December 20, 2009

அரட்டை - 21-12-2009

”நான் அவன் இல்லை...” இது ஒரு வருடத்திற்கு முன்பு மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட கசாப்பின் இப்போதைய பல்டி. தான் இந்திப் படங்களில் நடிக்க வந்ததாகவும், படம் பார்க்க சுற்றிக் கொண்டிருந்தவனைத் தவறுதலாகக் கைது செய்துவிட்டதாகவும், AK 47 ஐப் பார்த்ததே இல்லை என்றும் கூறியிருக்கிறான். மேலும், கொஞ்ச காலத்துக்கு முன் குற்றத்தை ஒத்துக்கொண்டது போலீசுக்கு பயந்ததனால் தானாம். ரயில் நிலைய வீடியோவில் தெரிவது, தன்னை மாதிரியே இருக்கும் தீவிரவாதியாம். எதிர்பார்த்தது தான். அவனுக்கென ஒரு வழக்கறிஞர், பாதுகாப்பு, விரும்பியவாறு அசைவு உணவு என ராஜமரியாதையுடன் நடத்தினால் இதுவும் சொல்வான், இன்னும் சொல்வான். செல்லரித்துப் போன அரசியலமைப்பு! அய்யா மன்மோகன் சிங் அவர்களே, கொஞ்ச நாளில் அவனைப் பத்திரமாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுங்கள். இன்னும் கொஞ்ச பேரைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் வரட்டும். நாம் இப்படியே கருணை, ஜீவகாருண்யம், காந்தீயம் என்று பேசிக்கொண்டிருப்போம். வெகு விரைவில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் என இந்தியாவைப் பிரித்து எடுத்துக்கொண்டு போகட்டும். ஜெய்ஹிந்த்!


{}


விதர்பா, கூர்க், பூர்வாஞ்சல், கூர்க்காலாந்து, காரைக்கால்,சௌராஷ்டிரா.... தனித் தெலுங்கானா அறிவிப்பைத் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்திருக்கும் கோஷங்கள் தான் இவை. மகாராஷ்ட்டிராவிலிருந்து விதர்பா, கர்னாடகத்திலிருந்து கூர்க், உத்திரப்பிரதேசத்திலிருந்து பூர்வாஞ்சல், மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து, புதுச்சேரியிலிருந்து காரைக்கால், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா ஆகியவற்றைப் பிரித்து தனித்தனி மாநிலங்களாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. உத்திரப்பிரதேசத்தை வேறு மூன்றாகப் பிரிக்கப்போகிறார்களாம். இந்நிலையில் தமிழகத்திலும் பிரிவினைக் கோரிக்கைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கின்றன. வெகு காலத்திற்கு முன்பு ஒலித்து அடங்கியது தான் இந்தக் குரல். இப்போது மீண்டும் எழ ஆரம்பிக்கிறது. குரல் கொடுத்திருப்பது பா.ம.க, மூவேந்தர் முன்னணிக் கழகம்(புவனேஸ்வரி புகழ்), வன்னியர் சங்கம் ஆகியவை. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்காக‌ மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாநிலத்தை அமைக்கக் கோருகின்றனர். சில மாதங்களுக்கு முன், கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்பட்டால் தன் மாநிலம் கோரப்படும் என கொங்குநாடு முன்னேற்றப் பேரவையும் எச்சரித்திருந்தது (!). சபாஷ்! மொழி ரீதியான பிரிவினைகள் போய் இப்போது ஜாதி ரீதியாகவும் தனி நபர் செல்வாக்குக்காகவும் பிரிவினை பேசும் அளவுக்கு வந்தாயிற்று.


நானும் எங்கள் சொந்தக்காரர்கள் மட்டும் இருக்கிற மாதிரி ஒரு ஏரியாவைத் தனி யூனியன் பிரதேசமாகக் கேட்கலாமென இருக்கிறேன். காசா பணமா? சும்மா கேட்போமே!


{}


கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது வருத்தத்தைத் தருகிறது :(


{}


நம்மில் பலர் ரெக்கார்ட் டான்ஸ் பார்த்திருப்போம். முன்பு வெளிப்படையாகவும், தற்போது மிகுந்த பாதுகாப்புக்கிடையிலும் நடத்தப்படும் கலைச் சேவை. இப்போது புது அவதாரம் எடுத்திருக்கிறது. மானாட மயிலாட, ராணி ஆறு ராஜா யாரு போன்ற நடன நிகழ்ச்சிகள் மூலம். ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க முடியாதவர்கள் இதைப் பார்க்கலாம். ஆடுபவனின் மனைவியும், ஆடுபவளின் கணவனும் சொந்தங்களும் சுற்றி உட்கார்ந்துகொண்டு கைத்தட்டி உற்சாகப்படுத்துவது தான் இதில் சிறப்பு. யாராவது கோபப்பட்டு போர்க்கொடி உயர்த்திவிடாதீர்கள். நிறுத்திவிடப் போகிறார்கள்.


{}


இளைய தளபதியைப் நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஒரு நாளைக்குப் பத்துக்கும் குறையாமல் அவரைக் கலாய்த்து மின்னஞ்சல்களும் குறுந்தகவல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. சலிப்பாக இருக்கிறது. சர்தாருக்குப் பதில் விஜய் எனும் தனி மனிதன். கொஞ்சம் ஓவர் டோஸாக இல்லை?


{}


ஒரு மாதத்துக்கு முன் ஊட்டி போன போது எடுத்த படம். லைட்டா Dreamy Effect சேர்த்திருக்கிறேன்.  Hope you like it! 



ஒரே வருத்தம்.. கடைசி வரை இந்த இளவரசியுடன் பேசவேயில்லை.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More