அப்படி இப்படியென்று முக்கால்வாசி படம் பார்த்தாயிற்று!
முழுக்க முழுக்க சூர்யா படம். ஜிலீர் சிரிப்பும், துடிப்பான நடிப்பும் அதகள ஆக்ஷனுமாய் கலந்துகட்டி கலக்கியிருக்கிறார். ஒரு கோபக்கார, நடுத்தர வர்க்க இளைஞன் தேவா (சூர்யா). அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் யுவதி சீமா (தமன்னா). இவர்கள் மத்தியில் தொழிலதிபர் சந்தனபாண்டியன் (பிரபு). இவர்களைப் பற்றிய கதை தான் அயன். திரையுலகுக்கு புதிய கதை எல்லாம் இல்லை. எல்லோர் வாழ்விலும் நடக்கக்கூடிய சம்பவங்கள் தான். திடுக் திரைக்கதை மூலம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குனர் கே வி ஆனந்த். முதல் பாதி முழுக்க சூர்யாவும் தமன்னாவும் காதல் கபடி விளையாடியிருக்கிறார்கள். இடையியிடையே ஜெகனின் காமெடி கபடி. இரண்டாவது பாதியில், பார்த்த வரை, ஒவ்வொரு ஃப்ரேமும் விறுவிறுப்பு. சிக்ஸ் பேக் சிங்கமாக சூர்யா! ஆக்ஷன், காதல், காமெடி என்று ரகளை செய்திருக்கிறார். பிரபுவுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு புதிய பரிமாணம்.
படத்தில் இன்னொரு அழகான விஷயம் இருக்கிறது. அது தான் சென்னை. அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார்கள்! ஒளிப்பதிவாளருக்கும், கலை இயக்குனருக்கும் ஒரு "ஓ" போடலாம்!!! பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அழகோ அழகு. "விழி மூடி" பாட்டில் மலேஷியாவையும், துருக்கியையும் அள்ளியிருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜுக்கும் சூர்யாவுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை, இசை பட்டையைக் கிளப்புகிறது. பிண்ணனி இசை துள்ளும் ரகம். அதுவும் தமன்னாவை சந்திக்கும் போது வரும் சாக்சஃபோன் இசை அட்டகாசம்!
மொத்தத்தில் அயன் ஒரு இளமைத்திருவிழா! முழுதாகப் பார்க்க காத்திருக்கிறேன்!
ஒழுங்காக ஆணி புடுங்கிக் கொண்டிருந்தவனை மெயில் மேல் மெயில் அனுப்பி "ஏப்ரல் ஃபூல்" என்று கலாய்த்து புண்ணியம் கட்டிக் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்!!!
சின்சியராக படித்த அனைவருக்கும் ஏப்ரல் 1 வாழ்த்துக்கள்!