தன் காதலியைக் கொன்ற வில்லனை "இன்னும் இரண்டு மணி நேரத்தில் உன்னைக் கொல்லப் போகிறேன்" என்று டைம் சொல்லி சொல்லி பழிவாங்கும் கதாநாயகன், அதே அவகாசத்தில் நாயகனை கொல்லத்துடிக்கும் வில்லன் இவர்களுக்கு இடையே நடக்கும் விறு விறு ரேஸ் தான் படம். ரொம்ப நாளைக்கு அப்புறம் வேகமான திரைக்கதையுடன் கூடிய படம். டைட்டில் போடும் போதே எதிர்பார்ப்பை கிளப்பிவிடுகிறார்கள். படமும் அதை ஓரளவிற்கு பூர்த்தி செய்கிறது. ஒவ்வொரு அசைவையும் திட்டம் போட்டு நகர்த்தும் நாயகன் வில்லனின் புகழையும் பலத்தையும் அழிக்க ஆரம்பிக்கிறான். அதை சாமர்த்தியமாக எதிர்கொள்கிறான் வில்லன். இப்படி படம் முழுக்க பரபரப்பு. முழுப்படமே கிளைமாக்ஸ் எனும்போது விறுவிறுப்புக்கு சொல்லவும் வேண்டுமா?
எஸ்.ஜே.சூர்யாவிற்கு அருமையான வேடம். கர கர குரலிலேயே அசத்துகிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார். எதிரிக்கு சவால் விடுவதிலும், அவனிடம் மாட்டிக்கொள்ளும்போது பரிதவிப்பதிலும் பின்னியெடுத்திருக்கிறார். அதே சமயம் படம் ஆரம்பித்தவுடன் வரும் அந்த காண்டம் மெஷின் காமெடியில் அக்மார்க் எஸ்.ஜே.சூர்யாவைப் பார்க்கமுடிகிறது!
ஆஹா பட நாயகன் ராஜீவ்கிருஷ்ணா தான் வில்லன். வில்லத்தனம் செய்வதிலும் , மரண பயத்தில் புலம்புவதாகட்டும் மனிதர் கலக்கியிருக்கிறார். ஆனால் படம் நெடுக வாயை மட்டும் ஒரு மாதிரி கோணலாகவே வைத்திருக்கிறார். அது தான் ஏனென்று புரியவில்லை.
சாதாரண ஒரு கதைக்கு ஆங்கிலப் பட வேகத்திற்கு திரைக்கதை அமைத்த இயக்குனரை எப்படி எப்படியோ பாராட்டத் தோன்றுகிறது. ஆனால் இந்த மாதிரி ஒரு திரைக்கதைக்கு பாடல், ஃப்ளாஷ்பேக் என்று வேகத்தடை போட்டு மொக்கையாக்கியதற்காக அப்படியே அடக்கிகொள்ள வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே வரும் ஒருசில லாஜிக் சொதப்பல்களையும் தவிர்த்திருக்கலாம்.
பிண்ணனி இசை படத்தின் மிகப்பெரிய பலம். அதுவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வரும் இசை அசத்தல் ரகம். ஆனால் வில்லன் வரும்போதெல்லாம் ஓர் அம்மணி வயிற்று வலியால் அவதிப்படுவது போல கத்திக் கத்திக் கடுப்பேற்றுகிறார். பாடல்கள் சுமார் ரகம். காதல் தண்டோரா மட்டும் ரசிக்க வைக்கிறது. அதுவும் அந்த பாடல் காதலியின் கல்லறைக்கருகில் நிற்கும் காதலன், அவளை நினைத்துப் பார்ர்கும்போது ஆரம்பிக்கிறது. கர்மம்டா சாமி!
ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்தின் மிகப்பெரிய பலம். படம் முழுக்க திரையை விட்டு கண்கள் அகலாமல் கட்டிப்போடுகிறார்கள்.
மொத்தத்தில் படத்தின் முதல் இருபது நிமிடங்களையும், பாடல்களையும் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் படம் பட்டாசு! சேர்த்துப் பார்த்தால் நமுத்துப் போன பட்டாசு :(
கொசுறு: படத்தின் நாயகி? அவரே கொசுறு போல தான் இருக்கிறார். தள தள தக்காளிகளை ரசிக்கும் தமிழனிடத்தில் ஒரு அவரைக்காயை கொண்டு வந்து நிறுத்தினால் போணியாகுமா? சரி நடிப்பாவது வருகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. Spoof மூவி பார்க்கும் உணர்வு தான் கிடைக்கிறது இவரைப் பார்த்தால். அவர் அழும்போதும், பயப்படும்போதும் சிரிப்பு வருது சார்! வேறு ஆளா கிடைக்கவில்லை? நாயகிகளுக்குமா Recession?