பது விதமான படங்கள் எடுத்து கிராஃபிக்ஸ் செய்து இருக்கிறார்களாம். சண்டைக் காட்சிகளே மொத்தம் ஒரு மணி நேரம் வருகின்றதாம். ஊரெல்லாம் எந்திரன் தான்.

ஒன்று மட்டும் புரியவில்லை. ஆறு பாட்டுகளில் ஐந்து ரோபோவிற்குத்தான் போலிருக்கிறது. "அஃறிணையின் அரசன் நான், காமுற்றக் கணினி நான்" என்றெல்லாம் ரோபோ பாடுகின்றது. நம்மவர்கள் ஏலியனை வைத்துப் படம் எடுத்தாலும் அதற்கும் ஒரு பில்ட்-அப் சாங் வைப்பார்கள்.

ஆனால், சும்மாச் சொல்லக் கூடாது. முதல் முறை கேட்டபோது கன்னாபின்னாவென இருந்தப் பாடல்கள், புரிய ஆரம்பித்ததும் ஆட்டம் போட வைக்கின்றன. Rahman Rocks! "இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ" கதறக் கதறக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழில் அறிவியல் படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. என்ன ஒன்று, டெரா ஹெர்ட்ஸும், ஜெரா பைட்ஸும் புரிந்து தொலைக்க வேண்டும்.

எந்திரன் டீமுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More