சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், கண்ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகான நிழற்கூடத்தைக் கட்டி உள்ளது. GPS முறையில் பேருந்துகளின் இருப்பிடம் அறியும் வசதி, சில்லறை மாற்றும் இயந்திரம், ISD வசதியுடன் கூடிய பொது தொலைபேசி, செல்பேசி சார்ஜ் செய்யும் வசதி, மின்விளக்குகள், இரண்டு மின்விசிறிகள், தூரத்தில் வரும் பேருந்துகளை பார்க்க Concave கண்ணாடி (குவி ஆடி தானே ?), கடிகாரம், வசதியான இருக்கைகள், வெப்பநிலை அறியும் வசதி மற்றும் இவற்றை எல்லாம் பாதுகாக்க காவலாளி என்று நிழற்கூடம் அமர்க்களப்படுகிறது. இதுபோல இன்னும் 500 பேருந்து நிறுத்தங்கள் கட்டப்படும் என்று சொல்கிறார்கள். நல்ல செய்தி.
இவை எல்லாம் கண்டிப்பாக பயணிகளுக்கு பயன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒழுங்காக பராமரிக்க படவேண்டும், அவ்வளவு தான். முக்கியமாக மழை காலங்களில். சாதரணமாகவே அந்த இடத்தில் மழை பெய்தால் நிழற்கூடத்திற்கு பின்னால் இறக்கும் மைதானம் வரை சாரல் அடிக்கும். இப்போது இந்த இயந்திரங்கள் மேல் கண்டிப்பாக சாரல் விழும். காப்பாற்ற என்ன செய்ய போகிறார்களோ! இவ்வளவு செய்தவர்கள் இதைப் பற்றி யோசித்து இருப்பார்கள் என்று நம்புவோம்.
நண்பர் ஒருவர் இயந்திரத்தில் சில்லறை மாற்ற ஓரிரு முறை முயன்றிருக்கிறார். "No Stock" என்றே பதில் வந்ததாம்! இதெல்லாம் சரி செய்தால் மகிழ்ச்சி.
எப்படியோ... ஒரு நல்ல முயற்சியை நாமும் வாழ்த்துவோம்!!!