இரத்தத்தையும், இடுப்புச்சதையையும் நம்பாமல் பிள்ளைப்பருவ சுகதுக்கங்களை மட்டுமே படமாக்கத்துணிந்த இயக்குனர் பாண்டிராஜ், தயாரித்த இயக்குனர் சசிகுமார் ஆகியோருக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான சில்லுவண்டித்தனமான மோதல்கள் தான் படத்தின் கதை. அனேகமாக எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெற்று இருக்கும்.
ஜீவா, பக்கடா, குட்டி மணி ஆகிய மூவரும் உள்ளூர் தாதாக்கள். மூவரும் ஆறாம் வகுப்பு படிப்பவர்கள். இவர்களுக்கு பயந்து போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அளவிற்கு டெரரான ஆட்கள். "இவர்களை அடக்க ஒருவன் வராமலா போய்டுவான்? " என்று ஒரு பெருசு சொல்லும்போது நாயகன் (அன்புக்கரசு I.A.S - I.A.S ஆகணுமாம்! ) அறிமுகம், அதுவும் வேட்டையாடு விளையாடு ரேஞ்சில் ஒரு அறிமுகப் பாடலுடன்! பக்கத்து ஊரிலிருந்து ஜீவாவின் எதிர் வீட்டிற்கு குடிவரும் குடும்பத்தின் மூத்த பையன்.
முதல் நாள் பள்ளிக்குச் செல்லும்போதே அன்புவுக்கும் ஜீவாவுக்கும் மோதல் ஆரம்பிக்கிறது. ஜீவாவை வீழ்த்திவிடுகிறான் அன்பு. அதனால் அன்புவை தங்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாகவே நினைக்கிறார்கள் ஜீவா & கோவால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்கள். நிரம்பவும் டென்ஷனாகிறான் ஜீவா(இது அவரே சொல்றதுங்க!).போதாக்குறைக்கு ஜீவாவின் அத்தை மகள் மனோன்மணி அன்புவுடன் தோழியாகிவிடுகிறாள். கேட்கவும் வேண்டுமா? கூடத்திரியும் குட்டி ஸ்ரீமன்கள் வேறு (இப்ப இவர் தானே வில்லனுக்கு சைடு? ) ஜீவாவை ஏத்திவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் பயபுள்ள வன்மம் வைத்துக்கொண்டே திரிகிறது.
இவர்களின் ரகளை குடும்பச்சண்டையாக மாறுகிறது. இதனிடையே வில்லனின்(?) அக்காவும், நாயகனின் சித்தப்பாவும் காதலிக்கிறார்கள். இறுதி வரை இரண்டு வானரக்கூட்டங்களும் அடித்துக்கொள்கின்றன. கடைசியாக ஒன்று சேர்ந்து, இரு குடும்பங்களும் ராசியாகி, காதல் கைகூடி சுபம். முதல் பாதி முழுக்க பிள்ளைகளின் சேட்டைகளைச் சொன்ன இயக்குனர், பின் பாதியில் நாம் புரிந்து கொள்ளாத அவர்களின் வலியையும் தொட்டுச் செல்கிறார். அதனால் பெரியவகளுக்கும் இருக்கு ஆப்பு.
நாயகனைப் பழிவாங்க, கருநாக்கு கொண்ட மாணவனிடம் காசு கொடுத்து சாபம் விடச் சொல்வது, தேனை அவன் தலையில் தேய்க்க முயல்வது, ஐம்பது ஸ்டாம்ப் பந்தயமாக வைப்பது, போட்டி போட்டுக்கொண்டு படிப்பது, மாதத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் என எண்ணுவது என்று பள்ளிக்கால நினைவுகளை எழுப்புகிறார் இயக்குனர். எனக்கு பாடம்சொல்லித்தந்த மாரிமுத்து சாரும், சாந்தஜோதி டீச்சரும், உடன் படித்த அழகுதுரையும், தாமரைச்செல்வியும் நினைவுக்கு வருகிறார்கள்.
படத்தின் ஊடே வரும் அந்த காதல், ஒரு அழகிய மெலடி. வில்லனின் அக்கா சோபிக்கண்ணுவாக சரோஜா பட புகழ் வேகா. நாயகனின் சித்தப்பா மீனாட்சி சுந்தரமாக விமல். இருவரும் அழகாகச் செய்திருக்கிறார்கள். பெரியவர்கள் ஓகே ரகம்.
படத்தில் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் பாடியிருக்கிறார்கள். மற்றபடி பாடல்களும் பிண்ணனி இசையும் சுமார் ரகம். சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு ரொம்ப எதிர்பார்த்தோம் ஜேம்ஸ் சார்! ஒளிப்பதிவு, மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் உறுத்தாத வகையில் இருந்தன. உண்மையில் அவற்றை கவனிக்க நேரம் கொடுத்திருக்கமாட்டார் இயக்குனர்.
இறுதிக்காட்சி ஊகிக்கக்கூடியதாக இருந்தது, டாக்டர் "ஏதாவது பேசுங்க" என்றதும் அரங்கத்தில் எல்லோரும் கைத்தட்ட ஆரம்பித்துவிட்டார்கள். :) மருத்துவமனையில் ஒரு ஊரே நின்று கைத்தட்டிகொண்டிருக்கும். அடப்பாவிங்களா! சில காட்சிகள் சினிமாத்தனமாக இருந்ததை மட்டும் தவிர்த்திருக்கலாம். மற்றபடி ஒவ்வொரு காட்சியும் அமர்க்களம்.
ஜீவா, பக்கடா, குட்டி மணி, அன்பு, மனோன்மணி, மங்களம் (அப்பத்தா) ஆகிய "பசங்க"ளுக்கு அன்பு முத்தங்கள். (வேகாவையும் பசங்க லிஸ்ட்ல சேர்த்துக்கலாமே? ப்ளீஸ்...) இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் மீண்டும் பாராட்டுக்கள்!
ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் நினவுகளை தூசி தட்டி எடுக்கும் கதைகள் கண்டிப்பாக வெற்றி பெறும். அந்தவகையில் இதுவும் ஒருவெற்றிப்படம்.
படங்கள் நன்றி : Indiaglitz