Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

January 31, 2011

மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman

ஐநூற்றுச் சொச்சம் மீனவர்கள்... ஐநூற்றுச் சொச்சம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது இதுவரை. இனிமேலும் தொடராமலிருக்க, ஒரு வலையுலக யுத்தம்

*
கூட்டணி பேரம், பதவிச்சண்டை என்றால் மட்டும் ஆளாய்ப் பறந்துவிட்டு, ஒரு மரணம் சம்பவித்தால் லட்சத்தைத் தூக்கியெறிந்து தற்காலிகமாக வாயை அடைப்பது இங்கு மட்டும் தான் நடக்கும். நடவடிக்கை எடுக்கக் கேட்டால் இருக்கவே இருக்கிறது கடிதங்களும் தந்திகளும்.. இதையும் மீறி யாராவது ஏதாவது கேட்டால் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றொரு எகத்தாளப் பேச்சு. 

தங்களது குடும்பங்கள் இன்னும் நூறாண்டுகள் செல்வச்செழிப்புடன் வாழ தொலைநோக்குப் பார்வையுடன் யோசிக்கும் தலைவர்கள், ஒரு சாதாரணன் சாதாரண வாழ்க்கை வாழ வழி செய்யாதிருப்பது திருட்டுத்தனம்.

அயல்நாடு செல்லும் பிரபலங்கள் சோதனை என்ற பெயரால் அவமானப்படுத்தப்பட்டால் கூட பொங்கியெழும அரசியல் எரிமலைகள், இங்கொருவன் கொல்லப்பட்டு அவன் குடும்பம் சிதைக்கப்பட்டால் கூட மௌனம் சாதிப்பது அருவருப்பாக இருக்கிறது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகாதா? 





தமிழக மீனவர்களைக் காக்க நடக்கும் இந்த நல்லதொரு விஷயத்தில் நீங்களும் பங்கெடுக்கலாம். கீழிருப்பதை மின்னஞ்சல் மூலமாக அனைவருக்கும் அனுப்பவும். உங்கள் பதிவில் மறுபதிப்பும் செய்யலாம்.


Your support can make a difference in Indian Fishermen's Life - Pls Fwd through mail




Hi Friends,

I am sure you must have heard about the recent killings of Indian Fishermen from Tamil Nadu. by Sri Lankan Navy., if you have not request you to read through these links from popular dailies. - Pandiyan Killed on 12th of Jan 2011 ,  Jayakumar Strangulated on 24th Jan 2011 ,


So far, in the last few decades 530 fisherman has been killed, thousands of fisherman has been harassed, and multiple crores of rupees worth fishing equipments and boats have been demolished by Sri Lankan Navy. Our Indian Government has been a silent spectator for all this.

As a fellow Indian brothers & sisters , I appeal to you to voice your support for the fellow Indian fishermen brothers . As a fellow Indian you can do the following to voice your support for the poor fishermen, who have become target for the Sri Lankan Navy.

1.Sign the petition to stop the killing by Sri Lankan Navy -http://www.petitiononline.com/TNfisher/petition.html
2.Join the online protest to save the fishermen by tweeting about this using #tnfisherman tag - http://twitter.com/#!/search?q=%23tnfisherman
3.You can add the twibbon to your twitter profile / Face book profile picture to show your protest - http://twibbon.com/join/TNFisherman
Read and contribute for the Face Book page on Save Tamil Nadu Fisherman - http://www.facebook.com/savetnfisherman
4.Read and contribute articles for www.savetnfisherman.org 

We are also seeking volunteers to contribute to this cause. If you are interested you can write to us savetnfisherman@gmail.com,tnfishermancampaign@gmail.com

One last request, Please send this mail to as many us of your friends and colleagues.

with best regards,

A Fellow Indian

நன்றி

August 23, 2010

எம்.பிக்கள் சம்பளம் - ஒரு அனல் மூச்சு.



ஒரு வழியாக குட்டிக்கரணம் அடித்து 500 சதவீத சம்பள உயர்வை வாங்கியே விட்டனர் எம்.பிக்கள். இப்போது மாதச் சம்பளம் 1.6 லட்சம். சம்பள உயர்வு வேண்டும் என கோஷம் எழுப்பி, அவையை முடக்கி வாங்கிய உயர்வு இது. 

இன்று லஞ்ச்சில் இதைப்பற்றி தான் பேச்சு. அந்த 500 சதவீத உயர்வு எல்லோரிடமும் ஒரு அனல் மூச்சைக் கிளப்பிவிட்டிருந்தது. :) 

சாதாரண கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலையில், 6%, 8% உயர்வு வாங்கவே நிர்ணயிக்கப்பட்ட Goals எல்லாம் முடித்திருக்க வேண்டும், சர்டிஃபிகேஷன் ஏதாவது எழுதியிருக்க வேண்டும், Value-Add ஏதாவது காட்ட வேண்டும், இப்படி ஏகப்பட்ட ஏகப்பட்ட மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் அதற்குத் தகுந்தவாறு வழிமுறைகள் கட்டாயம் இருக்கும். ஒரு தொகுதியின் பிரதிநிதி என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு துறையின் தலைவர் போலக் கொள்ளலாமா? கொண்டால் அந்தப் பதவிக்கு ஏன் மதிப்பீட்டு முறையில் சம்பள உயர்வை நிர்ணயிக்கக் கூடாது? எத்தனையோ எம்.பி க்கள் தொகுதிக்கும் போகாமல் நாடாளுமன்றத்துக்கும் போகாமல் இருப்பது கண்கூடு. அதைவிட குற்றப் பின்புலம் கொண்ட எம்.பிக்கள் எவ்வள்வு பேர்?  அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் எதற்கு சம்பள உயர்வு? 

என்னைக்கேட்டால் அரசியல்வாதிகளுக்கும் ரேட்டிங்க்-சிஸ்டம் ஏதாவது கொண்டு வரலாம். பதவியேற்பின் போது மூன்று ஸ்டார்கள் வழங்கப்படலாம். ஒவ்வொரு தவறுக்கும் ஒன்று பறிக்கப்பட வேண்டும். மூன்று ஸ்டாரும் அவுட் என்றால் பதவி கோவிந்தா... அடுத்து அவர் தேர்தலில் போட்டியிடவே கூடாது. அவர் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயத்துக்கும் ஒரு ஸ்டார் மற்றும் அதற்குத் தகுந்த மாதிரி சம்பள உயர்வு தரப்படலாம். தொகுதி வளர்ச்சி நிதியை அவர் செலவழிக்கும் விதம், நாடாளுமன்றத்துக்கு அட்டென்டன்ஸ், கிரிமினல் ரெக்கார்ட்ஸ் இது மாதிரி விஷயங்களை வைத்து அவரை மதிப்பிடலாம். இதைச் சொன்னதுக்கு நண்பன் சொன்னான் "போயா, டொய்யாலே!"

சரிதான். இந்த மாதிரி ஒரு சிஸ்டம் வருவதற்கு ஒருவரும் அனுமதிக்கப் போவதில்லை. அப்படி வந்தால் ஒருவரும் தொழில் சாரி, அரசியல் பண்ன முடியாது. எல்லாம் ஒரு நப்பாசை தான். மன்னிச்சிடுங்க பாஸ்.

இன்னொருத்தர் சொன்னார். "இதற்கு மேலாச்சும் காசுக்கு ஆசைப்படாம ஒழுங்கா வேலையச் செய்வாங்களா பார்க்கலாம்". 
"ஆமாம், என்னவோ சோத்துக்கு வழியில்லாமல் தான் கொள்ளையடிக்குற மாதிரி சொல்றீங்க?" என்று சொல்லலாம் என்று தோன்றியது.

எல்லாம் ஒரு தொடர் சங்கிலி மாதிரி ஆகிவிட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்குப் பதவி வேண்டும், அதற்கு காசு செலவழிக்க வேண்டும், பதவிக்கு வந்த பின் விட்ட காசைப் பிடிக்க வேண்டும், அடுத்தது மிக முக்கியம், சேர்த்த காசைப் பாதுகாக்க மீண்டும் பதவிக்கு வர வேண்டும். அதற்கு என்ன செய்வது? காசை செலவழித்து பதவியைப் பிடி! 

சரி நீங்க என்ன நினைக்கிறீர்கள் ? எம்.பி களுக்கு இந்தச் சம்பளம் நியாயமானதா? இல்லை அதிகமா? அல்லது எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று நினைக்கிறீர்க்ளா ? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்காக PVR Cinemas Couple Pass காத்துக் கொண்டு இருக்கிறது. ச்சே... வரவர ஓவரா எஃப்.எம் கேட்கிறேன். 

August 18, 2010

அரட்டை - 19-08-2010

நண்பர்களுடனான எனது சனிக்கிழமைகள் விசேஷமானவை. மறுநாள் காலை நான்கு மணி வரை நீளும் இரவுகளை, பேசியேத் தீர்ப்போம். அரிதாக உருப்படியான விஷயங்கள் விவாதிக்கப்படுவதுண்டு. சமீபத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் G.D.P (Gross Domestic Product). மொத்த உள்நாட்டு உற்பத்தி. இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் சரியான முறையில் கணக்கிடப்படுவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஜி.டி.பி பற்றி ஒரு இழவும் தெரியாத்ததால் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அன்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. சிட்டி சென்டரிலிருந்து அறைக்கு வந்து கொண்டிருந்தோம். ஜி.டி.பி யில் ஆரம்பித்த விவாதம் பிளாட்ஃபார்ம் வாசிகள் பக்கம் திரும்பி, அரசின் மெத்தனத்தைச் சாடி, இறுதியாக "அரசாங்கம் இருக்கட்டும், நீ சமூகத்திற்கு என்ன செய்யப் போற?" என்ற கேள்வியில் வந்து நின்றது. 

"இனி இந்தியப் பொருட்களைத் தான் வாங்குவேன்" என்றான் ஒரு நண்பன்.  

"முடிந்த வரை நகரத்தைச் சுத்தமாக வைத்திருப்பேன்" என்றான் இன்னொருவன், புகைத்து முடித்திருந்த சிகரெட்டைத் தெருவில் விட்டெறிந்துவிட்டு!

"நண்பர்களுக்குட் ட்ரீட் கொடுப்பதை விட ஒரு சாரிட்டிக்கு டொனேஷன் கொடுக்கலாம்" என்றேன் நான். 

ஒரு வாரம் ஆகிவிட்டது. சுதேசி நண்பன் லேட்டஸ்ட் நோக்கியா மொபைல் வாங்கியிருக்கிறான். அதற்காக McD யில் ட்ரீட் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

கஷ்டம்! 

{}

முன்னாள் தோழிக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இந்த மாதிரி தருணங்களில் கவிதை எழுதும் வழக்கம் இன்னும் இருக்கிறதா? யாராவது யாப்பிலக்கணம் சொல்லித் தர முடியுமா? 

{}


புதிய தோழி இரண்டு ஜோடி Budgerigar வளர்க்கிறாள். இது ஏதோ Breeding சீசனாம் :). அவைகளுக்குக் கூடு கட்டக் கூடத் தெரியவில்லையாம். அதற்கு என்னிடம் சண்டை பிடிக்கிறாள். என்ன கொடுமை சார் இது ?

{}


உங்களுக்கு Super-Ancient கலாச்சாரங்களைப் பற்றியக் கதைகள் பிடிக்குமா? சிம்பல்ஸ்? பிரமிடின் மர்மங்கள் ? Treasure Hunt கலந்த விறுவிறுப்பான ஆக் ஷன் கதைகள் ? பிடிக்க்குமென்றால் உங்களுக்கு மேத்யூ ரெய்லியின் இந்த நாவல்களை ரொம்பப் பிடிக்கும்.

1) Seven Ancient Wonders
2) Six Sacred Stones
3) Five Great Warriors. 

இதே வரிசையில் படிக்கவும். பட்டாசு பட்டாசு! 

{}

June 16, 2010

மதிப்பெண்

இந்தத் தேர்வு முடிவுகள் வரும் நேரத்திலெல்லாம் ஒரு குழப்பம் எழுந்து அடங்கும். முடிவுகள் எல்லாம் கன்னாபின்னாவென்று இருக்கும். அதிக மதிப்பெண்கள் எதிர்பார்ப்பவர்களுக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். சில நேரத்தில் எதிராகவும் நடக்கும். எனக்குத் தெரிந்த மாணவி ஒருத்தியின் நிலைமை இது. பொதுவாக அதிக மதிப்பெண்கள் வாங்கும் பெண் அவள். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளும் நன்றாக எழுதியிருந்தாள். ஆனால் முடிவுகள் அவள் எதிர்பார்த்த மாதிரியில்லை. மதிப்பெண்கள் குறைந்திருந்தன. சந்தேகப்பட்டு விடைத்தாள் நகல் வாங்கிப் பார்த்ததில் அதிர்ச்சி. ஒரு பாடத்தில் இரண்டு விடைகள் திருத்தப்படவேயில்லை. இன்னொரு பாடத்தில், சரியான விடைக்கு மதிப்பெண்கள் தரப்படவேயில்லை. சரி மறு கூட்டலுக்கு அல்லது மறு திருத்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றால் "இருக்கிற மதிப்பெண்களும் போய்விடப்போகிறது ஜாக்கிரதை" என்கிறார்களாம் அவளது வகுப்பாசிரியை. குழப்பத்தில் இருக்கிறாள்.

இது ஒரு உதாரணம் தான். இதை மாதிரி நிறைய வகை சொதப்பல்கள் இருக்கின்றன. விடைத்தாள்கள் திருத்தும்போது தரப்படும் சம்பளம் போதவில்லையென்று ஒரு ஆசிரியை சில விடைத்தாள்களை ஒளித்து வைக்க முயன்றார் என்று கூட செய்தி வந்தது. எவ்வளவு அலட்சியம்? மாணவர்களின் எதிர்காலமல்லவா இது? இவர்களது கோபத்தைக் காட்ட யாரோ ஒரு முகம் தெரியாதவனின் எதிர்காலத்தைப் பாழடிப்பதா?

இதைப்பற்றியெல்லாம் யோசிக்கும் போது நிறைய கேள்விகள் சந்தேகங்கள் தோன்றின. ஆசிரியர்களை விட்டுவிடுங்கள். அனைவரும் அதை சேவையாகப் பார்ப்பதில்லை. தொழிலாக மாறி வெகு காலம் ஆகிறது. ஆனால் நம் கல்விமுறை? ஏன் இன்னும் இந்த மாதிரி தேர்வு முறை/மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இருக்கிறது? நிறைய பேர் ஒன்றுமே புரியாமல் மனப்பாடம் செய்தல்லவா தேர்வெழுதுகிறார்கள்? தமிழ்ப்பாடத்தில் வரும் செய்யுள்கள் கூட பொருள் புரிந்து கொண்டு படித்தால் சுவை இன்னும் கூடும். ஆனால் தாவரவியலில் வரும் ஒளிச்சேர்க்கைச் சுழற்சியையோ அல்லது இயற்பியலில் வரும் ஏதேனும் ஒரு ஆய்வையோ மனப்பாடம் செய்வதால் என்ன நன்மை இருக்க முடியும்? (நானெல்லாம் மனப்பாடம் செய்தால் தேர்வு எழுதி முடிக்கும் வரை நினைவில் இருந்தாலே பெரிய விஷயம். முடித்தவுடம் அந்தப் பாடம் இருக்கும் பகுதியை மட்டும் மூளை தானாகவே ஃபார்மெட் செய்துவிடும்.)

இன்னும் ஏன் இந்த பக்கம் பக்கமாக விடை எழுதும் முறை ஊக்குவிக்கப் படுகின்றது? நுழைவுத்தேர்வுகளில் இருப்பது போன்ற சரியான விடையைத் தேர்வு செய்யும் முறை இருந்தால் என்ன? இப்பொழுது இருக்கும் குழந்தைகள் நம்மை விட சீக்கிரம் விஷயங்களைத்(!) தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தகுந்த மாதிரி கல்வி இருக்க வேண்டாமா? இப்போது இருக்கும் முறை தான் மொழிப்பாடங்களுக்குச் சிறந்தது. பிள்ளைகளுக்கு விளக்கி எழுதும் திறமை அவசியம். அதற்கு இந்த முறை தான் சரி என்று ஒரு வாதம் இருக்கிறது. இது எந்த அளவுக்குச் சரி? மொழிப்பாடங்களுக்கு மட்டும் இந்த முறையை வைத்துக்கொள்ளக்கூடாதா? கல்வி முறை குழந்தைகளைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய கல்விமுறை அப்படி இருக்கிறதா என்ன? கல்லூரிகளில் இருப்பது போன்று பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்புகளிலேயே ப்ராஜெக்ட் செய்யவிட்டால் என்ன? பத்தாம் வகுப்பு வரை அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளட்டும்! அதற்கப்புறமாவது அவர்கள் படித்ததை உபயோகிக்கட்டும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. இப்பொழுது இருக்கும் பள்ளிக் கல்வி முறையில் ஒரு மாற்றம் செய்யும் அதிகாரம் உங்களுக்கு இருந்தால் என்ன மாற்றம் கொண்டு வருவீர்கள்?

February 10, 2010

அரட்டை - 10-2-2010

காலம் கடந்து கிடைக்கும் உதவி வீண் என எங்கோ படித்தது. அது நீதிக்கும் பொருந்தும். பத்து வருடம், பதினான்கு வருடம் என வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? உதாரணத்துக்கு ருசிகா வழக்கு. 90களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட டென்னிஸ் வீராங்கனை. குற்றம் சாட்டப்பட்டவர் ரத்தோர். பத்தொன்பது ஆண்டுகள் கழித்து அவருக்குக் கிடைத்த தண்டனை ஆறு மாதம் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம். இதை விட அந்தப்பெண்ணின் தகப்பனை வேறு விதமாக‌ அசிங்க‌ப்ப‌டுத்த‌ முடியாது. இன்னும் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. ரத்தோர் குற்றமற்றவர் என்று கூட நிரூபிக்கப்படலாம் யாருக்குத் தெரியும். அப்புறம், கசாப் என்ற‌ தியாகி ஒருவரைப் பராமரித்து வருகிறோமே. அந்த வழக்கு என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை. தமிழ்நாட்டில், சங்கரராமன் கொலை வழக்கு. எல்லா சாட்சிகளும் பல்டி அடித்தாகி விட்டது. அடுத்தது என்ன? வழக்கு தள்ளுபடி. "ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது" என்பதில் பின்பாதி சரி தான். ஆனால் ஓராயிரம் குற்றவாளிகள் தப்பித்தால் என்ன ஆவது? தப்பித்துக்கொள்ளாலாம் என குற்றங்கள் பெருகாதா? தார்மீக அடிப்படையில் பார்த்தால் கூட பாதிக்கப்பட்டவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டாமா? வயசாகிப்போன நீதித்துறை!!!!!!!!


{}

முதல்வர் கலைஞருக்கு ஐநூற்றுச் சொச்சமாவது தடவையாக‌ தமிழ்த்திரையுலகினர் எடுத்த பாராட்டு விழாவில் அஜித் மனம் திறந்து குமுறியிருக்கிறார். இந்த மாதிரி விழாக்களுக்கு வரச்சொல்லி நடிகர்கள் மிரட்டப்படுவதாக‌ப் புலம்பியிருக்கிறார். இது வேறா?

அவ‌ர் வாரி வழங்குவதும், இவர்கள் விழா எடுப்பதுமாக வருடம் முழுக்க ஒரே கோலாகலம் தான். ஏதோ நல்லா இருந்தா சரி. மற்ற துறையெல்லாம் செழிப்பாக இருக்கிறது தமிழ்நாட்டில். பாவம் சினிமாத்துறை மட்டும் நொடித்துப்போய்விட்டது. நடக்கட்டும் நடக்கட்டும்

{}

கோவா பார்த்தாகிவிட்ட‌து. ஒரு வெளிநாட்டுக்காரியைப் பார்த்து ம‌ண‌ம் முடிக்கும் ல‌ட்சியம் கொண்ட‌ மூன்று இளைஞ‌ர்க‌ளின் க‌தை. (சிங்காரவேலன் கவுண்டமணி நினைவுக்கு வந்தார் : இதுவல்லவோ லட்சியம்....). ப‌ட‌ம் ஒவ்வொருக் காட்சியும் இளமைத்துள்ளல்(அட, அது இல்லீங்க!). சம்பத்,அர்விந்த் காதல் அளப்பறை. தில்லு தான் ரெண்டு பேருக்கும். தனித்தனிக் காட்சிகளாகப் பார்க்கும்போது வசீகரிக்கும் படம் மொத்த‌மாகப் பார்க்கும்போது அவ்வளவாகக் கவரவில்லை. .


{}

வலையுலகின் காதல் மன்னன் கார்க்கி' காதல் வாரம் கொண்டாடுகிறார். 'கார்ப்பரேட் கம்பர் நர்சிம்' காதலுக்காக சிலப்பதிகாரம் வரைச் சென்று காதலியின் அழகைப் பாட ஐடியா தருகிறார். ஆதி அவர்கள் ஒரு படி மேலே போய் தங்கமணி ஸ்பெஷல் என பதிவு போடுகிறார். இப்படி ஆளாளுக்குக் காதலைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். நம் பங்குக்கு ஏதாவது செய்யாவிட்டால் எப்படி?

எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது.

துன்ப‌த்திலும் ஒரு இன்ப‌ம்.
என்ன‌வ‌ளின் திரும‌ண‌த்துக்கு வ‌ந்த
அவ‌ள் தோழிக‌ள்!
What a Figures What a Figures....

நீதி : திரிஷா கிடைக்க‌லைன்னா திவ்யா!

December 06, 2009

உலக அழகியைக் காப்பாற்றுவோம்!

கோபன்ஹேகன் - டென்மார்க்கின் தலைநகர். உலக ஊடகங்களின் ஒருமித்தப் பார்வை இப்போது இந்த நகரத்தின் மீது தான். டிசம்பர் 8 முதல் 18 வரையிலான உலக சுற்றுச்சூழல் மாநாடு இங்கு தான் நடைபெறுகிறது. 192 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூடி, தட்பவெப்பநிலை மாறுபாடு குறித்து விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் பின்வரும் விசயங்கள் விவாதிக்கப்படும்.


1) கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியீட்டைக் (குறிப்பாக வளர்ந்த நாடுகளில்) கட்டுக்குள் வைப்பது, 
2) தட்பவெப்ப நிலை மாறுபாட்டைக் கட்டுக்குள் வைக்கத் தேவையான நிதியுதவி,
3) காடுகளின் அழிவைத் தடுக்க கார்பன் ட்ரேடிங் முறை.


இதற்கு முன்னர் 1997 டிசம்பரில் ஜப்பானில் க்யோட்டோ ஒப்பந்தம் என்று ஒன்றைப் போட்டார்கள். அந்த ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளின் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க வகை செய்கிறது. ஆனால் முன்னாள் நாட்டாமை அமெரிக்கா மட்டும் நைசாக கழண்டு கொண்டது. இந்நிலையில் கோபன்ஹேகன் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும கலந்துகொள்வது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. 


2012 படம் பார்த்திருப்பீர்கள். சூரியனிலிருந்து வரும் அதிக நியூட்ரினோக்களால் பூமியின் மையப்பகுதி வெப்பமடைந்து எரிமலையும் பிரளயமுமாக உலகம் அழிவதைக் காட்டியிருப்பார்கள். நமக்கு சூரியனெல்லாம் தேவையில்லை. நாமே பூமியைச் சூடாக்கிக் கொண்டுள்ளோம். அழிவு அது மாதிரி ஒரேயடியாக இல்லாவிட்டாலும், கடல் மட்ட உயர்வு, கடலோர நகரங்கள் மூழ்குவது என்று ஸ்லோ மோஷனில் போய்க்கொண்டிருக்கும். 


அதெல்லாம் வேண்டாமென்று தான் ஊர் கூடி தேரை இழுக்க முயற்சிக்கிறார்கள். இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்து நாடுகளும் (நாமும் தான்) செயல்படுத்த முன்வரவேண்டும். பின்னே நம் ”உலக” அழகியைக் காப்பாற்ற வேண்டாமா? 

October 13, 2009

நீலகிரி, நியூட்ரினோ, சில கேள்விகள்


நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் ஒன்றை இந்தியா அமைக்க இருப்பதையும் அதை இயற்கை ஆர்வலர்கள் எதிர்த்து வருவதையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கேட்பத‌ற்கு டொரினோ மாதிரி இருக்கிறதே, அது என்ன நியூட்ரினோ என்று வ‌லையில் தேடிப்பார்த்த‌தில் சில‌ த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்தன.

இப்போதைக்கு ‌நியூட்ரினோ என்பது ஒரு மின்சுமை இல்லாத, ஒளியின் வேக‌த்திற்கு நெருக்க‌மாக‌ ப‌ய‌ணிக்க‌க்கூடிய‌ மிக‌ச்சிறிய (மிக மிக மிகச் சிறிய‌) துகள் என்று வைத்துக்கொள்வோம். இந்த துகள் சூரியனில் நடைபெறுகிற அணுப்பிளவு/இணைவு போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையாகக் கிடைக்கிறது. இது தவிர, இது அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் க‌திர்க‌ளைக் கொண்டு அணுவைத் தாக்குவ‌தாலோ இவற்றைப் பெற‌ முடியும். ஒவ்வொரு வினாடிக்கும் 50 ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1000 பில்லியன்) நியூட்ரினோ துகள்கள் நம் உடம்பில் பாய்கிறது.

இருக்க‌ட்டும். இந்த‌ துக‌ளால் என்ன‌ ந‌ன்மை? இந்த துகளின் சிறப்பு என்ன? ஏன் நியூட்ரினோ ஆய்வ‌க‌ம் இந்தியாவில் அதுவும் நீல‌கிரி வ‌ன‌ப்ப‌குதியில் அமைக்க‌ப்ப‌டுகிற‌து?

ம‌ற்ற துகள்கள் (உம் : ஃபோட்டான்) வ‌ளிம‌ண்ட‌ல‌த்திலுள்ள‌ மாசுக்க‌ளால் (முக்கியமாக மின்காந்த அலைகளால்) வ‌லுவிழக்கக்கூடும். அதனால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. ஆனால் நியூட்ரினோ, எந்த ஒரு பொருளாலும்/துகளாலும் பாதிக்க‌ப்ப‌டாம‌ல் ஊடுருவிச் செல்ல‌வ‌ல்ல‌து. இதுவே இத‌ன் சிற‌ப்பு. அத‌னால் தொலை தூர‌ ஆராய்ச்சிக‌ளுக்கு இந்த‌ துக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். பிர‌பஞ்ச‌ம் உருவான‌ வித‌த்தைப் ப‌ற்றித் தெரிந்துகொள்ள‌ முடியும் என்கிறார்க‌ள். த‌விர‌ சூரிய‌னின் "கோர்" ப‌குதியை ஆராய‌வும் இது உத‌வுமாம். மேலும் ப‌ல ம‌க‌த்தான‌ ப‌ய‌ன்க‌ளைத் த‌ரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் இந்த‌ நியூட்ரினோக்க‌ளைப் பிடிப்ப‌து அவ்வ‌ள‌வு சுல‌ப‌மில்லை. லிட்ட‌ர் லிட்ட‌ராக வெள்ளை-ஸ்பிரிட் (அல்லது நீர் அல்லது கனநீர்... ) தேக்க‌ப்ப‌ட்ட ராட்ச‌தத் தொட்டிக‌ள் மூல‌மாகப் பிடிக்க‌லாம். அத‌ற்கு நிறைய‌ இட‌ம் தேவை. நிறைய மாச‌டையாத‌ இட‌ம். அத‌ற்குத்தான் நீல‌கிரி. திட்ட‌ம் என்ன‌வென்றால், 1.3 கி.மீ ஆழத்துக்குத் மலை உச்சியில் தோண்டி ஆய்வ‌க‌ம் அமைக்க‌ப்போகிறார்க‌ள். அது த‌விர‌ ஒரு இர‌ண்ட‌ரை கி.மீ தூர‌த்துக்கு ம‌லைய‌டிவார‌த்திலிருந்து அந்த ஆய்வ‌க‌த்திற்கு குகை மாதிரி தோண்ட‌ப்போகிறார்க‌ள். பிற்பாடு, ஜ‌ப்பான் அமெரிக்காவிலிருந்தெல்லாம் நியூட்ரினோக்க‌ளை க‌ட‌ல‌டியில் அனுப்பி, நீல‌கிரியில் பெற்றுக்கொள்ளும் திட்ட‌மும் இருக்கிற‌தாம் (அடங்கொன்னியா).

மலைப்பாக இருக்கிறது. ஒரு ம‌லையையே குடைய‌ப்போகிறார்க‌ளா? தோண்ட‌ப்ப‌ட்ட‌ ம‌ண்ணை என்ன‌ செய்ய‌ப்போகிறார்க‌ள்? ஆய்வகம் பாதுகாப்பானதா? கதிரியக்க அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? த‌விர‌ ஆய்வ‌க‌ம் அமைக்க‌ க‌ட்டுமான‌ப் பொருட்க‌ள் எவ்வ‌ள‌வு தேவைப்ப‌டும்? குறைந்த பட்சம் இரும்பு 1 ல‌ட்ச‌ம் டன், சிமெண்ட் ஒரு 35,000 டன், இவை த‌விர‌ அலுமினிய‌ம், எஃகு லொட்டு லொசுக்கு என‌ ஒவ்வொன்றையும் அங்கு கொண்டு சேர்க்க‌ எவ்வ‌ள‌வு நேர‌ம் தேவைப்ப‌டும்? கிட்டத்தட்ட ஒரு லட்சத்து என்பதாயிரம் ட்ரக்கு சவாரி தேவைப்படும் என ஒரு கணக்கு சொல்கிறது. கட்டுமானம் மட்டும் நான்கு வருடத் திட்டம். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 130 சவாரி. எவ்வளவு கார்பன் மாசு வெளிப்படும்? இதெற்கெல்லாம் புதிதாக‌ சாலை ஏதாவது போடப்ப‌டுமா? இதையெல்லாம் விட‌ முக்கிய‌மாக தெரிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ இட‌ம் முதும‌லை வ‌ன‌வில‌ங்கு காப்ப‌க‌த்துக்கு மிக‌ அருகில் உள்ள‌து. அங்குள்ள‌ வில‌ங்குக‌ள் பாதிக்க‌ப்ப‌டுமே? இப்ப‌டி ஒவ்வொரு கார‌ணத்துக்காக‌வும் இந்த‌ ம‌லையை அழிக்க‌ ஆர‌ம்பித்தால்...? த‌மிழ‌கம் பெரிதும் நம்பியிருக்கும் தென்மேற்குப் ப‌ருவ‌ மழையின் மூல‌மான‌ மேற்குத் தொட‌ர்ச்சி ம‌லையின் க‌தி என்ன‌? இவை எல்லாம் தான் இய‌ற்கைப் பாதுகாவ‌ல‌ர்க‌ளின் கேள்விக‌ள்.

இதற்கு விஞ்ஞானிகள் கூறுவதெல்லாம், "இது அணு ஆராய்ச்சிக்கூடம் இல்லை. அதனால் கதிரியக்க பயம் தேவையில்லை" என்பது தான். மற்ற கேள்விகளுக்குப் பதிலில்லை.

எழுப்ப‌ப்ப‌ட்ட நியாயமான கேள்விகளுக்கு ச‌ரியான‌ முறையில் ப‌தில‌ளிக்க‌ப்ப‌ட‌வேண்டும், நீலகிரி மலைப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும், ஏற்கென‌வே ம‌னித மாசால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள ம‌லைக‌ளின் அர‌சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும்...

டிஸ்கி 1: உண்மையில், இந்த‌ இடம் சில பல ஆண்டுகளுக்கு முன்னமே தெரிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக அரசு இன்னும் இசைவு தெரிவிக்காத காரணத்தால் திட்டம் இன்னும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிற‌து.

டிஸ்கி 2 : ஏதாவது தகவல் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்

டிஸ்கி 3 : இப்படி எல்லாம் யோசித்தால் அறிவியல் எப்படி வளரும் என்று கேட்பவர்களும் ஆட்டத்தில் கலந்துகொள்ளலாம்.

September 08, 2009

Global Warming : என்ன செய்யலாம்?


2012 என்று ஒரு படம். ட்ரெய்லர் பார்த்திருப்பீர்கள். 2012ம் வருடத்துடன் மயன் காலண்டர் முடிந்துவிடுகிறது, பைபிளிலும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது, அதனால் 2012ல் நிச்சயமாக உலகம் அழிந்துவிடும் என்று மிரட்டியிருப்பார்கள். நெருப்பு மழை பொழிவதாகவும், கடல் ஊருக்குள் நுழைவதாகவும் காட்டியிருப்பார்கள். இது 2012ல் நடக்கிறதோ இல்லையோ, சீக்கிரமாகவே நடந்துவிடும் அபாயம் இருக்கிறது. காரணம் Global Warming என்று சொல்லப்படுகிற உலக வெப்பமாதல் பிரச்சனை. வாகனங்கள், குளிர் சாதனப்பெட்டிகள் இவற்றிலிருந்து வெளிப்படும் கார்பன் கழிவுகள் வளிமண்டலத்தை மாசடையச் செய்வதுடன் அவற்றை வெப்பமாக்குகிறது என்பதெல்லாம் நமக்கு பால பாடம். அதனால், இந்தப் பிரச்சனைக்கு எதிராகக் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

1) காகிதப் பயன்பாட்டைக் குறைத்தல்.

இதன் மூலம் காகிதத் தயாரிப்பில் மூலப் பொருளான மரங்களைக் காக்க முடியும். தவிர காகித உற்பத்தியின் போது தேவைப்படுகிற எரிபொருளைச் சேமிக்க முடியும்.

2) வாகனப் பயன்பாடு.

* கார் அல்லது பைக் வைத்திருப்பவர்களா? நண்பர்களாக்ச் சேர்ந்து (CarPooling) வருவதன் மூலம் எரிபொருள்பயன்பாட்டைக் குறைக்கலாம்.

* 20 வினாடிகளுக்கு மேல் சிக்னலில் காத்திருக்க வேண்டியிருந்தால் வாகனத்தை ஆஃப் செய்யலாம்.

3) குப்பைகள்

பேக் செய்வதற்கு குறைவான காகிதங்கள் அல்லது பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்பட பொருட்கள் வாங்குவதால் குப்பைகளை ஓரளவு குறைக்க முடியும்

4) ஷாப்பிங்

* ஷாப்பிங் லோக்கலாக வீட்டுக்கு அருகிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். வண்டியை எடுக்கவேண்டாமல்லவா?
* பொருட்களை வாங்கிவிட்டு கேரிபேக் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். துணிப்பையை உபயோகிக்கலாம்.

5) மின்சாரம் சேமிப்பு

* சார்ஜர் போன்ற சாதனங்களை ஆஃப் செய்யாமல் விடாதீர்கள். நாம் அடிக்கடி சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் மொபலை சார்ஜர் ஆஃப் செய்யாமல் அப்படியே எடுப்போம். அது வேண்டாம்.

* கணினித்திரையை தேவையில்லாத போது (ப்ரேக், மீட்டிங்... ) ஆஃப் செயவது.

6) மரம்

முடிந்தால் மரம் நடுங்கள். :)

இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இது நடக்க வேண்டுமா?

A race begins in a single step! இது நாம் அனைவரும் ஒன்றாக ஓடியாக வேண்டிய ரேஸ். முதலடியை எடுத்துவைப்போம் வாருங்கள்!

August 25, 2009

இதயம் ஒரு கோயில்....


பெங்களூரு நாராயணா ஹிருதயாலயாவைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி, விப்ரோ ஊழியர்களுடன் கலந்துரையாடியதன் சாராம்சம் என்று ஒரு மின்னஞ்சல் வெகு நாளாகவே உலவிக்கொண்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் உங்களுக்காக!

மாரடைப்பு சில காரணங்கள்?
* சீரற்ற உணவு முறை.
* புகைப்பழக்கம்
* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை
* மரபு ரீதியான காரணங்கள்!

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக மாரடைப்பு வரக் காரணம் என்ன?
45 வயது வரை இயற்கை பெண்களைப் பாதுகாக்கிறது.

சர்க்கைரை நோய்க்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்பு?
இருக்கிறது! சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மாரடைப்பினால் ஏற்படும் வலியையும் Gas பிரச்சனையால் ஏற்படும் வலியையும் எப்படி வேறுபடுத்துவது?
ECG யின் மூலம் மட்டுமே கண்டுகொள்ள முடியும்.

இதய நோய்கள் பரம்பரை வியாதிகளா?
ஆம்!

மாமிசம், குறிப்பாக மீன் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லதா?
இல்லை! அதிலும் மூளை, ஈரல் மற்றும் கிட்னி பகுதிகள் அதிகம் கொழுப்புச் சத்து கொண்டவை. (இனி அஞ்சப்பரிலோ அல்லது காரைக்குடியிலோ ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி யோசிங்க!)

எந்த எண்ணெய் வகை சிறந்தது ? சூரியகாந்தி, ஆலிவ்.... ?
எதுவுமே நல்லதில்லை.

Junk Food - என்னென்ன?
பொரிக்கப்பட்ட/ வறுக்கப்பட்ட உணவுகள். மசாலா ஐட்டங்கள். சமோசாக்கள்...

ஆரோக்கியமானவராகத் தோன்றுபவர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறதே?
இது silent attack, யாருக்கு வருமென்று ஊகிக்க முடியாது. அதனால், முப்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இளைஞர்களுக்கிடையே இதய நோய்கள் அதிகரித்துள்ளதற்கான காரணம் என்ன?
உடல் உழைப்பு ஏதுமில்லாத வாழ்க்கை முறை, புகைப்பழக்கம், ஜங்க் ஃபுட் இவை முக்கியக்காரணங்கள்.

எனக்கு இருபது வயது தான் ஆகிறது. எனக்கு கொலஸ்ட்ரால் இருக்க வாய்ப்பிருக்கிறதா?
கொலஸ்ட்ரால் வயது பார்ப்பதில்லை. குழந்தைக்குக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

நம்மில் நிறைய பேர் இரவு வெகு நேரம் கண் விழிக்க வேண்டியிருக்கிறது. சீரான உணவுப்பழக்கமோ வாழ்க்கை முறையோ இருப்பதில்லை. இப்படி இருப்பவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
சீரான வாழ்க்கை முறையைப் பழகிக் கொள்ளுங்கள்.

மாரடைப்பு வந்தால் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன?
அவரை தூங்கும் பொசிஷனில் படுக்க வைக்கவும். aspirin மற்றும் sorbitrate மாத்திரைகளை வைத்துக்கொள்ள செய்யலாம். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லவும். முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது/அபாயகரமானது.

மாரடைப்பு வந்தவரே அவருக்கு முதலுதவி செய்துகொள்ள முடியுமா?
நிச்சயமாக! மேலே சொன்ன பதிலே தான்!

வாக்கிங், ஜாகிங் எது சிறந்தது?
வாக்கிங்.

மன உளைச்சலைக் குறைக்க என்ன வழி?
எல்லாவற்றிலும் perfection எதிர்பார்க்காமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள். :)

இதயத்தைப் பாதுகாக்க முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவை?
* டயட் - புரதம் நிறைந்த அதே சமயம் கார்போ மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள்.
* எடைக்கட்டுப்பாடு - (உங்க BMI Score என்ன ?)
* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்தல்.
* புகைப்பழக்கதை விட்டொழித்தல்
* உடற்பயிற்சி - ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேர நடைப்பயிற்சி. வாரத்துக்கு ஐந்து நாட்களாவது.

பத்திரமா பாத்துக்கங்க!

டிஸ்கி 1: இந்த பதிவு நிறைய பேரைச் சென்றடைய உதவுங்கள்!

டிஸ்கி 2: இது மொழிபெயர்ப்பு தான். தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

August 19, 2009

என்னைக் கொன்னுடுங்க!

மலைச்சாமிக் கவுண்டருக்குத் தொண்ணூறு வயதிருக்கும். ஆடி அடங்கிய ஜீவன். இய‌ற்கை உபாதைக‌ளுக்காவ‌து நடமாடிக்கொண்டிருந்த‌வ‌ர், மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்னால் கீழே விழுந்து இடுப்பெலும்பை உடைத்துக்கொண்டார். அன்றிலிருந்து வாழ்க்கை, ப‌டுக்கையில் தான். மகன் நல்லப்பன் ஒரு லாரி ட்ரைவர். மாதத்தில் முக்கால்வாசி நாள் ரெய்ப்பூர்,குஜராத் என ரூட்டில் ஓடிக்கொண்டிருப்பவர். சாப்பாடு, த‌ண்ணீர் மற்றும் எல்லாவ‌ற்றிற்கும் என்ன செய்வது? ம‌ரும‌க‌ளைத் தான் சார்ந்திருக்க வேண்டிய‌தாயிற்று.

"என்னாலயெல்லாம் உன்ற அப்பனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது சாமி! " என்று கைவிரித்துவிட்டாள் ம‌கராசி. "ஏன்? பொறந்தவள பாக்க சொல்றது?" என்று பெரியவரின் மகள் வேலம்மாளை வேறு உள்ளே இழுத்தாள்.

"வேலா, அப்பனை உன்ற வூட்டுக்குக் கொண்டு போயிட்றியா? இந்த பாவி மவ பட்டினி போட்டே கொன்னு போட்ருவா!" நல்லப்பன் தன் தங்கையைக் கேட்டார். "இல்லீங்ண்ணா,ப‌ருத்தி வெடிக்கிற‌ ச‌ம‌ய‌முங்க. பாங்கு பாக்கற(து)க்கும் நேரமிருக்காது, வூட்ல‌யும் எட‌மிருக்காது." த‌யாராக க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வைத்துக்கொண்டாள்.

பெரிய‌வ‌ருக்குத் தெரிந்து ரொம்ப‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டார். ம‌க‌னை அழைத்த‌வ‌ர், "க‌ண்ணு, எனக்கும் ஒவுத்திரியம்(வலி) தாங்க‌ முடியல, நீங்களும் பாங்கு பாக்க முடியாது. அதனால ம‌ருந்தோ ஊசியோ போட்டு என்ற கதைய முடிச்சிடுங்க!" என்றார். முடியவே முடியாது என்றார் நல்லப்பன். ஒத்துக்கொள்ள ம‌றுத்த‌ ம‌க‌னை பேசிப் பேசி வ‌ழிக்குக் கொண்டுவந்துவிட்டார். ம‌களை ச‌ம்ம‌திக்க‌ வைப்பது சுல‌ப‌மாக இருந்த‌து. ஒரு நாள் பார்த்து உள்ளூர் டாக்ட‌ரை அழைத்து ஊசி போட்டுக் காரிய‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.

****

இது ஒரு கற்பனை தான்... ஆனால் இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது கிராமப்புறங்களில் அரங்கேறும். இந்த விஷயத்தில் இரு விதமான வாதங்கள் கேட்கக் கிடைக்கின்றன. ஒன்று, எந்த உயிரையும் கொல்லும் உரிமை நமக்கில்லை. இன்னொரு உயிரை எடுப்பது குற்றமே என்பது. இன்னொன்று, வலியால் அவதிப்படும்/குணமாகவே வழியில்லாத உயிர்களை வைத்திருந்து இம்சிப்பதை விட அவர்களைக் கொன்று விடுதலையடையச் செய்வதே நல்லது என்பது. இரண்டாவது தரப்பினர் அகிம்சாமூர்த்தி காந்தியை உதாரணமாகக் காட்டுவார்கள்.

எல்லாம் சரி தான், ஆனால் இதற்கு அங்கீகாரம் கொடுத்தால், கருணைக்கொலை என்ற பெயரில் மிகச் சாதாரணமாகக் கொலைகள் நடந்தேறும் இல்லையா? கருணைக்கொலைக்கு யார் அனுமதி கொடுப்பது? யார் அதை முடிவு செய்வது? யார் பரிந்துரைக்கலாம்? அவரை நம்பமுடியுமா? பாதிக்கப்பட்டவரே ஒத்துக்கொண்டாலும் அவர் முழு மனத்துடன் சம்மதித்தாரா? நிறைய கேள்விகள் உள்ளன. நமது சமூகத்தைப் பற்ற்றி சொல்ல்வே வேண்டாம். கரன்சியை அள்ளி இறைத்துக் காரியம் சாதித்தேப் பழகிவிட்டோம். அப்புறம் ஆளாளுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள் மனு கொடுக்க! கருணைக்கொலை தேவையா என்பதை ஆராய எத்தனைக் கடுமையான வழிமுறைகளைக் கொண்டுவந்தாலும் அதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட மாட்டோமா?

கருணைக்கொலைகள் அனுமதிக்கப்படலாமா இல்லையா என்பதையே இன்னும் முடிவு செய்யாத நிலையில், இது மாதிரி கவனிக்கக் கஷ்டப்பட்டுக்கொண்டு உறவுகளைக் கொல்லும் புண்ணியவான்கள், புண்ணியவதிகளை என்ன சொல்வது?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More