May 09, 2009

கலைஞரின் கதி என்ன?

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் எந்த காயும் எப்படியும் நகரும். எந்த கட்சியும் எப்பொழுது வேண்டுமானாலும் கூட்டணி மாறும். அப்படித் தான் இருக்கிறது இன்றைய நிலையும். ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஷீலா தீக்ஷித் ஆகியோர், தேர்தலுக்குப் பின் அமையவிருப்பது தான் உண்மையான கூட்டணி என்று கூறி வருகிறார்கள். அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இல்லை, இருந்தா நல்லா இருக்கும் என்ற தசாவதாரம் டைப் அறிக்கைகள் கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகளை தெளிவுபடுத்துகின்றன. தேர்தல் பிரச்சாரங்களில் கலைஞரை வறுத்து எடுக்கும் அம்மாவும் காங்கிரஸ் பற்றி பெரிதாக எதுவும் சொல்வதில்லை. 

கிராமப்புறங்களிலும், இணையம் நுழையாத சிறு நகரங்களிலும் ஈழப் பிரச்சனை அதிகம் அறியப்படாமல் இருந்தது. அதை, திடீர் ஈழத்து நாயகி அவதாரம் எடுத்த அம்மா பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, அழகாக ஓட்டு வேட்டையாடி வருகிறார். கலைஞர் எதிர்ப்பு வாக்குகள் வேறு அம்மாவுக்கு விழும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காரணங்களால் இந்த தேர்தலில் ஒருவேளை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு குறைவான தொகுதிகள் கிடைத்து, அ.தி.மு.கவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு அம்மா தயவு தேவைப்படலாம். அப்போது காங்கிரஸ் காற்று திசை மாறி வீசக்கூடும். தமிழ்க்குடிதாங்கி அய்யா வேறு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் என சூசகமாகக் கூறி புளியைக் கரைத்து வருகிறார். அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் இதுவும் சாத்தியமே! 

எது எப்படியோ! இந்த கூட்டணி மட்டும் அமைந்தால் கலைஞரின் நிலை தான் பரிதாபத்திற்குள்ளாகப் போகிறது. காங்கிரஸ் என்ற அரசனை நம்பி தமிழ்நாடு என்ற புருஷனை கைவிட்டது போல... அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை - இது கலைஞர் சொன்னது தான். அந்த வார்த்தைகள் அவருக்கே ரிவீட் அடிக்கும் நிலையில் இருக்கிறது. 

கூட்டணி விசுவாசம் காட்டிய கலைஞருக்கு பதில் மரியாதை செய்யுமா காங்கிரஸ் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More