செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாள் இருந்த படம். அப்போ இப்போ என ஒரு வழியாக பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாடல்கள் - எனக்குப் பிடித்த வரிசையில்..
* பெம்மானே பேருலகின் பெருமானே. - பாம்பே ஜெயஸ்ரீ & ஸ்ரீனிவாஸ்
உயிரை உருக்கும் ரகம் என்பார்களே அந்த மாதிரி பாடல் இது. பாம்பே ஜெயஸ்ரீயின் குரலுக்கு புதிய பரிமாணம். பஞ்சம், ப்ட்டினி வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சைப் பெருவுடையாரிடம் முறையிடுதல் போல் அமைக்கப்பட்டுள்ளது.
சோறில்லை சொட்டு மழை
நீரில்லை, கொங்கையிலும்
பாலில்லை கொன்றையோனே..
இந்த வரிகள் அவலத்தின் உச்சம்... இருபது முறையாவது கேட்டிருப்பேன் இதுவரை.
* தாய் தின்ற மண்ணே - விஜய் யேசுதாஸ் & நித்யஸ்ரீ மகாதேவன்.
இதுவும் அதே மாதிரி பாடல் போலத் தோன்றுகிறது. புலிக்கொடி பொறித்தவர்கள் எலிக்கறி பொரிப்பதுவோ என்றெல்லாம் வருகிறது. தமிழ்,தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கியிருக்கிறார்கள். ருத்ரவீணை, யாழ் போன்ற அரிய இசைக்கருவிகளையெல்லாம் தேடிப்பிடித்து உபயோகித்து இருப்பதாக செல்வராகவன் கூறியிருக்கிறார். இந்த பாடலின் தொடக்கத்தில் வருவது ருத்ரவீணை இசை என் நினைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
பாடலே, பாடுவீரோ தேவரே ? பரணி கலம்பகம் உலா ஏதேனும்? ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமேனும் அறிவீரோ? என்ற வசனத்துடன் ஆரம்பிக்கிறது. ஆகா...
விஜய் யேசுதாஸ் தனியாக இதே பாடலை இன்னொரு முறை பாடியிருக்கிறார்.
* மாலை நேரம் - ஜி.வி. பிரகாஷ் & ஆண்ட்ரியா
எளிமையான கிடார் இசையுடன் ஆரம்பிக்கிறது. உடன் ஆண்ட்ரியாவின் சுகமான குரல். அழகான வரிகள். போகப் போக கிடாரின் ஆதிக்கம் கூடுகிறது. காதலைக் காதலிப்பவர்கள் இந்த பாடலையும் காதலிப்பார்கள்.
* உன் மேல ஆசை தான் - ஆண்ட்ரியா, தனுஷ் & ஐஸ்வர்யா தனுஷ்.
சர்வம் படத்தில் வருமே "அடடா வா அசத்தலாம்" என ஒரு பாட்டு? கிட்டதட்ட அதே மாதிரி இருக்கிறது. எனக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறதா இல்லை உண்மையிலேயே அப்படித்தானா என்று தெரியவில்லை. இந்த பாடலும் கேட்பதற்கு Bar Song போலத் தான் இருக்கிறது. ஹ்ம்ம்ம்ம்... படம் வரட்டும் பார்க்கலாம்.
* இந்த பாதை - ஜி.வி. பிரகாஷ்
தாலாட்டும் ரகம். ஜி.வி யின் குரலில் இளமை துள்ளுகிறது. கவலை இல்லாமல் திரியும் நாயகனுக்காக இந்த பாடல் இருக்கலாம். எழுதியது செல்வராகவனாம். நைஸ்.
* ஓ ஈசா - கார்த்திக், ஆண்ட்ரியா & பிக் நிக்.
கோவிந்தா கோவிந்தா டேக் மி ஹையர் கோவிந்தா என வழிபடுகிறார்கள். கடவுளையும் டிஸ்கோவுக்கு அழைத்துவந்துவிட்டார் ஜி.வி...:)
* Celebration of Life
தீம் மியூசிக்? அசத்தலான இசை. மிக மெலிதாக ஆரம்பித்து போகப் போக வேகம் கூட்டி இறுதியில் திரும்பவும் மெலிதாக முடிந்து போகிறது,
* The King Arrives.
ராஜா வருகிறார்...? :) பார்த்திபன் ஒரு ராஜா வேடத்தில் நடித்திருக்கிறாராம். அவருக்கான பிண்ணனி இசையாக இருக்குமோ ? கேட்க நன்றாக இருக்கிறது. காட்சியுடன் பார்த்தால் பிரம்மாண்டம் புரியலாம்.
பாடல்களை முதல் முறை அவசர அவசரமாக கேட்கும் போது அய்யோ பாவம் செல்வா என்று இருந்தது. ஆனால் திரும்பவும் வரிகளுடன் கேட்டபோது சட்டென பிடித்துப் போனது. தனுஷ் மாதிரி கேட்டா புடிக்காது. கேட்க கேட்கத் தான் பிடிக்கும் போல.
ஜி.வி பிரகாஷ் இந்த படத்துக்காக ஒன்றரை வருடம் பழங்காலத்து இசைக்கருவிகளைப் பற்றி ஆய்வு செய்தாராம். பாடல்களைக் கேட்கும் போது உழைப்பு தெரிகிறது. ஜி.வி இசைப் பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். வாழ்த்துக்கள் ஜி.வி!!