January 17, 2010

ஆயிரத்தில் ஒருவன்

ஸ்டில்ஸ், பாடல்கள், ட்ரெய்லர் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய படம். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் சொல்லத் தெரியவில்லை. என்னைக் கேட்டால் "Maybe yes!". நாடுகடந்து போன சோழர் பரம்பரை, பாண்டியர்களின் வன்மம், தொல்பொருள் ஆராய்ச்சி எனத் தமிழ் சினிமா அதிகம் கண்டிராத கதைக்களம். பிரம்மிப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் சொதப்பலாக.




800 வருடங்களுக்கு முன் நாடுகடந்து தலைமறைவாகும் சோழர்கள் வியட்னாம் அருகில் ஒரு தீவில் தஞ்சமடைகிறார்கள். போகும்போது பாண்டியர்களின் சிலை ஒன்றைத் தள்ளிக்கொண்டு போகிறார்கள். பாண்டியர்கள் பின்தொடர்ந்து வராமலிருக்க ஏழு பொறிகளை(Traps) ஏற்படுத்திவிட்டுப் போகிறார்கள். 800 வருடங்கள் கழித்து, இன்றும் அந்த சோழ இளவரசன் தஞ்சமடைந்த இடம் தேடப்படுகிறது. அந்த இடத்தைத் தேடப்போகும் பிரதாப் போத்தன் காணாமற்போய்விடுகிறார். அவரையும், அந்த இடம் மற்றும் சிலையையும் தேடிக்கொண்டு ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட் ஹெட் ரீமாசென் தலைமையில் குழு ஒன்று கிளம்புகிறது. குழுவில் பிரதாப் மகள் ஆன்ட்ரியா, ஹெல்ப்பராக கார்த்தி ஆகியோர் இடம்பெறுகிறார்கள். ஏழு தடைகளைத் தாண்டி அந்த இடத்தை அடையும் போது, பார்த்திபன் தலைமையில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் சோழர்களைக் கண்டுபிடிக்கிறார்கள். இடைவேளை!



சும்மா சொல்லக்கூடாது. முதல் பாதி ராக்கெட் வேகம். இதுவரை சொன்னதெல்லாம் முதல் பாதி தான். சில விஷூவல் மொக்கைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நன்றாகவேயிருக்கிறது. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.  சோழர்களைப் பார்த்தவுடன் ஒரு ட்விஸ்ட். அப்புறம் வேகம் குறைந்து விடுகிறது. ஆனாலும் கடைசி வரை ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இடைவேளைக்குப் பின் எல்லோரும் தமிழில்(!) பேசுகிறார்கள்.
இரண்டாம் பாதி முழுக்க ஒரே கூச்சலாக இருக்கிறது. மக்கள் அல்லது போர். சண்டைக்காட்சிகளின் நேரத்தைக் குறைத்து கொஞ்சம் சத்தத்தையும் குறைத்திருந்தால் கூட போதும். இரண்டாம் பாதி வேகமெடுத்திருக்கும். முக்கியமாக அந்த கிளாடியேட்டர் ரக சண்டைக்காட்சி.



சோழர்களுக்கு (தமிழர்களுக்கு) இந்த மாதிரி அடுத்தவன் சாவை ரசிக்கும் வக்கிர மனப்பான்மை இருக்குமா என்று ஒரு கணம் தோன்றியது. உடனே அந்த சந்தேகம் தீர்ந்தது. இரண்டாம் பாதி முழுக்க எனக்கு ஈழத்தை நினைவூட்டுகிறது மக்களே!



ரீமாசென்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... யப்பா! படம் முழுக்க அவர் ஆதிக்கம் தான். தன் குழுவினர் மீது இருக்கும் கண்ட்ரோல், பார்த்திபனுடன் சமர் செய்யும் அந்த கம்பீரம்... எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. சில இடங்களில் விரசம் தூக்கலாக இருக்கிறது. "செம கட்ட இல்ல ?" இது அவரே சொன்ன டயலாக்!



பார்த்திபன் : வறுமையின் வாடும் சோழர்களின் தலைவன். இறுதிக்காட்சிகளில் நெகிழவைத்துவிடுகிறார்.



கார்த்தி : ஹெல்ப்பர். ந‌க்க‌ல், வழிசல், தெனாவெட்டு என ஒரிஜின‌ல் செல்வ‌ராக‌வ‌ன் ப‌ட ஹீரோ.



ஆண்ட்ரியா ‍ ஆர்க்கியாலஜி பொண்ணு. வழியிலிருக்கும் பொறிகளைக் கண்டுபிடிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறார். அதையும் பாவம் கலாய்த்துவிடுகிறார்கள். குல்ஃபி ஃபிகராக இருந்தவரை ஆயா மாதிரி உட்காரவைத்துவிடுகிறார்கள்.



செல்வாவைப் பாராட்டியே ஆக வேண்டும். வழக்கமான காதலன் காதலி, தாதாயிசம், யதார்த்தம் வகையறாக்களுக்கு மத்தியில் ஒரு ஃபான்டஸிக் கதையை முயற்சி செய்ததற்காக!



வசனங்கள் செம ஷார்ப். குறிப்பாக இரண்டாம் பாதியில் ஏராள தாராளமாக "வார்த்தைகள்" விழுகின்றன.  "நெல்லாடிய" பாடலுக்கு யார் சார் நடனம் ? "ஆளான தாமரை" பாடலுக்கு போட்ட மாதிரி இருக்கிறது.



சிலபல சொதப்பல்கள் இருந்தாலும் நம்பிப் பார்க்கலாம். எப்படியும் ரீ‍எடிட் செய்துவிடுவார்கள்.



டிஸ்கி : படம் முடிந்து என் நண்பன் சொன்ன வசனம் "இதெல்லாம் வேலைக்கே ஆவாது மச்சி. நம்ம ஆளுங்களுக்கு ஸ்ட்டார்டிங்க்ல லவ் பண்ண ஆரம்பிச்சு, கிளைமாக்ஸ்ல ஒன்னு சேருற மாதிரி கதை கொடுத்தாத் தான் பார்ப்பாங்க" ரைட்டு!



December 28, 2009

சுப்பிரமணீஈஈஈஈஈஈஈ....

ருக்குப் போயிருந்த போது, புதிதாக வாங்கி வந்திருந்த நாய்க்குட்டிக்கு நாலைந்து செங்குளவிகளைப் பிடித்து அரைத்துப் பாலில் கலந்து கொடுத்துக்கொண்டிருந்தார் பாட்டி. செங்குளவி பால்(!) குடித்தால் நாய் சத்தமாகவும், ஆக்ரோஷமாகவும் குரைக்கும் என்பது ஐதீகம். நாய்க்குட்டிகளின் மெனு பீஃப் பிரியாணி, கருவாடு, ரத்தம் என்று நீளும்.


ஊரில் ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் சராசரியாக 200 மீட்டர் தூரம் இருக்கும். எல்லோருக்கும் அவரவர் வயலுக்குள் வீடு. பாதுகாப்புக் காரணங்களுக்காக, நாய் குரைப்பது மூன்று வீடுகளுக்காவது கேட்க வேண்டும்! அதற்காகத் தான் இந்தக் கொலைவெறி மெனு. நாயின் குரைப்புச் சத்தத்தை வைத்து கூட அதன் ஓனர் புகழப்படுவதால் நாய்க்கு தனி கவனிப்பு இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் பழைய சாதம் சாப்பிட்டாலும் நாய்க்கு விருந்து தான்.

வீட்டுக் காவலுக்கு இரண்டு, பட்டிக் காவலுக்கு ஒன்று என எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் இருந்தன. வயல்வெளி பக்கத்திலிருப்பதால் பாம்புகளெல்லாம் சர்வசாதாரணமாக வாசல் வரை வந்து போகும். அவற்றிலிருந்தெல்லாம் காப்பாற்றுவது நாய்கள் தான். வாசல் ஏறவிடாமல் குரைத்துக்கொண்டே நிறுத்திவைக்கும். பகலில் கட்டிப்போடப்பட்டிருக்கும் நாய்கள் இரவில் அவிழ்த்துப்படுகின்றன. அதனாலேயே இரவில் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கூட வருவதில்லை.

பொதுவாகவே ஊரில் நாய்களுக்கு மணி என்று தான் பெயர் வைப்பார்கள். சில நாய்களுக்கு அதுவும் இல்லை. கூப்பிடுவதென்றால் "கூச் கூச்" என்று கத்த வேண்டியது தான். இப்போது தான் ஜானி, டாமி என்கிற அளவுக்கு வந்திருக்கிறது. மூன்றாம் பிறை படம் பார்த்த என் தாத்தா "சுப்பிரமணி" என்று நாய்க்கு பெயர் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார். பக்கத்துக் காட்டுக்காரர் பெயரும் அதே தான் என்பதால் அந்த பெயர் கைவிடப்பட்டது.


பாம்புக்குக் கூட பயப்படாத அஞ்சா நெஞ்சன் நாய்கள், சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படும். எங்கள் மணிக்கு பட்டாசுச் சத்தமென்றால் அப்படியொரு பயம். வைக்கோல் போருக்குள் புகுந்துகொண்டு கப்சிப்! இரண்டு நாய்கள் எனிமீஸ் ஆக இருந்தால் கூட பிரச்சனையில்லை. ஒன்று சேர்ந்துவிட்டால் விளையாடுகிறோம் பேர்வழி என வெள்ளாமைக் காட்டையெல்லாம் துவம்சம் செய்துவிடும்.

டிஸ்கி : ஊரில் அனைவரும் லேடீஸ் நாய் வளர்ப்பதைத் தவிர்ப்பதால், ஜென்ட்ஸ் நாய்க்கெல்லாம் சங்கடம் தான். எப்போதாவது வழி தவறி ஊருக்குள் வரும் லேடீஸ் பப்பிக்கள் நிலைமை தான் பாவம்!

December 20, 2009

அரட்டை - 21-12-2009

”நான் அவன் இல்லை...” இது ஒரு வருடத்திற்கு முன்பு மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட கசாப்பின் இப்போதைய பல்டி. தான் இந்திப் படங்களில் நடிக்க வந்ததாகவும், படம் பார்க்க சுற்றிக் கொண்டிருந்தவனைத் தவறுதலாகக் கைது செய்துவிட்டதாகவும், AK 47 ஐப் பார்த்ததே இல்லை என்றும் கூறியிருக்கிறான். மேலும், கொஞ்ச காலத்துக்கு முன் குற்றத்தை ஒத்துக்கொண்டது போலீசுக்கு பயந்ததனால் தானாம். ரயில் நிலைய வீடியோவில் தெரிவது, தன்னை மாதிரியே இருக்கும் தீவிரவாதியாம். எதிர்பார்த்தது தான். அவனுக்கென ஒரு வழக்கறிஞர், பாதுகாப்பு, விரும்பியவாறு அசைவு உணவு என ராஜமரியாதையுடன் நடத்தினால் இதுவும் சொல்வான், இன்னும் சொல்வான். செல்லரித்துப் போன அரசியலமைப்பு! அய்யா மன்மோகன் சிங் அவர்களே, கொஞ்ச நாளில் அவனைப் பத்திரமாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுங்கள். இன்னும் கொஞ்ச பேரைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் வரட்டும். நாம் இப்படியே கருணை, ஜீவகாருண்யம், காந்தீயம் என்று பேசிக்கொண்டிருப்போம். வெகு விரைவில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் என இந்தியாவைப் பிரித்து எடுத்துக்கொண்டு போகட்டும். ஜெய்ஹிந்த்!


{}


விதர்பா, கூர்க், பூர்வாஞ்சல், கூர்க்காலாந்து, காரைக்கால்,சௌராஷ்டிரா.... தனித் தெலுங்கானா அறிவிப்பைத் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்திருக்கும் கோஷங்கள் தான் இவை. மகாராஷ்ட்டிராவிலிருந்து விதர்பா, கர்னாடகத்திலிருந்து கூர்க், உத்திரப்பிரதேசத்திலிருந்து பூர்வாஞ்சல், மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து, புதுச்சேரியிலிருந்து காரைக்கால், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா ஆகியவற்றைப் பிரித்து தனித்தனி மாநிலங்களாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. உத்திரப்பிரதேசத்தை வேறு மூன்றாகப் பிரிக்கப்போகிறார்களாம். இந்நிலையில் தமிழகத்திலும் பிரிவினைக் கோரிக்கைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கின்றன. வெகு காலத்திற்கு முன்பு ஒலித்து அடங்கியது தான் இந்தக் குரல். இப்போது மீண்டும் எழ ஆரம்பிக்கிறது. குரல் கொடுத்திருப்பது பா.ம.க, மூவேந்தர் முன்னணிக் கழகம்(புவனேஸ்வரி புகழ்), வன்னியர் சங்கம் ஆகியவை. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்காக‌ மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாநிலத்தை அமைக்கக் கோருகின்றனர். சில மாதங்களுக்கு முன், கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்பட்டால் தன் மாநிலம் கோரப்படும் என கொங்குநாடு முன்னேற்றப் பேரவையும் எச்சரித்திருந்தது (!). சபாஷ்! மொழி ரீதியான பிரிவினைகள் போய் இப்போது ஜாதி ரீதியாகவும் தனி நபர் செல்வாக்குக்காகவும் பிரிவினை பேசும் அளவுக்கு வந்தாயிற்று.


நானும் எங்கள் சொந்தக்காரர்கள் மட்டும் இருக்கிற மாதிரி ஒரு ஏரியாவைத் தனி யூனியன் பிரதேசமாகக் கேட்கலாமென இருக்கிறேன். காசா பணமா? சும்மா கேட்போமே!


{}


கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது வருத்தத்தைத் தருகிறது :(


{}


நம்மில் பலர் ரெக்கார்ட் டான்ஸ் பார்த்திருப்போம். முன்பு வெளிப்படையாகவும், தற்போது மிகுந்த பாதுகாப்புக்கிடையிலும் நடத்தப்படும் கலைச் சேவை. இப்போது புது அவதாரம் எடுத்திருக்கிறது. மானாட மயிலாட, ராணி ஆறு ராஜா யாரு போன்ற நடன நிகழ்ச்சிகள் மூலம். ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க முடியாதவர்கள் இதைப் பார்க்கலாம். ஆடுபவனின் மனைவியும், ஆடுபவளின் கணவனும் சொந்தங்களும் சுற்றி உட்கார்ந்துகொண்டு கைத்தட்டி உற்சாகப்படுத்துவது தான் இதில் சிறப்பு. யாராவது கோபப்பட்டு போர்க்கொடி உயர்த்திவிடாதீர்கள். நிறுத்திவிடப் போகிறார்கள்.


{}


இளைய தளபதியைப் நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஒரு நாளைக்குப் பத்துக்கும் குறையாமல் அவரைக் கலாய்த்து மின்னஞ்சல்களும் குறுந்தகவல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. சலிப்பாக இருக்கிறது. சர்தாருக்குப் பதில் விஜய் எனும் தனி மனிதன். கொஞ்சம் ஓவர் டோஸாக இல்லை?


{}


ஒரு மாதத்துக்கு முன் ஊட்டி போன போது எடுத்த படம். லைட்டா Dreamy Effect சேர்த்திருக்கிறேன்.  Hope you like it! 



ஒரே வருத்தம்.. கடைசி வரை இந்த இளவரசியுடன் பேசவேயில்லை.

December 06, 2009

உலக அழகியைக் காப்பாற்றுவோம்!

கோபன்ஹேகன் - டென்மார்க்கின் தலைநகர். உலக ஊடகங்களின் ஒருமித்தப் பார்வை இப்போது இந்த நகரத்தின் மீது தான். டிசம்பர் 8 முதல் 18 வரையிலான உலக சுற்றுச்சூழல் மாநாடு இங்கு தான் நடைபெறுகிறது. 192 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூடி, தட்பவெப்பநிலை மாறுபாடு குறித்து விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் பின்வரும் விசயங்கள் விவாதிக்கப்படும்.


1) கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியீட்டைக் (குறிப்பாக வளர்ந்த நாடுகளில்) கட்டுக்குள் வைப்பது, 
2) தட்பவெப்ப நிலை மாறுபாட்டைக் கட்டுக்குள் வைக்கத் தேவையான நிதியுதவி,
3) காடுகளின் அழிவைத் தடுக்க கார்பன் ட்ரேடிங் முறை.


இதற்கு முன்னர் 1997 டிசம்பரில் ஜப்பானில் க்யோட்டோ ஒப்பந்தம் என்று ஒன்றைப் போட்டார்கள். அந்த ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளின் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க வகை செய்கிறது. ஆனால் முன்னாள் நாட்டாமை அமெரிக்கா மட்டும் நைசாக கழண்டு கொண்டது. இந்நிலையில் கோபன்ஹேகன் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும கலந்துகொள்வது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. 


2012 படம் பார்த்திருப்பீர்கள். சூரியனிலிருந்து வரும் அதிக நியூட்ரினோக்களால் பூமியின் மையப்பகுதி வெப்பமடைந்து எரிமலையும் பிரளயமுமாக உலகம் அழிவதைக் காட்டியிருப்பார்கள். நமக்கு சூரியனெல்லாம் தேவையில்லை. நாமே பூமியைச் சூடாக்கிக் கொண்டுள்ளோம். அழிவு அது மாதிரி ஒரேயடியாக இல்லாவிட்டாலும், கடல் மட்ட உயர்வு, கடலோர நகரங்கள் மூழ்குவது என்று ஸ்லோ மோஷனில் போய்க்கொண்டிருக்கும். 


அதெல்லாம் வேண்டாமென்று தான் ஊர் கூடி தேரை இழுக்க முயற்சிக்கிறார்கள். இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்து நாடுகளும் (நாமும் தான்) செயல்படுத்த முன்வரவேண்டும். பின்னே நம் ”உலக” அழகியைக் காப்பாற்ற வேண்டாமா? 

November 09, 2009

புராதான அதிசயங்கள் : Seven Ancient Wonders.



இப்போதைய உலக அதிசயங்கள் என்னென்ன என்று நமக்குத் தெரியும். பழங்கால அதிசயங்கள்? 
பழங்கால அதிசயங்கள் எங்கிருந்தன, எப்படி அழிந்தன என்று ஒரு லுக் விடுவோம். 


இப்போது போலவே அப்போதும் ஏழு தான் (அல்லது அப்போது போலவே இப்போதும்?). 



கிசா பிரமிடு : 

மர்மங்களின் தேசம் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் எகிப்து நாட்டில், கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளாக, பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருக்கும் பேரதிசயம். புராதான, இடைக்கால, நவீன என்று எத்தனை பட்டியல்கள் தயாரித்தாலும் பிரமிடுகளுக்குக் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். துல்லியமான அதே சமயம் நுணுக்கமான கட்டட அமைப்பு இதனைத் தனித்து நிற்கச் செய்கிறது. இதனைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு கல்லும் இரண்டு டன் எடை கொண்டதாம். வழக்கமான‌ பிரமிடுகளைப் போல் அல்லாமல் இதன் உச்சியில் சிறிய சமதளம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம் கேப்ஸ்டோன் எனப்படும் ஒரு பிரமிட் துண்டு. இந்த கேப்ஸ்டோனும் ஒரு பிரமிடு தான். இந்த துண்டு இல்லாமல் ஒரு பிரமிடு முழுமையடைவதில்லை. சில பிரமிடுகளுக்கு இந்த கேப்ஸ்டோன் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். கிசா பிரமிடில் கேப்ஸ்டோன் என்ற பகுதி இல்லை. இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். 
(1) தங்கமாக இருந்து யாராவது அபேஸ் செய்திருக்கக் கூடும் (கிசா பிரமிடின் கேப்ஸ்டோனின் உயரம் எட்டு மீட்டராக இருந்திருக்கும்!!!) 
(2) பிரமிடு முழுமைப்படுத்தப்படாமலேயே இருந்திருக்கக் கூடும்.


அலெக்சாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம் : 



மறுபடியும் எகிப்து. அலெக்சாண்ட்ரியா மத்தியத்தரைக் கடலின் ஒரு துறைமுக நகரம். இதன் தாழ்வான நீர்ப்பரப்பு அடிக்கடி கப்பல் விபத்துக்களை ஏற்படுத்தியது. அதனைத் தவிர்க்க கி.மு 299ல் ஃபாரோஸ் தீவில் கட்டப்பட்டது. பகலில் சூரிய ஒளியையும், இரவில் தீ வெளிச்சத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மாபெரும் கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்டது. கி.பி ஆயிரத்து முன்னூறுகளில் அடுத்தடுத்த நில நடுக்கங்களால் சிதிலமடைந்த இந்த கலங்கரைவிளக்கம், இருந்த வரை மூன்றாவது உயரமான கட்டிடமாக இருந்தது(135 மீ). கட்டப்பட்ட கலங்க்கரை விளக்கங்களிலேயே உயரமானதும் கூட. 

பாபிலோன் தொங்கும் தோட்டம் 



கி.மு அறுநூறுகளில் பாபிலோன் மன்னன் நெபுகாட்நேசரால் கட்டப்பட்டது இந்தத் தோட்டம் நோயாளி மனைவியின் சுகவாசத்திற்காகக் கட்டப்பட்டதாம் இந்தத் தோட்டம். நீரூற்று எல்லாம் இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனாலும், இப்படியொரு இடமே இல்லை, இது கவிதைகளில் புனையப்பட்ட இடம் என்றும் சிலர் சொல்வார்கள். இந்த இடத்தைப் பற்றி பலமான ஆதாரங்கள் ஏதும் இல்லாததே காரணம்.

சீயஸ் சிலை ஒலிம்பியா:



கிரீஸ் நாட்டில் கி.மு 466  456ல் கட்டப்பட்ட இந்த சிலை 13 மீ உயரம் கொண்டது தந்தம் மற்றும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது இந்த சிலை. ஹோமரின் இலியட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த சிலையை வடிவமைத்ததாக இதன் சிற்பி சொன்னாராம். கண்ணால் காண்பதே பெரும் புண்ணியமாகக் கருதப்பட்ட இந்த சிலை கி.பி நான்காம் நூற்றாண்டில் தீக்கிரையாக்கப்பட்டது.


ஆர்ட்டிமிஸ் கோவில்



ஆர்ட்டிமிஸ் ஒரு கிரேக்கப் பெண் தெய்வம்.  இயற்கைக்கான தெய்வம். இந்த தெய்வத்திற்காக துருக்கியில் கட்டப்பட்டது தான் இந்த கோவில். கி.மு 550 ல் முடிந்த இந்த கோவில் கி.மு 356 லியே அழிக்கப்பட்டது. 115 மீ நீளம், 55 மீ அகலம் 18 மீ உயரம் கொண்டிருந்த இந்தக் கோவில் அந்நாளைய கிரேக்கக் கட்டடங்களில் மிகப்பெரியதாகும். 


மாசோலஸ் கல்லறை





கி.மு 353 ல் அப்போதைய துருக்கியில் பெர்சிய பேரரசன் மாசோலசுக்காகக் கட்டப்பட்ட மாபெரும் கல்லறை. 105 மீ நீளம், 242 மீ அகலம், 43 மீ உயரம் கொண்டிருந்தது.  கி.பி 14 ஆம் நூற்றாண்டின் தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் அழிந்து போனது. (Mausoleum - Great Tomb)


கொலோசஸ் சிலை

கிரேக்க சூரியக் கடவுள் ஹீலியஸுக்காக கி.மு 305 இல் ரோட்ஸ் தீவில் கட்டப்பட்டது இந்த சிலை. 33 மீ உயரம் கொண்டது. கிமு 226 லேயே நிலநடுக்கத்தால் அழிந்து போனது. மிகக் குறைந்த நாட்கள் இருந்த அதிசயம் இதுதான். 


{}


இந்த இல்லாத அதிசயங்களை வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார் மேத்யூ ரெய்லி. தலைப்பு -  “Seven Ancient Wonders”. 


ஒரு Treasure Hunt கதை. பிரமிட் கேப்ஸ்டோன் ஏழாகப் பிரிக்கப்பட்டு ஆறு அதிசயங்களிலும், அந்த கேப்ஸ்டோனின் கேப்ஸ்டோன் (ஸ்ஸ்ஸபா) அலெக்ஸாண்டர் கல்லறையிலும் மறைத்து வைக்கப்பட்டதாம். நிற்க, நான்காயிரம் வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு சூரிய நிகழ்வின் போது இந்த கேப்ஸ்டோன் துண்டுகளை பிரமிட் மீது பொருத்தி பூஜை (?) செய்தால் பேரழிவு தடுக்கப்படும். அதே சமயம் அப்படி செய்யும் நாடு ஆய்ரம் வருடங்களுக்கு வல்லரசாக இருக்கும். இந்த தேடுதல் வேட்டையில் அமெரிக்கா, தீவிரவாதிகள் என இரு குழுக்கள் ஈடுபடுகின்றன. மூன்றாவதாக நம்ம ஹீரோ ஜாக் வெஸ்ட் (ஆஸி) தலைமையில் ஏழு சிறு நாடுகளும் தேடுகின்றன. எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை. 


படித்துப்பாருங்கள!!! 

November 04, 2009

ஊட்டி மலை ப்யூட்டி.

சோம்பலான ஒரு வியாழக்கிழமை மதியம். கேஃப்டீரியாவில் உட்கார்ந்து கொண்டு அலுவலக அப்சரஸ்களை சுவாரஸ்யமின்றி பார்த்துக் கொண்டிருக்கையில் ரகு கேட்டான் "மச்சி, ஊட்டி ட்ரிப் போலாமா?" 
"ஊட்டி போர்டா, எத்தனை வாட்டி பார்க்கிறது?" தலையைத் திருப்பாமல் பதில் சொன்னான் சரவணன். 
"இல்ல மச்சி, நார்மலா பார்க்கிற இடம் வேண்டாம், காட்டுக்குள்ள போலாம், ட்ரெக் மாதிரி...  முக்குர்த்தி பார்க், வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட், போர்த்திமண்ட் அணை... இப்படி வித்தியாசமா இருக்கும்."


இப்படித் தான் தொடங்கியது எங்கள் சரித்திரப் புகழ் பெற்ற பயணம். பத்து பேர் போவது என்று முடிவாகி, டிக்கெட், தங்குமிடம் ஆகியவை ரிசர்வ் செய்யப்பட்டன. 


மங்களகரமான ஒரு சனிக்கிழமை காலை மேட்டுப்பாளையத்தை அடைந்தோம். அங்கிருந்து ஊட்டிக்கு அந்த பொம்மை ரயிலில் போவது என ஏற்பாடு. உட‌ன் பயணம் செய்த‌வ‌ர்க‌ள் பாவ‌ப்ப‌ட்ட‌வ‌ர்கள். ரயிலில் ஏறி உட்கார்ந்த‌வுட‌ன் ஆர‌ம்பித்த‌து எங்க‌ள் க‌ச்சேரி.  பாடுகிறோம் என்ற‌ பெய‌ரில் ஹை டெசிபலில் கத்தி அவ‌ர்க‌ளை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தோம். ஊட்டியில் இறங்கிய அவர்கள் ஒரு வித விரோதப் பார்வையுடனே விலகிச் சென்றார்கள்.

ஊட்டியில் ந‌வ‌ம்ப‌ர் மாத‌க் குளிர், வாவ்..... மறுநாள் தான் காட்டுக்குள் போவதற்கு அனுமதி வாங்கியிருந்தோம் என்பதாலும், சனிக்கிழமை வேறு எங்கும் போக நேரம் இல்லாததாலும் பைக்காரா, நைன்த் மைல், பைன் காடுகள் ஆகியவை பார்ப்பது என முடிவானது. "நாட்டாமை ப‌ட‌த்தில், கொட்ட‌ பாக்கு பாட‌லில் குஷ்பூ ஓடி வ‌ரும் புண்ணிய‌ஸ்த‌லம் இது" என்று நைன்த் மைலை அறிமுக‌ப் ப‌டுத்தினார் ட்ரைவ‌ர் (வாழ்க!). இது ரோஜா கிளைமாக்சில் அர்விந்த்சாமி வரும் இடம், இது ஷாருக் ஒரு படத்தில் கோல்ஃப் விளையாடும் இடம், இது சூப்பர்ஸ்டார் வாலிபால் ஆடிய இடம் என வழியெங்கும் சினிமா புராணம். 





அடுத்த நாள் காலை ஏழு மணிக்கே மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு புறப்பட்டோம் காட்டுக்கு. ஜீப் ஒன்று ரெடியாக இருந்தது. கூட வந்த கைடு ஊட்டி பற்றியும், தோடர்களைப் பற்றியும் நிறைய சொன்னார். வழியில் தோடர் இனத்தைச் சார்ந்த ஒருவரைச் சந்தித்தோம். எங்கோ அவசரமாய் சென்று கொண்டிருந்தவரை கொஞ்சம் போர் பண்ணிவிட்டு மேலே தொடர்ந்தோம். இன்னும் கொஞ்சம் காட்டுக்குள் போனதும் சிம்பன்ஸி குரங்குகள் தென்பட்டன. உள்ளே செல்லச் செல்ல அருமையான வியூ. உங்களிடம் கொஞ்சம் நல்ல கேமராவும், நிறைய கிரியேட்டிவியும் இருந்தால் சரியான தீனி.

ஜீப் சுமார் இருபது கி.மீக்களை விழுங்கியிருந்தது. முதலில் சென்றது பார்சன்ஸ் பள்ளத்தாக்கு அணை. இது முக்குர்த்தி பீக்குக்கு அருகில் உள்ளது. ஆளரவம் ஏதுமின்றி தண்ணீரின் சலசலப்பும், பறவைகளின் சத்தமும் கொஞ்சம் குளிருமாக ரம்மியமாக இருந்தது அணை. உண்மையில் ரோஜா கிளைமாக்ஸ் இங்கு தான் எடுக்கப்பட்டது என்றார் ட்ரைவர்!
"அப்ப நேத்து சொன்னது?"
"அப்படித்தான் சொல்வோம் டூரிஸ்ட் கிட்ட" - வாரினார்.
அணையில் நடந்து அக்கரைக்குச் சென்ற‌போது ஜீப் சுற்றிக்கொண்டு வந்திருந்தது.

இன்னும் கொஞ்ச தூரம் பயணித்ததில் முக்குர்த்தி தேசிய பூங்கா செக்போஸ்ட்டுக்கு அருகில் வந்திருந்தோம். நேராக செக்போஸ்ட் போகாமல் போர்த்திமந்த் அணைக்கு விடப்பட்டது வண்டி. மந்து என்பது தோடர்களின் வாழ்விடம். காலனி மாதிரி. போர்த்திமந்து என்பது ஒரு காலனியின் பெயர்.

அங்கிருந்து செக்போஸ்ட் வரை ஜீப்பில் பயணம். அதன்பின் நடராஜா சர்வீஸ் தான். ட்ரெக் என்றவுடன், கரடுமுரடான காட்டுப் பாதை என்றெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம். ஓரளவுக்கு நல்ல பாதை தான். காட்டுக்குள் ஒரு எட்டு கி.மீ நடக்க வேண்டும் அவ்வளவுதான். பாதி தூர‌ம் ந‌ட‌ந்து வ‌ந்த‌வுடன் முன்ன‌ர் பார்த்த போர்த்தி அணையை மேலிருந்து பார்க்க‌ முடிந்த‌து. 





அருமையான வ்யூ. அங்கிருந்த ஒரு பூவைக்காட்டி "குறிஞ்சிப் பூ" என்றார் கைடு. பார்க்க அப்படித்தான் தெரிந்தாலும் நம்பத் தயக்கமாக இருந்தது. (அர்விந்த்சாமி மேட்டர்?)


இன்னும் கொஞ்ச தூரம் மலையேறினால் புல்வெளிப் பிரதேசம் ஆரம்பிக்கிறது. வின்டோஸ் வால்பேப்பரில் இருக்குமே ஒரு மலை? இரண்டு கி.மீ தூரத்துக்கு அதே மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? 





காட்டுத்தீயைத் தடுக்க தீக்கோடுகள் என்று ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறார்கள். மலை மேல் பாதை போட்டது மாதிரி வெட்டியிருக்கிறார்கள். எந்தப் பக்கம் இருந்து தீ வந்தாலும் அந்தப் பிளவுடன் நின்றுவிடும். 

வழியில் வரையாடுகள், மான்கள் தென்பட்டன. கேமராவைக் கையில் எடுக்கும் முன் விர்ர்ர்ர்ர்ர்ர்.....குவியல் குவியலாக யானை சாணங்கள் இருந்தன. யானைப் பாதம், புலி தோண்டிய பள்ளம் என்று என்னென்னவோ காட்டினார். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

மேலும் கொஞ்சம் நடந்து வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட்டை அடைந்தோம். 

இது கொஞ்சம் வில்லங்கமான இடம். தமிழகத்தின் தண்ணீரை சேகரித்து கேரளாவுக்குள் போக விடாமல் தமிழகத்துக்குள்ளேயே திருப்பிவிடுகிறார்களாம். (தெரிஞ்சவங்க கன்ஃபார்ம் பண்ணுங்க ப்ளீஸ்). கொண்டு வந்த பழங்களை சாப்பிட்டுவிட்டு சிறிது இளைப்பாறி விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தோம். மீண்டும் ஒரு எட்டு கி.மீ.


செக்போஸ்ட் அருகில் வரும்போது வன இலாக்கா அலுவலர்கள் இரண்டு பேர் எதிரில் வந்து கொண்டிருந்தார்கள். "சீக்கிரம் போய்டுங்க, ஒத்த யானை சுத்திகிட்டிருக்கு" (அடப்பாவிங்களா!). அங்கிருந்து கிளம்பிய வண்டி நேரே மேட்டுப்பாளையத்தில் தான் வந்து நின்றது. :)


ஒரே ஒரு நாள் தான் என்றாலும் முழுக்க முழுக்க இயற்கையோடு உலவியது நல்ல அனுபவமாக இருந்தது.


வித்தியாசமான அனுபவம் வேண்டுபவர்கள், நடக்க விரும்புவர்கள், ஃபோட்டோகிராஃபியில் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம் இந்தக் காடு. Have Fun! 

October 29, 2009

காந்தளூர் வசந்த குமாரன் கதை.



ராஜராஜ சோழனின் காந்தளூர்க் கடிகைப் போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ராஜராஜ‌ன் மெய்கீர்த்தியிலும் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போர். சேர மன்னனுடன் பேச‌ அனுப்பப்பட்ட தூதுவ‌ன் ஒருவன் அவமதிக்கப்பட்டதால் வெகுண்ட ராஜராஜன் சேர நாட்டின் மீது போர் தொடுத்தான் என்பது வரலாறு. இதைப் பின்புலமாகக் கொண்டு அமரர் சுஜாதா எழுதிய நாவல் தான் "காந்தளூர் வசந்தகுமாரன் கதை"


திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள விழிஞம் தான் அப்போதைய காந்தளூர். மிக முக்கியத் துறைமுகம் காந்தளூர். சேர நாட்டின் மீதான நிரந்தர வெற்றிக்கு இந்தத் துறைமுகத்தைப் பிடிப்பது முக்கியமாக இருந்தது. தவிர ராஜராஜனால் நாடுகடத்தப்பட்ட ரவிதாசன் முதலியோரும் இங்கிருந்து தான் ஒற்ற‌ர்களைத் தயார்படுத்தி அனுப்பியாதாகவும் கூறுவர்.

இனி கதை...

கதைப்படி, வசந்தகுமாரன் சேர நாட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவன். அவனுடைய குரு,நண்பர் கணேசபட்டர். இந்த பெயர்களை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? சுஜாதாவின் பிரியத்துக்குரிய நாயகர்கள் கணேஷ், வசந்த் தான் சரித்திரத்தில் வருகிறார்கள். கணேச பட்டரிடம் அதே தீட்சண்யம். வசந்தகுமாரனிடம் அதே இளமைக் குறும்பு. ரசிக்க வைக்கிறார்கள்.


குதிரை வியாபாரத்துக்காக சோணாடு வந்த யவனன் ஒருவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறான் வசந்தகுமாரன். இதனிடையே அரசகுமாரி அபிமதியைக் காதலிக்கிறான். பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காந்தளூரைச் சேர்ந்த சேர நாட்டு ஒற்றன் எனப் பழி சுமத்தப்படுகின்றான். இந்த சதியில் சிக்க வைப்பது ராஜராஜனைக் கொல்ல வந்த எதிரி நாடு ஒற்றர்கள். மரண தண்டனை விதிக்கப்படும் வசந்தன் எப்படித் தப்பிக்கிறான், எதனால் சேர‌ நாடு அனுப்ப‌ப்ப‌டுகிறான், ராஜராஜன் உயிர் எப்படிக் காப்பாற்றப்பட்டது, வசந்தன் காதல் என்ன ஆனது என்பதை சுஜாதா த‌ன‌து பாணியில் விவ‌ரித்திருக்கிறார்.

இந்தக் கதையில் நடைபெறும் அனைத்து முக்கிய சம்பவங்களுக்கும் சரித்திரத்தில் நடந்ததாகச் சொல்கிறார் சுஜாதா. பாத்திரங்களின் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் உண்மை என்கிறார். உதகைக் கோட்டையைப் பிடிக்க முனைவது, ராராஜேஸ்வரத்துக்கான ஆயத்தப் பணிகள், மலை நாட்டின் மீதான போர் என ஏராளமான விஷய‌ங்கள் வருகின்றன. இந்தப் போர்களுக்கெல்லாம் கலிங்கப்பரணி,மூவர் உலா போன்ற நூல்களை ஆதாரமாகக் காட்டுவார்கள். 


பாத்திரங்களை கல்கி அளவுக்கு கட்‍அவுட் பாத்திரங்களாகப் படைக்காமல் சாதாரண மக்களாக உலவ விட்டிருப்பார் சுஜாதா. இதை அவரே கூறியிருப்பார்.  உதாரணத்துக்கு ராஜராஜன் மீதும் மக்கள் கோபப்படுகிறார்கள்கள். நாயகன் வசந்தனும் ஏராளமான வசவு வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றான்(உம் : விலைமகள் மைந்தன்). கணேச பட்டரும் ஆபத்துக் காலத்தில் மயங்கி நிற்கிறார். 


ஆனால் அரசகுமாரி ஒருத்தி கடத்தப்பட்டால் அந்நாளில் இப்படி வாளாவிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அது தவிர, அபிமதியை சளுக்க மன்னன் விமலாதித்தனுக்குக் கொடுக்க முனைந்தது, ராஜராஜனைக் கொல்ல நடந்த ச‌தியில் விமலாதித்தன் இருந்தான் என்பதெற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிறைய இடங்களில் ராஜராஜனை "இராஜராஜீச்சுரம் கொண்ட" என அடை மொழி கொடுத்து அழைக்கிறார்கள் கோயில் கட்டுவதற்கு முன்பே. இந்த மாதிரி சில விஷயங்கள் நெருடுகின்றன. ஆனால் உண்மையான வராலாறு தெரிந்தால் இதுவும் ஒரு பிரச்சனையாக இருக்காது என நம்புகிறேன்.


பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதப்பட்ட ஒரு காட்சி, நாடகத் தனமான வசனங்கள் என்றே சரித்திர நாவல்களைப் படித்தவர்களுக்கு சுஜாதாவின் கூர்மையான வசனங்களும், எளிய கதையோட்டமும் வித்தியாசமான விருந்தாக இருக்கும். ஆனால் சுஜாதாவின் மற்ற நாவல்களில் உள்ள அந்த "அது" இந்த நாவலில் இல்லை :)


குறிப்பு : காந்தி செத்துட்டாரா ரேஞ்சுக்கு இந்த நாவலைப் பற்றி இவ்வளவு தாமதமாக எழுதியிருக்கிறேன். ரொம்ப நாள் தேடலுக்குப் பின் போன வாரம் கிடைத்தது இந்த நாவல். அதான்!

October 28, 2009

குழந்தை நீ... பொம்மை நான்..

திரிகள்...
நீ இல்லை என்ற நினைவிலேயே 
தீர்ந்து போகுதடி என் காலம்...
தெரிந்தே எரிந்து இறந்து போகும் 
திரிகளைப் போல...


நினைவுகள்...
உன் நினைவுகள் 
அத்தனை சுகமானது...
கடுமையாய் உழைத்த ஒரு நாளின்
இரவின் உறக்கம் போல...


கவிதை...
நீ கேட்காமல் போனாய்... 
நான் எழுதாமல் போனேன்... 
இல்லாமல் போனது ஒரு கவிதை...


பொம்மை...
தூக்கி எறிவதை பற்றிக்
குழந்தை கவலைபடாது... 
விழுவதை பற்றியோ,
உடைவதை பற்றியோ
பொம்மை வருத்தபடாது... 
குழந்தை நீ... 
பொம்மை நான்...

{}

இவை நண்பர் திருமுருகன் கவிதைகள். நானெல்லாம் கவிதையெழுதினால் நாடு தாங்காது என்பதாலும், என் வலைப்பூவில் கவிதை இல்லையென்றால் வரலாறு தப்பாக பேசும் என்பதாலும் அவர் கவிதைகளை இங்கே பதிகிறேன். பார்த்து போட்டு கொடுங்க சாமியோவ்.

October 20, 2009

பாடம் படிக்கும் சுவர்கள்.







பாடம் படிக்க ஆரம்பித்திருக்கின்றன எங்கள் வீட்டு சுவர்களும் திண்ணைகளும். அண்ண‌ன் ம‌கள் திவ்யாவை ப்ரீ‍‍கேஜி யில் சேர்த்திருக்கிறார்கள். பல்ப‌த்தை வைத்துக்கொண்டு திண்ணை பூராவும் வ‌ட்டெழுத்துக்க‌ளாக‌ எழுதித் த‌ள்ளுகிறாள். எழுதும்போது திண்ணைக்கு பாட‌ம் எடுக்கிறாள். அவ‌ளுக்கு ம‌ட்டும் புரியும் மொழியில்...


முதல் சில நாட்கள் அவள் புறப்படும் போது பார்க்க வேண்டுமே, எந்நேரமும் வெடித்து விடுபவள் போல இருப்பாள். தற்போது ப‌ழ‌கிக் கொண்டாள். அவ‌ளுக்கு உற‌வுக்கார‌க் குழ‌ந்தையின் நட்பு கிடைத்துவிட்டது. இப்பொழுது அவ‌ர்க‌ள் இருவ‌ரும் தான் வ‌குப்பில் சேர்ந்து தூங்குகிறார்க‌ளாம். 


தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்த போது "அ ஆ இ ஈ" சொல்லிக் காண்பித்தாள். உண்மையிலேயே நான்கு எழுத்துக்கள் தான் சொன்னாள். அதற்குள் வெட்கம் வர, ஓடிவிட்டாள்.


பள்ளிக்குப் போகும் குழந்தைகள் உள்ள எல்லோர் வீட்டையும் போல, எங்கள் வீட்டிலும் பொம்மைகள் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. பாத்திரங்கள் சிதறாமல் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் அவளை மிஸ் செய்கிறார்கள். அண்ணன் வாழைத் தோப்புக்கு தண்ணீர் பாய்ச்சும்போது, அண்ணி சமைக்கும் போது, அப்பா மாட்டுக்குத் தீவனம் வைக்கும்போது, அம்மா பால் கறக்கும் போது என எப்போதும் காலைக் கட்டிக் கொண்டே சுற்றுவாள். எல்லாம் அமைதியாய் இருப்பது வித்தியாசமாக இருக்கிறதாம்.


தினமும் இதை சொல்லிக் கொடு அதை சொல்லிக் கொடு என அண்ணிக்கு வீட்டுப்பாடம் தருகிறார்களாம். அண்ணிக்கு செம கடுப்பில் இருக்கிறார்கள். ஆனால் நிம்மதியாக இருக்கும் ஜீவன்கள் எங்கள் வீட்டு ஆட்டுக்குட்டிகள். சும்மா படுத்திருக்கும் ஆட்டுக்குட்டியை தர தரவெனெ இழுத்து வந்து தண்ணீர்த் தொட்டியில் தள்ளிவிடுவாள். இப்பொழுது அவை தப்பித்தன‌.


இப்போது ஒரே ஒரு சிலேட், ஒரு டயரி (அண்ணிக்கு வீட்டுப்பாடம்) மட்டும் தான் கொண்டு போகிறாள். இன்னும் சில வருடங்களில் அவள் முதுகில் புத்தகச் சுமையை ஏற்றி எலும்பை உடைக்கப் போகிறார்கள். குழந்தையிலிருந்து சிறுமியாகப் போகிறாள். :( 

October 18, 2009

ஆதவன் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Well, where to begin with..?


சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று இருக்கிறது ஆதவன் படம் பார்த்து.அப்படி ஒரு படம். ஆக்ஷன், த்ரில்லர், ஃபேமிலி செண்டிமெண்ட், காமெடி, காதல் என்று அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் எடுத்துப் போட்டு படம் எடுத்து மொத்தமாக நம் உயிரை எடுத்திருக்கிறார்கள். 


கூலிக்கு மாரடிப்பவர், சாரி, கொலை செய்பவர் சூர்யா. குழந்தைகளைக் கொன்று உடல் உறுப்புகளைத் திருடும் கூட்டத்தை பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கமிஷனுக்குத் தலைவர் பரத் முரளி. முரளியைக் கொல்ல சூர்யா அனுப்பப்படுகிறார். முரளி வீட்டிலேயே வேலைக்காரனாக நுழைகிறார் சூர்யா. நாமெல்லாம் கொலை செய்யத்தான் வந்திருக்கிறார் என்று நினைப்போம். ஆனால் அவர் காப்பாற்றத் தான் வந்திருப்பார். ஏனென்றால் முரளி தான் அவர் அப்பா. என்ன குழம்புகிறதா? பயப்படாதீர்கள். அதற்கும் ஒரு ஃப்ளாஷ்-பேக் இருக்கிறது. பத்து வயது சூர்யா பத்து வயது சூர்யா என பில்ட்-அப் கொடுத்தார்களே, அந்த ஃப்ளாஷ்-பேக்கிற்குத் தான்.


சரி கதை கூட ஓ.கே. ஆனால் படம்? காட்சிகளால் சொதப்பியிருக்கிறார்கள்.
முதல் முறை சூர்யாவைப் பார்த்து எரிச்சல் வருகிறது. அழகாக இருக்கிறார். ஆசனம் போடுகிறார். டெடிக்கேட்டடாக இருக்கிறார். அது மட்டும் போதுமா? நடிக்க வாய்ப்பு இருக்கிற மாதிரி படமாக செலக்ட் செய்ய வேண்டாமா? விஜய் குருவியில் தாவு தாவென்று தாவுவாரே இவரும் அதையே தான் செய்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கு ஒரே மாதிரி டான்ஸ் ஆடப் போகிறாரோ. இவரை நினைத்தால் பயமாக இருக்கிறது. அடுத்து வேறு ஹரி படம். ஹ்ம்ம்ம்ம்ம்.... 


சரோஜா தேவி - பாவம் அந்த அம்மா. தேமேயென்று இருந்தவரைக் கூட்டி வந்து கலாய்த்திருக்கிறார்கள். வடிவேலு சொல்வது போல எப்போதும் மேக்கப்புடன் தான் இருக்கிறார். ஒரு குமரி கொஞ்சிக் கொஞ்சிப் பேசினால் மதி மயங்கும். ஆனால் இந்த வயதிலும் அப்படியே பேசினால்? இதில் ஒரு பாட்டு வேறு.


நயன் சுமாராக இருக்கிறார். இதற்கு முன்னால் வந்த படங்களைக் காட்டிலும் சூப்பர். ஆனால் க்ளோசப்பில் பயமுறுத்துகிறார்.


முரளிக்கு சுமாரான பாத்திரம், நன்றாக நடித்திருக்கிறார். (அஞ்சலிகள்!!!)


மனோபாலா மேல் ஏதேனும் கோபம் இருந்தால் குச்சி எடுத்து நாலு அடி கொடுத்து இருக்கலாம். இப்படியா வேஸ்ட் செய்வது அவரை? அவர் பேசும் ஒரே வசனம் "சுட்டா தலை எனக்கு". வேறு எதுவும் பேசினாற் போல் ஞாபகம் இல்லை.  


ரியாஸ்கான், விஜயன், அனுஹாசன், சாயாஜி ஷிண்டே, சத்யன் எல்லாம் பாவம்.  ஆனந்த் பாபுவா அது? சார், ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள், பார்த்து....


படத்தில் சகிக்க முடிகிற ஒரே விஷயம் வடிவேலு தான். அதுவும் வேறோன்றும் இல்லாத காரணத்தால் நன்றாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. டீசண்ட் காமெடி. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.


தேக்கோ தேக்கோவைத் தவிர மற்ற பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிலும் அயன் வாசனை. பாடல் நன்றாக இருப்பதற்காக இஷ்டம் போல சொருகியிருக்கிறார்கள்.


க்ளைமாக்ஸ் படு மொக்கையாக இருக்கிறது. அந்த சண்டைக் காட்சி சகிக்கமுடியவில்லை. கே.எஸ். ரவிக்குமார் சார், ஏன் இப்படி? 


ஆதவன் - பேசாமல் "பேனர்ஜி" என வடிவேலு பெயரை வைத்திருக்கலாம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More