Well, where to begin with..?
சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று இருக்கிறது ஆதவன் படம் பார்த்து.அப்படி ஒரு படம். ஆக்ஷன், த்ரில்லர், ஃபேமிலி செண்டிமெண்ட், காமெடி, காதல் என்று அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் எடுத்துப் போட்டு படம் எடுத்து மொத்தமாக நம் உயிரை எடுத்திருக்கிறார்கள்.
கூலிக்கு மாரடிப்பவர், சாரி, கொலை செய்பவர் சூர்யா. குழந்தைகளைக் கொன்று உடல் உறுப்புகளைத் திருடும் கூட்டத்தை பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கமிஷனுக்குத் தலைவர் பரத் முரளி. முரளியைக் கொல்ல சூர்யா அனுப்பப்படுகிறார். முரளி வீட்டிலேயே வேலைக்காரனாக நுழைகிறார் சூர்யா. நாமெல்லாம் கொலை செய்யத்தான் வந்திருக்கிறார் என்று நினைப்போம். ஆனால் அவர் காப்பாற்றத் தான் வந்திருப்பார். ஏனென்றால் முரளி தான் அவர் அப்பா. என்ன குழம்புகிறதா? பயப்படாதீர்கள். அதற்கும் ஒரு ஃப்ளாஷ்-பேக் இருக்கிறது. பத்து வயது சூர்யா பத்து வயது சூர்யா என பில்ட்-அப் கொடுத்தார்களே, அந்த ஃப்ளாஷ்-பேக்கிற்குத் தான்.
சரி கதை கூட ஓ.கே. ஆனால் படம்? காட்சிகளால் சொதப்பியிருக்கிறார்கள்.
முதல் முறை சூர்யாவைப் பார்த்து எரிச்சல் வருகிறது. அழகாக இருக்கிறார். ஆசனம் போடுகிறார். டெடிக்கேட்டடாக இருக்கிறார். அது மட்டும் போதுமா? நடிக்க வாய்ப்பு இருக்கிற மாதிரி படமாக செலக்ட் செய்ய வேண்டாமா? விஜய் குருவியில் தாவு தாவென்று தாவுவாரே இவரும் அதையே தான் செய்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கு ஒரே மாதிரி டான்ஸ் ஆடப் போகிறாரோ. இவரை நினைத்தால் பயமாக இருக்கிறது. அடுத்து வேறு ஹரி படம். ஹ்ம்ம்ம்ம்ம்....
சரோஜா தேவி - பாவம் அந்த அம்மா. தேமேயென்று இருந்தவரைக் கூட்டி வந்து கலாய்த்திருக்கிறார்கள். வடிவேலு சொல்வது போல எப்போதும் மேக்கப்புடன் தான் இருக்கிறார். ஒரு குமரி கொஞ்சிக் கொஞ்சிப் பேசினால் மதி மயங்கும். ஆனால் இந்த வயதிலும் அப்படியே பேசினால்? இதில் ஒரு பாட்டு வேறு.
நயன் சுமாராக இருக்கிறார். இதற்கு முன்னால் வந்த படங்களைக் காட்டிலும் சூப்பர். ஆனால் க்ளோசப்பில் பயமுறுத்துகிறார்.
முரளிக்கு சுமாரான பாத்திரம், நன்றாக நடித்திருக்கிறார். (அஞ்சலிகள்!!!)
மனோபாலா மேல் ஏதேனும் கோபம் இருந்தால் குச்சி எடுத்து நாலு அடி கொடுத்து இருக்கலாம். இப்படியா வேஸ்ட் செய்வது அவரை? அவர் பேசும் ஒரே வசனம் "சுட்டா தலை எனக்கு". வேறு எதுவும் பேசினாற் போல் ஞாபகம் இல்லை.
ரியாஸ்கான், விஜயன், அனுஹாசன், சாயாஜி ஷிண்டே, சத்யன் எல்லாம் பாவம். ஆனந்த் பாபுவா அது? சார், ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள், பார்த்து....
படத்தில் சகிக்க முடிகிற ஒரே விஷயம் வடிவேலு தான். அதுவும் வேறோன்றும் இல்லாத காரணத்தால் நன்றாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. டீசண்ட் காமெடி. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
தேக்கோ தேக்கோவைத் தவிர மற்ற பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிலும் அயன் வாசனை. பாடல் நன்றாக இருப்பதற்காக இஷ்டம் போல சொருகியிருக்கிறார்கள்.
க்ளைமாக்ஸ் படு மொக்கையாக இருக்கிறது. அந்த சண்டைக் காட்சி சகிக்கமுடியவில்லை. கே.எஸ். ரவிக்குமார் சார், ஏன் இப்படி?
ஆதவன் - பேசாமல் "பேனர்ஜி" என வடிவேலு பெயரை வைத்திருக்கலாம்.