மறக்க முடியாத பள்ளி/கல்லூரி நாட்களுக்கு ஆசிரியர்களும் ஒரு முக்கிய காரணம்! சிலருக்கு ஆசிரியைகள். சுவாரஸ்யமானவர்கள், சாதுவானவர்கள், வேடிக்கையானவர்கள், கோபக்காரர்கள், வசீகரமானவர்கள் என எத்தனையோ வகைகளில்..
ஆறாவது படிக்கும்போது தமிழ் வகுப்பெடுத்த சின்னத்தம்பி அய்யா. இவர் ரொம்ப வேடிக்கையாகப் பேசுவார். ஒரு முறை பிழை இல்லாமல் எழுதுவதின் அவசியத்தைப் பற்றி விளக்குகையில் ஒரு கதை சொன்னார். வெளியூரில் வேலையிலிருக்கும் தகப்பனாருக்கு மகள் கடிதம் எழுதுகிறாள். நலம் விசாரிப்பு இத்யாதி இத்யாதிகளுக்குப் பிறகு இறுதியாக இப்படி எழுதுகிறாள்.
"அப்பா, வரும்போது மறக்காமல் பாடைக்குத் துணி வாங்கி வரவும்"
இதைப் படித்ததும் அதிர்ச்சியாகுமா இல்லையா? அவள் சொல்ல நினைத்தது பாவாடைக்குத் துணி. ஒரு எழுத்து விட்டுப் போனதால் எவ்வளவு அனர்த்தம்?
"அதனால் பிழையில்லாமல் எழுதுங்களடா மண்டூகங்களா!" என முடித்தார்!
அப்புறம் நாகலட்சுமி டீச்சர். இவர் ரிட்டையர் ஆவதற்கு முதல் வருடம் இவரிடம் படித்தேன். ஆறாவது சேர்ந்த புதிது. முதல் வகுப்பிலேயே Alphabets எழுதச் சொன்னார். நானும் வேக வேகமாக Capital Letters எழுதிக் கொண்டு போய் காட்டினேன், Good இப்ப Small Letters எழுது பார்க்கலாம் என்றார். திரும்பவும் அதே வேகத்துடன் எழுதிக்கொண்டு போய் காட்டினேன், விழுந்தது அறை. ஏனென்றால் நான் எழுதிக் கொண்டு போய் காட்டியது Capital Letters ஐயே கொஞ்சம் சின்ன சைசில். ...:)
Guardian Angel என்பார்களே. இவரைச் சொல்லலாம் அப்படி.. மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்லாது நல்ல சூழ்நிலையையும் தந்தவர். எந்தக் காரணத்துக்காகவும் தனது மாணவர்களை விட்டுக்கொடுக்காதவர். நன்றாகப் பாடுவார். இவரைப் பார்த்தால் ஏனோ எம்.எஸ் அம்மா போலவே தோன்றும் எனக்கு.
பத்தாவது படிக்கும்போது வகுப்பாசிரியராக வந்தார் அரங்கசாமி சார். இவர் தான் தலைமையாசிரியர். மனிதருக்கு என் மேல் அலாதிப் பிரியம். அதனாலேயே நான் நல்ல மார்க் வாங்கினால் கூட ஏன் இன்னும் அதிகமாக வாங்கவில்லை என அடிப்பார். கண்டிப்புக்கு பெயர் போனவர். ஒரு முறை ஒரு மாணவனை அடிக்கும் போது அவன் மயங்கிவிட, மயக்கம் தெளிய வைத்து திரும்பவும் அடித்தார். ஆனாலும் அனைவருக்கும் பிடிக்கும் இவரை. பாவம் விபத்து ஒன்றில் இறந்து போனார்.
அடுத்தது விஜயலட்சுமி டீச்சர். ஆசிரியை ஒருவரை உறவு முறை சொல்லி அழைத்தது இவரைத்தான். என் வகுப்பில் அனைவரும் இவரை அக்கா என்று தான் அழைப்போம். இவர் வீட்டுக்காரரையும் மாமா என்று தான் அழைப்பது. செம Brainy.
அப்புறம் காலேஜ் படிக்கும்போது சிலர். அந்த வயதுக்கே உரிய அக்குறும்புகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தான் அதிகம். ஒரு முறை, இன்டெர்னல் மார்க் ஒழுங்கா போடுவதில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒரு சாரை ஹாஸ்டல் ரூமில் வைத்துப் பூட்டி தாழ்ப்பாளில் ஒரு நாயையும் கொண்டு வந்து கட்டி, போகிறவன் வருகிறவன் எல்லாம் அந்த நாயை உசுப்பேத்திவிட்டுக் கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் அந்த நாய் எங்களைப் பார்த்தாலே அலற ஆரம்பித்தது. அவர் எவ்வளவு தட்டியும் யாரும் திறக்கவில்லை. அது போட்ட சத்தத்தில் அன்று அவர் தூங்கியிருப்பார் என நினைக்கிறீர்கள்?
{}
இன்னும் சொல்ல நினைக்கும் ஆசிரியர்கள் எத்தனையோ பேர். எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் இயந்திர கதியில் இயங்கும் இந்த வாழ்க்கையில் யாரையென்று போய் பார்ப்பது? இந்த மாதிரி நினைவுகளை மட்டுமே பொக்கிஷமாக பாதுகாக்க முடிகிறது. ஆனால் ஒன்று. எந்த ஆசிரியரும் தன் மாணவன் தன்னை வந்து பார்ப்பதில்லையே என வருந்துவதில்லை. ஏனெனில் எனக்கு ஒரே ஒரு அரங்கசாமி, ஒரே ஒரு நாகலட்சுமி தான்! ஆனால் அவர்களுக்கு நூறு மகேஷ்கள்!
I Salute you Teachers!!!