August 25, 2009

ஏன் இந்த கொலைவெறி?


தானைத்தலைவன், தென்னகம் தந்த மன்னவன், முகவை பெற்ற முத்து, அண்ணன் ஜே கே ரித்தீஷ் அவர்கள் அரசியல் சமூகப் பணி ஆற்றச் சென்றுவிட்டதால், தமிழ்த்திரையுலகமே வருத்தத்தில் உள்ளது. அந்த வருத்தத்தை முழுவதுமாகப் போக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கேனும் குறைக்க அண்ணன் சிவகிரி களமிறங்கியுள்ளது நேற்று தான் தெரியவந்துள்ளது. (நான் கொஞ்சம் லேட்டுங்கோ!).

ஸ்டார்ட் மீஜிக்!

வந்துட்டேன்.

அது வருது ஓடுங்க! அது எல்லாத்த விடவும் பெரிசா இருக்கு!

அய்யா சாமி, இது கொழந்த புள்ளங்க!

யோவ், ப்ளீஸ்யா, விட்டுடுயா..

அப்படியே என்கவுண்டர்ல போட்டுடுங்க.


நாங்க டெர்ரர்ல?

டிஸ்கி : டக்ளஸ், கார்க்கி போன்ற ரித்தீஷின் தீவிர‌ ரசிகர்களுக்கு உடனே சிவகிரியை ஏற்றுக்கொள்ள முடியாது தான்... ஆனால் வேறு வழியில்லை. எஙகளுக்கு ஒரு மாற்றம் தேவை.

இதயம் ஒரு கோயில்....


பெங்களூரு நாராயணா ஹிருதயாலயாவைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி, விப்ரோ ஊழியர்களுடன் கலந்துரையாடியதன் சாராம்சம் என்று ஒரு மின்னஞ்சல் வெகு நாளாகவே உலவிக்கொண்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் உங்களுக்காக!

மாரடைப்பு சில காரணங்கள்?
* சீரற்ற உணவு முறை.
* புகைப்பழக்கம்
* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை
* மரபு ரீதியான காரணங்கள்!

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக மாரடைப்பு வரக் காரணம் என்ன?
45 வயது வரை இயற்கை பெண்களைப் பாதுகாக்கிறது.

சர்க்கைரை நோய்க்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்பு?
இருக்கிறது! சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மாரடைப்பினால் ஏற்படும் வலியையும் Gas பிரச்சனையால் ஏற்படும் வலியையும் எப்படி வேறுபடுத்துவது?
ECG யின் மூலம் மட்டுமே கண்டுகொள்ள முடியும்.

இதய நோய்கள் பரம்பரை வியாதிகளா?
ஆம்!

மாமிசம், குறிப்பாக மீன் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லதா?
இல்லை! அதிலும் மூளை, ஈரல் மற்றும் கிட்னி பகுதிகள் அதிகம் கொழுப்புச் சத்து கொண்டவை. (இனி அஞ்சப்பரிலோ அல்லது காரைக்குடியிலோ ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி யோசிங்க!)

எந்த எண்ணெய் வகை சிறந்தது ? சூரியகாந்தி, ஆலிவ்.... ?
எதுவுமே நல்லதில்லை.

Junk Food - என்னென்ன?
பொரிக்கப்பட்ட/ வறுக்கப்பட்ட உணவுகள். மசாலா ஐட்டங்கள். சமோசாக்கள்...

ஆரோக்கியமானவராகத் தோன்றுபவர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறதே?
இது silent attack, யாருக்கு வருமென்று ஊகிக்க முடியாது. அதனால், முப்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இளைஞர்களுக்கிடையே இதய நோய்கள் அதிகரித்துள்ளதற்கான காரணம் என்ன?
உடல் உழைப்பு ஏதுமில்லாத வாழ்க்கை முறை, புகைப்பழக்கம், ஜங்க் ஃபுட் இவை முக்கியக்காரணங்கள்.

எனக்கு இருபது வயது தான் ஆகிறது. எனக்கு கொலஸ்ட்ரால் இருக்க வாய்ப்பிருக்கிறதா?
கொலஸ்ட்ரால் வயது பார்ப்பதில்லை. குழந்தைக்குக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

நம்மில் நிறைய பேர் இரவு வெகு நேரம் கண் விழிக்க வேண்டியிருக்கிறது. சீரான உணவுப்பழக்கமோ வாழ்க்கை முறையோ இருப்பதில்லை. இப்படி இருப்பவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
சீரான வாழ்க்கை முறையைப் பழகிக் கொள்ளுங்கள்.

மாரடைப்பு வந்தால் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன?
அவரை தூங்கும் பொசிஷனில் படுக்க வைக்கவும். aspirin மற்றும் sorbitrate மாத்திரைகளை வைத்துக்கொள்ள செய்யலாம். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லவும். முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது/அபாயகரமானது.

மாரடைப்பு வந்தவரே அவருக்கு முதலுதவி செய்துகொள்ள முடியுமா?
நிச்சயமாக! மேலே சொன்ன பதிலே தான்!

வாக்கிங், ஜாகிங் எது சிறந்தது?
வாக்கிங்.

மன உளைச்சலைக் குறைக்க என்ன வழி?
எல்லாவற்றிலும் perfection எதிர்பார்க்காமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள். :)

இதயத்தைப் பாதுகாக்க முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவை?
* டயட் - புரதம் நிறைந்த அதே சமயம் கார்போ மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள்.
* எடைக்கட்டுப்பாடு - (உங்க BMI Score என்ன ?)
* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்தல்.
* புகைப்பழக்கதை விட்டொழித்தல்
* உடற்பயிற்சி - ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேர நடைப்பயிற்சி. வாரத்துக்கு ஐந்து நாட்களாவது.

பத்திரமா பாத்துக்கங்க!

டிஸ்கி 1: இந்த பதிவு நிறைய பேரைச் சென்றடைய உதவுங்கள்!

டிஸ்கி 2: இது மொழிபெயர்ப்பு தான். தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

August 22, 2009

எந்திரனும் உன்னைப் போல் ஒருவனும்


ரொம்பவும் எதிர்பார்த்த கந்தசாமி படம் பார்த்தவர்களை நொந்தசாமிகளாக்கி விட்டாராம். ஆனால் நாம் தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமே! இனி வரப்போகும் படங்களையும் ஒரு மாதிரி எதிர்பார்த்து வைப்போம். ஹ்ம்ம்ம்ம் எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?

1) எந்திரன்

சூப்பர் ஸ்டார் படம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? சங்கர் சார், சிவாஜில விட்டதை இதிலே பிடிக்கணும்! ஆனால் நான் எதிர்பார்ப்பது சுஜாதாவுக்காக. பாவம் மனிதர் ஆனந்த தாண்டவத்தில தான் மொக்கைவாங்கிட்டார். இதிலாவது அவரை கௌரவியுங்கள்!

2) உன்னைப் போல் ஒருவன்

வெட்னெஸ்டே என்ற இந்திப் படத்தின் தமிழ் வடிவம். உலக நாயகனுக்காக வெயிட்டிங்கோ வெயிட்டிங்.

3) அசோகவனம்

விக்ரம், ஐஸ்வர்யா ராய் போன்ற பழம்பெரும் நடிகர்கள் நடிக்கும் படம். ஏதோ இராமாயணக் கதையாம். எப்படியும் இந்தியில் எடுத்து தமிழில் டப் செய்யப்போகிறார். "குரு" போல! எனக்கு சுவாரஸ்யமில்லை. ஆனால் ஊரே எதிர்பார்ப்பதால் நானும் எதிர்பார்க்கிறேன்.

4) ஆயிரத்தில் ஒருவன்

வரும், ஆனால் வராது டைப் படம் இது. கொஞ்ச நாள் போனா மறந்தே போயிடும் செல்வா... சீக்கிரம் இறக்குங்க! பாவம் கார்த்தி! சோழ நாடு, தாய்தின்ற மண் என பாடல்கள் ஆவலைத் தூண்டுகின்றன. பார்த்திபன் கேரக்டருக்காகவும் காத்திருக்கிறேன்.

5) கோவா

வெங்கட் பிரபு இயக்கம். ஏதோ ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறார் என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள். வெங்கட் ஹாட்ரிக் அடிப்பாரா என்று பார்ப்போம்.

6) சுல்தான் தி வாரியர்

அனிமேஷன் படமாம். அதுவும் முப்பரிமாணத்தில். இந்த நுட்பத்தில் இந்தியர்கள் எந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என்று பார்ப்போமே!

7) சென்னையில் ஒரு மழைக்காலம்

இது வருமா வராதா என்று கௌதமுக்குத் தான் வெளிச்சம். ஸ்டில்ஸ் எல்லாம் கலர்ஃபுல்லாக இருக்கிறது. கௌதமுக்காக வெயிட்டிங்!

8) மதராஸப்பட்டினம்

ஏதோ பீரியட் படம் போல இருக்கிறது ஸ்டில்சைப் பார்த்தால். டைரக்டர் விஜய். "பொய் சொல்லப் போறோம்" எடுத்தாரே அவர் தான். எதற்காக என்று தெரியாமலேயே கன்னா பின்னாவென எதிர்பார்க்கிறேன்.

9) அங்காடித் தெரு

வெயில் படம் மூலமாக ஆனந்த அதிர்ச்சி கொடுத்தவர். இந்த படத்தில் என்ன கதைக்களம் என்று பார்ப்போம்.

10) நான் அவன் இல்லை 2


ஹி ஹி ஹி!

இந்த பத்துப் படங்கள் மட்டுமல்லாது, தளபதியின் வேட்டைக்காரன் (இதுவாவது கை கொடுக்குமா?) மற்றும் சின்னத் தளபதியின் "கண்டேன் காதலை (ஜப் வி மெட்டின் தமிழ்)" படத்தையும் வழி மேல விழி வைத்துக் காத்திருக்கிறேன்!

கழுத காசா பணமா? வெயிட் பண்ணுவோம்.

August 19, 2009

என்னைக் கொன்னுடுங்க!

மலைச்சாமிக் கவுண்டருக்குத் தொண்ணூறு வயதிருக்கும். ஆடி அடங்கிய ஜீவன். இய‌ற்கை உபாதைக‌ளுக்காவ‌து நடமாடிக்கொண்டிருந்த‌வ‌ர், மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்னால் கீழே விழுந்து இடுப்பெலும்பை உடைத்துக்கொண்டார். அன்றிலிருந்து வாழ்க்கை, ப‌டுக்கையில் தான். மகன் நல்லப்பன் ஒரு லாரி ட்ரைவர். மாதத்தில் முக்கால்வாசி நாள் ரெய்ப்பூர்,குஜராத் என ரூட்டில் ஓடிக்கொண்டிருப்பவர். சாப்பாடு, த‌ண்ணீர் மற்றும் எல்லாவ‌ற்றிற்கும் என்ன செய்வது? ம‌ரும‌க‌ளைத் தான் சார்ந்திருக்க வேண்டிய‌தாயிற்று.

"என்னாலயெல்லாம் உன்ற அப்பனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது சாமி! " என்று கைவிரித்துவிட்டாள் ம‌கராசி. "ஏன்? பொறந்தவள பாக்க சொல்றது?" என்று பெரியவரின் மகள் வேலம்மாளை வேறு உள்ளே இழுத்தாள்.

"வேலா, அப்பனை உன்ற வூட்டுக்குக் கொண்டு போயிட்றியா? இந்த பாவி மவ பட்டினி போட்டே கொன்னு போட்ருவா!" நல்லப்பன் தன் தங்கையைக் கேட்டார். "இல்லீங்ண்ணா,ப‌ருத்தி வெடிக்கிற‌ ச‌ம‌ய‌முங்க. பாங்கு பாக்கற(து)க்கும் நேரமிருக்காது, வூட்ல‌யும் எட‌மிருக்காது." த‌யாராக க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வைத்துக்கொண்டாள்.

பெரிய‌வ‌ருக்குத் தெரிந்து ரொம்ப‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டார். ம‌க‌னை அழைத்த‌வ‌ர், "க‌ண்ணு, எனக்கும் ஒவுத்திரியம்(வலி) தாங்க‌ முடியல, நீங்களும் பாங்கு பாக்க முடியாது. அதனால ம‌ருந்தோ ஊசியோ போட்டு என்ற கதைய முடிச்சிடுங்க!" என்றார். முடியவே முடியாது என்றார் நல்லப்பன். ஒத்துக்கொள்ள ம‌றுத்த‌ ம‌க‌னை பேசிப் பேசி வ‌ழிக்குக் கொண்டுவந்துவிட்டார். ம‌களை ச‌ம்ம‌திக்க‌ வைப்பது சுல‌ப‌மாக இருந்த‌து. ஒரு நாள் பார்த்து உள்ளூர் டாக்ட‌ரை அழைத்து ஊசி போட்டுக் காரிய‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.

****

இது ஒரு கற்பனை தான்... ஆனால் இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது கிராமப்புறங்களில் அரங்கேறும். இந்த விஷயத்தில் இரு விதமான வாதங்கள் கேட்கக் கிடைக்கின்றன. ஒன்று, எந்த உயிரையும் கொல்லும் உரிமை நமக்கில்லை. இன்னொரு உயிரை எடுப்பது குற்றமே என்பது. இன்னொன்று, வலியால் அவதிப்படும்/குணமாகவே வழியில்லாத உயிர்களை வைத்திருந்து இம்சிப்பதை விட அவர்களைக் கொன்று விடுதலையடையச் செய்வதே நல்லது என்பது. இரண்டாவது தரப்பினர் அகிம்சாமூர்த்தி காந்தியை உதாரணமாகக் காட்டுவார்கள்.

எல்லாம் சரி தான், ஆனால் இதற்கு அங்கீகாரம் கொடுத்தால், கருணைக்கொலை என்ற பெயரில் மிகச் சாதாரணமாகக் கொலைகள் நடந்தேறும் இல்லையா? கருணைக்கொலைக்கு யார் அனுமதி கொடுப்பது? யார் அதை முடிவு செய்வது? யார் பரிந்துரைக்கலாம்? அவரை நம்பமுடியுமா? பாதிக்கப்பட்டவரே ஒத்துக்கொண்டாலும் அவர் முழு மனத்துடன் சம்மதித்தாரா? நிறைய கேள்விகள் உள்ளன. நமது சமூகத்தைப் பற்ற்றி சொல்ல்வே வேண்டாம். கரன்சியை அள்ளி இறைத்துக் காரியம் சாதித்தேப் பழகிவிட்டோம். அப்புறம் ஆளாளுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள் மனு கொடுக்க! கருணைக்கொலை தேவையா என்பதை ஆராய எத்தனைக் கடுமையான வழிமுறைகளைக் கொண்டுவந்தாலும் அதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட மாட்டோமா?

கருணைக்கொலைகள் அனுமதிக்கப்படலாமா இல்லையா என்பதையே இன்னும் முடிவு செய்யாத நிலையில், இது மாதிரி கவனிக்கக் கஷ்டப்பட்டுக்கொண்டு உறவுகளைக் கொல்லும் புண்ணியவான்கள், புண்ணியவதிகளை என்ன சொல்வது?

August 10, 2009

கதை கதையாம்...

"அவரு சந்தக்கி போய்ட்டு வாரப்ப எப்பயும் சந்தன மில்லு பக்கமாத்தான் வருவாராம்!" கந்தாயி பாட்டி இப்படித்தான் அந்தக் கதையை ஆரம்பிக்கும். "ஒரு நாளு, அம்மாவாச இருட்டு கருகும்முனு இருந்துச்சாம். மில்லு பக்கத்துல ஒண்டி மினி (முனி) கோயிலு இருக்குதுல்ல? அதும் பக்கத்தால‌ வந்துகிட்டு இருந்தாராம்! அப்ப பாத்து ஒரு சின்ன பையன், உம்பட வயசு இருக்கும், முன்னால போய்ட்டு இருந்தானாம். சரி, பேச்சு தொணைக்கு ஆளாச்சுன்னு தம்பீ தம்பீன்னு கூப்புட்டாராம். அந்த பையன் திரும்பியே பாக்கலியாம். அட என்றா இதுன்னு பக்கத்தால போயி, தோள்பட்டைல கை வச்சாராம். அந்த பையன் திரும்பிப் பாத்தானாம் கண்ணு.... அப்படியே கண்ணு ரெண்டு செவ செவன்னு இருந்துச்சாம். வாயில சுருட்டோட. அப்படியே குப்புனு வேர்த்துருச்சாங் கண்ணு அய்யனுக்கு. அன்னிக்கு காச்சல்ல படுத்தவரு தான். பத்து நாளக்கி எந்திரிக்கவேயில்ல!" ஒரு லாவகமாகக் கதையை முடிக்கும் பாட்டி. அந்த பையன் முனீஸ்வரன் தான் என்பது பாட்டியின் வாதம். "பின்ன, அந்த நேரத்துல கோயிலுக்குப் பக்கத்தால வாயில சுருட்டோட யாரு கண்ணு நிப்பா?" என்று கேள்வி வேறு கேட்கும். பதிலாக ஏதாவது சொன்னால் "அட, கம்முனு இரு, உனுக்கு ஒன்னுந்தெரியாது" என்று சொல்லி எஸ் ஆகிவிடும்.

கந்தாயி பாட்டி இந்த கதையென்றால் வேலப்ப தாத்தா இன்னொரு கதை சொல்வார். "சங்கீரி (சங்ககிரி) பஸ்ல கோண மேட்டுக்கிட்ட ஒரு பொம்பள ஏறுனாளாம். அது வேற கடேசி வண்டியா, அந்த பொம்பளயத் தவுர யாருமே இல்லியாம். ஏறுன பொம்பள சும்மா நகையும் நட்டுமா தக தகன்னு இருந்தாளாம். ஏறுனவ டிக்கெட்டே எடுக்கலியாம். கண்டெய்ட்டர் கேட்டுக்கிட்டே வாரானாம் ஆனா அந்த பொம்ப‌ள அசஞ்சே கொடுக்கலியாம். ஒரு கோயில் பக்கத்துல வந்ததும் நிறுத்தச் சொன்னாளாம். இங்கெயெல்லாம் நிக்காதும்மானு சொன்னானாம். பொம்பள ஒரு சிரிப்பு சிரிச்சாளாம். அவ்ளோதான். பஸ்சு அங்கெயே நின்னுடுச்சாம். அவளும் விடு விடுன்னு எறங்கி நடந்து கோயிலுக்குள்ள பூந்து கதவ சாத்திக்கிட்டாளாம்". அப்ப‌த்தான் அவ‌னுக்குத் தெரிஞ்சுச்சாம் வ‌ந்த‌து மாரியாயின்னு" அவ‌ரே மாரிய‌ம்ம‌னை நேரில் பார்த்த‌ மாதிரி ஒரு பார்வையுட‌ன் க‌தையை முடிப்பார்.

இது மாதிரி ஏக‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் ஊருக்குள் உல‌வும். சாமி க‌ண் திற‌க்கும் போது அத‌ன் பார்வை எல்லைக்குள் ஓடிக்கொண்டிருந்த ர‌யில் அப்ப‌டியே நின்று போன‌து, முனி வேட்டைக்குப் போகும் போது எதிரில் வ‌ந்தவன் அப்பொழுதே பேச்சிழ‌ந்த‌து என்று தினுசு தினுசாக‌. ஆனால் இந்த‌ மாதிரிக் க‌தைக‌ள் இப்பொழுது கேட்க‌க் கிடைப்ப‌தில்லை. க‌தைசொல்லிக‌ளைக் கால‌ம் கொண்டு சென்றுவிட‌, இப்போதிருக்கும் தாத்தா பாட்டிக‌ளும் கதை சொல்ல ஏனோ ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை. அவ‌ர்க‌ளைப் பிடித்து வ‌ம்ப‌டியாக‌ இந்த மாதிரி க‌தைகளைக் கேட்டால் "பிதுக்கா பிதுக்கான்னு" முழிக்க‌த்தான் செய்கிறார்க‌ள். இவை ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌க் க‌தைக‌ளைக் கேட்டாலும் ஒரு வித‌ ச‌லிப்புத்தான் ப‌திலாக‌க் கிடைக்கிற‌து. இப்போதெல்லாம் அவ‌ர்க‌ளுக்குக் க‌தைக‌ளை ஞாப‌க‌ம் வைத்து யாதொரு ப‌ய‌னுமில்லை. என்ன செய்வது? க‌தை கேட்கும் ஆர்வ‌மோ நேரமோ ந‌ம்மிட‌ம் இருப்ப‌தில்லை. ந‌ம‌து நேர‌த்தை செல்ஃபோனும் டி.வியும் ப‌றித்துக்கொள்ள‌, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் நேர‌த்தைத் திருமதி செல்வத்திலும் வைர‌ நெஞ்ச‌த்திலும் அட‌கு வைத்துவிட்ட‌ன‌ர். அதனால், மதுரைவீரனும், மாய‌க்க‌ண்ண‌னும், அர்ச்சுனனும், அபிமன்யுவும், கதைகள் வழியே காலம் காலமாக பயணித்த அலுப்புத் தீர, அவ‌ர்களின் ஞாப‌க‌ செல்க‌ளில் நெடுந்துயிலில் ஆழ்ந்துவிட்ட‌ன‌ர் :(

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More