August 05, 2010

எந்திரன் - முன்னோட்டம்.

சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" படித்திருக்கிறீர்களா? அழகான அறிவியல் கதை. நிலா என்ற அழகியும் ஜீனோ என்ற இயந்திர நாயும் சேர்ந்து கொண்டு செய்யும் சாகசங்கள் தான் கதை. ஜீனோ அநியாயத்துக்குப் புத்திசாலி. புத்தகம் படிக்கும், கவிதை நெய்யும், லாஜிக்கல் ரீசனிங்கில் வித்தை காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகள் என்ற உன்னதத்தைப் பெற்று படைப்பின் உச்சத்தை அடையும். தானாகவே சிந்திப்பது, நிலாவின் மேல் மையல் கொள்வது, தடவிக்கொடுத்தலில் இருக்கும் அன்பை உணர்வது, பயம் கொள்வது என்று அட்டகாசம் செய்யும்.

இயந்திரன் என்ற பெய்ரைக் கேட்டவுடன் அப்படிப்பட்ட செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரம் செய்யும் சாகசங்கள் தான் படம் என்று தெரிந்தது. பாடல்களும் ட்ரெய்லரும் அதை உறுதிப்படுத்துகின்றன. பார்க்கலாம் அறிவியலும் மசாலாவும் ஒன்று சேரப் போகின்றன. 160 கோடி பட்ஜெட் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் செய்யலாம். ரஜினியின் முகத்தை விதவிதமான லைட்டிங்கில், விதவிதமானக கோணங்களில் என்பது விதமான படங்கள் எடுத்து கிராஃபிக்ஸ் செய்து இருக்கிறார்களாம். சண்டைக் காட்சிகளே மொத்தம் ஒரு மணி நேரம் வருகின்றதாம். ஊரெல்லாம் எந்திரன் தான்.

ஒன்று மட்டும் புரியவில்லை. ஆறு பாட்டுகளில் ஐந்து ரோபோவிற்குத்தான் போலிருக்கிறது. "அஃறிணையின் அரசன் நான், காமுற்றக் கணினி நான்" என்றெல்லாம் ரோபோ பாடுகின்றது. நம்மவர்கள் ஏலியனை வைத்துப் படம் எடுத்தாலும் அதற்கும் ஒரு பில்ட்-அப் சாங் வைப்பார்கள்.

ஆனால், சும்மாச் சொல்லக் கூடாது. முதல் முறை கேட்டபோது கன்னாபின்னாவென இருந்தப் பாடல்கள், புரிய ஆரம்பித்ததும் ஆட்டம் போட வைக்கின்றன. Rahman Rocks! "இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ" கதறக் கதறக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழில் அறிவியல் படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. என்ன ஒன்று, டெரா ஹெர்ட்ஸும், ஜெரா பைட்ஸும் புரிந்து தொலைக்க வேண்டும்.

எந்திரன் டீமுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More