June 14, 2009

கவிஞர் தாமரைக்கு ஒரு கடிதம்


மதிப்புக்குரிய கவிஞர் தாமரைக்கு,

நலமா?

குமுதம் வெப் டி.வியில் தங்களது பேட்டியை பார்க்க நேர்ந்தது. ஈழப் பிரச்சனையில் தனது நியாயமான கருத்துக்களையும், ஆதங்கங்களையும் முன்வைத்திருந்தீர்கள். அதன் பின் கண்ணகி பிறந்த மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம் என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசித்தீர்கள்.
அந்த கவிதை.

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!
எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுகிறேன்..
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம் படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம் நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

ஆழிப்பேரலை பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
..........

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

எவ்வளவு உக்கிரம் உங்கள் வார்த்தைகளில்? கவிதைகளைப் படித்து நெகிழ்ந்திருக்கிறேன், வருந்தியிருக்கிறேன். அனால் இதைக் கேட்டவுடன் ஒரு காரணம் தெரியாத நடுக்கம் தோன்றுகிறது. கோபம் என்பது வெறும் வார்த்தை. ரௌத்ரம் தெரிக்கிறது உங்கள் வார்த்தைகளில். அவ்வளவு தூரம் காயப்பட்டிருக்கிறோம். கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை உங்கள் வார்த்தைகளின் நிஜத்தை.

சாபம் பலிப்பதும் பலிக்காத்ததும் வேறு விஷயம். அனால் எங்கிருந்தோ வந்து நம் இனத்தை அழித்துக் கொண்டிருப்பவளுக்காக ஒன்றும் அறியாத அப்பாவிகளான மக்களைச் சபிக்க வேண்டாம். எத்தனையோ தமிழரல்லாத நண்பர்கள் நம் நிலைக்காக வருந்துகிறார்கள். பாவம் அவர்களால் வருந்தத் தான் முடிகிறது. நம்மாலும் அதைத்தானே செய்ய முடிகிறது? ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு அந்தச் சாபம் பலிக்கட்டும். தமிழனின் துயரத்தை அரசியலாக்கி லாபம் பார்த்த சுயநலவாதிகளுக்கு அந்த சாபம் பலிக்கட்டும். குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே. அதேபோல் அப்பாவிகள் எங்கிருந்தாலும் அப்பாவிகளே. துயரம் நம்மோடு போகட்டும்.

நம்பிக்கையுடன்,
ஒரு தமிழன்.

13 கருத்து:

உண்மை மகேஷ் அண்ணே.
கோபத்தை விட ரௌத்ரம்தான் வெல்லும்.
நியாயமான கடிதம்.

அன்புத் தம்பி மகேஷ் க்கு ,


உங்கள் கடிதம் எவ்வளவு நியாயமானதோ... அதைவிட பண்மடங்க நியாயாமான கவிதை கவிஞர் தாமரையின் கவிதை... அவரவர்களின் கோப வெளிப்பாடுகள் அவரவர்களின் உள்ள உணர்வுகளின் கொப்பளிப்புகளே..... !!!


சர்தார்களுக்கு ஒரு பிரச்சனை என்ற உடனே பொங்கி எழும் வட இந்தியர்களும் , வட இந்திய அரசியல் வியாதிகளும் .... தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் துளியும் கண்டுகொள்வதில்லை ... நாம் என்ன அவ்வளவு கேவல பிறவிகளா..... ( இதில் வெட்கக் கேடான விஷயம் என்னவென்றால்... நம்ம ஊரு அரசியல் பெருச்சாளிகளும் இதற்க்கு துணை போவதுதான்.....)


சர்தார் பிரச்சனையை பெரிது படுத்தி ஞாயம் வேண்டும் என்று போராடிய வட இந்திய டி.வி சேனல்கள்.... ( NDTV , TIMES NOW , CNN ) ... தமிழர் பிரச்சனைகளை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை........

என்னை பொறுத்தவரை .. கவிஞர் தாமரையின் கவிதை பாராட்டத்தக்கது.......

நன்றி டக்ளஸ் தம்பி!

மேடி அண்ணா!
கவிஞர் தாமரையின் உணர்வு வெளிப்பாடுகள் நியாமானது தான்.
இதைவிட அதிகமாக நானும் அரசியல்வாதிகளைத் திட்டியிருக்கிறேன்.
ஆனால் சபிப்பது மற்ற மக்களையும் சேர்த்து தான் எனும்போது கொஞ்சம் யோசிக்க வேண்டியதாகிறது.

// சர்தார்களுக்கு ஒரு பிரச்சனை என்ற உடனே பொங்கி எழும் வட இந்தியர்களும் , வட இந்திய அரசியல் வியாதிகளும் .... தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் துளியும் கண்டுகொள்வதில்லை ... நாம் என்ன அவ்வளவு கேவல பிறவிகளா..... ( இதில் வெட்கக் கேடான விஷயம் என்னவென்றால்... நம்ம ஊரு அரசியல் பெருச்சாளிகளும் இதற்க்கு துணை போவதுதான்.....) //

வெட்கப்பட வேண்டிய உண்மை.

வருகைக்கும் அலசலுக்கும் நன்றி அண்ணா!

அருமையான பதிவு!

தாமரை அவர்களின் கோபம் நியாயமானது.

ஆனாலும் இந்த சாபங்கள் பெரும்பாலும் பலிப்பதில்லை. இந்த உலகில் அயோக்கிய அரசியல்வாதிகள் நீண்ட நல்வாழ்வுக்கு பிறகே இருக்கிறார்கள்.

அருமையான பதிவு!

தாமரை அவர்களின் கோபம் நியாயமானது.

ஆனாலும் இந்த சாபங்கள் பெரும்பாலும் பலிப்பதில்லை. இந்த உலகில் அயோக்கிய அரசியல்வாதிகள் நீண்ட நல்வாழ்வுக்கு பிறகே இருக்கிறார்கள்.

//அப்பாவிகள் எங்கிருந்தாலும் அப்பாவிகளே. துயரம் நம்மோடு போகட்டும். //

உண்மைதான்..
உங்கள் சிந்தனை வெல்லட்டும்..

தாமரை அனல் தெறிக்கும் வரிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி``

வருகைக்கு நன்றி Joe!

நன்றி தீப்பெட்டி...:)

வருக்கைக்கு நன்றி ச.பிரேம்குமார் அவர்களே!

Dont put your blame only on politicians....whoever voted for congress and DMK are also responsible for genocide...

Thamarai is 100% correct.....

வாங்க தமிழன்.
ஈழப் பிரச்சனை பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இருக்கிறார்கள் அல்லவா? தமிழ்நாட்டிலும் கூட... அவர்கள் எல்லாம் ஓட்டுப் போட்டதனால் அவர்களும் தமிழின துரோகி ஆகிவிடுவார்களா? அவர்களியும் சபிப்பது முறையா?

அப்புறம் தாமரை 100% சரி என்றீர்கள். அவர் கோபம் யாருக்கும் வரக்கூடியது தான். அதற்காக ஒட்டுமொத்தமாக அனைவரையும் சபிப்பதைத் தான் ஒத்துக்கொள்ள முடியவில்லை!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More