July 07, 2010

மன்னாதி மன்னன் - சந்திரகுப்த மௌரியர்



நந்தவம்சத்து அரசவை அன்று பரபரப்பாக இருந்தது. அவையில் நேர்ந்த மிகப்பெரிய அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் இருந்தார் அந்த அந்தணர். சாதாரண அவமானமா அது? பழி தீர்த்தே ஆக வேண்டும். நந்த வம்சத்தை வேரறுக்கும் வன்மத்துடன் அவையை விட்டு வெளியேறினார் அவர். மனதில் பல திட்டங்களுடன் பாடலிபுத்திரத்திலிருந்து(இன்றைய பாட்னா) தட்சசீலத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, காட்டுப்பகுதியில் வேட்டையாடிப் பிழைக்கும் பதின் வயது இளைஞனைச் சந்தித்தார். அவனிடம் தேர்ந்த தளபதிக்குரியத் திறமைகளைக் கண்ட அவர் அவனையே தனது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார். இது தான் இந்தியாவின் முதல் பேரரசின் வித்து. அந்த அந்தணர் சாணக்கியர்(கௌடில்யர்). இளைஞன் மௌரியப் பேரரசை நிறுவி இப்போதைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட சந்திரகுப்தன்(ர்). 2300 வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. தெளிவான ஆதாரங்கள் இல்லாமையால் சந்திரகுப்தரின் ஆரம்ப கால வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. ராஜவம்ச ஆணுக்கும் சூத்திரப் பெண்மணிக்கும்(முரா) பிறந்த இவர் அரண்மனையை விட்டுத் துரத்தப்பட்டார் என்பார்கள் சிலர். பரம்பரையாகவே வேடர் என்றும் சொல்வார்கள் சிலர். எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எந்தப் பின்புலமுமின்றி காட்டில் திரிந்து கொண்டிருந்தவர் பிரம்மாண்டமான ஒரு பேரரசை நிறுவியது வரலாறு.

கல்வி, அரசியல், போர்த்தந்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் சாணக்கியரிடமிருந்து கற்றார் சந்திரகுப்தர். சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில், ஒரு நல்ல நாளில் சிறு படையைத் திரட்டி மகத தேசத்தின்(நந்த வம்சம்) எல்லைப்புறங்களைக் கைப்பற்றினார். முதல் வெற்றி. அந்த சமயம் நந்த அரசு மிகவும் வலுவிழந்திருந்தது. முதல் வெற்றி தந்திருந்த உற்சாகத்துடன் பாடலிபுத்திரத்தை நோக்கி முன்னேறினார். சந்திரகுப்தரின் வீரத்துக்கு முன்னால் நந்த வம்சம் நிறைய நேரம் நிலைக்கமுடியாமல் வீழ்ந்தது. நந்தவம்சம் மண்டியிட்டது. தனது இருபதாம் ஆம் வயதில்(கி.மு 321) மகத அரசனாக முடிசூடினார் சந்திரகுப்தர். மன்னிக்கவும்... சந்திரகுப்த மௌரியர். ஆம். மௌரிய வம்சம் இவ்வாறாக உதயமாகிறது. இந்த மௌரியர் என்ற சொல்லுக்கும் இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். தாய் முராவின் பெயரால் மௌரியா வந்தது என்பது ஒரு கருத்து. மயில் வளர்ப்பவர்களால் சந்திரகுப்தர் வளர்க்கப்பட்டார். அதனால் மயூரா(சமஸ்கிருதத்தில் மயிலின் பெயர்.) என்ற வார்த்தையிலிருந்து வந்தது மௌரியா என்பது ஒரு கருத்து. 

அலெக்சாண்டர் படையெடுப்பில் வட-மேற்கு இந்தியாவில் இருந்த சில் பகுதிகள் அவர் வசம் போனதும் கி.மு 323ல் மரணமடைந்ததும்  தெரிந்திருக்கும். அவர் மரணத்துக்குப் பிறகு அவர் வென்ற பகுதிகளையெல்லாம் அவரது தளபதிகள் ஆண்டு கொண்டிருந்தார்கள். இந்தியாவின் கிரேக்கக் காலனிகளை செலுக்கஸ் நிக்டர் என்ற தளபதி ஆண்டு கொண்டிருந்தார். கி.மு 317ல் செலுக்கஸ் மீது படையெடுத்தார் சந்திரகுப்தர். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலுக்கஸ் ஆண்டு கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான், பலுச்சிஸ்தான் வரை சந்திரகுப்தர் வசம் போனது. தவிர செலுக்கஸின் மகளையும் மணம் முடித்தார். வட இந்தியாவில் வலிமையான அரசை நிறுவிய சந்திரகுப்தரின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பியது. விந்திய மலைச் சாரல் தாண்டி தக்காண பீடபூமி வரை அவரது ராஜ்ஜியம் விரிவடைந்தது. இந்தியாவில் தமிழகமும், கலிங்கமும், வட கிழக்கில் மலை நாடுகளும் மட்டும் அவர் வசம் இல்லாதிருந்தன. பதிலாக மேற்கில் பெர்சியாவின் எல்லை வரை அவரது ராஜ்ஜியம் பரவியிருந்தது. பெர்சிய இளவரசி (Princess of Persia :) ) ஒருத்தியையும் அவர் மணந்ததாகச் சொல்வார்கள். சந்திரகுப்தரின் இந்த மாபெரும் வெற்றிக்கு அவரது படை முக்கியக் காரணம். ஒன்றரை லட்சம் வீரர்கள், 30,000 குதிரைகள், 9000 யானைகள், 8000 தேர்கள் கொண்டது அவர் படை.... விஸ்தீரணம் புரிந்திருக்கும்.

கி.மு 300ல் அவரது ராஜ்ஜியம்




சந்திரகுப்தரை மன்னாதி மன்னர் என்று சொல்லக்காரணம் அவர் அடைந்த வெற்றிகளோ அவர் ஆண்ட நிலப்பரப்போ மட்டும் அல்ல! அவரது ஆட்சிமுறையும் கூட அவர் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற ஒரு காரணம். இன்றைய ஆட்சி முறையில் இருக்கும் துறைகள் போல, ஆறு முக்கியத் துறைகள் வகுக்கப்பட்டன. வணிகம்/தொழில், உள்கட்டமைப்பு, புள்ளியியல், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் அவை. நீதியும் காவலும் தழைத்தோங்கியிருந்தன. சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில் முறையான நீதி மன்றங்கள் செயல்பட்டன. தண்டனைகள் கடுமையானவை. திருட்டு, வரி ஏய்ப்புக்குக் கூட மரண தண்டனை விதிக்கப் பட்டது. வர்த்தகத்திலும் பல வரைமுறைகள் செய்யப்பட்டன. முறையான அளவைகள், வரிகள் கொண்டுவரப்பட்டன. 

சந்திரகுப்தரின் ஆட்சியை இரண்டு புத்தகங்கள் மூலம் அறியலாம். எப்படி ஆண்டார் என்பதை சாணக்கியரின் "அர்த்த சாஸ்திரம்" மூலமும், அவர் ஆட்சியில் தேசம் எப்படி இருந்தது என்பதை கிரேக்கப் பயணி மெகஸ்தனிஸின் "இண்டிகா" மூலமும் அறியலாம். சந்திரகுப்தர் கடைசி நாட்களில் சமண மதத்தைத் தழுவினார். துறவியாக வாழ்ந்து வந்த சந்திரர் கி.மு 298ல் இன்றைய கர்நாடகாவில் இருக்கும் சரவணபெல்கோலாவில் மோன நிலையடைந்தார். 

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர், பேரன் அசோகன் என மூன்று தலைமுறை மௌரிய வம்சம் சிறப்பான ஆட்சியை அளித்தது. அசோகர் காலத்தில் தான் அதுவரை கைப்பற்றப்படாமல் இருந்த கலிங்கம் (ஒரிஸ்ஸா) வேட்டையாடப்பட்டது. அதன் பிறகு புத்த மதம், இலங்கை, சாலையோர மரம் என அசோகரது வாழ்க்கை நீளும். அசோகருக்குப் பிறகு வந்த மௌரிய அரசர்கள் வலிமையாக இல்லாததால் 50 வருடங்கள் கழித்து(கி.மு 180) மௌரியப் பேரரசு வீழ்ந்தது. 

{}

விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகளை அதிகம் வலையேற்றும் சிறு முயற்சியாக இந்தப் பதிவைத் தொடர்பதிவாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். ஆகவே, விருப்பமிருக்கும் அனைவரும் "மன்னாதி மன்னன்" என்றத் தலைப்பில் தொடரலாம். பின்வரும் விதிகளை மட்டும் கவனத்தில் கொள்க! 

1) வரலாற்றில் முக்கியமான எந்த மன்னரைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்(ராணிகளைப் பற்றியும் எழுதலாம் கார்க்கி!)

2) விக்கியில் தமிழில் அதிகம் தகவல் இல்லாத மன்னராக இருக்க வேண்டும்.

3) கட்டுரையை முடித்ததும் விக்கியில் வலையேற்றவும்.

இந்தப் பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள் 

1) தமிழ்ப்பறவை - வானம் வசப்படும்
2) கார்க்கி - சாளரம்
3) ராஜூ(முன்னாள் டக்ளஸ்)
4) பிரசன்னா - கொத்து பரோட்டா
5) ஜில்லு - ஜில்தண்ணி
6) கார்த்திக் - வானவில் வீதி. 

இவர்கள் தான் என்றில்லை. விருப்பமிருக்கும் அனைவரும் ஸ்டார் மீஜிக்.


டிஸ்கி 1: இந்தப் பதிவு நிறைய பேரைச் சென்றடைய உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மணத்திலும், தமிழிஷிலும்..... 
டிஸ்கி 2: வரலாறு எப்பொழுதுமே குழப்பமானது. ஒரே புத்தகத்தில் கூட ஒரே சம்பவத்துக்கு பல்வேறு ஆண்டு சொல்லப்படும். இந்தக் கட்டுரையில் தவறேதும் இருந்து அதைத் தெரிவித்தால் தன்யனாவேன்.

July 01, 2010

புகைப்படம் - 02-07-2010

அபி


இந்தப் பூ பேரு என்னங்க?



கல்லிலே கலை வண்ணம்.

புத்தம்புது காலை...



இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..


உங்கள் மேலான கருத்துக்கள் மேம்படுத்திக்கொள்ள உதவும். Start Music!

June 30, 2010

"சூரியக்" குடும்பம்.


புளூட்டோ... பதவியிழந்த இந்த முன்னாள் கிரகத்தைப் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. புளூட்டோவிற்கு அந்தப் பெயர் கிடைத்தது சுவாரஸ்யமான சம்பவம். 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை எட்டு கோள்களே அறியப்பட்டிருந்தன. சூரியக் குடும்பத்தின் அந்த ஒன்பதாவது கிரகத்துக்கான(Planet X) தேடல் வெகுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படி இப்படியென்று 1930ல் இந்தக் கிரகம்(?) கண்டறியப்பட்டது. கிரகம் என்றால் பெயர் வைக்கவேண்டுமே! பெயர் வைக்கும் உரிமை மக்களிடமே விடப்பட்டது. உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்கள், பரிந்துரைகள் குவிந்தன. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பதினோரு வயது சிறுமியின் பரிந்துரை மிகப் பொருத்தமாக இருந்தது. அவள் சொல்லியிருந்த பெயர் "புளூட்டோ." சொல்லியிருந்த காரணம் தான் இந்தப் பெயரைத் தெரிவு செய்ய உதவியது. "சூரியக் குடும்பத்தின் எல்லாக் கோள்களும் (பூமியைத் தவிர) ரோமானிய அல்லது கிரேக்கக் கடவுளர்களின் பெயரைக் கொண்டுள்ளன. அதே போல, இந்தக் கிரகத்துக்கும் கடவுளின் பெயரை வைப்பதே சரி. இயல்பில் இருட்டு மற்றும் அதீத குளிரைக் கொண்டுள்ள இந்தக் கிரகத்துக்கு ரோம் புராணத்தின் பாதாள உலகின் கடவுளான புளூட்டோவின் பெயரே மிகப் பொருத்தமானதாக இருக்கும்" என்பதே அவள் கொடுத்திருந்த விளக்கம். இப்படியாக புளூட்டோ கிரகம் நாமகரணம் சூட்டப்பட்டது. ஓரிரு கோள்களுக்கானப் பெயர் காரணம் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் மற்றக் கோள்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளத் தூண்டியது அந்தக் கட்டுரை.

கூகிள் அண்ணாச்சியைக் கேட்டேன். மற்ற கோள்களுக்கானப் பெயர்க் காரணங்கள்.

புதன் - மெர்க்குரி -  வேகமான கிரகம். 88 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது. இறக்கைகள் கொண்ட ரோமானியக் கடவுளான மெர்க்குரியின் பெயர் வாய்த்தது. இவரது இறக்கைகள் இவரது தகப்பனாரான ஜூபிடர் அளித்ததாம். இவற்றை வைத்துக் காற்றை விட வேகமாகப் பறப்பாராம்.

வெள்ளி - வீனஸ் - பொதுவாக அனைவரும் அறிந்திருப்போம். ரோமானியக் காதல் தேவதை. அழகி. பிரகாசமான அழகியத் தோற்றத்தால் இந்தப் பெயர்.

பூமி - எர்த் -  கடவுள் பெயர் இல்லாத ஒரே கிரகம். பழங்கால ஜெர்மன்-ஆங்கிலத்தில் எர்டா என்றால் நிலம்/மண் என்று பெயர். இது மருவி எர்த் ஆனது.

செவ்வாய் - மார்ஸ் - ரோமானிய யுத்தக் கடவுள். இந்தக் கோளின் சிவப்பு நிறம் இரத்தத்தை நினைவூட்டுவதால் இந்தப் பெயர்.

வியாழன் - ஜூபிடர் - ரோமானியக் கடவுள்களின் அரசன். இந்தக் கோளின் பிரம்மாண்டத்துக்காக இந்தப் பெயர்.

சனி - சேடர்ன். - ஜுபிடரின் அப்பா. ரோமானிய லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் :). வில்லனாக மாறிய இவரது தந்தையான யுரேனஸிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்துத் தனியாக அரசாண்டார் என்று ஒரு கதை உண்டு. பிறகு இவரிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்தார் ஜுபிடர்.

யுரேனஸ் - முதலில் இங்கிலாந்து மன்னரின் நினைவாக ஜார்ஜியன் கிரகம் என்று தான் இதனை அழைத்தார்கள். பிறகு கிரேக்கக் கடவுளான ஔரானஸின் நினைவாக யுரேனஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. ஔரானஸ் சனிக் கிரகத்தின் தந்தை. சொர்க்கங்களின் கடவுள்.

நெப்டியூன் - கடல் நிறம் கொண்ட கிரகம். கடல்களின் கடவுளான (ரோமானிய) நெப்டியூனின் பெயர் சூட்டப்பட்டது.

கிரகங்கள் மட்டுமில்லாது அவற்றின் நிலாக்களுக்கும் இதே முறை பின்பற்றப்பட்டது.

தமிழ்நாட்டைச் சற்று நினைத்துப் பாருங்கள். "சூரியக்" குடும்பத்துக்கு இப்போதைய முதல்வர் பாராட்டுக் குழுவினர் பெயர் வைத்திருந்தால் என்னென்ன பெயர்கள் வைத்திருப்பார்கள்? உதாரணம் : சூரியன் - கலைஞர்.



June 16, 2010

மதிப்பெண்

இந்தத் தேர்வு முடிவுகள் வரும் நேரத்திலெல்லாம் ஒரு குழப்பம் எழுந்து அடங்கும். முடிவுகள் எல்லாம் கன்னாபின்னாவென்று இருக்கும். அதிக மதிப்பெண்கள் எதிர்பார்ப்பவர்களுக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். சில நேரத்தில் எதிராகவும் நடக்கும். எனக்குத் தெரிந்த மாணவி ஒருத்தியின் நிலைமை இது. பொதுவாக அதிக மதிப்பெண்கள் வாங்கும் பெண் அவள். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளும் நன்றாக எழுதியிருந்தாள். ஆனால் முடிவுகள் அவள் எதிர்பார்த்த மாதிரியில்லை. மதிப்பெண்கள் குறைந்திருந்தன. சந்தேகப்பட்டு விடைத்தாள் நகல் வாங்கிப் பார்த்ததில் அதிர்ச்சி. ஒரு பாடத்தில் இரண்டு விடைகள் திருத்தப்படவேயில்லை. இன்னொரு பாடத்தில், சரியான விடைக்கு மதிப்பெண்கள் தரப்படவேயில்லை. சரி மறு கூட்டலுக்கு அல்லது மறு திருத்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றால் "இருக்கிற மதிப்பெண்களும் போய்விடப்போகிறது ஜாக்கிரதை" என்கிறார்களாம் அவளது வகுப்பாசிரியை. குழப்பத்தில் இருக்கிறாள்.

இது ஒரு உதாரணம் தான். இதை மாதிரி நிறைய வகை சொதப்பல்கள் இருக்கின்றன. விடைத்தாள்கள் திருத்தும்போது தரப்படும் சம்பளம் போதவில்லையென்று ஒரு ஆசிரியை சில விடைத்தாள்களை ஒளித்து வைக்க முயன்றார் என்று கூட செய்தி வந்தது. எவ்வளவு அலட்சியம்? மாணவர்களின் எதிர்காலமல்லவா இது? இவர்களது கோபத்தைக் காட்ட யாரோ ஒரு முகம் தெரியாதவனின் எதிர்காலத்தைப் பாழடிப்பதா?

இதைப்பற்றியெல்லாம் யோசிக்கும் போது நிறைய கேள்விகள் சந்தேகங்கள் தோன்றின. ஆசிரியர்களை விட்டுவிடுங்கள். அனைவரும் அதை சேவையாகப் பார்ப்பதில்லை. தொழிலாக மாறி வெகு காலம் ஆகிறது. ஆனால் நம் கல்விமுறை? ஏன் இன்னும் இந்த மாதிரி தேர்வு முறை/மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இருக்கிறது? நிறைய பேர் ஒன்றுமே புரியாமல் மனப்பாடம் செய்தல்லவா தேர்வெழுதுகிறார்கள்? தமிழ்ப்பாடத்தில் வரும் செய்யுள்கள் கூட பொருள் புரிந்து கொண்டு படித்தால் சுவை இன்னும் கூடும். ஆனால் தாவரவியலில் வரும் ஒளிச்சேர்க்கைச் சுழற்சியையோ அல்லது இயற்பியலில் வரும் ஏதேனும் ஒரு ஆய்வையோ மனப்பாடம் செய்வதால் என்ன நன்மை இருக்க முடியும்? (நானெல்லாம் மனப்பாடம் செய்தால் தேர்வு எழுதி முடிக்கும் வரை நினைவில் இருந்தாலே பெரிய விஷயம். முடித்தவுடம் அந்தப் பாடம் இருக்கும் பகுதியை மட்டும் மூளை தானாகவே ஃபார்மெட் செய்துவிடும்.)

இன்னும் ஏன் இந்த பக்கம் பக்கமாக விடை எழுதும் முறை ஊக்குவிக்கப் படுகின்றது? நுழைவுத்தேர்வுகளில் இருப்பது போன்ற சரியான விடையைத் தேர்வு செய்யும் முறை இருந்தால் என்ன? இப்பொழுது இருக்கும் குழந்தைகள் நம்மை விட சீக்கிரம் விஷயங்களைத்(!) தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தகுந்த மாதிரி கல்வி இருக்க வேண்டாமா? இப்போது இருக்கும் முறை தான் மொழிப்பாடங்களுக்குச் சிறந்தது. பிள்ளைகளுக்கு விளக்கி எழுதும் திறமை அவசியம். அதற்கு இந்த முறை தான் சரி என்று ஒரு வாதம் இருக்கிறது. இது எந்த அளவுக்குச் சரி? மொழிப்பாடங்களுக்கு மட்டும் இந்த முறையை வைத்துக்கொள்ளக்கூடாதா? கல்வி முறை குழந்தைகளைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய கல்விமுறை அப்படி இருக்கிறதா என்ன? கல்லூரிகளில் இருப்பது போன்று பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்புகளிலேயே ப்ராஜெக்ட் செய்யவிட்டால் என்ன? பத்தாம் வகுப்பு வரை அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளட்டும்! அதற்கப்புறமாவது அவர்கள் படித்ததை உபயோகிக்கட்டும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. இப்பொழுது இருக்கும் பள்ளிக் கல்வி முறையில் ஒரு மாற்றம் செய்யும் அதிகாரம் உங்களுக்கு இருந்தால் என்ன மாற்றம் கொண்டு வருவீர்கள்?

June 09, 2010

கூத்து

                              

எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டிவிட்டார்கள். பண்டிகைக்கு ஆர்கெஸ்ட்ரா ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.  பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் தெருக்கூத்து இல்லாமல் எந்த கோவில் விழாவும் நடந்ததில்லை.  கூத்து பார்ப்பதே ஒரு தனி அனுபவம். அதிலும் பாட்டிகள் கூத்து பார்ப்பது அலாதியானது!  கூத்து ஆடபோகிறார்கள் என்றாலே பாட்டிகளுக்கு குஷி பிறந்துவிடும். எந்த ஊர் பார்ட்டி, என்ன கதை ஆடப்போகிறார்கள் என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மாலையில் சீக்கிரமே வேலைகளை முடித்துவிட்டு கூத்து பார்க்க போவதற்கு ஜமா சேர்ப்பார்கள். கூத்தாடுபவர்களை பார்த்துவிட்டால், இவரிவர் இன்னின்ன வேஷம் கட்டபோகிறார்கள் என்று யூகிப்பார்கள்.

கூத்து, பொதுவாக வெட்டவெளியில், ஏதாவது அறுவடை முடிந்த வயலில் தான் நடக்கும். ஒரு கபடி கோர்ட் மாதிரி போட்டு ஒரு பாதியை படுதா ஏதாவது வைத்து சுற்றி மறைத்து விடுவார்கள். இது வேஷம் கட்டுவற்கு. (நிறைய பேர் இந்த படுதாவை சுற்றி நின்று கொண்டு உள்ளுக்குள் வேடிக்கை பார்ப்பார்கள். அது எதற்கு என்று ஊகித்துக்கொள்ளுங்கள் :).. ). இன்னொரு பகுதி கூத்து ஆடுவதற்கு! இந்த பகுதியை சுற்றிலும் முதல் வரிசையில் இடம்பிடிக்க பாட்டிகள் மத்தியில் பலத்த போட்டி நடக்கும். அமருவதற்கு பாய் அல்லது கோணிப்பை, ஒரு போர்வை சகிதமாக கூத்து ஆரம்பிப்பதற்கு அரை மணி முன்னாலேயே வந்துவிடுவார்கள். இடம் பிடிக்க வேண்டுமே! தாத்தாகளை டபாய்த்துவிட்டு லேட்டாக வரும் பாட்டிகளுக்கு முன் வரிசை இடம் கிடப்பதில்லை. கடை போடும் பாட்டிகள் மட்டும் முன் வரிசையை விரும்புவதில்லை. சற்று தள்ளி, கூத்து பார்ப்பதற்கு ஏதுவாக தங்கள் கடையை போட்டுவிடுவார்கள். ஒரு கட்டிலில் கோணிப்பையை விரித்து, வெற்றிலை, முறுக்கு, பீடி-சிகரெட், பாக்கு வகையறாக்கள் என்று இரவு நேரத்தை தூங்காமல் கழிக்க உதவும் பொருட்களாக விற்பார்கள்.

கூத்து ஆரம்பித்தவுடன் எல்லா பாட்டிகளும் அமைதியாகிவிடுவார்கள். முதலில் வரும் கோமாளியுடன் மட்டும் பாட்டிகள் எளிதில் பழகி விடுவார்கள். கோமாளியுடன் ஏதாவது பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருப்பார்கள். சில நேரம் கோபம் வந்தால், கோமாளியை அடித்துவிடும் பாட்டிகள் கூட உண்டு. (தூங்கிகொண்டிருந்த என்னை தூக்கிக்கொண்டு போய் வேஷம் போட்டுவிட முயன்ற போது, என் பாட்டி, தான் வைத்திருந்த கோலால் கோமாளியை அடித்திருக்கிறார்). ஏதாவது சண்டை நடக்கும் கட்டம் வந்தால் சில பாட்டிகள் கதாநாயகனை உற்சாகப்படுத்துவார்கள். வசனம் சரியாக பேசவில்லை என்று நடிகர்களுடன் வாக்குவாதம் செய்யும் பாட்டிகளும் உண்டு. பொதுவாகவே எல்லோரும் தூங்காமல் கூத்தை கண்டுகளிப்பார்கள். சில பாட்டிகளுக்கு எவ்வளவு முயன்றாலும் தூக்கத்தை அடக்க முடியாது. அவர்களை எழுப்புவதற்காகவே, முகத்தில் தண்ணீர் தெளிப்பார்கள். கூத்து முடிய எவ்வளவு நேரம் ஆனாலும் பாட்டிகள் இருந்து பார்த்துவிட்டு வருவார்கள். தவசி நாடகம் என்று பாட்டிகளால் அன்போடு அழைக்கப்படும் "அர்ஜுனன் தபசு" என்ற நாடகம் அவ்வப்போது நடக்கும். இதில், மரத்தில் ஏறிக்கொள்ளும் நடிகர் (அர்ஜுனன்) விடிந்து எவ்வளவு நேரம் ஆனாலும், கழுகு கண்ணில் தென்படும் வரை இறங்கமாட்டார். கதை அப்படி! அவர் இறங்கும் வரை காத்திருந்து பார்த்து, கூத்தை சிறப்பித்துவிட்டு வருவார்கள்.

ஒரு நாடகத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை அவர்களுக்கு. பாட்டிகளுக்கு பொதுவாக இரண்டு விஷயங்கள் பிடிக்காது.

1) வழக்கமாக பெண் வேடமிடும் நடிகர், அவசரத்துக்கு ஆண் பாத்திரத்திற்கு வேடமிட்டால் பிடிப்பதில்லை.
2) பெண் வேடத்திற்கு "பணம் குத்தும்" தங்கள் வீட்டு தாத்தாக்களை சுத்தமாக பிடிப்பதில்லை.

இப்போது சுயத்தைத் தொலைத்த கிராமங்களில் நமீதாக்களும், ஸ்ரேயாக்களுமே ஊர்த்திருவிழாவில் இடம்பெறுவதால் பாட்டிகளால் கூத்து பார்க்க முடிவதில்லை. அது ஒரு ஏக்கமாகவே இருக்கிறது அவர்களுக்கு.  :(


June 06, 2010

ஃபோட்டோஷாப் - கலரடிக்கலாம் வாங்க - Color Enhancing



சில புகைப்படங்கள் கலரே தெரியாமல் மிக டல்லாக இருக்கும். கலர் கொஞ்சம் ப்ரைட்டாக இருந்திருந்திருந்தால் அந்த புகைப்படமே அழகாகியிருக்கும் என்று நினைப்பீர்கள். சரி எடுத்த பின்பு வருத்தப்பட்டு என்ன செய்வது? ஃபோட்டோஷாப் இருக்கவே இருக்கிறது.

கீழ்கண்ட இரண்டு புகைப்படங்களைப் பாருங்கள். முதல் படம் கொஞ்சம் வெளிறிப்போய் இருப்பதாக நினைத்தேன். சூர்யாஸ்தமனம் ஃபீல் கொடுக்க இன்னும் சிவந்த வானம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஃபோட்டோஷாப் உதவியுடன் இரண்டாவது படம் கிடைத்தது.





இதை எப்படிச் செய்வது?

1) படத்தை PS ல் திறங்கள்.

2) படத்தை Lab Color Mode க்கு மாற்றிக்கொள்ளுங்கள் Image > Mode > Lab Color

3) புதிய Curves Adjuastment Layer ஐத் திறந்து கொள்ளுங்கள். Layer > New Adjustment Layer > Curves

4) New Layer பெட்டியில் ஒ.கே கொடுத்தால் Curves பெட்டி திறக்கும். பொதுவாக Curves 4 x 4 கட்டங்களாக இருக்கும். ஆனால் நமக்கு 10 x 10 கட்டங்கள் தேவை. அதனால் Alt ஐ அழுத்திக்கொண்டே Curves மீது க்ளிக் செய்யுங்கள். 10 x 10 கட்டங்கள் திறக்கும்.

5) இனி தான் கலர் கரெக்டிங்க். Curves பெட்டியில் Channel ல் Lightness தெரிவாகியிருக்கும். அதற்குப் பதிலாக A Channel ஐ தெரிவு செய்யவும். நேராக இருக்கும் கர்வின் இடது கீழ் முனையை இரு கட்டங்கள் வலது பக்கம் தள்ளுங்கள். அதே போல வலது மேல் முனை இரு கட்டங்கள் இடப்பக்கம்...



6) இதே போல B Channel க்கும் செய்யுங்கள். கலர் கன்னாபின்னாவென்று அதிகமாகியிருக்கும். கலர் ரொம்ப அதிகமாகியிருந்தால் Opacity அளவைக் குறைத்துக் கொள்ளவும். படத்தை ஆர்.ஜி.பி க்கு மாற்றிக் கொள்ளலாம்.

Hope Its Good! 

June 01, 2010

ஐயைய்யோ பதிவுலகம்.


சில நாட்களாக இந்த தமிழ்ப் பதிவுலகம் முழுக்க ஒரே கூச்சல் குழப்பம். ஊரே அவசரமாகப் பஞ்சாயத்துக்கு ஒடிக் கொண்டிருக்கும்போது நமக்கு மட்டும் காரணம் புரியவில்லையென்றால் எப்படி இருக்கும்? அந்த மன நிலையில் தான் இருந்தேன். என்ன நடக்கிறது என்று ஒரு எழவும் புரியவில்லை. ஆஃபீஸ் லீவ் போட்டு விட்டு அங்கே தேடி இங்கே தேடி சில பல பதிவுகளைப் படித்து ஒரு வழியாகப் பிரச்சனை புரிவதற்குள் இன்னும் பல பதிவுகள். எல்லாப் பதிவுகளின் சாராம்சம் இது தான்... 

நர்சிம் செய்தது பாதகம், இல்லையில்லை முல்லை தான் ஆரம்பித்தார்கள். அட..... ரெண்டு பேர் மேலேயும் தப்பிருக்கப்பா! நோ நோ.... நடுநிலை என்பது அயோக்கியத் தனம்... ஒரு பக்கச் சார்பாகப் பேசியே ஆக வேண்டும். தவிர நடுநிலையாகப் பேசினால் நாட்டாமையாமே? சரி அமைதியாக இருந்து தொலைக்கலாம் என்றால், பதிவர்கள் எப்படி அமைதியாக இருக்கலாம்....? கருத்து சொல்லியே ஆக வேண்டும். அவ்வளவு சொரணை கெட்டவர்களா நம்மவர்கள்? சரி விடுங்க. ரெண்டு பேரும் பேசித் தீர்த்துக்கொள்ளட்டும். அதெப்படி? இது பொது வெளி, விவாதத்திற்கு வந்தால் எல்லோரும் பேசத்தான் செய்வார்கள். ஒன்று மட்டும் புரிகிறது. ஏதாச்சும் செய்யணும் பாஸ்! 

அதனால் ஒன்றும் சொல்லாமல் விட்டால் ஊரை விட்டே ஒதுக்கு வைக்கப்படும் அபாயத்திலிருப்பதால் கிராமப்புறங்களில் நடப்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எங்கள் ஊரிலெல்லாம் சர்வசாதாரணமாக சண்டை நடக்கும். இங்கு நடந்ததை விட அசிங்கமான வார்த்தைப்பிரயோகங்கள் இருக்கும். மிகத் தரம் தாழ்ந்த வார்த்தைகள். மேல் சாதி - கீழ் சாதி, ஆண் - பெண். இப்படி வகை தொகை தெரியாமல் சண்டை நடக்கும். உணர்ச்சி வசத்தில் வந்து விழும் வார்த்தைகள் அவை. ஆனால் அவையெல்லாம் ஆணாதிக்கம் என்றோ சாதி வெறி என்றோ முத்திரை குத்தப்படுவதில்லை. சில மாதங்களிலேயே அடித்துக்கொண்ட இருவரும் பட்டும் படாமலும் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். நாம் படித்தவர்கள்! 

அதே போல் இந்தப் பிரச்சனையும் தீரும் என்ற நம்பிக்கையுடன், ஒருவேளை சண்டையிட்டுக்கொள்ளும் இருவரும் தங்களது கசப்புகளையெல்லாம் மறந்து (அட.. ஒரு வாதத்துக்காவது வைத்துக்கொள்ளுங்களேன்.) சமாதானமாக முன்வந்தால், வரிந்து கட்டி வக்காலத்து வாங்கிய நாமெல்லாம் நமது முகத்தை எங்கே வைத்துக்கொள்ளலாம் என்ற சந்தேகத்தையும் முன்வைக்கிறேன். மன்னிப்பதும் மறப்பதும் மனித இயல்புதானே?

இந்தப் பிரச்சனையில் ஐஃபா அழைப்பை நமீதா ஏற்க மறுத்த சரித்திரப் புகழ் வாய்ந்த செய்தியைக் கவனிக்க மறந்துவிட்டிருக்கிறோம் என்பதையும் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

டிஸ்கி : பதினெட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்துப் பண்ணும் நாட்டாமையின் பேரனாக்கும் நான்!

May 27, 2010

தேவதை - Skin Smoothening Technique.

நிறைய குழந்தைகளின் படங்களைப் பார்த்திருப்பீர்கள். சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கும்.

உதாரணத்துக்கு இந்தப் படத்தைப் பாருங்கள்.

இதன் ஒரிஜினல் வடிவம் இது.


சரி இந்த Effect எப்படிக் கொண்டு வருவது...?

1)  படத்தை PS ல் திறக்கவும்.(கருப்பு வெள்ளையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.)

2)  பின்னணி லேயரை நகலெடுத்துக்கொள்ளவும்.

3) Blending Mode ஐ Overlay க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

4) Image > Adjustments > Invert. இதன் மூலம் படத்தை பின்னணி லேயரை இன்வெர்ட் செய்து கொள்ளுங்கள். 

5) இனி Smoothen செய்யும் நேரம். Filter > Other > High Pass இதைச் செய்யும். High Pass Radius அளவை மாற்றி விளையாடுங்கள். பொதுவாக 25 முதல் 50 வரையில் நன்றாக் இருக்கும்,

6) இந்த முறையில் படத்தின் எல்லா இடங்களிலும் Smoothen ஆகியிருக்கும். அதனால் ஒரு லேயர் மாஸ்க்கை உபயோகித்துத் தேவை இல்லாத இடங்களில்(முக்கியமாக கண்) இந்த effect ஐ நீக்கி விடலாம். அவ்வளவுதான்!

May 17, 2010

அரட்டை - 18-5-2010

ஆக்ஸிமொரான் தெரியுமல்லவா? தமிழில் முரண்தொடை என்பார்கள்(எச்சூஸ்மி மிஸ்டர் ராஜு... "கிரண் தொடை தெரியும். அதென்ன முரண்தொடை" என்று கேட்கக்கூடாது!).  ஒன்றுக்கொன்று எதிரான பொருள் கொண்ட இரு வார்த்தைகள் ஒன்றாக வந்து ஒரு பொருளைத் தருவது. உதாரணத்துக்கு, ‍நடைபிணம். தின வாழ்க்கையில் நாமும் நிறைய உபயோகித்திருப்போம். இயல்பான நடிப்பு, சிறிய கூட்டம், முழுதாய் காலி, வெட்டிவேலை, தெளிவாக் குழப்பிட்டான், சற்றே அதிகம்... இப்படி நிறைய. செய்யுளெல்லாம் கூட‌ இருக்கிற‌தாம். சினிமா பாட்டுக்கள் கூட! வாச‌மில்லா ம‌ல‌ரிது நினைவிருக்கிற‌தா?

ஆனால் நம் ஆதி அவர்களைக் கேட்டால் உலகிலேயே சிறந்த முரண்தொடை "Happily Married" தான் என்பார்... :)

{}

செம்மொழியான தமிழ்மொழியாம் - கேட்டீர்களா? செம்மொழி மாநாட்டுப்பாடல். கலைஞரின் கவிதை வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் ரஹ்மான்.

டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசிலா, ரஹ்மான், அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, ஹரிஹரன், கார்த்திக், சின்மயி, பென்னி தயள், நித்யஸ்ரீ, நரேஷ் அய்யர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, பிளாசி என‌ முப்ப‌து பேர் பாடியிருக்கிறார்க‌ள் ஆறு நிமிட‌ப் பாட‌லை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர்
யாதும் ஊரே யாவரும் கேளிர். என்று ஆரம்பிக்கிறது பாடல். நிறைய முறை கேட்டால் தான் புரிகிறது. 


அகமென்றும் புறமென்றும்
வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதியந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி ‍- ஆகா!

பிளாசியும் ஸ்ருதியும் சேர்ந்து "கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்" என்று பாடுவது செம க்யூட். 

ரஹ்மானுக்கு நன்றிகள்! ராவணன் பாடல்கள் கூட இப்படிக் கவரவில்லை. :)

{}

குஷ்பூ தி.மு.க வில் சேர்ந்தாயிற்று. இனி சுந்தர்.சி நடிக்கும் படங்களுக்கு ரஹ்மான் இசையமைக்கக்கூடும்... என்ன கொடும குஷ்பூ இது?

{}

பிட் குழுவினரின் சூரிய உதயம்/அஸ்தமனம் போட்டிக்கு நானும் ரௌடிதான் என்ற ரேஞ்சுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தேன். 
அவர்களும் எடுத்துக்கொண்டார்கள். அது.. 



May 16, 2010

கருப்பு வெள்ளை - 1

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச சமம் என்பார்கள். அதிலும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் இன்னும் ஒரு படி மேல்! ஆனால் என்னதான் Grayscale/Monochrome மோடில் குமுறக் குமுற படம் எடுத்தாலும் சில சமயம் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதில்லை. அதற்குத் தீர்வு Post Processing தான். ஒரு வண்ணப் புகைப்படத்தைக் கருப்பு வெள்ளைக்கு மாற்ற நிறைய முறைகள் இருக்கின்றன. Channel Mixer, Adjustment Layer என்று பல வழிகளில் கருப்பு வெள்ளைக்கு மாற்றலாம். இன்னொரு முறை இருக்கிறது. இந்த முறை புகைப்படத்தின் வெளிச்ச அளவை அடிப்படையாகக் கொண்டது. நல்ல ரிசல்ட் தருகிறது. இதற்கு Gorman-Holbert முறை என்று பெயர்.

பின்வரும் படத்தை இந்த முறையில் மாற்றிப் பார்க்கலாம்.


1) படத்தை PS ல் திறவுங்கள்.

2) Lab Color Mode க்கு மாற்றுங்கள். Image > Mode > lab Color.

3) Chanel Palette க்குச் சென்று Lightness Chanel ஐ மட்டும் செலக்ட் செய்யுங்கள்.


4) இப்போது படத்தை Grayscale க்கு மாற்றுங்கள். Image > Mode > GrayScale. a மற்றும் b Chanel களை விட்டுவிடுங்கள்.


5) Ctrl கீயை Press செய்து கொண்டே Gray Channel மீது Click செய்யுங்கள். படத்தின் Bright Pixel எல்லாம் தேர்வு செய்யப்பட்டிருக்கும். Select > Inverse மூலம் Dark Pixel களைத் தெரிவு செய்து கொள்ளலாம்.

6) படத்தை RGB க்கு மாற்றிக்கொள்ளுங்கள். Image > Mode > RGB Color.

7) Layer Palette சென்று New Solid Color Layer Create செய்யுங்கள். ஏதாவது ஒரு கலரைத் தேர்ந்தெடுக்கலாம்.


8) Solid Color Layer ன் Blend Mode ஐ Multiply க்கு மாற்றுங்கள்.

9) Shift + Ctrl + Alt + E சேர்த்து அமுக்கி, இதுவரை செய்த மாற்றங்களையெல்லாம் புதிய லேயருக்கு மாற்றிவிடலாம்.

10) Blend Mode ஐ Overlay க்கு மாற்றுங்கள். Opacity ஐ 15 லிருந்து 25 வரை வைக்கவும்.

11) Filter > Other . Highpass ல் Radius ஐ உங்களுக்குப் பிடித்தவாறு மாற்றவும்.

12) இப்போது Layer > Flatten Image மூலம் இரண்டு லேயர்களையும் ஒன்றாக்கிக் கொள்ளுங்கள்.

மாற்றிய பின் கிடைத்த படம்!



இந்த முறை முழுக்க முழுக்க படத்தின் Brightness ஐ அடிப்படையாகக் கொண்டது. அதிக Contrast உள்ளப் புகைப்படங்களுக்கு மற்றும் Portrait களுக்கு இது மிகவும் ஏற்றது. இந்த முறை எல்லாப் புகைப்படங்களையும் ஒரே மாதிரி தான் மாற்றுகிறது. Still Its Good!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More