Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

October 29, 2009

காந்தளூர் வசந்த குமாரன் கதை.



ராஜராஜ சோழனின் காந்தளூர்க் கடிகைப் போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ராஜராஜ‌ன் மெய்கீர்த்தியிலும் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போர். சேர மன்னனுடன் பேச‌ அனுப்பப்பட்ட தூதுவ‌ன் ஒருவன் அவமதிக்கப்பட்டதால் வெகுண்ட ராஜராஜன் சேர நாட்டின் மீது போர் தொடுத்தான் என்பது வரலாறு. இதைப் பின்புலமாகக் கொண்டு அமரர் சுஜாதா எழுதிய நாவல் தான் "காந்தளூர் வசந்தகுமாரன் கதை"


திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள விழிஞம் தான் அப்போதைய காந்தளூர். மிக முக்கியத் துறைமுகம் காந்தளூர். சேர நாட்டின் மீதான நிரந்தர வெற்றிக்கு இந்தத் துறைமுகத்தைப் பிடிப்பது முக்கியமாக இருந்தது. தவிர ராஜராஜனால் நாடுகடத்தப்பட்ட ரவிதாசன் முதலியோரும் இங்கிருந்து தான் ஒற்ற‌ர்களைத் தயார்படுத்தி அனுப்பியாதாகவும் கூறுவர்.

இனி கதை...

கதைப்படி, வசந்தகுமாரன் சேர நாட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவன். அவனுடைய குரு,நண்பர் கணேசபட்டர். இந்த பெயர்களை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? சுஜாதாவின் பிரியத்துக்குரிய நாயகர்கள் கணேஷ், வசந்த் தான் சரித்திரத்தில் வருகிறார்கள். கணேச பட்டரிடம் அதே தீட்சண்யம். வசந்தகுமாரனிடம் அதே இளமைக் குறும்பு. ரசிக்க வைக்கிறார்கள்.


குதிரை வியாபாரத்துக்காக சோணாடு வந்த யவனன் ஒருவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறான் வசந்தகுமாரன். இதனிடையே அரசகுமாரி அபிமதியைக் காதலிக்கிறான். பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காந்தளூரைச் சேர்ந்த சேர நாட்டு ஒற்றன் எனப் பழி சுமத்தப்படுகின்றான். இந்த சதியில் சிக்க வைப்பது ராஜராஜனைக் கொல்ல வந்த எதிரி நாடு ஒற்றர்கள். மரண தண்டனை விதிக்கப்படும் வசந்தன் எப்படித் தப்பிக்கிறான், எதனால் சேர‌ நாடு அனுப்ப‌ப்ப‌டுகிறான், ராஜராஜன் உயிர் எப்படிக் காப்பாற்றப்பட்டது, வசந்தன் காதல் என்ன ஆனது என்பதை சுஜாதா த‌ன‌து பாணியில் விவ‌ரித்திருக்கிறார்.

இந்தக் கதையில் நடைபெறும் அனைத்து முக்கிய சம்பவங்களுக்கும் சரித்திரத்தில் நடந்ததாகச் சொல்கிறார் சுஜாதா. பாத்திரங்களின் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் உண்மை என்கிறார். உதகைக் கோட்டையைப் பிடிக்க முனைவது, ராராஜேஸ்வரத்துக்கான ஆயத்தப் பணிகள், மலை நாட்டின் மீதான போர் என ஏராளமான விஷய‌ங்கள் வருகின்றன. இந்தப் போர்களுக்கெல்லாம் கலிங்கப்பரணி,மூவர் உலா போன்ற நூல்களை ஆதாரமாகக் காட்டுவார்கள். 


பாத்திரங்களை கல்கி அளவுக்கு கட்‍அவுட் பாத்திரங்களாகப் படைக்காமல் சாதாரண மக்களாக உலவ விட்டிருப்பார் சுஜாதா. இதை அவரே கூறியிருப்பார்.  உதாரணத்துக்கு ராஜராஜன் மீதும் மக்கள் கோபப்படுகிறார்கள்கள். நாயகன் வசந்தனும் ஏராளமான வசவு வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றான்(உம் : விலைமகள் மைந்தன்). கணேச பட்டரும் ஆபத்துக் காலத்தில் மயங்கி நிற்கிறார். 


ஆனால் அரசகுமாரி ஒருத்தி கடத்தப்பட்டால் அந்நாளில் இப்படி வாளாவிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அது தவிர, அபிமதியை சளுக்க மன்னன் விமலாதித்தனுக்குக் கொடுக்க முனைந்தது, ராஜராஜனைக் கொல்ல நடந்த ச‌தியில் விமலாதித்தன் இருந்தான் என்பதெற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிறைய இடங்களில் ராஜராஜனை "இராஜராஜீச்சுரம் கொண்ட" என அடை மொழி கொடுத்து அழைக்கிறார்கள் கோயில் கட்டுவதற்கு முன்பே. இந்த மாதிரி சில விஷயங்கள் நெருடுகின்றன. ஆனால் உண்மையான வராலாறு தெரிந்தால் இதுவும் ஒரு பிரச்சனையாக இருக்காது என நம்புகிறேன்.


பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதப்பட்ட ஒரு காட்சி, நாடகத் தனமான வசனங்கள் என்றே சரித்திர நாவல்களைப் படித்தவர்களுக்கு சுஜாதாவின் கூர்மையான வசனங்களும், எளிய கதையோட்டமும் வித்தியாசமான விருந்தாக இருக்கும். ஆனால் சுஜாதாவின் மற்ற நாவல்களில் உள்ள அந்த "அது" இந்த நாவலில் இல்லை :)


குறிப்பு : காந்தி செத்துட்டாரா ரேஞ்சுக்கு இந்த நாவலைப் பற்றி இவ்வளவு தாமதமாக எழுதியிருக்கிறேன். ரொம்ப நாள் தேடலுக்குப் பின் போன வாரம் கிடைத்தது இந்த நாவல். அதான்!

April 24, 2009

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இலங்கை அரசை கோர வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை மறுபடியும் மத்திய அரசு அனுப்பியிருந்தது. எதற்காக? மத்திய அரசின் கவலையை இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லவாம்! தமிழனின் கவலையைச் சொல்ல ஒரு தமிழன் தூதுவனாக கிடைக்கவில்லையா? ஆனால் தமிழ்ப் பிரதிநிதிகளையும் அனுப்ப பயமாகத்தானிருக்கிறது! ஏனென்றால்,

* இங்கே முதலைக் கண்ணீர் சிந்தி கவிதை வடிப்பதும், மத்தியில் பம்முவதுமாய் மக்களை ஏய்த்தவர்களல்லவா நாம்?

* எம்.பிகள் அனைவரும் ராஜினாமா என்று பூச்சாண்டி காட்டி ஒரு சில நாட்களிலேயே அடங்கிப் போனவர்கள் தானே நாம்?

* ஆதரவாக இருப்போம் என்று தமிழர்கள் எதிர்பார்த்த நிலையில் "என்னால் சொல்லத் தான் முடியும்" என்று மனசாட்சியே இல்லாமல் பதிலிறுத்தவர்கள் அல்லவா நாம்?

* தமிழுணர்வு பேசியவர்களை, மத்தியை மகிழ்விப்பதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு கைது செய்தவர்கள் தாமே நாம்? 

* தேர்தல் நெருங்க நெருங்க, ஈழத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டிக்கொள்வதும், ஈழ மக்கள் ஆதரவிற்காக வேலை நிறுத்தம் செய்வதும், ஆனால் மதுக்கடைகளிலும், ஊடகங்களிலும் வேசித்தனமாக திருவிழா கொண்டாட்டங்கள் நடத்துவதுமாக போராடுபவர்கள் அல்லவா நாம்?  

* போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொல்லி திடீர் ஞானோதயமாக உண்ணாநிலை அறிவித்தவர்கள் அல்லவா நாம்?

* வாரிசின் பதவியைக் காப்பாற்ற, அங்கு ஆட்சியில் பங்கு வைத்துக் கொண்டே இங்கு அதை எதிர்த்த சிறந்த பொதுநலவாதிகளல்லவா நாம்? 

* ஈழ ஆதரவும் உண்டு, அதே சமயம் நான்கு சீட் ஐந்து சீட் என்ற பேரமும் உண்டு என்று இரட்டை வேடம் பூண்ட மாபெரும் தமிழ் உணர்வாளர்கள் அல்லவா நாம்?

* எந்த கட்சியை பூண்டோடு ஒழிப்போம் என்று சபதம் போட்டோமோ அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும் தன்மானத் தமிழர்களல்லவா நாம்?

* மூன்றாவது சக்தியாக இருப்போம் என்ற நிலையில், மூச்சுக் கூட காட்டாமல் பதுங்கியிருந்த மாவீரர்களல்லவா நாம்? 

எப்படி அனுப்புவது?

காவிரிப் பிரச்சனைக்கு கூட ஒன்று சேர வேண்டாம். சொந்த இனம் செத்துக் கொண்டிருக்கும் போது கூடவா ஒன்று சேர முடியவில்லை? அப்படி என்ன தான் சாதிக்கப் போகிறீர்கள்? பாரத ரத்னா விருதா? ஆட்சிக் கட்டிலா? இல்லை கடற்கரையில் கல்லறையா? எதுவாக இருந்தாலும் வாரித்தருகிறோம். எங்களவர்களைக் காப்பாற்றுங்கள்!

March 06, 2009

பொன்னியின் செல்வன்.

ஜேம்ஸ்பாண்ட் கதைளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு சாகசம், காதல், வஞ்சகம், மர்மம், நகைச்சுவை என்று பல அம்சங்கள் நிறைந்த இந்த புதினத்தை அனேகமாக அனைவரும் படித்து இருப்போம். அமரர் கல்கி அவர்களின் கொஞ்சும் தமிழில் மெய்மறந்திருப்போம். குந்தவை, நந்தினி ஆகியோரைப்பற்றிய வர்ணனைகளில் லயித்திருப்போம். இந்த புதினத்தை திரைப்படமாக காண வேண்டும் என்று எண்ணியிருப்போம் (பின்னே, நந்தினி போன்ற சூப்பர் ஃபிகரை திரையில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு தான் இருக்காது?). ஆனால் இதுவரை அது நடந்தபாடில்லை. எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்டார், இயக்குனர் மகேந்திரன் அவர்கள் திரைக்கதை எழுதினார், மணிரத்தினம் இயக்க ஆசைப்பட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். யார் தயாரிப்பது என்ற சிக்கலால் ஆசை அப்படியே நின்றிருக்கும். சன் பிக்சர்ஸ் பெரிய மனது செய்து மொக்கை படங்களை எல்லாம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு இதைத் தயாரிக்கலாம். 
ஆனால் படம் எடுக்க ஆகும் செலவை விட சிக்கலானது பாத்திரத்தேர்வு...  ஒன்றும் இல்லை, நந்தினி பாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று வீட்டில் கேட்டேன். அவ்வளவு தான். என் தாத்தா டி. ஆர். ராஜகுமாரி என்றார். நைனா மாதவி தான் என்றார். எனக்கு, ரம்யா கிருஷ்ணன் சரியாக இருந்திருப்பார் என்றேன். என் தம்பி முத்தழகு தான் சரி என்கிறான். ஒரு வீட்டுக்குள்ளேயே இவ்வளவு கற்பனைகள் இருந்தால், லட்சக்கணக்கான வாசகர்கள் மத்தியில் எவ்வளவு கற்பனை வேறுபாடு இருக்கும்? அதை அறிந்து கொள்ளும் முயற்சிதான் இந்த பதிவு. முதலில் என் தேர்வைத் தருகிறேன்.

வல்லவரையன் வந்தியத்தேவன் : வினய்
குந்தவை நாச்சியார் : அசின் 
அருள்மொழிவர்மன் : கார்த்தி
வானதி : பூஜா
பூங்குழலி : விஜய் டி.வி ரம்யா
ஆதித்த கரிகாலன் : நரேன் 
நந்தினி - மந்தாகினி தேவி : பிரியாமணி
ஆழ்வார்க்கடியான் : பிரபு
அநிருத்தர் : டெல்லி கணேஷ்
மணிமேகலை : கார்த்திகா ("கருவாப்பயா" புகழ்)
செம்பியன் மாதேவி : மனோரமா
சுந்தர சோழர் : சிவக்குமார்
வானமாதேவி : சரண்யா
பெரிய பழுவேட்டரையர் : நெப்போலியன் 
சின்ன பழுவேட்டரையர் : பசுபதி
மதுராந்தகன் : விஷால்
சேந்தன் அமுதன் : ஜெய்
கந்தமாறன் : அஜ்மல்
பார்த்திபேந்திரன் : பிரசன்னா
குடந்தை சோதிடர் : எம்.எஸ்.பாஸ்கர்
ரவிதாசன் : அதுல் குல்கர்னி

இதில் சில பேருக்கு அவர்கள் பாத்திரங்கள் குருவி தலை பனங்காய் கதைதான். இயக்குனர் பாலாவிடம் விட்டு ட்ரில் எடுத்தால் போகிறது! 

உங்களது கற்பனைகளையும் அறியத்தரலாமே?

கொசுறு: இந்த தேர்வை நண்பர்களுடன் விவாதிக்கும்போது சத்யராஜை பெரிய பழுவேட்டரையராகவும், ஒரு சேஞ்சுக்காக கவுண்டமணியை சின்ன பழுவேட்டரையராகவும் நடிக்க வைக்கலாம் சென்று சொன்னார்கள். நந்தினியை பற்றி இருவரும் விவாதிக்கும் காட்சியை எண்ணிப்பார்த்தேன். திருமதி பழனிசாமி படத்தில் கோவை சரளாவை பற்றி இருவரும் சண்டை போடும் காட்சி ஒரு நிமிடம் கண் முன் வந்து போனது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More