Showing posts with label சுயம்.. Show all posts
Showing posts with label சுயம்.. Show all posts

August 17, 2010

நான் மகான் அல்ல!

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மகேஷ் : ரசிகன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? 
  
மகேஷ் என் பெயர். ரசிகன் நான் படித்து வாங்கிய பட்டம்.  :) 

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

அது ஒரு சோக தருணம். (உங்களுக்குத் தான்)

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்? 

எப்பயாச்சும் எழுதுவதே கஷ்டமாயிருக்கிறது. இதில் பிரபலம் வேறா? நெக்ஸ்ட்... 

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வப்போது. பகிர்ந்துகொள்ளும் போது சந்தோஷம் இரட்டிப்பாகுமாம். ஆகிறதா என்று பார்க்க!

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நண்பர்களைச் சம்பாதிக்க. 

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன? 

ஒன்றே ஒன்று தான்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை :  கார்க்கி (தோழி அப்டேட்ஸ் சான்ஸே இல்ல), வானவில் வீதி கார்த்திக் (இளமை எக்ஸ்பிரஸ்னா தலைவர் தான்)  பிரசன்னா (உயிரோட தான் இருக்கானானு தெர்ல),

கோபம் : எழுத்துச் சுதந்திரத்தைத் தனி மனிதத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் எல்லோர் மீதும். 

 9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

தமிழ்ப்பறவை - பரணி - டியர் அண்ணா.. :) 

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

மரண வாக்குமூலமா வாங்குறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... 

டிஸ்கி : தலைப்பு மேட்ச் ஆகவில்லை? 

*

July 05, 2009

வேதாளம் கேட்ட கேள்விகள்.

யாரோ எப்போதோ கிளப்பிவிட்ட வேதாளம் அங்கே சுற்றி இங்கே சுற்றி இப்போது என் முதுகில் ஏறிக்கொண்டுள்ளது. இந்த வேதாள்த்தை என் மீது ஏவி விட்ட புண்ணியவான் அண்ணன் தமிழ்ப்பறவை அவர்கள்! நல்லவேளை இந்த வேதாளம், ப்தில் சொல்லாவிட்டால் தலை சுக்குநூறாகப் போகக்கடவது என்றெல்லாம் சபிக்கவில்லை. சில கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டாலும் "தொலைந்து போ" என லூசில் விட்டுவிட்டது.
இனி வேதாளம் கேட்ட கேள்விகளும் இந்த விக்கிரமாதித்தன் பதில்களும்!

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

மகேஷ் - குழந்தையாக இருந்தபோது என்ன பெயர் வைப்பது என்ற குழப்பம் வந்ததாம் என் தாத்தா, சில பெயர்களை எழுதி சுருட்டிப்போட்டு தவழ்ந்து கொண்டிருந்த என்னை எடுக்க வைத்திருக்கிறார்! எடுத்த சீட்டில் இருந்தது மகேஷ். நானே வைத்துக்கொண்டதால் (?) எனக்கு இந்த பெயர் பிடிக்கும். தோழிகள் / ரசிகைகள் (அடீங்) இந்த பெயரையும் சுருக்கி "மேக்ஸ்" என்று அழைப்பது இன்னும் ஜோராக இருக்கிறது.

ரசிகன் - இதுவும் நானே வைத்துக்கொண்ட பெயர். இந்த வார்த்தையின் மகத்துவத்தும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுவும் நெம்ப பிடிக்கும்.

2) கடைசியா அழுதது எப்போது?

நினைவில்லை.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ரொம்ப சுமாராகவே இருக்குமென்பதால் மெனக்கெட்டு ரசித்ததில்லை. இந்த கேள்விக்காக எழுதிப் பார்த்ததில்.... வேண்டாம். மகா மட்டமாக இருக்கிறது.

4) பிடித்த மதிய உணவு?

சிக்கன் கொழம்பும் சுடுசோறும். கலந்துக்க கொஞ்சூண்டு தயிரும்!

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?

அது அந்த வேறு யாரோவைப் பொறுத்தது. எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

மெரீனா கடலைப் பார்த்ததும் கடலில் குளிக்கும் ஆசையே விட்டுப் போய் விட்டது. அருவிக் குளியலுக்கே என் ஓட்டு.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

சிரிக்கிறாரா என்று.

8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?

பிடித்த விஷயம் - எளிதில் நட்பு பாராட்டுதல்...
பிடிக்காத விஷயம் - கோபம், நெருங்கியவர்கள் மீதும்.

9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பேச்சுலர் சாமியோவ்!

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

நண்பன் ஜெயப்பிரதி.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு நிற அரைக்கால் சட்டை.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

விக்ரம் என்ற படத்தில் வரும் "மீண்டும் மீண்டும் வா" பாட்டு!

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

கருப்பு

14) பிடித்த மணம்?

மல்லிகை

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

லவ்டேல் மேடி - இவரோட நக்கலான பேச்சு. இந்த கேள்விகளை இவர் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்க்கிறேன்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அண்ணன் தமிழ்ப்பறவை - அநேகமாக அனைத்தும். இவரது உவமைகளும், இவர் வரையும் படங்களும் ஜூப்பரா இருக்கும்.

17) பிடித்த விளையாட்டு?

யோவ், வேதாளம்! இன்னா மாதிரி பாட்டு கேட்டுட்டு இருக்கேன், இப்ப வந்து இன்னா வெளாட்டு புடிக்கும்னு கேக்குறியே! என்னென்னவோ தோணுதுபா!

சரி சரி, ஹாக்கி ரொம்ப புடிக்கும்.

18) கண்ணாடி அணிபவரா?

ஆம்! சில நாட்களாக.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

செண்டிமெண்ட், சண்டை, குத்துப்பாட்டு, குத்து வசனம், அட்வைஸ், ரத்தம், தத்துவம் இவை எதுவுமில்லாத படங்கள்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

சக்தே (எத்தனையாவது முறை என்று நினைவில்லை.)

21) பிடித்த பருவ காலம் எது?

கோடை காலம். அந்த பருவத்தில் எங்கள் கல்லூரிச் சாலை முழுவதும் கோலம் போட்டது போல இரத்தச் சிவப்பும், அடர் மஞ்சளுமாய் மாறி மாறி பூக்களை உதிர்த்திருக்கும் அந்த திலகம் மற்றும் பாதிரி (கொன்றை வகைகள்)மரங்களுக்காக!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

The Six Sacred Stones - By, Matthew Reilly.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

அடுத்த நல்ல படம் கிடைக்கும் போது. நாள் கணக்கெல்லாம் எதுவுமில்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : குழந்தை (என்னோடது இல்லப்பா) எழுப்பும் எல்லா ஓசையும். ச்சோ ச்வீட்!
பிடிக்காத சத்தம் : அலாரம்

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

கன்னியாகுமரி.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இருக்கிறது. நன்றாக பொய் சொல்வது.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தும் தரப்படும் வாக்குறுதிகள்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

அதிகம் சுற்றியதில்லை. இப்போதைக்கு ஏற்காடு.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

யாரையும் காயப்படுத்தாமல்.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

Out of Syllabus

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

வாழ்க்கைங்கறது வாழைக்காய் மாதிரி. கறை படியறதும் கறை படியாததும் நாம கையாள்றதப் பொறுத்து தான் இருக்கு. எப்பூடி?

June 02, 2009

பள்ளி மாணவர் தலைவன்

வாழ்க்கைப் புத்தகத்தின் வசந்தம் வீசும் பக்கங்கள் பள்ளி நாட்கள். எத்தனையோ நிகழ்ச்சிகள்..  எத்த்னையோ நினைவுகள்..அவற்றில் SPL ஆக இருந்த காலங்கள் மறக்க முடியாதவை. 

SPL - School Pupil Leader, பள்ளி மாணவர் தலைவன். பெயர் தான் கெத்து. ஆனா செம கடியான போஸ்ட். நான் பத்தாம் வகுப்பு படித்த போது, தேர்தல் எதுவும் வேண்டாம், இவனே இருக்கட்டும் என்று தலைமையாசிரியர் சபித்து விட்டுப் போய்விட்டார். தேர்தல் வந்தால் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு நோட், புத்தகங்களில் ஓட்ட லேபிள் கொடுத்தாவது ஜெயித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்த எதிர்க்கட்சி முகாமில் பெரிய ஏமாற்றம். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். ஏனென்றால் செய்ய வேண்டியிருந்த வேலைகள் அப்படி! 

முக்கியமான வேலை ப்ரேயர் நடத்த வேண்டும். பெரிய ராணுவ வீரன் போல மார்ச்பாஸ்ட் செய்து கொண்டு போய், ஆசிரியரை அழைத்து வந்து கொடியேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, உறுதிமொழி கூறி, தினம் ஒரு குறள் சொல்லி, நாட்டுப்பண் பாடி.... ஏறு வெயிலில் நின்று தாவு தீர்ந்துவிடும்.  தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு கேசட் இருக்கும். ஆனால் பவர் கட் என்றால் முடிந்தது கதை. ஏதாவது குறள் சொல்லவேண்டும். அந்த நேரத்துக்கு எது தோன்றுகிறதோ அதை சொல்லி சமாளிக்க வேண்டும். நிறைய நாள் "அகர முதல" வையும் "கற்க கசடற" வையும் வைத்து ஒட்டியிருக்கிறேன். பிரேயருக்கு தமிழாசிரியர் வந்தால் அந்த இடத்திலேயே திட்டு கிடைக்கும் "வேறு ஏதும் தெரியாதா?" என்று.. தினம் தினம் நடக்கும் அவஸ்தை இது.

அடுத்தது பள்ளியை அமைதியாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு. நாம் சொன்னால் ஒரு பயலும் கேட்க மாட்டான். சொன்னதற்காகவே சத்தம் போடும் நல்ல உள்ளங்கள் இருப்பார்கள். ஒரு முறை ஆசிரியர் வராததால் மொத்த வகுப்பும் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் அங்கு வந்த தலைமை, SPL ஐ அழைத்து வா என சொல்ல, யம தூதுவன் போல ஒருத்தன் வந்தான். நானும் நம்பி போனேன். ஒன்றும் பேசவில்லை. தலையைப் பிடித்து அழுத்தி குனிய வைத்தார். முதுகில் இரண்டு அறை கொடுத்தார். அப்புறம் தான் பேசவே ஆரம்பித்தார். "ஏண்டா இவங்க எல்லாம் இப்படி சத்தம் போடுறாங்க?" என்றார். அவமானம் பிடுங்கித் தின்ன ஏதோ சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன். இப்படி அவங்க வீட்டு மாடு பால் கறக்கலனா கூட அடி வாங்க வேண்டியிருக்கும். இது அவ்வப்போதைய அவஸ்தை!

ஏதாவது சுற்றறிக்கை வந்தால், அதை ஒவ்வொரு வகுப்பாக எடுத்துச் சென்று படித்துக் காட்ட வேண்டும். இந்த கடியான வேலையை கருத்தாக நான் செய்ய காரணம் 7-ஆ வகுப்பு... இந்த வகுப்பில் தான் தாரகேஸ்வரி டீச்சர் இருப்பார்கள். :) அப்புறம் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர் கூட்டம் நடக்கும். ஆலோசனை செய்வார்களோ இல்லையோ, கிலோ கணக்கில் கறி வாங்கி மொக்குவார்கள். அதையும் நாம் தான் போய் வாங்கி வர வேண்டியிருக்கும். சாப்பிட போற சமயத்துல மட்டும் "நீ போய் கிளாஸ் பாத்துக்க" என்று வகையாக கழட்டி விட்டுவிடுவார்கள்.

சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தால் வகுப்பறைகளை அல்ங்கரித்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வகுப்புக்கு பரிசளிக்கும் பழக்கம் எங்கள் பள்ளியில் உண்டு. அந்த வருடம் ஆறாம் வகுப்பில் ஒரு பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசும் கொடுத்தார்கள். அது சுழற்கோப்பை. கொடுத்து அரை மணியில் திரும்ப பிடுங்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் பரிசை வாங்கிய அந்த வகுப்பு லீடர் இது தெரியாமல் எஸ்கேப் ஆகியிருந்தார். பிறகு? சைக்கிளில் துரத்திச் சென்று வாய்க்கால் மேட்டிற்கு அருகில் அவனை பிடித்து வாங்கி வர வேண்டியதாக போனது. 

இப்படி நிறைய வேலைகள் இருக்கும். ஆனால் எல்லாமும் செய்து கொண்டு படிக்க முடிந்தது. தினம் தினம் அந்த அவஸ்தைகளை அனுபவிக்க மனம் விரும்பியது. ஏதோ ஒன்று சலிப்படையவிடாமல் செய்தது. அது தான் பள்ளிப்பருவம். Good Old Days!

டிஸ்கி : நேற்று ஃபோன் செய்த என் பள்ளி நண்பன் அருள் "என்னடா SPL..." என்று ஆரம்பித்தான். பின் ரொம்ப நேரம் அரட்டை. என் பால்ய நினைவுகளை மீட்டெடுத்த அவனுக்கு நன்றி!

April 22, 2009

பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் :)))

என் அண்ணன் மகள் திவ்யஸ்ரீயும், மாமா மகள் ஜீவிகாவும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். திவ்யாவிடம் "கண்ணு, ஜீவிகா அக்காவுக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்" என்றேன். திவ்யா முத்தம் கொடுக்கப்போகும்போது, ஜீவிகாவும் அவளைத் தான் சொல்கிறேன் என்று எண்ணிக்கொண்டு முத்தம் கொடுக்கப் போக... இந்த அழகிய காட்சியை நீங்களேபாருங்களேன்.


 

கொசுறு: 

ஜீவிகா மேடம் கரும்பு சாப்டறாங்க.



April 19, 2009

இவிங்க எப்பவுமே இப்படித்தான்!!!

கல்லூரி இறுதி ஆண்டு. சேகர் தன் சொந்த ஊரில்(கரூர் அருகே ஓரு கிராமம்) திருவிழா என்று விருந்துக்கு அழைத்திருந்தான். விருந்து வெள்ளிக்கிழமை. அதே நாளில் Environmental Science தேர்வு வேறு இருந்தது. செமஸ்டர் தேர்வு இல்லையென்றாலும் இதன் மதிப்பெண்களை வைத்து தான் இன்டெர்னல் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். திருவிழாவா, மதிப்பெண்களா என்று யோசித்துப் பார்த்ததில் திருவிழாவும் அது சார்ந்த மகிழ்ச்சிகளுமே வென்றன. சரவணா, மணி, பரணி, தமிழ் மற்றும் நான் அடங்கிய குழு, சேகர் தலைமையில் புதனன்று மாலையே சேலத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கியது. எட்டு மணிவாக்கில் கரூர் வந்தடைந்தோம். சேகர் தங்கையும் அவள் கல்லூரியில் இருந்து கரூர் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். அனைவரும் சேகர் அப்பா காரில் அவர்கள் ஊருக்கு செல்வதென்று ஏற்பாடு. வந்தவர் சும்மா இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. "சாப்டீங்களா? " என்று கேட்டார். ஏன் அந்த வார்த்தையை கேட்டோம் என்று அவர் நிறைய தடவை வருத்தப்பட்டிருப்பார். நாங்கள் "இன்னும் இல்லை" என்றதும் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு தான் ஆரம்பித்தது எல்லாம்!

சூப் முதல் ஜூஸ் வரை ஒன்று விடாமல் கலந்து கட்டி அடித்தோம். பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த சேகரின் தங்கை எங்களை பார்த்த பார்வை மகா கேவலமாக இருந்தது. "விடுங்க பாஸ்! இவிங்க எப்பவுமே இப்படித்தான்" என்று நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேலையைத் தொடர்ந்தோம். ஒருவழியாக சாப்பிட்டு முடித்து கிளம்பி அவன் வீட்டை அடைந்தோம். அவன் அம்மா தான் வரவேற்றார். அவன் அப்பா செய்த அதே தப்பை அம்மாவும் செய்தார். "இட்லி வச்சிருக்கேன். சாப்டுங்கப்பா!". இந்த வார்த்தை போதாதா ? அடுத்த ரௌண்ட் ஆரம்பமானது. அம்மா மனம் நோகக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ஆளுக்கு ஐந்து இட்லி வீதம் சாப்பிட்ட எங்கள் நல்ல மனதை பாவம் அவன் தங்கை புரிந்து கொள்ளவேயில்லை. இப்பொழுது அவள் பார்வை கோபமாக மாறியிருந்தது. சாப்பிட்டுவிட்டு அவன் பாட்டியை சிறிது நேரம் கலாய்த்துவிட்டு உறங்கச்சென்றோம்.

காலை தீர்த்தம் எடுக்கும் சடங்கு என்று காவிரி ஆற்றிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு நாங்கள் போட்ட ஆட்டத்திற்கு பாட்டி எங்களை அடிக்காமல் விட்டது ஆச்சர்யம் தான்! பின் அங்கிருந்து கோயிலுக்கு! பூஜை முடிந்ததும் சாப்பாடு போட்டார்கள்! (ஐ! ஜாலி!). சாப்பிட்டுவிட்டு பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்த நிழற்கூடையில் அருமையான தூக்கத்தைப் போட்டோம்! 

அடுத்த நாள் தான் நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த விருந்து. 'சைவம் சாப்பிட்றவங்க அந்த வரிசையில் உட்காருங்க' என்ற என் நண்பனின் அம்மாவைப் பார்தது எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது! அசைவப் பந்தியில் அமர்ந்து கட்டு கட்டென்று கட்டிய எங்களை அவன் தங்கை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்டுகொள்ளவேயில்லையே! "மார்க்கெட்னு கூட பாக்கலியே" ரேஞ்சுக்கு சாப்பாடு உள்ளே போய்ய் கொண்டிருந்தது. வந்த நோக்கம் இனிதே நிறைவேறிய திருப்தியுடன் வெற்றிலையையும் போட்டுக்கொண்டு வெற்றி வீரர்களாய் வெளியே வந்தோம்! 

அன்று மாலையே சேலம் திரும்புவது என்று திட்டம். "அப்ப நாங்க கெளம்பறோம்மா" என்று அம்மாவிடம் நாங்கள் சொன்ன வார்த்தைகள்,  தங்கை காதில் தேனாய்ப் பாய்ந்திருக்க வேண்டும்! அப்படி ஒரு சந்தோஷத்துடன் திரும்பிப் பார்த்தாள்! அந்த பாசமலருக்கு நாங்களும் ஒரு "பை" சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தோம். வழியனுப்ப வந்த அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். "பார்த்து போங்கப்பா",  "பத்திரம்" என்று என்னென்னவோ சொன்னார்கள். ஆனால் கடைசி வரை ஒன்றை மட்டும் சொல்லவேயில்லை. "இன்னொரு வாட்டி கண்டிப்பா வரணும்ப்பா"

March 05, 2009

புற்றை இடித்தால் கனவில் பாம்பு வருமா?

பதிவர் வித்யா அவர்களின் பாம்பு சம்பந்தப்பட்ட இந்த இடுகையைப் பார்த்ததும் உன்மையிலேயே டரியல் ஆகிவிட்டது. சுவாரஸ்யமாக படித்துக்கொண்டு இருக்கும்போது பாம்பு படத்தை பார்த்ததும் மிரண்டுவிட்டேன்.
இதைப் படிக்கும் போது எங்கள் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
இறுதி ஆண்டு படிக்கும்போது தேசிய அளவில் கருத்தரங்கு ஒன்றை நடத்த துறைத் தலைவர் அனுமதி கிடைத்தது. அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம். போஸ்டர் டிசைன் செய்வது, நிதி வசூலிப்பது, சுத்தம் செய்வது இப்படி நிறைய வேலைகள்.
நான் படித்தது சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில். எங்கள் கல்லூரியில் காலி இடத்திற்கு பஞ்சமே இல்லை (பெரியார் பல்கலைக்கழகம், இந்தியன் ஆயில் நிறுவனம் இவை போக ஒரு 200 ஏக்கர் தேறும்). அதனாலேயே புதர்கள் நிறைய உண்டு. அதோடு பாம்பு புற்றுகளும்... எங்கள் துறை கட்டிடம் முன்பு இருந்த வெட்டவெளியிலும் நான்கு புற்றுகள் இருந்தன. அந்த இடத்தையும் சுத்தம் செய்தாக வேண்டும். புற்று அருகில் செல்வதற்கே பயம். எங்கள் ஆசிரியர் வேறு "தூக்குங்கடா அந்த புத்த! " என்று ரம்யா கிருஷ்ணன் போல சொல்லி விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். வேறு வழியின்றி சூரப்புலிகள் நான்கு பேர் கையில் கடப்பாரை, மண்வெட்டிகளுடன் குல தெய்வங்களை வேண்டிக்கொண்டே களத்தில் இறங்கினோம். கடப்பாரையை புற்று மேல் இறக்கியதும் அந்த இடமே அதிர்ந்தது. அட, புற்று அவ்வளவு ஸ்ட்ராங்க். சரி, தண்ணீர் விட்டு கரைப்பது என்று பொதுக்குழு எல்லாம் கூட்டாமலேயே தீர்மானித்தோம். பைப் இழுத்து புற்றுக்குள் தண்ணீர் விட ஆரம்பித்தோம். தண்ணீர் விடுவதும் மண்வெட்டியில் வெட்டுவதுமாக புற்று கொஞ்சம் கரைந்தது. அப்போது தான் தலையை சிறிது மேலே தூக்கி பார்த்தார் நண்பர். பார்த்ததும் தெரிந்துவிட்டது நாகம் இல்லையென்று. அப்பாடா என்று இருந்தது. தலையை பார்த்ததும் கடப்பாரையை ஓங்கி ஒரு குத்து குத்தினேன். தலையை உள்ளே இழுத்துக்கொண்டது. அதற்கப்புறம் வேலை வேகமாக நடந்தது. புற்றும் சீக்கிரம் கரைய ஆரம்பித்தது. பாம்பும் தலையைத் தூக்கி பார்ப்பதும், உள்ளே இழுத்துக்கொள்வதுமாக இருந்தது. எங்களிடம் அடிபட்டு சாவதை விட தண்ணீரில் மூழ்கி செத்து தொலையலாம் என்று நினைத்தது போலும். விடுவோமா நாங்கள்? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல வேலையைத் தொடர்ந்தோம்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்த பாம்பு உள்ளே இருக்க முடியாமல் வெளியே வந்தது. ஆகா.. சாரைப்பாம்பு. எப்படியும் ஐந்து அடிக்கு குறையாமல் இருக்கும். சாரைப்பாம்பின் வேகம் அசாதாரணமானது. வெளியே வந்ததும் கிடைத்த சந்தில் ஓடப்பார்த்தது. அருகில் இருந்த ஜெயப்பிரதி, கையில் இருந்த மண்வெட்டியைத் திருப்பி அதன் தலையில் ஒரு போடு போட்டான். நானும் கோபாலும் கடப்பாரையால் ரெண்டு போட்டோம். சில வினாடிகளில் அசைவு நின்று விட்டது. உயிர் போய்விட்டதா என்று தெரியாததால் இன்னும் நாலு சாத்து சாத்தினோம். முடிந்தது அதன் கதை.
இவ்வளவு நேரம் எட்ட இருந்து வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் கிட்ட வந்து கதை பேசத் தொடங்கிவிட்டார்கள். எரிக்க வேண்டும், இல்லை.புதைத்தால் போதும் என்று (டேய்.. என்னங்கடா, நாட்டாமை படத்துல செத்துப் போன டீச்சருக்கு காரியம் பண்ற ஃபீல் கொடுக்கறீங்க? ). சரி கருமம் தொலையுது என்று எதிர்த்தாற்போல இருந்த டீக்கடையில் கொஞ்சம் பாலும் மஞ்சள் தூளும் வாங்கி, என் அழுக்கு கைக்குட்டையில் பாலை விட்டு மஞ்சள் தூளை தடவி, ஒரு ஐம்பது பைசாவை அதில் கட்டி பாம்பின் மேல் போட்டு கொள்ளிவைத்துவிட்டு எஸ்கேப்..... ஆச்சரியமாக மற்ற மூன்று புற்றுகளிலும் பாம்பே இல்லை. இவை எல்லாம் அந்த பாம்பின் கெஸ்ட் ஹவுஸ் போல...
அதற்கப்புறம் அங்கு இருந்த புதர்களையெலாம் அகற்றி சுத்தம் செய்து, மற்ற வேலைகளையெலாம் செய்து முடித்து பல்வேறு அரசியல் விளையாட்டுகளுடன் கருத்தரங்கு நடந்த கதையை சொன்னால், கல்லூரி இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்படுவேன்.

கொசுறு: எங்கள் துறையில் இருந்த ஆய்வக உதவியாளர் வேறு "இன்று உங்கள் கனவில் பாம்பு வரும்" என்று பயமுறுத்திவிட்டார். பாம்பு வந்தால் கூட பரவயில்லை. நாககன்னி கெட்டப்பில் இந்நாளைய ஸ்ரீப்ரியா வந்துவிட போகிறார் என்ற பயத்தில் தூங்கப் போனேன். நல்ல வேளையாக அன்றைய கனவில் அசின் வந்து ரட்சித்து அருளினார்!!!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More