October 29, 2009

காந்தளூர் வசந்த குமாரன் கதை.



ராஜராஜ சோழனின் காந்தளூர்க் கடிகைப் போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ராஜராஜ‌ன் மெய்கீர்த்தியிலும் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போர். சேர மன்னனுடன் பேச‌ அனுப்பப்பட்ட தூதுவ‌ன் ஒருவன் அவமதிக்கப்பட்டதால் வெகுண்ட ராஜராஜன் சேர நாட்டின் மீது போர் தொடுத்தான் என்பது வரலாறு. இதைப் பின்புலமாகக் கொண்டு அமரர் சுஜாதா எழுதிய நாவல் தான் "காந்தளூர் வசந்தகுமாரன் கதை"


திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள விழிஞம் தான் அப்போதைய காந்தளூர். மிக முக்கியத் துறைமுகம் காந்தளூர். சேர நாட்டின் மீதான நிரந்தர வெற்றிக்கு இந்தத் துறைமுகத்தைப் பிடிப்பது முக்கியமாக இருந்தது. தவிர ராஜராஜனால் நாடுகடத்தப்பட்ட ரவிதாசன் முதலியோரும் இங்கிருந்து தான் ஒற்ற‌ர்களைத் தயார்படுத்தி அனுப்பியாதாகவும் கூறுவர்.

இனி கதை...

கதைப்படி, வசந்தகுமாரன் சேர நாட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவன். அவனுடைய குரு,நண்பர் கணேசபட்டர். இந்த பெயர்களை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? சுஜாதாவின் பிரியத்துக்குரிய நாயகர்கள் கணேஷ், வசந்த் தான் சரித்திரத்தில் வருகிறார்கள். கணேச பட்டரிடம் அதே தீட்சண்யம். வசந்தகுமாரனிடம் அதே இளமைக் குறும்பு. ரசிக்க வைக்கிறார்கள்.


குதிரை வியாபாரத்துக்காக சோணாடு வந்த யவனன் ஒருவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறான் வசந்தகுமாரன். இதனிடையே அரசகுமாரி அபிமதியைக் காதலிக்கிறான். பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காந்தளூரைச் சேர்ந்த சேர நாட்டு ஒற்றன் எனப் பழி சுமத்தப்படுகின்றான். இந்த சதியில் சிக்க வைப்பது ராஜராஜனைக் கொல்ல வந்த எதிரி நாடு ஒற்றர்கள். மரண தண்டனை விதிக்கப்படும் வசந்தன் எப்படித் தப்பிக்கிறான், எதனால் சேர‌ நாடு அனுப்ப‌ப்ப‌டுகிறான், ராஜராஜன் உயிர் எப்படிக் காப்பாற்றப்பட்டது, வசந்தன் காதல் என்ன ஆனது என்பதை சுஜாதா த‌ன‌து பாணியில் விவ‌ரித்திருக்கிறார்.

இந்தக் கதையில் நடைபெறும் அனைத்து முக்கிய சம்பவங்களுக்கும் சரித்திரத்தில் நடந்ததாகச் சொல்கிறார் சுஜாதா. பாத்திரங்களின் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் உண்மை என்கிறார். உதகைக் கோட்டையைப் பிடிக்க முனைவது, ராராஜேஸ்வரத்துக்கான ஆயத்தப் பணிகள், மலை நாட்டின் மீதான போர் என ஏராளமான விஷய‌ங்கள் வருகின்றன. இந்தப் போர்களுக்கெல்லாம் கலிங்கப்பரணி,மூவர் உலா போன்ற நூல்களை ஆதாரமாகக் காட்டுவார்கள். 


பாத்திரங்களை கல்கி அளவுக்கு கட்‍அவுட் பாத்திரங்களாகப் படைக்காமல் சாதாரண மக்களாக உலவ விட்டிருப்பார் சுஜாதா. இதை அவரே கூறியிருப்பார்.  உதாரணத்துக்கு ராஜராஜன் மீதும் மக்கள் கோபப்படுகிறார்கள்கள். நாயகன் வசந்தனும் ஏராளமான வசவு வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றான்(உம் : விலைமகள் மைந்தன்). கணேச பட்டரும் ஆபத்துக் காலத்தில் மயங்கி நிற்கிறார். 


ஆனால் அரசகுமாரி ஒருத்தி கடத்தப்பட்டால் அந்நாளில் இப்படி வாளாவிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அது தவிர, அபிமதியை சளுக்க மன்னன் விமலாதித்தனுக்குக் கொடுக்க முனைந்தது, ராஜராஜனைக் கொல்ல நடந்த ச‌தியில் விமலாதித்தன் இருந்தான் என்பதெற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிறைய இடங்களில் ராஜராஜனை "இராஜராஜீச்சுரம் கொண்ட" என அடை மொழி கொடுத்து அழைக்கிறார்கள் கோயில் கட்டுவதற்கு முன்பே. இந்த மாதிரி சில விஷயங்கள் நெருடுகின்றன. ஆனால் உண்மையான வராலாறு தெரிந்தால் இதுவும் ஒரு பிரச்சனையாக இருக்காது என நம்புகிறேன்.


பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதப்பட்ட ஒரு காட்சி, நாடகத் தனமான வசனங்கள் என்றே சரித்திர நாவல்களைப் படித்தவர்களுக்கு சுஜாதாவின் கூர்மையான வசனங்களும், எளிய கதையோட்டமும் வித்தியாசமான விருந்தாக இருக்கும். ஆனால் சுஜாதாவின் மற்ற நாவல்களில் உள்ள அந்த "அது" இந்த நாவலில் இல்லை :)


குறிப்பு : காந்தி செத்துட்டாரா ரேஞ்சுக்கு இந்த நாவலைப் பற்றி இவ்வளவு தாமதமாக எழுதியிருக்கிறேன். ரொம்ப நாள் தேடலுக்குப் பின் போன வாரம் கிடைத்தது இந்த நாவல். அதான்!

October 28, 2009

குழந்தை நீ... பொம்மை நான்..

திரிகள்...
நீ இல்லை என்ற நினைவிலேயே 
தீர்ந்து போகுதடி என் காலம்...
தெரிந்தே எரிந்து இறந்து போகும் 
திரிகளைப் போல...


நினைவுகள்...
உன் நினைவுகள் 
அத்தனை சுகமானது...
கடுமையாய் உழைத்த ஒரு நாளின்
இரவின் உறக்கம் போல...


கவிதை...
நீ கேட்காமல் போனாய்... 
நான் எழுதாமல் போனேன்... 
இல்லாமல் போனது ஒரு கவிதை...


பொம்மை...
தூக்கி எறிவதை பற்றிக்
குழந்தை கவலைபடாது... 
விழுவதை பற்றியோ,
உடைவதை பற்றியோ
பொம்மை வருத்தபடாது... 
குழந்தை நீ... 
பொம்மை நான்...

{}

இவை நண்பர் திருமுருகன் கவிதைகள். நானெல்லாம் கவிதையெழுதினால் நாடு தாங்காது என்பதாலும், என் வலைப்பூவில் கவிதை இல்லையென்றால் வரலாறு தப்பாக பேசும் என்பதாலும் அவர் கவிதைகளை இங்கே பதிகிறேன். பார்த்து போட்டு கொடுங்க சாமியோவ்.

October 20, 2009

பாடம் படிக்கும் சுவர்கள்.







பாடம் படிக்க ஆரம்பித்திருக்கின்றன எங்கள் வீட்டு சுவர்களும் திண்ணைகளும். அண்ண‌ன் ம‌கள் திவ்யாவை ப்ரீ‍‍கேஜி யில் சேர்த்திருக்கிறார்கள். பல்ப‌த்தை வைத்துக்கொண்டு திண்ணை பூராவும் வ‌ட்டெழுத்துக்க‌ளாக‌ எழுதித் த‌ள்ளுகிறாள். எழுதும்போது திண்ணைக்கு பாட‌ம் எடுக்கிறாள். அவ‌ளுக்கு ம‌ட்டும் புரியும் மொழியில்...


முதல் சில நாட்கள் அவள் புறப்படும் போது பார்க்க வேண்டுமே, எந்நேரமும் வெடித்து விடுபவள் போல இருப்பாள். தற்போது ப‌ழ‌கிக் கொண்டாள். அவ‌ளுக்கு உற‌வுக்கார‌க் குழ‌ந்தையின் நட்பு கிடைத்துவிட்டது. இப்பொழுது அவ‌ர்க‌ள் இருவ‌ரும் தான் வ‌குப்பில் சேர்ந்து தூங்குகிறார்க‌ளாம். 


தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்த போது "அ ஆ இ ஈ" சொல்லிக் காண்பித்தாள். உண்மையிலேயே நான்கு எழுத்துக்கள் தான் சொன்னாள். அதற்குள் வெட்கம் வர, ஓடிவிட்டாள்.


பள்ளிக்குப் போகும் குழந்தைகள் உள்ள எல்லோர் வீட்டையும் போல, எங்கள் வீட்டிலும் பொம்மைகள் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. பாத்திரங்கள் சிதறாமல் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் அவளை மிஸ் செய்கிறார்கள். அண்ணன் வாழைத் தோப்புக்கு தண்ணீர் பாய்ச்சும்போது, அண்ணி சமைக்கும் போது, அப்பா மாட்டுக்குத் தீவனம் வைக்கும்போது, அம்மா பால் கறக்கும் போது என எப்போதும் காலைக் கட்டிக் கொண்டே சுற்றுவாள். எல்லாம் அமைதியாய் இருப்பது வித்தியாசமாக இருக்கிறதாம்.


தினமும் இதை சொல்லிக் கொடு அதை சொல்லிக் கொடு என அண்ணிக்கு வீட்டுப்பாடம் தருகிறார்களாம். அண்ணிக்கு செம கடுப்பில் இருக்கிறார்கள். ஆனால் நிம்மதியாக இருக்கும் ஜீவன்கள் எங்கள் வீட்டு ஆட்டுக்குட்டிகள். சும்மா படுத்திருக்கும் ஆட்டுக்குட்டியை தர தரவெனெ இழுத்து வந்து தண்ணீர்த் தொட்டியில் தள்ளிவிடுவாள். இப்பொழுது அவை தப்பித்தன‌.


இப்போது ஒரே ஒரு சிலேட், ஒரு டயரி (அண்ணிக்கு வீட்டுப்பாடம்) மட்டும் தான் கொண்டு போகிறாள். இன்னும் சில வருடங்களில் அவள் முதுகில் புத்தகச் சுமையை ஏற்றி எலும்பை உடைக்கப் போகிறார்கள். குழந்தையிலிருந்து சிறுமியாகப் போகிறாள். :( 

October 18, 2009

ஆதவன் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Well, where to begin with..?


சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று இருக்கிறது ஆதவன் படம் பார்த்து.அப்படி ஒரு படம். ஆக்ஷன், த்ரில்லர், ஃபேமிலி செண்டிமெண்ட், காமெடி, காதல் என்று அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் எடுத்துப் போட்டு படம் எடுத்து மொத்தமாக நம் உயிரை எடுத்திருக்கிறார்கள். 


கூலிக்கு மாரடிப்பவர், சாரி, கொலை செய்பவர் சூர்யா. குழந்தைகளைக் கொன்று உடல் உறுப்புகளைத் திருடும் கூட்டத்தை பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கமிஷனுக்குத் தலைவர் பரத் முரளி. முரளியைக் கொல்ல சூர்யா அனுப்பப்படுகிறார். முரளி வீட்டிலேயே வேலைக்காரனாக நுழைகிறார் சூர்யா. நாமெல்லாம் கொலை செய்யத்தான் வந்திருக்கிறார் என்று நினைப்போம். ஆனால் அவர் காப்பாற்றத் தான் வந்திருப்பார். ஏனென்றால் முரளி தான் அவர் அப்பா. என்ன குழம்புகிறதா? பயப்படாதீர்கள். அதற்கும் ஒரு ஃப்ளாஷ்-பேக் இருக்கிறது. பத்து வயது சூர்யா பத்து வயது சூர்யா என பில்ட்-அப் கொடுத்தார்களே, அந்த ஃப்ளாஷ்-பேக்கிற்குத் தான்.


சரி கதை கூட ஓ.கே. ஆனால் படம்? காட்சிகளால் சொதப்பியிருக்கிறார்கள்.
முதல் முறை சூர்யாவைப் பார்த்து எரிச்சல் வருகிறது. அழகாக இருக்கிறார். ஆசனம் போடுகிறார். டெடிக்கேட்டடாக இருக்கிறார். அது மட்டும் போதுமா? நடிக்க வாய்ப்பு இருக்கிற மாதிரி படமாக செலக்ட் செய்ய வேண்டாமா? விஜய் குருவியில் தாவு தாவென்று தாவுவாரே இவரும் அதையே தான் செய்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கு ஒரே மாதிரி டான்ஸ் ஆடப் போகிறாரோ. இவரை நினைத்தால் பயமாக இருக்கிறது. அடுத்து வேறு ஹரி படம். ஹ்ம்ம்ம்ம்ம்.... 


சரோஜா தேவி - பாவம் அந்த அம்மா. தேமேயென்று இருந்தவரைக் கூட்டி வந்து கலாய்த்திருக்கிறார்கள். வடிவேலு சொல்வது போல எப்போதும் மேக்கப்புடன் தான் இருக்கிறார். ஒரு குமரி கொஞ்சிக் கொஞ்சிப் பேசினால் மதி மயங்கும். ஆனால் இந்த வயதிலும் அப்படியே பேசினால்? இதில் ஒரு பாட்டு வேறு.


நயன் சுமாராக இருக்கிறார். இதற்கு முன்னால் வந்த படங்களைக் காட்டிலும் சூப்பர். ஆனால் க்ளோசப்பில் பயமுறுத்துகிறார்.


முரளிக்கு சுமாரான பாத்திரம், நன்றாக நடித்திருக்கிறார். (அஞ்சலிகள்!!!)


மனோபாலா மேல் ஏதேனும் கோபம் இருந்தால் குச்சி எடுத்து நாலு அடி கொடுத்து இருக்கலாம். இப்படியா வேஸ்ட் செய்வது அவரை? அவர் பேசும் ஒரே வசனம் "சுட்டா தலை எனக்கு". வேறு எதுவும் பேசினாற் போல் ஞாபகம் இல்லை.  


ரியாஸ்கான், விஜயன், அனுஹாசன், சாயாஜி ஷிண்டே, சத்யன் எல்லாம் பாவம்.  ஆனந்த் பாபுவா அது? சார், ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள், பார்த்து....


படத்தில் சகிக்க முடிகிற ஒரே விஷயம் வடிவேலு தான். அதுவும் வேறோன்றும் இல்லாத காரணத்தால் நன்றாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. டீசண்ட் காமெடி. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.


தேக்கோ தேக்கோவைத் தவிர மற்ற பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிலும் அயன் வாசனை. பாடல் நன்றாக இருப்பதற்காக இஷ்டம் போல சொருகியிருக்கிறார்கள்.


க்ளைமாக்ஸ் படு மொக்கையாக இருக்கிறது. அந்த சண்டைக் காட்சி சகிக்கமுடியவில்லை. கே.எஸ். ரவிக்குமார் சார், ஏன் இப்படி? 


ஆதவன் - பேசாமல் "பேனர்ஜி" என வடிவேலு பெயரை வைத்திருக்கலாம்.

October 15, 2009

டயானா, ஆதித்த கரிகாலன், ரூஸ்வெல்ட், தாஜ்மகால்...

சர்ச்சை.. தொன்று தொட்டு வரும் மனிதனின் பொழுதுபோக்கு. சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. திரு முத்துவேலரின் சிலையைப் பேருந்து நிலையத்தில் வைக்கலாமா வேண்டாமா என்று சர்ச்சை செய்வதில் யாதொரு சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை. ஆனால் வரலாற்றில் நடந்து முடிந்த அல்லது இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தின் பின்னால் உள்ள சதிச்செயல் (Conspiracy) பற்றிய சர்ச்சை மிகவும் சுவாரஸ்யமானது.

உதாரணத்துக்கு, தாஜ்மகாலைப் பற்றி ஒரு மின்னஞ்சல் வந்தது. அது மும்தாஜ் கல்லறை இல்லை. உண்மையில் அது ஒரு சிவன் கோவில். அது ஆக்கிரமிக்கப்பட்டு பின்பு கல்லறையாக்கப்பட்டது என படங்கள், விளக்கங்களுடன் இருந்தது அந்த மின்னஞ்சல் இருந்தது. இப்படியும் இருக்கலாமோ என்று நம்பும் அளவுக்கு இருந்தது அந்த விளக்கங்கள். அது தான். Conspiracy Theory களின் அழகு. ஆனால் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தியரிகள் தான் அதிகம்.

செப்டம்பட் 11 - இரட்டைக் கோபுரத் தாக்குதல்.


இந்த கோர நிகழ்வுக்குப் பின் ஏகப்பட்ட தியரிகள் உள்ளன. அவற்றில் ஒன்று, இந்தத் தாக்குதலுகுக் காரணமே அமெரிக்க இராணுவம் என்பது. அவர்களின் படைபலத்தை அதிகரிப்பதற்காக, மக்களின் ஆதரவைப் பெற அமெரிக்காவே திட்டமிட்டு நடத்திய சதி என்கிறது இந்த தியரி. இதனை வைத்து நிறைய புத்தகங்கள், படங்கள் வெளியாகியுள்ளன.

பியர் ஹார்பர் தாக்குதல்.

இதுவும் அமெரிக்காவின் கவனத்துக்குட்பட்டே நடந்தது என்கிறது ஒரு தியரி. அதாவது ஜப்பான் ராணுவச் செய்திகள் டீ-கோட் செய்யப்பட்டு இந்த தகவல் பிரிட்டன் இராணுவத்தால் அமெரிக்காவிற்கு அளிக்கப்பட்டது. ஆனால் போரில் ஈடுபடுவதற்காக, அப்போதைய ஜனாதிபதி ரூஸ்வெல்ட் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தாராம். அதன் பிறகு தான் அமெரிக்கா போர் பிரகடனம் செய்தது.

அதிபர் ஜான் கென்னடி மரணம்.

1963 ல் நவம்பர் மாத வெள்ளிக்கிழமை ஒன்றில் ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டர். திறந்தவெளி கார் (?) ஒன்றில் அவர் மனைவியுடன் பயணம் செய்துகொண்டிருந்த போது சுடப்பட்டார். இந்தக் கொலைக்குக் காரணம் சி.ஐ.ஏ வில் ஆரம்பித்து, ரிச்சர்ட் நிக்சன்(வாட்டர் கேட் ஊழல்), ஃபிடல் கேஸ்ட்ரோ, ஜார்ஜ் புஷ் (சீனியர்) ஆகியோர் என்று யார் யாரையோ கைகாட்டும் இந்த தியரி.

இது மட்டும் இல்லாமல் ஆம்ஸ்ட்ராங்கின் நிலவுப் பயணம் பொய், 1947 ல் கிடைத்த பறக்கும் தட்டின் மிச்சம் (அமெரிக்கா இதை ஏதோ ஒரு ஆராய்ச்சியில் விபத்திற்குள்ளான பலூன் என்கிறது), டயானா மரணத்தின் பிண்ணனி, மடோனா கொல்லப்பட்டார் என ஏகப்பட்ட தியரிகள் உலகம் முழுக்கக் கொட்டிக்கிடக்கின்றன. நிறைய தியரிகள் உண்மை என நிரூபிக்கப்பட்டன. நிறைய தியரிகள் பலம் பொருந்திய நாடுகளால் மூடிமறைக்கப்பட்டன.

டான் பிரௌன் ஒன்று கிளப்பிவிட்டாரே, ஏசு நாதருக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தது. அதன் வம்சாவளி இன்றும் இருக்கிறது என...

இந்தியாவிலும் சில இருக்கின்றன. "நேரு குடும்பம் தொன்று தொட்டு முஸ்லீம் குடும்பம். நேருவின் தந்தையார் ஒரு இங்கிலாந்து சீமாட்டியை ஏமாற்றி பணம் பறித்தார்" இந்த மாதிரி.

ஆதித்த கரிகாலனைக் கொல்வித்தது செம்பியன் மாதேவியா, குந்தவையா அல்லது பாண்டிய ஆபத்துதவிகளா என இன்றும் நாம் மண்டையை பிய்த்துக்கொள்கிறோம் அல்லவா?

October 13, 2009

நீலகிரி, நியூட்ரினோ, சில கேள்விகள்


நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் ஒன்றை இந்தியா அமைக்க இருப்பதையும் அதை இயற்கை ஆர்வலர்கள் எதிர்த்து வருவதையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கேட்பத‌ற்கு டொரினோ மாதிரி இருக்கிறதே, அது என்ன நியூட்ரினோ என்று வ‌லையில் தேடிப்பார்த்த‌தில் சில‌ த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்தன.

இப்போதைக்கு ‌நியூட்ரினோ என்பது ஒரு மின்சுமை இல்லாத, ஒளியின் வேக‌த்திற்கு நெருக்க‌மாக‌ ப‌ய‌ணிக்க‌க்கூடிய‌ மிக‌ச்சிறிய (மிக மிக மிகச் சிறிய‌) துகள் என்று வைத்துக்கொள்வோம். இந்த துகள் சூரியனில் நடைபெறுகிற அணுப்பிளவு/இணைவு போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையாகக் கிடைக்கிறது. இது தவிர, இது அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் க‌திர்க‌ளைக் கொண்டு அணுவைத் தாக்குவ‌தாலோ இவற்றைப் பெற‌ முடியும். ஒவ்வொரு வினாடிக்கும் 50 ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1000 பில்லியன்) நியூட்ரினோ துகள்கள் நம் உடம்பில் பாய்கிறது.

இருக்க‌ட்டும். இந்த‌ துக‌ளால் என்ன‌ ந‌ன்மை? இந்த துகளின் சிறப்பு என்ன? ஏன் நியூட்ரினோ ஆய்வ‌க‌ம் இந்தியாவில் அதுவும் நீல‌கிரி வ‌ன‌ப்ப‌குதியில் அமைக்க‌ப்ப‌டுகிற‌து?

ம‌ற்ற துகள்கள் (உம் : ஃபோட்டான்) வ‌ளிம‌ண்ட‌ல‌த்திலுள்ள‌ மாசுக்க‌ளால் (முக்கியமாக மின்காந்த அலைகளால்) வ‌லுவிழக்கக்கூடும். அதனால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. ஆனால் நியூட்ரினோ, எந்த ஒரு பொருளாலும்/துகளாலும் பாதிக்க‌ப்ப‌டாம‌ல் ஊடுருவிச் செல்ல‌வ‌ல்ல‌து. இதுவே இத‌ன் சிற‌ப்பு. அத‌னால் தொலை தூர‌ ஆராய்ச்சிக‌ளுக்கு இந்த‌ துக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். பிர‌பஞ்ச‌ம் உருவான‌ வித‌த்தைப் ப‌ற்றித் தெரிந்துகொள்ள‌ முடியும் என்கிறார்க‌ள். த‌விர‌ சூரிய‌னின் "கோர்" ப‌குதியை ஆராய‌வும் இது உத‌வுமாம். மேலும் ப‌ல ம‌க‌த்தான‌ ப‌ய‌ன்க‌ளைத் த‌ரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் இந்த‌ நியூட்ரினோக்க‌ளைப் பிடிப்ப‌து அவ்வ‌ள‌வு சுல‌ப‌மில்லை. லிட்ட‌ர் லிட்ட‌ராக வெள்ளை-ஸ்பிரிட் (அல்லது நீர் அல்லது கனநீர்... ) தேக்க‌ப்ப‌ட்ட ராட்ச‌தத் தொட்டிக‌ள் மூல‌மாகப் பிடிக்க‌லாம். அத‌ற்கு நிறைய‌ இட‌ம் தேவை. நிறைய மாச‌டையாத‌ இட‌ம். அத‌ற்குத்தான் நீல‌கிரி. திட்ட‌ம் என்ன‌வென்றால், 1.3 கி.மீ ஆழத்துக்குத் மலை உச்சியில் தோண்டி ஆய்வ‌க‌ம் அமைக்க‌ப்போகிறார்க‌ள். அது த‌விர‌ ஒரு இர‌ண்ட‌ரை கி.மீ தூர‌த்துக்கு ம‌லைய‌டிவார‌த்திலிருந்து அந்த ஆய்வ‌க‌த்திற்கு குகை மாதிரி தோண்ட‌ப்போகிறார்க‌ள். பிற்பாடு, ஜ‌ப்பான் அமெரிக்காவிலிருந்தெல்லாம் நியூட்ரினோக்க‌ளை க‌ட‌ல‌டியில் அனுப்பி, நீல‌கிரியில் பெற்றுக்கொள்ளும் திட்ட‌மும் இருக்கிற‌தாம் (அடங்கொன்னியா).

மலைப்பாக இருக்கிறது. ஒரு ம‌லையையே குடைய‌ப்போகிறார்க‌ளா? தோண்ட‌ப்ப‌ட்ட‌ ம‌ண்ணை என்ன‌ செய்ய‌ப்போகிறார்க‌ள்? ஆய்வகம் பாதுகாப்பானதா? கதிரியக்க அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? த‌விர‌ ஆய்வ‌க‌ம் அமைக்க‌ க‌ட்டுமான‌ப் பொருட்க‌ள் எவ்வ‌ள‌வு தேவைப்ப‌டும்? குறைந்த பட்சம் இரும்பு 1 ல‌ட்ச‌ம் டன், சிமெண்ட் ஒரு 35,000 டன், இவை த‌விர‌ அலுமினிய‌ம், எஃகு லொட்டு லொசுக்கு என‌ ஒவ்வொன்றையும் அங்கு கொண்டு சேர்க்க‌ எவ்வ‌ள‌வு நேர‌ம் தேவைப்ப‌டும்? கிட்டத்தட்ட ஒரு லட்சத்து என்பதாயிரம் ட்ரக்கு சவாரி தேவைப்படும் என ஒரு கணக்கு சொல்கிறது. கட்டுமானம் மட்டும் நான்கு வருடத் திட்டம். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 130 சவாரி. எவ்வளவு கார்பன் மாசு வெளிப்படும்? இதெற்கெல்லாம் புதிதாக‌ சாலை ஏதாவது போடப்ப‌டுமா? இதையெல்லாம் விட‌ முக்கிய‌மாக தெரிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ இட‌ம் முதும‌லை வ‌ன‌வில‌ங்கு காப்ப‌க‌த்துக்கு மிக‌ அருகில் உள்ள‌து. அங்குள்ள‌ வில‌ங்குக‌ள் பாதிக்க‌ப்ப‌டுமே? இப்ப‌டி ஒவ்வொரு கார‌ணத்துக்காக‌வும் இந்த‌ ம‌லையை அழிக்க‌ ஆர‌ம்பித்தால்...? த‌மிழ‌கம் பெரிதும் நம்பியிருக்கும் தென்மேற்குப் ப‌ருவ‌ மழையின் மூல‌மான‌ மேற்குத் தொட‌ர்ச்சி ம‌லையின் க‌தி என்ன‌? இவை எல்லாம் தான் இய‌ற்கைப் பாதுகாவ‌ல‌ர்க‌ளின் கேள்விக‌ள்.

இதற்கு விஞ்ஞானிகள் கூறுவதெல்லாம், "இது அணு ஆராய்ச்சிக்கூடம் இல்லை. அதனால் கதிரியக்க பயம் தேவையில்லை" என்பது தான். மற்ற கேள்விகளுக்குப் பதிலில்லை.

எழுப்ப‌ப்ப‌ட்ட நியாயமான கேள்விகளுக்கு ச‌ரியான‌ முறையில் ப‌தில‌ளிக்க‌ப்ப‌ட‌வேண்டும், நீலகிரி மலைப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும், ஏற்கென‌வே ம‌னித மாசால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள ம‌லைக‌ளின் அர‌சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும்...

டிஸ்கி 1: உண்மையில், இந்த‌ இடம் சில பல ஆண்டுகளுக்கு முன்னமே தெரிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக அரசு இன்னும் இசைவு தெரிவிக்காத காரணத்தால் திட்டம் இன்னும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிற‌து.

டிஸ்கி 2 : ஏதாவது தகவல் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்

டிஸ்கி 3 : இப்படி எல்லாம் யோசித்தால் அறிவியல் எப்படி வளரும் என்று கேட்பவர்களும் ஆட்டத்தில் கலந்துகொள்ளலாம்.

October 05, 2009

கனா கண்டேனடி தோழி....



"நைட் ஃபுல்லா கனவுல நீதாண்டா குட்டி" - காதலனைக் கொஞ்சும் காதலி.

"செத்துப்போன உன்ற அப்பா கெனாவுல வந்து கூப்டுறாரு" - மகனிடம் புலம்பும் மூதாட்டி

"மச்சி, 2 பேப்பர் புட்டுக்குற மாதிரி கனவு வந்துச்சுடா" - நண்பனுக்கும் சேர்த்து பீதியைக் கிளப்பும் மாணவன்

"கனவு காணுங்கள்" - அப்துல் கலாம்

"அது ஒரு கொடுங்கனவு" - காமம் பற்றி ஒரு எழுத்தாளர்.

இப்படி எப்போதாவது கனவுகளைப் பற்றி நாம் பேசுவதுண்டு. ஆனால் என் தோழி சதா சர்வ காலமும் கனவைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறாள். சைக்காலஜி படிக்கிறாள். "கனவுகள் பற்றிய ப்ராஜக்ட் செய்யலாம் என்று இருக்கிறேன்" என்கிறாள். கனவுகள் பற்றி அவள் சொன்ன தகவல்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தன.

துரித கண்ணசைவு (Rapid Eye Movement - REM) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தூங்கும் போது மூடிய இமைகளுக்குள் கண் அசைவது. அந்த சமயத்தில் கனவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு ஆராய்ச்சி செய்யும் போது அவருடைய பேஷண்ட் தூங்கும் போது கண்ணைக் கண்ணை உருட்டியிருக்கிறார். எழுப்பிக் கேட்கவும் தான் இது தெரிந்திருக்கிறது. இந்த REM ன் போது உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு எல்லாம் விழித்திருக்கும்போது இருந்த மாதிரியே இருந்ததாம்.

நாம் எல்லோரும் கனவு காண்கிறோம். தினமும் கனவு காண்கிறோம். ஆனால் 90 சதம் கனவுகள் நினைவில் இருப்பதில்லை. எழுந்து 5 நிமிடங்களுக்குள் மறந்துவிடுகின்றன. ஆனாலும் சில மேதைகளின் கண்டுபிடிப்பு / கவிதைகளுக்கு கனவு தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது.

கருப்பு வெள்ளையில் கனவு காணும் காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போதெல்லாம் கனவு கலரிலேயே ரிலீஸ் ஆகிறது.

கோபம், துக்கம் போன்ற எதிர்மறை உணர்வுகள் தான் பெரும்பாலான கனவுகளில் வருகின்றன.

ஆண்களின் கனவுகள் பெரும்பாலும் மற்ற ஆண்களைப் பற்றியது. அதே சமயம் பெண்களின் கனவுகளில் ஆண்களும் பெண்களும் சமமான அளவில் வருகிறார்கள்.

இன்னொரு விஷயம், கனவு காணும்போது நமது கை கால்கள் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்படுகின்றன. கனவுல் நடப்பதற்கு கையைக் காலை ஆட்டி எதிர்வினை செய்யாமலிருப்பதற்காகவாம். பாம்பு துரத்துகிறது என்று எழுந்து ஓடிவிடக் கூடாது அல்லவா?

உண்மையில் கனவுகள் உணர்ச்சிகளின் வடிகால்கள். தேவையில்லாத நினைவுகளை நீக்குவதற்காக இயற்கை அளித்த கொடை. கனவு காணும்போது பாதியில் எழுந்தவர்கள் / எழுப்பப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் வரலாம் என்கிறார்களாம் விஞ்ஞானிகள்.

ஆனால் கனவு என்பது என்ன? எங்கிருந்து வருகிறது? என்ற கேள்வியை பாஸ் செய்துவிட்டாள்.

எல்லாம் சொல்லிவிட்டு சொன்னாள். "Max, you know what? சராசரியா நமக்கு டெய்லி சிக்ஸ் ட்ரீம்ஸ் வருது"

"அப்படியா? எனக்கு செக்ஸ் ட்ரீம்ஸ் தான் வரும்" என்று சொல்ல நினைத்தேன், சொல்லவில்லை.

டிஸ்கி : தலைப்பிலிருக்கும் தோழிக்கும் சைக்காலஜி படிக்கும் தோழிக்கும் சம்பந்தம் இல்லை :)

October 02, 2009

டைம் மெஷினும் உன்னைப்போல் ஒருவனும்

Time Machine ???? (ரெண்டு குதிரையைக் கொண்டாந்து பூட்டுங்கப்பு)

"VCR மாதிரி வாழ்க்கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?" அனேகமாக நம் அனைவருக்கும் இந்த எண்ணம் வந்து போயிருக்கும். ஆனால், காலப்பயணம் என்றொரு விஷயம் இன்று வரை ஒரு கனவாகவே இருக்கிறது.

விஞ்ஞானிகளைக் கேட்டால் இந்த விஷயம் முடியும் என்று நிரூபிக்கப்படவில்லை, அதே சமயம் முடியாது என்றும் சொல்லிவிட முடியாது என்று மேலும் குழப்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒருவர் ஒளியை விட வேகமாக, அதாவது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய முடிந்தால் அவர் பல தலைமுறைகளுக்குப் பிறகு உள்ள சந்ததிகளைச் சந்திக்க முடியும் என்பது தர்க்க ரீதியில் சாத்தியம். அதாவது, ஒளியை விட வேகமாக பயணித்துவிட்டு கொஞ்சம் வேகம் குறைத்து, திரும்பவும் ஒளியின் வேகத்தில் பூமிக்கு வந்தால், சில் ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்குமாம். இந்த முறையில் Time Dilation, Special Relativity என ஏதேதோ கான்செப்ட்களை உபயோகிக்கலாமாம். ஆனாலும் இந்த முறையில் கடந்த காலத்துக்குப் போவது சாத்தியமில்லையாம்.

கடந்த காலத்திற்குப் போவதற்கு Wormhole என்ற ஓட்டையைப் பயன்படுத்தமுடியும் என்கிறார்கள். என்ன எழவோ, ஒரு கருமமும் புரிய மாட்டேன் என்கிறது.

கடந்த காலம் என்பது ஏற்கெனவே நடந்து முடிந்தது. கண்டிப்பாக ஒரு "நான்" இருப்பேன். இப்போது 2009ல் இருந்து இன்னொரு நான் கிளம்பி 2000க்குப் போனால் என்ன ஆகும்? இரண்டு "நான்"கள் இருப்போமா? காலப்பயணம் செய்த "நான்" கடந்த காலத்தில் இருக்கும் "என்னைக்" கொன்றுவிட்டால்.....? நிகழ்கால "நான்" என்றே ஒரு ஆள் இருக்க முடியாதே? அல்லது ஒரே ஒரு "நான்" தான் இருப்பேனா? நிகழ்காலத்து ஞாபகங்கள் இருக்குமா? என்னால் இதைத் தாண்டியெல்லாம் யோசிக்கத் முடியவில்லை. ஜித்தர்களைக் கேட்டால் அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை என்கிறார்கள். புத்தகம் போட்டு இந்த பாரடாக்ஸ் பற்றி விளக்குகிறார்கள். அதையெல்லாம் படிப்பது உடல்நிலைக்குக் கேடு என்பதால் அந்தப் பக்கமே போகவில்லை.

வெறும் வாயிலேயே வெள்ளாமை செய்யும் ஹாலிவுட்காரர்கள் இந்த கான்செப்ட்டை சும்மா விடுவார்களா? இதை வைத்து ஏகப்பட்டப் படங்களைச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். "தி டைம் மெஷின்" என்று ஒரு படம். இறந்த காதலியைக் காப்பாற்ற கடந்த காலத்திற்குச் செல்கிறான் நாயகன். அந்த சந்தர்ப்பத்திலிருந்துக் காப்பாற்றினாலும், அதே நாளில் வேறொரு விபத்தில் இறந்து போகிறாள். ஆயிரம் முறை திரும்பி வந்தாலும் ஆயிரம் முறையும் இறந்து விடுவாள் எனப் புரிந்துகொண்ட நாயகன் எதிர்காலத்துக்குப் பயணிப்பது போல் கதை வரும். "தி பட்டர்ஃப்ளை எஃபெக்ட்" என்று மற்றொரு படம். இதில் இறந்த காலத்துக்குப்போய் நடந்த தவறுகளைத் திருத்துவான் நாயகன்(எனக்குப் புரிந்தவரை).

நடந்ததையோ, நடக்கப்போவதையோ மாற்றியமைப்பது சாத்தியப்பட்டால் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும் இல்லை? தவறு ஏதாவது நடந்தால் "விடு திருத்திக்கலாம்" என்ற நிலை வரும் யாருக்குத் தெரியும், கடந்த காலத்துக்குப் போய், கமலிடம் "உன்னைப் போல் ஒருவன்" படத்தில் உங்கள் காமன் மேன் கெட்டப் எடுபடவில்லை என்று கூட சொல்லலாம் :)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More