May 09, 2009

கலைஞரின் கதி என்ன?

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் எந்த காயும் எப்படியும் நகரும். எந்த கட்சியும் எப்பொழுது வேண்டுமானாலும் கூட்டணி மாறும். அப்படித் தான் இருக்கிறது இன்றைய நிலையும். ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஷீலா தீக்ஷித் ஆகியோர், தேர்தலுக்குப் பின் அமையவிருப்பது தான் உண்மையான கூட்டணி என்று கூறி வருகிறார்கள். அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இல்லை, இருந்தா நல்லா இருக்கும் என்ற தசாவதாரம் டைப் அறிக்கைகள் கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகளை தெளிவுபடுத்துகின்றன. தேர்தல் பிரச்சாரங்களில் கலைஞரை வறுத்து எடுக்கும் அம்மாவும் காங்கிரஸ் பற்றி பெரிதாக எதுவும் சொல்வதில்லை. 

கிராமப்புறங்களிலும், இணையம் நுழையாத சிறு நகரங்களிலும் ஈழப் பிரச்சனை அதிகம் அறியப்படாமல் இருந்தது. அதை, திடீர் ஈழத்து நாயகி அவதாரம் எடுத்த அம்மா பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, அழகாக ஓட்டு வேட்டையாடி வருகிறார். கலைஞர் எதிர்ப்பு வாக்குகள் வேறு அம்மாவுக்கு விழும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காரணங்களால் இந்த தேர்தலில் ஒருவேளை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு குறைவான தொகுதிகள் கிடைத்து, அ.தி.மு.கவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு அம்மா தயவு தேவைப்படலாம். அப்போது காங்கிரஸ் காற்று திசை மாறி வீசக்கூடும். தமிழ்க்குடிதாங்கி அய்யா வேறு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் என சூசகமாகக் கூறி புளியைக் கரைத்து வருகிறார். அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் இதுவும் சாத்தியமே! 

எது எப்படியோ! இந்த கூட்டணி மட்டும் அமைந்தால் கலைஞரின் நிலை தான் பரிதாபத்திற்குள்ளாகப் போகிறது. காங்கிரஸ் என்ற அரசனை நம்பி தமிழ்நாடு என்ற புருஷனை கைவிட்டது போல... அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை - இது கலைஞர் சொன்னது தான். அந்த வார்த்தைகள் அவருக்கே ரிவீட் அடிக்கும் நிலையில் இருக்கிறது. 

கூட்டணி விசுவாசம் காட்டிய கலைஞருக்கு பதில் மரியாதை செய்யுமா காங்கிரஸ் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

May 03, 2009

பசங்க - பட்டைய கெளப்புறாங்க!


இரத்தத்தையும், இடுப்புச்சதையையும் நம்பாமல் பிள்ளைப்பருவ சுகதுக்கங்களை மட்டுமே படமாக்கத்துணிந்த இயக்குனர் பாண்டிராஜ், தயாரித்த இயக்குனர் சசிகுமார் ஆகியோருக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான சில்லுவண்டித்தனமான மோதல்கள் தான் படத்தின் கதை. அனேகமாக எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெற்று இருக்கும். 

ஜீவா, பக்கடா, குட்டி மணி ஆகிய மூவரும் உள்ளூர் தாதாக்கள். மூவரும் ஆறாம் வகுப்பு படிப்பவர்கள். இவர்களுக்கு பயந்து போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அளவிற்கு டெரரான ஆட்கள். "இவர்களை அடக்க ஒருவன் வராமலா போய்டுவான்? " என்று ஒரு பெருசு சொல்லும்போது நாயகன் (அன்புக்கரசு I.A.S -  I.A.S ஆகணுமாம்! )  அறிமுகம், அதுவும் வேட்டையாடு விளையாடு ரேஞ்சில் ஒரு அறிமுகப் பாடலுடன்! பக்கத்து ஊரிலிருந்து ஜீவாவின் எதிர் வீட்டிற்கு குடிவரும் குடும்பத்தின் மூத்த பையன். 

முதல் நாள் பள்ளிக்குச் செல்லும்போதே அன்புவுக்கும் ஜீவாவுக்கும் மோதல் ஆரம்பிக்கிறது. ஜீவாவை வீழ்த்திவிடுகிறான் அன்பு. அதனால் அன்புவை தங்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாகவே நினைக்கிறார்கள் ஜீவா & கோவால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்கள். நிரம்பவும் டென்ஷனாகிறான் ஜீவா(இது அவரே சொல்றதுங்க!).போதாக்குறைக்கு ஜீவாவின் அத்தை மகள் மனோன்மணி அன்புவுடன் தோழியாகிவிடுகிறாள். கேட்கவும் வேண்டுமா? கூடத்திரியும் குட்டி ஸ்ரீமன்கள் வேறு (இப்ப இவர் தானே வில்லனுக்கு சைடு? ) ஜீவாவை ஏத்திவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் பயபுள்ள வன்மம் வைத்துக்கொண்டே திரிகிறது. 

இவர்களின் ரகளை குடும்பச்சண்டையாக மாறுகிறது. இதனிடையே வில்லனின்(?) அக்காவும், நாயகனின் சித்தப்பாவும் காதலிக்கிறார்கள். இறுதி வரை இரண்டு வானரக்கூட்டங்களும் அடித்துக்கொள்கின்றன. கடைசியாக ஒன்று சேர்ந்து, இரு குடும்பங்களும் ராசியாகி, காதல் கைகூடி சுபம். முதல் பாதி முழுக்க பிள்ளைகளின் சேட்டைகளைச் சொன்ன இயக்குனர், பின் பாதியில் நாம் புரிந்து கொள்ளாத அவர்களின் வலியையும் தொட்டுச் செல்கிறார். அதனால் பெரியவகளுக்கும் இருக்கு ஆப்பு.

நாயகனைப் பழிவாங்க, கருநாக்கு கொண்ட மாணவனிடம் காசு கொடுத்து சாபம் விடச் சொல்வது, தேனை அவன் தலையில் தேய்க்க முயல்வது,  ஐம்பது ஸ்டாம்ப் பந்தயமாக வைப்பது, போட்டி போட்டுக்கொண்டு படிப்பது, மாதத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் என எண்ணுவது என்று பள்ளிக்கால நினைவுகளை எழுப்புகிறார் இயக்குனர். எனக்கு பாடம்சொல்லித்தந்த மாரிமுத்து சாரும், சாந்தஜோதி டீச்சரும், உடன் படித்த அழகுதுரையும், தாமரைச்செல்வியும் நினைவுக்கு வருகிறார்கள். 

படத்தின் ஊடே வரும் அந்த காதல், ஒரு அழகிய மெலடி. வில்லனின் அக்கா சோபிக்கண்ணுவாக சரோஜா பட புகழ் வேகா. நாயகனின் சித்தப்பா மீனாட்சி சுந்தரமாக விமல். இருவரும் அழகாகச் செய்திருக்கிறார்கள். பெரியவர்கள் ஓகே ரகம்.

படத்தில் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் பாடியிருக்கிறார்கள். மற்றபடி பாடல்களும் பிண்ணனி இசையும் சுமார் ரகம். சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு ரொம்ப எதிர்பார்த்தோம் ஜேம்ஸ் சார்! ஒளிப்பதிவு,  மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் உறுத்தாத வகையில் இருந்தன. உண்மையில் அவற்றை கவனிக்க நேரம் கொடுத்திருக்கமாட்டார் இயக்குனர்.

இறுதிக்காட்சி ஊகிக்கக்கூடியதாக இருந்தது, டாக்டர் "ஏதாவது பேசுங்க" என்றதும் அரங்கத்தில் எல்லோரும் கைத்தட்ட ஆரம்பித்துவிட்டார்கள். :) மருத்துவமனையில் ஒரு ஊரே நின்று கைத்தட்டிகொண்டிருக்கும். அடப்பாவிங்களா! சில காட்சிகள் சினிமாத்தனமாக இருந்ததை மட்டும் தவிர்த்திருக்கலாம். மற்றபடி ஒவ்வொரு காட்சியும் அமர்க்களம்.

ஜீவா, பக்கடா, குட்டி மணி, அன்பு, மனோன்மணி, மங்களம் (அப்பத்தா) ஆகிய "பசங்க"ளுக்கு அன்பு முத்தங்கள். (வேகாவையும் பசங்க லிஸ்ட்ல சேர்த்துக்கலாமே? ப்ளீஸ்...) இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் மீண்டும் பாராட்டுக்கள்!

ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் நினவுகளை தூசி தட்டி எடுக்கும் கதைகள் கண்டிப்பாக வெற்றி பெறும். அந்தவகையில் இதுவும் ஒருவெற்றிப்படம். 

படங்கள் நன்றி : Indiaglitz

May 01, 2009

பத்மஸ்ரீ விவேக்


குரு என் ஆளு - மாதவன், அப்பாஸ், விவேக், மம்தா மோகன்தாஸ், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்த படம். இந்த படத்தைப் பற்றி பெரிதாகச் சொல்ல எதுவும் இல்லை. ஆனால் இந்த படத்தின் இடம்பெற்ற விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகள் துணுக்குறச் செய்தன. முக்கால்வாசி படத்தில் சரோஜாதேவி கெட்டப், ஸ்ரேயா கெட்டப் என்று பெண் வேடமிட்டு நடித்திருப்பார். ஆண் வேடம், பெண் வேடம் இரண்டிலும் இரட்டை அர்த்த வசனங்களில் புகுந்து விளையாடியிருப்பார். பெண் வேடமிட்டுருந்ததையே பார்க்க முடியவில்லை. அதில் அந்த மாதிரி வசனங்கள் வேறு! படிக்காதவன் படத்திலும் இதே போல தான். ஆரம்ப காட்சிகளில் ஒழுங்காக நடித்துவிட்டு இறுதிக்காட்சியில் எல்லாவற்றையும் மொத்தமாக போட்டு உடைத்திருப்பார். ஆனால் இந்த படத்தில் ஆரம்பம் முதலே ஒரே மாதிரி தான். இவருடன் சேர்ந்து சிரிப்பு காட்ட சோனா, ஷர்மிலி என்று இருவர். கேட்கவும் வேண்டுமா? போதாக்குறைக்கு இறுதியாக மெசேஜ் வேறு. "ஒரு பொண்ண காதலிக்கறதுக்கு முன்னாடி, அவ மொதல்ல பொண்ணானு தெரிஞ்சிக்குங்க". முடியல... :( ஒரு அளவு வேண்டாமா ?

மின்னலே, ரன், சாமி, காதல் சடுகுடு போன்ற தரமான காமெடிகளைத் தந்தவரிடமிருந்து இந்த மாதிரி வருவது சகிக்க முடியவில்லை. நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது "என்னங்க இது, பத்மஸ்ரீ விருது வாங்கினவர் இப்படியா நடிப்பது?"  என்ற பேச்சு வந்தது. அவர் சினிமாத்துறையச் சேர்ந்தவர். "அவரை சொல்லி என்ன செய்வது? அவருக்கு வாய்க்கும் வேடங்கள் அப்படி" என்றார்.உண்மையாகத் தான் தோன்றியது. என்ன தான் தன் காமெடி ட்ராக்கை தானே எழுதிக்கொண்டாலும் இயக்குனர் ஒத்துக்கொள்ள வேண்டும். தவிர இயக்குனர்கள் எழுதும் ட்ராக் அவ்வாறு இருந்தால் என்ன செய்வது? அவ்வாறு நடிக்க முடியாது என்று சொன்னால் அதை செய்ய இன்னொருவர் காத்திருப்பார். வரும் வாய்ப்புகளை விட்டுவிட்டால் வருமானத்திற்கு என்ன செய்ய? 

ஒன்று மட்டும் உண்மை. ஒரு திறமையான கலைஞனை வீணடிக்கிறது கோலிவுட். அதே சமயம், விவேக்கும் வடிவேலுவுடனான போட்டி மனப்பான்மையை விட்டுவிட்டு தரமான காமெடிகளைத் தர முன்வரவேண்டும். பார்க்கலாம்! 

April 28, 2009

நன்றி நன்றி நன்றி!!!

இன்று யதேச்சையாக மின்னஞ்சல் பார்த்த போது தான் இரண்டு பின்னூட்டங்கள் வந்திருப்பது தெரிந்தது. யாரது நம்ம பதிவுக்கு இவ்வளவு நாள் கழித்து பின்னூட்டியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே மின்னஞ்சலைத் திறந்தேன். ஆனந்த அதிர்ச்சி(கள்)! 


பதிவர் லவ்டேல் மேடி அவர்கள் தனது பட்டாம்பூச்சி விருதினை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். "என்னையும் நம்பி..." வசனம் தான் நினைவுக்கு வந்தது. லவ்டேல் மேடி அவர்களுக்கு நன்றி. 

அடுத்த பின்னூட்டம் கிருஷ்ண பிரபு அவர்களிடமிருந்து. வலைச்சரத்தில் அறிமுகப் பதிவராக என் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்றார். ஆம்! பதிவர் அப்பாவி முரு அவர்கள் தனக்குப் பிடித்த பதிவுகளில் ஒன்றாக் எனது பதிவையும் அறிமுகப் படுத்தியிருந்தார். அப்பாவி முரு அவர்களுக்கு நன்றி.

இவர்களின் அங்கீகாரங்கள் மேலும் (ஒழுங்காக..:) ) எழுத உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

விருதளித்த லவ்டேல் மேடி,  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அப்பாவி முரு, தெரியப்படுத்திய கிருஷ்ண பிரபு ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாசித்தும், பின்னூட்டியும் ஊக்கமளித்த அனைத்து நல்லியதயங்களுக்கும் எனது நன்றிகள்!

{}

சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அது இரட்டிப்பாகிறது. அதுவும் அங்கீகாரத்துடன் கூடிய சந்தோஷத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதனால், இந்த பட்டாம்பூச்சி விருதையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் நண்பர் தமிழ்ப்பறவை அவர்களுடன்.

April 24, 2009

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இலங்கை அரசை கோர வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை மறுபடியும் மத்திய அரசு அனுப்பியிருந்தது. எதற்காக? மத்திய அரசின் கவலையை இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லவாம்! தமிழனின் கவலையைச் சொல்ல ஒரு தமிழன் தூதுவனாக கிடைக்கவில்லையா? ஆனால் தமிழ்ப் பிரதிநிதிகளையும் அனுப்ப பயமாகத்தானிருக்கிறது! ஏனென்றால்,

* இங்கே முதலைக் கண்ணீர் சிந்தி கவிதை வடிப்பதும், மத்தியில் பம்முவதுமாய் மக்களை ஏய்த்தவர்களல்லவா நாம்?

* எம்.பிகள் அனைவரும் ராஜினாமா என்று பூச்சாண்டி காட்டி ஒரு சில நாட்களிலேயே அடங்கிப் போனவர்கள் தானே நாம்?

* ஆதரவாக இருப்போம் என்று தமிழர்கள் எதிர்பார்த்த நிலையில் "என்னால் சொல்லத் தான் முடியும்" என்று மனசாட்சியே இல்லாமல் பதிலிறுத்தவர்கள் அல்லவா நாம்?

* தமிழுணர்வு பேசியவர்களை, மத்தியை மகிழ்விப்பதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு கைது செய்தவர்கள் தாமே நாம்? 

* தேர்தல் நெருங்க நெருங்க, ஈழத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டிக்கொள்வதும், ஈழ மக்கள் ஆதரவிற்காக வேலை நிறுத்தம் செய்வதும், ஆனால் மதுக்கடைகளிலும், ஊடகங்களிலும் வேசித்தனமாக திருவிழா கொண்டாட்டங்கள் நடத்துவதுமாக போராடுபவர்கள் அல்லவா நாம்?  

* போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொல்லி திடீர் ஞானோதயமாக உண்ணாநிலை அறிவித்தவர்கள் அல்லவா நாம்?

* வாரிசின் பதவியைக் காப்பாற்ற, அங்கு ஆட்சியில் பங்கு வைத்துக் கொண்டே இங்கு அதை எதிர்த்த சிறந்த பொதுநலவாதிகளல்லவா நாம்? 

* ஈழ ஆதரவும் உண்டு, அதே சமயம் நான்கு சீட் ஐந்து சீட் என்ற பேரமும் உண்டு என்று இரட்டை வேடம் பூண்ட மாபெரும் தமிழ் உணர்வாளர்கள் அல்லவா நாம்?

* எந்த கட்சியை பூண்டோடு ஒழிப்போம் என்று சபதம் போட்டோமோ அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும் தன்மானத் தமிழர்களல்லவா நாம்?

* மூன்றாவது சக்தியாக இருப்போம் என்ற நிலையில், மூச்சுக் கூட காட்டாமல் பதுங்கியிருந்த மாவீரர்களல்லவா நாம்? 

எப்படி அனுப்புவது?

காவிரிப் பிரச்சனைக்கு கூட ஒன்று சேர வேண்டாம். சொந்த இனம் செத்துக் கொண்டிருக்கும் போது கூடவா ஒன்று சேர முடியவில்லை? அப்படி என்ன தான் சாதிக்கப் போகிறீர்கள்? பாரத ரத்னா விருதா? ஆட்சிக் கட்டிலா? இல்லை கடற்கரையில் கல்லறையா? எதுவாக இருந்தாலும் வாரித்தருகிறோம். எங்களவர்களைக் காப்பாற்றுங்கள்!

April 22, 2009

பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் :)))

என் அண்ணன் மகள் திவ்யஸ்ரீயும், மாமா மகள் ஜீவிகாவும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். திவ்யாவிடம் "கண்ணு, ஜீவிகா அக்காவுக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்" என்றேன். திவ்யா முத்தம் கொடுக்கப்போகும்போது, ஜீவிகாவும் அவளைத் தான் சொல்கிறேன் என்று எண்ணிக்கொண்டு முத்தம் கொடுக்கப் போக... இந்த அழகிய காட்சியை நீங்களேபாருங்களேன்.


 

கொசுறு: 

ஜீவிகா மேடம் கரும்பு சாப்டறாங்க.



பின்நவீனத்துவ பிறந்தநாளும் இன்ன பிறவும்!

வெள்ளிக்கிழமை மதியம் மட்டும் அலுவலகத்திலிருந்து பொன்னுசாமிக்கு (சோழிங்கநல்லூர்) போய் சாப்பிடுவது வழக்கம். அப்படி போன வாரம் சென்று திரும்பும் போது வழியில் கண்ட ஒரு காட்சி மனதை உருக்கியது. ஒரு உணகவகத்தின் பெயர்ப் பலகையை கையில் பிடித்துக்கொண்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார் அதன் காவலாளி. எப்படியும் அவருக்கு அறுபது வயதிற்கும் மேலிருக்கும். சென்னையின் வெயிலைப் பற்றி வேறு சொல்லவே தேவையில்லை. அந்த உச்சி வெயிலில் பெயர்ப்பலகையை கையில் ஏந்தியபடி வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார் பெரியவர். பெயர்பலகையைக் கூட பொருத்த துப்பில்லாத அந்த கடை முதலாளிக்கு கிருமிபோஜனம் தான் என்று மனதார சபித்துகொண்டே வந்தோம்!

{}
 
நேற்று நண்பன் பரணிக்கு பிறந்த நாள். கொண்டாட்டங்கள் (?) அனைத்தும் வழமையான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் அஹிம்சை முறையில் நடந்து முடிந்தன.  எங்கள் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு என தனி வரைமுறைகள் இருக்கின்றன. பிறந்தநாள் கொண்டாடுபவனை கை கால்களை பின்புறம் கட்டி மண்ணில் போட்டு உதைக்க வேண்டும். உள்ளாடை நீங்கலாக மற்ற அனைத்தையும் கழற்றிவிட்டு அடி போட வேண்டும். துப்பாக்கி கழுவ வைத்திருக்கும் எண்ணெய் உட்பட கையில் கிடைக்கும் திரவங்கள் அனைத்தையும் வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். எங்கள் வகுப்பு பெண்கள் யாராவது ஒருவருக்கு தொ(ல்)லைபேசி காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள். கிட்டத்தட்ட இப்படி இருக்கும் 
 


இப்படி வழமையான நெறிமுறைகளை மீறி, சுய முரண்பாடுகளுடன் (எங்களுக்கு) கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழாவை பின் நவீனத்துவ பிறந்தநாள் என்றே கருதுகிறோம். :)

நோ நோ! இதுக்கெல்லாம் எதுக்கு கட்டைய தூக்குறீங்க? 

{}
மரியாதை திரைப்படத்தின் இந்த படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஒன்றுதோன்றியது.

{}

நியூட்டனோட தங்கமணி ஒருநாள் அவர்கிட்ட கேட்டாங்களாம் "ஏங்க, நான் எப்படி இருக்கேன்?" அப்படின்னு.

அதுக்கு அவர் சொன்னாராம்.  Tan C / Sin C

தங்க்ஸ்: அப்படின்னா ?

நியூட்டன் : Tan C / Sin C     =    (Sin C / Cos C)  / Sin C =   1/Cos C = Sec C

செக்சி!!!

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! 

குறிப்பு : எஸ் எம் எஸ்ஸில் வந்தது. திரிகோணவியல் அறிந்திராத நண்பர்கள் மன்னிக்க!

*****

April 19, 2009

இவிங்க எப்பவுமே இப்படித்தான்!!!

கல்லூரி இறுதி ஆண்டு. சேகர் தன் சொந்த ஊரில்(கரூர் அருகே ஓரு கிராமம்) திருவிழா என்று விருந்துக்கு அழைத்திருந்தான். விருந்து வெள்ளிக்கிழமை. அதே நாளில் Environmental Science தேர்வு வேறு இருந்தது. செமஸ்டர் தேர்வு இல்லையென்றாலும் இதன் மதிப்பெண்களை வைத்து தான் இன்டெர்னல் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். திருவிழாவா, மதிப்பெண்களா என்று யோசித்துப் பார்த்ததில் திருவிழாவும் அது சார்ந்த மகிழ்ச்சிகளுமே வென்றன. சரவணா, மணி, பரணி, தமிழ் மற்றும் நான் அடங்கிய குழு, சேகர் தலைமையில் புதனன்று மாலையே சேலத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கியது. எட்டு மணிவாக்கில் கரூர் வந்தடைந்தோம். சேகர் தங்கையும் அவள் கல்லூரியில் இருந்து கரூர் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். அனைவரும் சேகர் அப்பா காரில் அவர்கள் ஊருக்கு செல்வதென்று ஏற்பாடு. வந்தவர் சும்மா இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. "சாப்டீங்களா? " என்று கேட்டார். ஏன் அந்த வார்த்தையை கேட்டோம் என்று அவர் நிறைய தடவை வருத்தப்பட்டிருப்பார். நாங்கள் "இன்னும் இல்லை" என்றதும் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு தான் ஆரம்பித்தது எல்லாம்!

சூப் முதல் ஜூஸ் வரை ஒன்று விடாமல் கலந்து கட்டி அடித்தோம். பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த சேகரின் தங்கை எங்களை பார்த்த பார்வை மகா கேவலமாக இருந்தது. "விடுங்க பாஸ்! இவிங்க எப்பவுமே இப்படித்தான்" என்று நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேலையைத் தொடர்ந்தோம். ஒருவழியாக சாப்பிட்டு முடித்து கிளம்பி அவன் வீட்டை அடைந்தோம். அவன் அம்மா தான் வரவேற்றார். அவன் அப்பா செய்த அதே தப்பை அம்மாவும் செய்தார். "இட்லி வச்சிருக்கேன். சாப்டுங்கப்பா!". இந்த வார்த்தை போதாதா ? அடுத்த ரௌண்ட் ஆரம்பமானது. அம்மா மனம் நோகக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ஆளுக்கு ஐந்து இட்லி வீதம் சாப்பிட்ட எங்கள் நல்ல மனதை பாவம் அவன் தங்கை புரிந்து கொள்ளவேயில்லை. இப்பொழுது அவள் பார்வை கோபமாக மாறியிருந்தது. சாப்பிட்டுவிட்டு அவன் பாட்டியை சிறிது நேரம் கலாய்த்துவிட்டு உறங்கச்சென்றோம்.

காலை தீர்த்தம் எடுக்கும் சடங்கு என்று காவிரி ஆற்றிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு நாங்கள் போட்ட ஆட்டத்திற்கு பாட்டி எங்களை அடிக்காமல் விட்டது ஆச்சர்யம் தான்! பின் அங்கிருந்து கோயிலுக்கு! பூஜை முடிந்ததும் சாப்பாடு போட்டார்கள்! (ஐ! ஜாலி!). சாப்பிட்டுவிட்டு பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்த நிழற்கூடையில் அருமையான தூக்கத்தைப் போட்டோம்! 

அடுத்த நாள் தான் நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த விருந்து. 'சைவம் சாப்பிட்றவங்க அந்த வரிசையில் உட்காருங்க' என்ற என் நண்பனின் அம்மாவைப் பார்தது எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது! அசைவப் பந்தியில் அமர்ந்து கட்டு கட்டென்று கட்டிய எங்களை அவன் தங்கை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்டுகொள்ளவேயில்லையே! "மார்க்கெட்னு கூட பாக்கலியே" ரேஞ்சுக்கு சாப்பாடு உள்ளே போய்ய் கொண்டிருந்தது. வந்த நோக்கம் இனிதே நிறைவேறிய திருப்தியுடன் வெற்றிலையையும் போட்டுக்கொண்டு வெற்றி வீரர்களாய் வெளியே வந்தோம்! 

அன்று மாலையே சேலம் திரும்புவது என்று திட்டம். "அப்ப நாங்க கெளம்பறோம்மா" என்று அம்மாவிடம் நாங்கள் சொன்ன வார்த்தைகள்,  தங்கை காதில் தேனாய்ப் பாய்ந்திருக்க வேண்டும்! அப்படி ஒரு சந்தோஷத்துடன் திரும்பிப் பார்த்தாள்! அந்த பாசமலருக்கு நாங்களும் ஒரு "பை" சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தோம். வழியனுப்ப வந்த அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். "பார்த்து போங்கப்பா",  "பத்திரம்" என்று என்னென்னவோ சொன்னார்கள். ஆனால் கடைசி வரை ஒன்றை மட்டும் சொல்லவேயில்லை. "இன்னொரு வாட்டி கண்டிப்பா வரணும்ப்பா"

April 18, 2009

உடன்பிறப்பே...

தேர்தல் களேபரங்கள் ஆரம்பித்துவிட்டதல்லவா? இனி அரசியல் கட்சிகள் அடிக்கும் காமெடிக்கு அளவே இருக்காது. ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கு ஏற்ப காமெடி செய்வார்கள். அவற்றில் போன வாரம் நடந்தவற்றில் சில! 

* சுப்ரீம் ஸ்டார் : தேர்தலைப் புறக்கணிக்கத் தான் நினைத்தோம்.
(எப்பங்க? கூட்டணிக்கு ஆள் சிக்குவதற்கு முன்னேயா? ) 

* சந்திரபாபு நாயுடு : தீப்பெட்டி, சிகரெட் விலை ஏறிவிட்டதால் என் தம்பிகள் சிகெரெட் குடிக்க முடிவதில்லை!
(இத சொல்லியா ஓட்டு கேக்க போறீங்க ?)

* விஜய டி. ஆர் : எங்கள் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுவோர் பட்டியலை தயார் செய்துகொண்டிருக்கிறோம்.
(உங்க ஒரு ஆளுக்கு பட்டியல் எல்லாம் எதுக்கு சார்?)

* நவரச நாயகன் :  நான் விருதுநகரில் நிற்கிறேன்
(ஏனுங்க உங்க வீட்லயே நிக்கலாம்ல? எதுக்கு அங்க போறீங்க? ஓ! தேர்தல்லயா ? அப்ப சரி! )

தமிழ்க்குடிதாங்கி : பண பலத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று நினைக்கிறார்கள். கண்டெய்னர், கண்டெய்னராக பணத்தை கொண்டு வந்தாலும், விமானத்திலேயே பணத்தை கொண்டு வந்து கொட்டினாலும் தி.மு.க. அணி வெற்றி பெற முடியாது.
(ஐயையோ... அப்படியா? அப்ப ஐந்து வருடம் கழித்து என்ன செய்யப் போகிறீர்கள்? )

பொன்முடி :   85 வயதான காலத்திலும், சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருபவர் கருணாநிதி.
(உம்மோடு ஒரே நகைச்சுவையாய் இருக்கிறது போங்கள்)

* தங்கத்தாரகை : எந்தவித பயனுமின்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குச் சொந்தமானப் பணத்தை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
(சாமியோவ், நம்மோடதெல்லம் பத்திரமா இருக்குங்களா?)

* கலைஞர் :  உடன்பிறப்பே... 
(ஐயா, இருங்க கொஞ்சம் சிரிச்சுக்கறேன். இப்பெல்லாம் நீங்க இப்படி ஆரம்பித்தாலே சிப்பு வந்துடுது சிப்பு! )

இவை என் காதில் விழுந்தவை மட்டும் தான். இவற்றை விட பெரிய நகைச்சுவைகள் பல நடந்திருக்கலாம். அவற்றை பின்னூட்டுங்களேன்! 

April 12, 2009

கல்யாண சாவு

சீரங்கன் தாத்தா சம்சாரம் அருக்காணி பாட்டி இறந்து போய்விட்டார். வயிரம் பாய்ந்த கட்டை என்று சொல்வார்களே அந்த மாதிரி ஜீவன் அது. சில நாட்களாக இழுத்துக் கொண்டு கிடந்தது என்று பேச்சு.  கொள்ளுப் பேரன் கொள்ளுப் பேத்தி என்று கொஞ்சியாயிற்று. தாத்தா இருக்கும்போதே சுமங்கலியாய் போய்ச்சேர்ந்துவிட்டார். அதனாலேயே யாருக்கும் அதிகம் துக்கம் இல்லை, தாத்தாவைத் தவிர! கல்யாணச் சாவாம் அது. கொண்டாட வேண்டுமாம்.

தாத்தா பாட்டிக்கு ஐந்து மகள் ஒரு மகன். ஒவ்வொருவருக்கும் வாரிசுகள் இரண்டுக்கு குறையாமல். அவர்களின் மனைவி/கணவன்மார்கள், குழந்தைகள் என்று பெரிய குடும்பம். நிறைய பேர் வெளியூரில் இருந்தார்கள். எல்லோருக்கும் ஆள் அனுப்பப்பட்டது. ரேடியோ, பந்தலுக்கு, சமையல் ஆளுக்கு சொல்லிவிட்டார்கள்.  அரை மணியில் பந்தல் போட்டு, ரேடியோ கட்டியாகிவிட்டது. முதல் பாட்டு வழக்கம் போல "சட்டி சுட்டதடா!". வீட்டருகில் இருந்த பூவரச மரத்தடியில் மூன்று கல் வைத்து அடுப்பு கூட்டி சமையல் வேலையும் ஆரம்பமானது.

செத்துப்போனது ஊர்க்கவுண்டர் சம்சாரம் என்பதால் இழவுக்கு (துக்கத்திற்கு) ஏகப்பட்ட பேர் வர ஆரம்பித்தார்கள். வந்திருந்தவர்களில் ஆண்கள் தாத்தாவிடமும், அவர் மகனிடமும் துக்கம் விசாரித்தார்கள். பேருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அருகில் இருந்த தென்னைமர நிழலில் உட்கார்ந்து அரசியல் பேச ஆரம்பித்தார்கள். பெண்கள் எல்லாம் தாத்தாவின் மகள்களிடமும்,  மருமகளிடமும் கட்டிபிடித்து அழுவதும், மாரடித்து அழுவதுமாய் துக்கம் விசாரித்தார்கள். ஐந்து நிமிடம் தான், அதன் பின் வந்திருந்த பெண்களில் கொஞ்ச பேர் வெளியே வந்துவிட்டார்கள். சரியாக "டீ" தயாராக இருந்தது. அழுது வறண்டிருந்த தொண்டையை நனைத்துக்கொண்டு, இவர்கள் ஒரு புறம் அரட்டையை ஆரம்பித்தார்கள். "எப்படியோக்கா! மாரப்பனுக்கும் (மகன்) தொந்தரவு வெக்காம தானும் இம்ச படாம பாட்டி சீக்கிரம் போய் சேந்துடுச்சு". இந்த மாதிரி!

இன்று பாட்டியை எடுத்தால் தான் நாளை மறு நாள் காரியம் செய்ய முடியும். அதற்கப்புறம் அடுத்த மாதம் பிறந்துவிடுகிறது. ஒரே மாதத்தில் காரியம் செய்துவிட வேண்டும். அதனால் ரெய்ப்பூரில் இருக்கும் மகன் வயிற்றுப் பேரன் வரும் வரை வைத்திருக்க முடியாது. இன்றே எடுப்பது என்று முடிவானது. பாட்டி குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் கூரை மேல் சோறு வீசினார்கள் (பாட்டியின் ஆத்மாவிற்கு உணவளித்து பசியாற்றும் சடங்கு). பெண் வயிற்றுப் பேத்திகள் எல்லோரும் பாட்டியை நல்லவிதமாக வழியனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். மலர்த்தேர் (பல்லக்கு) செய்ய ஆள் கூட்டி வந்தார்கள். ஐந்து கோபுரம் உள்ள தேர் தயாரானது. 

பாட்டியை குளிப்பாட்டி கோடித் துணி அணிவித்து வாசலில் உட்கார வைத்தார்கள். பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் ஒரு சிறு குச்சியில் நெய் நனைத்த துணியை சுற்றி நெய்ப்பந்தம் பிடித்தார்கள். பாட்டியை எடுத்து தேரில் கிடத்தினார்கள். சில பெண்கள் பாட்டியை சுற்றி வந்து ஒப்பாரிப் பாட்டு சொல்லி கும்மியடித்தார்கள். மூத்த மகள் பின்வரும் பாட்டைப் படித்தார்.

கொத்து நெளிவளையம் கொத்துசரம் சங்கிலியும் - நீ பெத்த 
குயிலிக்கு தாரேன்னு கொள்ளையாக சொன்னீங்களே!
குயிலிய தான் மறந்து குளத்திலேயே இறங்குனீங்க
*
அரும்பு நெளிவளையம் அரும்புசரம் சங்கிலியும் - நீ பெத்த
அல்லிக்கு தாரேன்னு ஆசையாக சொன்னீங்களே!
அல்லிய தான் மறந்து ஆத்துலயே இறங்குனீங்க.

மகனும், மருமகன்கள் மூவரும் தேரைத் தூக்கினார்கள். சரியாக "போனால் போகட்டும் போடா" பாட்டு ஒளிபரப்பப்பட்டது. பெண்களில் சிலர் பின்னாடியே அழுது கொண்டு வாசல் வரை சென்றார்கள். அதற்கப்புறம் போகமுடியாது. கான காட்டுக்கு (கானல் காடு - சுடுகாடு) வர பெண்களுக்கு அனுமதியில்லை. 

பாட்டி பிரேதம் இருந்த இடத்தில் அவர் ஃபோட்டோ ஒன்று வைக்கப்பட்டது . சுடுகாட்டுகுப் போய் வந்த ஆண்கள் பாட்டி படத்திற்கருகே வந்து வணங்கி விட்டு கிளம்பினார்கள். "நாளன்னிக்கு சாஸ்திரம் (காரியம்), கான காட்டுக்கு வந்தவங்க எல்லாம் மறக்காம வந்துடுங்கப்பா." ஒருவர் அறிவித்தார்.

முக்கால்வாசிப்பேர் கிளம்பிவிட்டார்கள், இருந்தவர்களில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. ரேடியோக்காரரிடம் சொல்லி டெக் எடுத்து வந்து தங்கப்பதக்கமும் ரத்தக்கண்ணீரும் பார்த்தார்கள். மறு நாள் காலையில் மூத்த பேரன் வந்து சேர்ந்தார். வரும் வரை பா(ட்)டியை வைத்திருக்கவில்லை என்று சத்தம் போட்டார். "பாட்டிக்கு ஏதோ கொற வச்சுட்டேன்.  அதான் நான் வரக்கு (வருவதற்கு) முந்தியே போய்ட்டாங்க" என்று தாத்தாவைக் கட்டிக் கொண்டு அழுதார். அடுத்த நாள் காரியம் முடிந்தது. அனைவருக்கும் புதுத்துணி எடுக்கப்பட்டது. "மறு பிறால்" (மகள்கள் செய்யும் )சடங்குக்காக ஆடு ஒன்று வெட்டி சமைக்கப்பட்டு விருந்து பரிமாறப்பட்டது. மகள்களைத் தவிர அனைவரும் கிளம்பிவிட்டார்கள். 

மூன்று நாள் அமளி துமளியாக இருந்த அந்த வீடு துக்க நிறம் பூண்டது. மகனின் நிம்மதி, பேரனின் கோபம், பேத்தியின் பெருமிதம், குழந்தைகளின் ஆரவாரம் இவைகளுக்கு மத்தியில் அமுங்கிப்போயிருந்த தாத்தாவின் துக்கம் வெளிவர ஆரம்பித்தது. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார் தாத்தா! 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More