May 17, 2010

அரட்டை - 18-5-2010

ஆக்ஸிமொரான் தெரியுமல்லவா? தமிழில் முரண்தொடை என்பார்கள்(எச்சூஸ்மி மிஸ்டர் ராஜு... "கிரண் தொடை தெரியும். அதென்ன முரண்தொடை" என்று கேட்கக்கூடாது!).  ஒன்றுக்கொன்று எதிரான பொருள் கொண்ட இரு வார்த்தைகள் ஒன்றாக வந்து ஒரு பொருளைத் தருவது. உதாரணத்துக்கு, ‍நடைபிணம். தின வாழ்க்கையில் நாமும் நிறைய உபயோகித்திருப்போம். இயல்பான நடிப்பு, சிறிய கூட்டம், முழுதாய் காலி, வெட்டிவேலை, தெளிவாக் குழப்பிட்டான், சற்றே அதிகம்... இப்படி நிறைய. செய்யுளெல்லாம் கூட‌ இருக்கிற‌தாம். சினிமா பாட்டுக்கள் கூட! வாச‌மில்லா ம‌ல‌ரிது நினைவிருக்கிற‌தா?

ஆனால் நம் ஆதி அவர்களைக் கேட்டால் உலகிலேயே சிறந்த முரண்தொடை "Happily Married" தான் என்பார்... :)

{}

செம்மொழியான தமிழ்மொழியாம் - கேட்டீர்களா? செம்மொழி மாநாட்டுப்பாடல். கலைஞரின் கவிதை வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் ரஹ்மான்.

டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசிலா, ரஹ்மான், அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, ஹரிஹரன், கார்த்திக், சின்மயி, பென்னி தயள், நித்யஸ்ரீ, நரேஷ் அய்யர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, பிளாசி என‌ முப்ப‌து பேர் பாடியிருக்கிறார்க‌ள் ஆறு நிமிட‌ப் பாட‌லை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர்
யாதும் ஊரே யாவரும் கேளிர். என்று ஆரம்பிக்கிறது பாடல். நிறைய முறை கேட்டால் தான் புரிகிறது. 


அகமென்றும் புறமென்றும்
வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதியந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி ‍- ஆகா!

பிளாசியும் ஸ்ருதியும் சேர்ந்து "கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்" என்று பாடுவது செம க்யூட். 

ரஹ்மானுக்கு நன்றிகள்! ராவணன் பாடல்கள் கூட இப்படிக் கவரவில்லை. :)

{}

குஷ்பூ தி.மு.க வில் சேர்ந்தாயிற்று. இனி சுந்தர்.சி நடிக்கும் படங்களுக்கு ரஹ்மான் இசையமைக்கக்கூடும்... என்ன கொடும குஷ்பூ இது?

{}

பிட் குழுவினரின் சூரிய உதயம்/அஸ்தமனம் போட்டிக்கு நானும் ரௌடிதான் என்ற ரேஞ்சுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தேன். 
அவர்களும் எடுத்துக்கொண்டார்கள். அது.. 



May 16, 2010

கருப்பு வெள்ளை - 1

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச சமம் என்பார்கள். அதிலும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் இன்னும் ஒரு படி மேல்! ஆனால் என்னதான் Grayscale/Monochrome மோடில் குமுறக் குமுற படம் எடுத்தாலும் சில சமயம் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதில்லை. அதற்குத் தீர்வு Post Processing தான். ஒரு வண்ணப் புகைப்படத்தைக் கருப்பு வெள்ளைக்கு மாற்ற நிறைய முறைகள் இருக்கின்றன. Channel Mixer, Adjustment Layer என்று பல வழிகளில் கருப்பு வெள்ளைக்கு மாற்றலாம். இன்னொரு முறை இருக்கிறது. இந்த முறை புகைப்படத்தின் வெளிச்ச அளவை அடிப்படையாகக் கொண்டது. நல்ல ரிசல்ட் தருகிறது. இதற்கு Gorman-Holbert முறை என்று பெயர்.

பின்வரும் படத்தை இந்த முறையில் மாற்றிப் பார்க்கலாம்.


1) படத்தை PS ல் திறவுங்கள்.

2) Lab Color Mode க்கு மாற்றுங்கள். Image > Mode > lab Color.

3) Chanel Palette க்குச் சென்று Lightness Chanel ஐ மட்டும் செலக்ட் செய்யுங்கள்.


4) இப்போது படத்தை Grayscale க்கு மாற்றுங்கள். Image > Mode > GrayScale. a மற்றும் b Chanel களை விட்டுவிடுங்கள்.


5) Ctrl கீயை Press செய்து கொண்டே Gray Channel மீது Click செய்யுங்கள். படத்தின் Bright Pixel எல்லாம் தேர்வு செய்யப்பட்டிருக்கும். Select > Inverse மூலம் Dark Pixel களைத் தெரிவு செய்து கொள்ளலாம்.

6) படத்தை RGB க்கு மாற்றிக்கொள்ளுங்கள். Image > Mode > RGB Color.

7) Layer Palette சென்று New Solid Color Layer Create செய்யுங்கள். ஏதாவது ஒரு கலரைத் தேர்ந்தெடுக்கலாம்.


8) Solid Color Layer ன் Blend Mode ஐ Multiply க்கு மாற்றுங்கள்.

9) Shift + Ctrl + Alt + E சேர்த்து அமுக்கி, இதுவரை செய்த மாற்றங்களையெல்லாம் புதிய லேயருக்கு மாற்றிவிடலாம்.

10) Blend Mode ஐ Overlay க்கு மாற்றுங்கள். Opacity ஐ 15 லிருந்து 25 வரை வைக்கவும்.

11) Filter > Other . Highpass ல் Radius ஐ உங்களுக்குப் பிடித்தவாறு மாற்றவும்.

12) இப்போது Layer > Flatten Image மூலம் இரண்டு லேயர்களையும் ஒன்றாக்கிக் கொள்ளுங்கள்.

மாற்றிய பின் கிடைத்த படம்!



இந்த முறை முழுக்க முழுக்க படத்தின் Brightness ஐ அடிப்படையாகக் கொண்டது. அதிக Contrast உள்ளப் புகைப்படங்களுக்கு மற்றும் Portrait களுக்கு இது மிகவும் ஏற்றது. இந்த முறை எல்லாப் புகைப்படங்களையும் ஒரே மாதிரி தான் மாற்றுகிறது. Still Its Good!

May 12, 2010

பெய்யெனப் பெய்த மழை.


எங்களது ஒரு விவசாயக் கிராமம். வாய்க்கால், ஏரிகள், கிணறுகள் என்று நீர் நிலைகள் சூழ்ந்த கிராமம். ஆனால் இன்று எல்லாம் வ‌ற‌ண்ட‌ நிலையில். ம‌ழை என்ற‌ ஒன்றே ம‌ற‌ந்து போன‌ பிற‌கு எங்க‌ள் விவ‌சாய‌ம் ந‌ம்பியிருந்த‌தெல்லாம் ஆழ்துளைக் கிண‌றுக‌ளை ம‌ட்டுமே. ஆயிர‌ம் அடி அல்ல‌து ஆயிர‌த்து முன்னூறு அடி வ‌ரை தோண்டி அங்கு கிடைக்கும் நீர்க்கால‌க‌ளையும் உறிஞ்சியெடுத்துவிட்டோம். ஆழ்துளைக் கிண‌றுக‌ளும் இன்றோ நாளையோ என்ற‌ நிலையில் இருக்கின்ற‌ன. கிடைக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரில் இரு தென்னை மரங்களின் தாகம் மட்டுமே தீர்க்க முடியும். ஒரு காலத்தில் க‌‌ரும்பு, நெல், வாழை, ம‌ஞ்ச‌ள் என்று விளைத்த‌ எங்க‌ள் நில‌மெல்லாம் க‌ல‌க‌ம் செய்து சோள‌த்துக்கு மாறிவிட்ட‌ன. அல்லது சும்மாயிருக்கின்றன. 

இந்த நிலை நாங்களே தேடிக் கொண்டது. விவசாயத்துக்குக் கிடைத்த முக்கியத்துவம் நீர் ஆதார மேம்பாட்டுக்குத் தரப்படவில்லை. நிலத்தடி நீர் மேம்படுத்தப்படவில்லை. இருக்கும் நீரும் சரியாக வகையில் உபயோகப்படுத்தப்படவில்லை. உதாரணத்துக்கு ஒரு வயல் தாண்டியிருக்கும் ஒற்றைத் தென்னையாக இருந்தாலும் வாய்க்கால் வழியாகத் தான் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மழை. ஊரைச் சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு கதவுகளாக, ஜன்னல்களாக மாறின. ஏரியிலிருந்த கருவேல மரங்கள் கூட விறகுகளுக்காக வேட்டையாடப்பட்டன. மழைப்பொழிவு குறைய ஆரம்பித்தது. மரங்களின் முக்கியத்துவத்தையும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தையும் எடுத்துச்சொன்னவர்கள் பரிகசிக்கப்பட்டார்கள். சாலையின் ஓரங்களிலும் மரக்கன்று வைக்க அனுமதி மறுத்தோம். மரம் வளர்ந்து பெரிதானால் நிழல் தரும். நிழல் விழும் இடத்தில் வெள்ளாமை பாதிக்கும். அதனால் எங்கள் வயல்களையொட்டிய சாலையோரங்களில் மரம் வளர்வதை அனுமதிப்பதில்லை. மரங்களை வெட்டக்கூடாதாமே? பரவாயில்லை. எங்களிடம் உள்ள ஆடுமாடுகளை ஏவிவிட்டால் போகிறது.

மும்மாரி பெய்த மழை தூரத்து சொந்தம் போல எப்போதாவது தலைக்காட்ட ஆரம்பித்தது. 60, 100 அடியில் இருந்த நீர்க்கால்கள் எல்லாம் வற்றிப்போயின. பூமியைத் துளைக்க ஆரம்பித்தோம். 250 அடியில் ஆரம்பித்தது 1300 அடி வரை கீழிறங்கியது. அந்த ஆழத்தில் இருக்கும் நீர்மட்டங்கள் கூட முகம் காட்ட மறுத்த போது தான் சூழ்நிலையின் தீவிர‌ம் புரிந்தது. இன்று, அருகிலிருக்கும் காவிரி ஆற்றிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. "ஒரு வருடம் தானே? காவிரித்தண்ணீர் வந்துவிடும் அப்புறம் சமுத்திரம் மாதிரி தண்ணீர் வந்துவிடும்" என்று திளைத்திருந்தோம். 

மண்வாசமே மறந்து போயிருந்த இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் வெந்துகொண்டிருந்ததொரு இரவில், விழ ஆரம்பித்தன துளிகள். . பேய்மழை என்று சொல்வார்களே, அந்த மாதிரி பெய்து தீர்த்தது. ஒரே மணி நேர மழையில் இரண்டு ஏரிகள் நிரம்பிவிட்டன. பத்து வருடத்தில் இது தான் பெரிய மழை என்றார்கள் பாட்டி. கிணற்றிலெல்லாம் தண்ணீர் வந்துவிடும். இன்னும் ஒரு வருடத்துக்குத் தண்ணீர் பிரச்சனையில்லை. காட்டுவேலைக்கு வந்தவரிடம் தாத்தா இவ்வாறு பேசிக்கொண்டிருந்தார் "அப்புக்குட்டி, காட்டோரத்துல இருக்குற அந்த 2 வேப்பஞ்ச்செடியையும் வெட்டிரு, ஈரம் காஞ்ச ஒடனே காட்ட ஓட்டிப் போட்டுரலாம்"

ஹ்ம்ம்ம்ம்ம்ம்...... 

May 10, 2010

புகைப்படம்...

1) அவரைக்குப் பூவழகு...


2) பையனை ரொம்ப போரடிச்சுட்டேன் போல! 


3) சுண்ணாம்பாறு - பாண்டிச்சேரி. 


4) சார்மினார்.

5) முஸ்தஃபா முஸ்தஃபா... 



6) வாழ வேண்டிய வயசு.


உங்கள் மேலான கருத்துக்கள் மேம்படுத்திக்கொள்ள உதவும். Start Music! 

April 28, 2010

கிரிப்டோக்ராஃபி

கிரிப்டோக்ராஃபி என்றால் தெரியுமல்லவா? தகவல்களை மறைத்துப் பரிமாற்றிக்கொள்ளும் முறை பற்றியப் படிப்பு. மறைத்து என்றால் சங்கேதங்களாக இருக்கலாம். குறியீடுகளாக இருக்கலாம், விக்கிரமாதித்தன் கதைகளிலோ அல்லது டான் ப்ரௌன் நாவல்களிலோ வருவது போல புதிர்களாகவும் இருக்கலாம். இன்றும் கிராமங்களில் ஜாடை பேசுவது என்று ஒரு வழக்கு உண்டு. வெளியாருக்குத் தெரியாத மாதிரி(சில சமயம் தெரியும் மாதிரியும்) வார்த்தைகளை அமைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் புரியும் வண்ணம் பேசுவார்கள். இவ‌ற்றையெல்லாம் கிரிப்டோக்ராஃபியில் சேர்ப்பார்க‌ளா என்று தெரிய‌வில்லை. ஆனால் கிரிப்டோக்ராஃபி என்று முறைப்ப‌டி வ‌கைப்ப‌டுத்தியுள்ள‌து நான்காயிரம் ஆண்டுக‌ளுக்கு முந்தைய மெசபடோமிய எழுத்துக்கள் சிலவற்றை. எனது அபிப்ராயப்படி முதல் மனிதர்களான ஆதாம் ஏவாளுக்கு இடையூறாக‌ மூன்றாவது மனிதன் வந்த அந்த கணத்தில் கிரிப்டோக்ராஃபி பிறந்திருக்க வேண்டும். :)

இந்தச் சங்கேதங்கள், குறியீடுகள் பற்றிய படிப்புக்கு ஆங்கிலத்தில் கிரிப்டாலஜி/கிரிப்டோக்ராஃபி என்றும் தமிழில் மறையீட்டியல் என்றும் பெயர். கிரிப்டோ(ரகசியமாக) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது தான் கிரிப்டோக்ராஃபி. இந்த ரகசியத் தகவல் பரிமாற்றத்தில் மூன்று நிலைகள் இருக்கின்றன. 1. என்கிரிப்ஷன் 2. ட்ரான்ஸ்மிஷன் 3. டிகிரிப்ஷன்.

நீங்கள் மறைக்க வேண்டிய தகவலை (Plain Text) யாருக்கும் புரியாத எழுத்துக்களாக(Cypher Text) மாற்றுவது என்கிரிப்ஷன். என்கிரிப்ட் செய்ய உப்யோகப்படுத்தப்படும் வழிமுறையை "கீ" என்பார்கள். ட்ரான்ஸ்மிஷன் என்பது மாற்றப்பட்ட செய்தியை உங்கள் பார்ட்னருக்கு அனுப்புவது. நமக்கு மிகவும் பழக்கப்பட்ட முறை புறாக்காலில் கட்டி அனுப்புவது. நிறைய அவகாசமிருந்தால் தெரிந்தவர்களின் தலையை மொட்டையடித்து, அதில் சைஃபர்டெக்ஸ்ட்டை பச்சை குத்தி முடி வளர்ந்த பிறகு கூட அனுப்பலாம்.
டிக்ரிப்ஷன் என்பது சைஃபர்டெக்ஸ்ட்டை உடைத்து அனுப்பப்பட்ட செய்தியைப் பெறுவது. பொதுவாக என்கிரிப்ட் செய்ய மற்றும் உடைக்க ஒரே "கீ" யை உபயோகிப்பார்கள்.

ரொம்ப‌க் க‌ஷ்ட‌ப்ப‌டுத்திக்கொள்ளாமல் சில என்கிரிப்ஷன் வகைகளைப் பார்ப்போம். மிக‌ எளிய முறை பதிலீடு (Substitution). அதாவ‌து ஒரு எழுத்துக்குப் ப‌தில் குறிப்பிட்ட‌ இன்னொரு எழுத்து.

உதார‌ண‌ம். Army is In. இந்தச் செய்தியை dupblvlq என்று மாற்றலாம். எப்படியென்றால் Aக்கு பதில் மூன்று எழுத்து தள்ளி இருக்கும் d ஐ எழுதிக் கொள்ள வேண்டும். R க்கு பதில் u. இந்த மாதிரி.... இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் ஜூலியஸ் சீசர். செய்தியைப் பெறும் படைத்தளபதிக்கு இந்த முறை எத்தனை எழுத்துத் தள்ளியிருக்கிறது என்றுத் தெரிந்திருக்கும்.

இன்னொரு முறை:

உதாரணத்துக்கு உங்கள் காதலிக்கு Meet Me In Inox at three என்ற செய்தியை அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கீழ்கண்டவாறு எழுதுங்கள். முதல் வரியில் முதல் ஐந்து எழுத்துக்கள். இரண்டாவது வரியில் அடுத்த ஐந்து.....



எழுதிய முறைக்கு மாறாக மேலிருந்து கீழாக படியுங்கள். Meoheixrenaetitemnt என்று வரும். அவ்வளவுதான். இதை உங்க்களுக்குத் தோதான ட்ரான்ஸ்மிஷன் முறையில் அனுப்புங்கள். பின் விளைவுகளுக்குக் கம்பெனி பொறுப்பல்ல.

பழங்காலத்தில் கிரிப்டோக்ராஃபி என்று பெரிதாக எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. நிறைய பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாததால், சாதாரண எழுத்துருக்களே போதுமானதாக இருந்தன. கல்வியறிவு வளர வளர, தகவல்களைப் பாதுகாப்பதில் அதிகக் கவனம் தேவைப்பட்டது. அப்போது ஆரம்பித்தது தான் கிரிப்டோக்ராஃபி. குறியீடுகள், கலைத்துப் போடப்பட்ட எழுத்துக்கள், ஒரு எழுத்துக்குப் பதில் மற்றொரு எழுத்து என மாற்றம் காண ஆரம்பித்தது இந்தத் துறை. ஒவ்வொரு என்கிரிப்ஷன் முறையும் வெகு சீக்கிரத்தில் காலாவதியாக ஆரம்பித்தது. அதுவும் கணிப்பொறியின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பெர்முடேஷன் காம்பினேஷன் முறை, மற்றும் புள்ளிவிவர (ப்ளைன்டெக்ஸ்ட் எந்த மொழி என்று தெரிந்தால் அந்த மொழியில் அதிகமாக சேர்ந்து வரும் எழுத்துக்களை வைத்து டிகிரிப்ட் செய்ய ஆகும் நேரத்தைக் குறைப்பது. உதாரணத்துக்கு ஆங்கிலம் என்றால் the, -ent, -nd இப்படி) அடிப்படையிலெல்லாம் சைஃபர்டெக்ஸ்ட் உடைக்கப்பட்டது அதனால் மிகச் சிக்கலான என்கிரிப்ஷன் முறைகள் தேவைப்பட்டன. இப்பொழுதெல்லாம் Bits, Bytes, Hexa Decimal என்று ரொம்பவே ஃபிலிம் காட்டுகிறார்கள்.

கிரிப்டோக்ராஃபியின் முக்கிய நோக்கம் தகவல் பாதுகாப்பு! தகவல் திருடப்படாமல் இருக்க உங்கள் மின்னஞ்சலை என்கிரிப்ட் செய்து அனுபுதல் முதற்கொண்டு பாஸ்வேர்டு, ஏ.டி.எம் பின் நம்பர், டிஜிட்டல் கையெழுத்து, பெறப்படும் தகவல் நடுவில் எங்க்கேயும் மாற்றப்பட்டதா என்று சரிபார்த்தல், அனுப்பியது இன்ன ஆள் தான் என்று சரிபார்த்தல் என்று கிரிப்டோக்ராஃபியின் பயன்பாடுகள் எராளம்.

இன்று பிரபலமான கிரிப்டோக்ராஃபி முறைகளில் சில SHA1 & Md5 என்றான் நண்பன். Md5 முறையில் "Karki is getting married Soon" என்ற வாக்கியத்தை என்கிரிப்ட் செய்தேன்.

bda25b3704807770ebf1de41e2461c41 என்று வருகிறது!

April 21, 2010

கிரையோஜெனிக்



சந்திரயான் – 1 எதிர்பார்த்த அளவு செயல்படாதது, கிரையோஜெனிக் – ஜி.எஸ்.எல்.வி தோல்வி போன்ற தொடர் நிகழ்வுகள், 2012 ல் சந்திரயான் – 2 திட்ட்த்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. சந்திரயான் 2, நிலவுக்கு மனிதனையனுப்பும் இந்தியாவின் திட்டம். ஆனால் திட்டமிட்டபடி சந்திரயான் – 2 நிலவுக்கு செலுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிப்பதாலும், 2011ல் விஜயகாந்த் முதல்வராகிவிட்டால் ராக்கெட் எஞ்ஜினுக்கே வேலையிருக்காது என்பதாலும் நாம் கவலையை விட்டுவிடலாம். கிரையோஜெனிக் எஞ்ஜின் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

கிரையோஜெனிக்ஸ் என்பது மிகக் குறைந்த வெப்ப நிலையில் உள்ள் பொருட்களின் தன்மையைப் பற்றிய படிப்பு. குறைந்த என்றால் -150 செல்சியஸுக்குக் கீழே. கிரையோஜெனிக்ஸ் படிப்பில் இவ்வளவு குறைந்த வெப்பநிலைகளை அளக்க செல்சியஸுக்குப் பதில் கெல்வின் என்ற அளவு பயன்படுகிறது (0 டிகிரி செல்சியஸ் = 273 கெல்வின்). இந்த வெப்பநிலையில் பொதுவாக அனைத்து வாயுக்களும் திரவமாகிப் போகின்றன. திரவ நிலையிலுள்ள இந்த வாயுக்கள் திடீரென்று விரிவாகி (ஆவியாகி) வாயு நிலைக்கு மாறும் போது கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. இந்த சக்தி தான் ராக்கெட்டை சுமார் 30,000 கி.மீ உயரம் வரை உந்தித் தள்ள உதவுகிறது(Thrust). கிரையோஜெனிக் இஞ்ஜின்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் தான் இயங்குகின்றன. இந்த இயந்திரங்களில் எரிபொருளாக இருப்பவை  திரவ ஹைட்ரஜன் (LH2) மற்றும் திரவ ஆக்சிஜன்(LOX). இந்தத் திரவங்கள் எப்படி வாயுநிலைக்கு மாறுகின்றன, எவ்வளவு சக்தி கிடைக்கிறது என்பதெல்லாம் ரொம்ப சயன்ஸ் என்பதால் விட்டுவிடலாம்.

நமது ஜி.எஸ்.எல்.வியைப் பார்ப்போம். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் செலுத்துதலில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாவது நிலையில் திரவ எரிபொருளும் பயன்படுகின்றன. இரு நிலைகளில் சுமார் 130 கி.மீ உயரம் வரை செலுத்தப்படுகிறது. அதன் பிறகு கிரையோஜெனிக் இயந்திரம் இயங்க வேண்டும். முதல் இரு நிலைகளை வெற்றிகரமாகக் கடந்த ஜி.எஸ்.எல்.வி மூன்றாவது நிலையில் தோல்வியுற்றது. கிரையோஜெனிக் எஞ்ஜின் இயங்க ஆரம்பிக்கவேயில்லை. சோதனைகளில் நமது கிரையோஜெனிக் இயந்திரங்கள் வெற்றிகரமாக இயங்கியிருந்தாலும், விண்வெளியில், 130 கி.மீ உயரத்தில் இயக்குவது பெரும் சவால் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தியா கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இறங்கியதன் பின்னணியில் வழக்கம்போல அமெரிக்காவே இருக்கிறது. 90 களில் இந்திய-ரஷ்ய ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கவிருந்த இந்தத் தொழில்நுட்பம், அமெரிக்காவின் தலையீட்டால் கிடைக்காமல் போனது. அமெரிக்கா இதற்குச் சொன்ன காரணம் “இந்தியா இந்த்த் தொழில்நுட்பத்தை ஏவுகணைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடும் என்பது. அதனால் சொந்தமாக இந்த்த் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடையும் முயற்சி ஆரம்பிக்கப்பட்ட்து. அன்று ஆரம்பித்தப் பயணத்தின் ஒரு படிக்கட்டு இந்த்த் தோல்வி. படிக்கட்டு மட்டுமே. ஏனெனில், இன்னும் ஒரு வருட்த்தில் மீண்டும் ஒரு முறை ஜி.எஸ்.எல்.வி செலுத்தப்படுமாம்! With More Brilliance, With More Excellence! All the Best!

March 11, 2010

ஈ.எஸ்.பி

                                             

ஏதாவது ஒரு ரெஸ்டரண்டில் நண்பனுடன் அம‌ர்ந்திருப்பீர்க‌ள். லேவண்டர் கலர் சுடிதாரணிந்த சொர்க்கம் ஒன்று புன்னகைத்தபடி உங்கள் இருக்கையைக் கடந்து போகும். "அட, இது மாதிரி ஏற்கெனவே நடந்த மாதிரி இருக்கே" என வியப்பீர்கள். அல்லது "இந்த மாதிரி நடக்கும் என ஏற்கெனவே எனக்குத் தோன்றியிருக்கிறது" என சந்தோஷப்படுவீர்கள். உங்கள் நண்பர் கூட "ஒருவேளை உனக்கு ஈ.எஸ்.பி (Extrasensory perception) இருக்கும்" என உற்சாகப்படுத்துவது போல கலாய்த்திருப்பார். இது மாதிரி நடப்பதற்குக் காரணம் நம் மூளை ஒரே காட்சியை இரண்டு முறை பெறுவது தானாம். வழக்கமாக, ஒரு காட்சியை இரண்டு கண்களும் ஒரே சமயத்தில் மூளைக்கு அனுப்புகின்றன.இரு கண்களுக்குமிடையே Co-Ordination இல்லாத சில நேரங்களில், அனுப்பப்படும் இரு காட்சிகளுக்கிடையே மில்லி செகண்ட்கள் வித்தியாசம் இருக்கும். உதாரணத்துக்கு, அந்த சுடிதார் சொர்க்கம் ஒரு கண் மூலமாக ஏற்கெனவே மூளைக்குச் சென்று பதிவாகியிருக்கும். சில மில்லி செகண்ட்கள் கழித்து அதே காட்சி மூளைக்கு மறுபடியும் போகும். ஏற்கெனவே நினைவில் பதிவாகியிருக்கும் அந்தக் காட்சித் திரும்பவும் மூளைக்குக் கிடைப்பதால் தான் இப்படித் தோன்றுகிறதாம்.

இன்னொரு வகை Co-Ordination பிரச்சனை இருக்கிறது. தூக்கத்திலிருந்து கண்விழித்ததும் கை கால்களை அசைக்க முடியாமல் மிரண்ட அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். பொதுவாக நாம் தூங்கும் போது நம் கை கால்கள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன(sleep paralysis). கனவுகளுக்கு React செய்யாமல் இருப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. தூக்கம் தெளிந்தவுடன், சரியாகச் சொல்வதென்றால் கான்ஷியஸ் வந்தவுடன், கை கால்கள் இனி அசையலாம் என்று மூளையிடமிருந்து சிக்னல் கிடைக்கும். சில நேரங்களில் கான்ஷியஸ் வந்தும் உடலுக்கு சிக்னல் கிடைக்காமல் இருக்கும். அந்த சமயங்களில் தான் அசைய நினைத்தாலும் அசைய முடியாமல் திணறியிருப்போம். மிரட்டும் உருவங்கள், அமானுஷ்ய ஒலி, கையைக் காலை யாரோ பிடித்து அமுக்குகிறார்கள் என்னும் புகார்களெல்லாம் இதனால் தான்.
       
அட.... ஈ.எஸ்.பி என ஆரம்பித்து வேறு எங்கோ போகிறது. ஈ.எஸ்.பி (Extra Sensory Perception) என்பதைச் சாதாரண புலன்களுக்குச் சாத்தியப்படாத உணர்ச்சிகளை உணர்தல்(!) எனச் சொல்லலாம். இந்த மாதிரி அறிவியலுக்கு அப்பாற்பட்டதை பாராநார்மல் என்று சொல்வார்கள். அனைவருக்கும் தெரிந்த ஒரு வகை எதிர்காலத்தைக் கணிப்பது. இன்னும் சில வகைகள் இருக்கின்றன. டெலிபதி, தொலைவில் நடக்கும் விஷயத்தை அறிவது, ஆவிகளுடன் சவகாசம் வைத்திருப்பது(சிக்ஸ்த் சென்ஸ் நினைவிருக்கிறதா?), ஒரு பொருளை வைத்துக்கொண்டே ஒரு ஆளைப் பற்றிக் கணிப்பது(Psychometry). ஒரு பொருளை உருவம் மாற்றுவது கூட ஈ.எஸ்.பி தான்.

இந்த ஈ.எஸ்.பி பற்றிய ஒரு தியரி பின்வருமாறு கூறுகிறது. அனைவருக்கும் ஆழ்மனதில்  ஈ.எஸ்.பி சக்தி/உணர்ச்சி இருக்கிறது. ஆழ்மனது வெளி உலகுடன் தொடர்பு கொள்ளும் போது தான் புற மனதுக்குத் தெரிகிறது. அது வரை இந்த உணர்ச்சி அறியப்படாமலே போய் விடுகிறது.  அதாவது எல்லோருக்குமே ஈ.எஸ்.பி திறன் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அதை அறியும் சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. இது ஒரு சாம்பிள் தான். நிறைய‌ தியரிகள் வந்துவிட்டன. ஈ.எஸ்.பி எங்கு ஏற்படுகின்றது என ஒன்று, இரண்டு ஆழ்மனங்கள் உள்ளன என ஒன்று.. இப்படி நிறைய!

ஆனால் அறிவியலைப் பொறுத்தவரை ,ஈ.எஸ்.பி விஷயத்தில் குழப்பமான நிலையே நீடிக்கிறது. ஏனெனில் அறிவியலில் எல்லாமே டெஸ்ட் கேஸ் தான். எல்லாவற்றிலும் பாஸ் செய்தாக வேண்டும். சுஜாதா அவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால், ராமசாமிக்கு ஈ.எஸ்.பி இருக்கிறதென்றால் அதே தெருவில் வசிக்கும் குப்புசாமிக்கும் ஈ.எஸ்.பி இருக்கவேண்டும். விஞ்ஞானம் நம்பாவிட்டாலும் போலீஸ் ஈ.எஸ்.பியை நம்புகிறது போல! நிறைய கேஸ்களில் ஈ.எஸ்.பி குற்றவாளியை நெருங்க ‌உதவியிருக்கிறதாம்.

நித்யானந்தருக்கு ஈ.எஸ்.பி இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?

February 22, 2010

ஸ்னேஏஏக் பாபு!

                                       
அண்ணனைப் பாம்பு கடித்துவிட்டது. மரவள்ளிக்கிழங்குக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சுகையில் கடித்துவிட்டு ஓடிவிட்டது. என்ன பாம்பு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாள் மருத்துவமனையில் இருந்தார். இப்போது விஷம் முறிந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்த மாதிரி தருணங்களில், நோயாளியை விசாரிக்கிறேன் பேர்வழி என அந்தந்த வீடுகளில் கூட்டம் கூடிவிடுவார்கள். இரவு பதினொரு மணி வரை அரட்டைக்கச்சேரி தான். பாம்புக்கடியை விசாரிக்க வந்தால் பாம்புகள் பற்றி அலசி ஆராய்வார்கள். பேசும் ஆட்களுக்குத் தகுந்த மாதிரி விஷயங்கள் இருக்கும். ஆனால் பேசுவது என்னவோ பாம்புகளைப் பற்றித்தான். ஆண்கள் பொதுவாகத் தங்கள் வீரதீரச் செயல் பற்றி அள்ளி விடுவார்கள். "அங்க அந்த பாம்பு அடிச்சேன், இங்க இந்த பாம்பு அடிச்சேன்" என்று ஒரே ரணகளம் தான். பெண்கள் எல்லாம் பாம்பு பார்த்து பயந்த கதைகள். "வைக்கப்போருக்கடிய‌‌ பாம்ப பாத்துட்டு அவுங்கள கூப்புட்றக்குள்ள ஓடிப்போச்சுக்கா" இந்த தினுசில். பாட்டிகள் குழுவில் தான் பாம்புகளின் அதிசய சக்திகள், நாகமாணிக்கம் என அமானுஷ்யம் பேசுவார்கள். நாகமாணிக்கம் எடுக்கும் முறையை ஒரு நூறு முறை பேசியிருப்பார்கள். பாம்பைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டால் ஒன்றும் செய்யாது என்கிற ரீதியில் தான் பேச்சு இருக்கும். என்னை மாதிரி குழந்தைகளோ(ம்க்கும்!) ஆச்சரியாமாக அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்போம்!

கிராமப்புறங்களில் வாழ்க்கை அதுவும் விவசாயிகளின் வாழ்க்கை பாம்புகளோடு இயைந்தது. மாதத்துக்கு மூன்று முறையேனும் பாம்பு அடிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி பாம்புகள் பற்றியக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. பெரியப்பா பாம்பு அடிப்பதில் கில்லாடி. ஆனால் அவரையே கதிகலங்கச் செய்த பாம்பு ஒன்று இருக்கிறது(இருந்தது?). வண்டிச்சாலையில் பரண் மீது தான் கோழி அடையும். அங்கு நுழைந்த பாம்பு முட்டைகளையெல்லாம் குடித்துக்கொண்டு சுகஜீவனம் நடத்தி வந்திருக்கிறது. ஒரு நாள் முட்டை எடுக்க பரண் மீதேறிய பெரியப்பா அலறியடித்துக்கொண்டு இறங்கினார். பாம்பு ஒன்று கண் அருகில் சீறியதாம். பின் ஜமா சேர்த்துப் பரணைப் பிரித்து அந்தப் பாம்பை அடித்துவிட்டார்கள். கருநாகம். ஆறடிக்கு இருந்தது. முட்டையை விழுங்கியிருந்ததால் அசையமுடியவில்லை. அதனால் பெரியப்பா தப்பினார். இன்றும் அதைப் பற்றிப் பேசினால் சிலிர்க்கும் அவருக்கு. இன்னொரு கதை பாம்பு ஒன்றைக் கொத்தியே சாகடித்த நான்கு வான்கோழிகள் பற்றியது. இது மாதிரி நிறைய சம்பவங்களும் கதைகளும் பெரிய அளவில் பேசப்படும்.


ஊரைப் பொறுத்தமட்டில், பாம்புகள் இம்சையானவை என்றாலும் பேசுவதற்கு சுவாரஸ்யமானவை. நாகப்பாம்புகள் தெய்வங்கள் என்ற நம்பிக்கை எங்கள் ஊரிலும் உண்டு. ஆனால் எல்லா ஊரிலும் போல எங்கள் ஊரில் பாம்புப்புற்றுக்கு யாரும் பால் வார்ப்பதில்லை. ரத்தம் தான். கோழி அறுத்து தலையைப் படைப்பார்கள். மீதி வழக்கம் போல நமக்குத்தான். ஆனால் சிக்கிவிட்டால் நாகப்பாம்பும் பரலோகம் போகவேண்டியதுதான். அவற்றுக்கு மட்டும் இறுதி மரியாதை செய்து எரிப்பார்கள். தெய்வமாச்சே!.


எப்பொழுது பாம்புகள் பற்றி பேச ஆரம்பித்தாலும், நமச்சிவாயக்கவுண்டரைப் பற்றி பேசிவிட்டுத்தான் சபையைக் கலைப்பார்கள். அவர் பாம்புக் கடிக்கு திருநீறு போடுவார். விஷ‌க்கடிக்கு அவர் வீட்டுக்குப் போய் நீறு போட்டுக்கொண்டால் போதும் என்பது நம்பிக்கை. நான்கைந்து வருடங்களுக்கு முன் வரை நானறிய யாரும் மருத்துவமனைகளைத் தேடிப்போனதில்லை. எவ்வளவு மோசமான நிலையிலும் அவர் போடும் நீறு தான் மருந்து. மயங்கிக்கிடந்தவர்கள் கூட நீறு போட்டதும் எழுந்துவிடுவதை நிறைய முறைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ சில மனக்கசப்புகளால் நீறு போடுவதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தான் மருத்துவமனை. ஆனால் அவர் நீறு போடுவது இன்னும் வியப்பாகத்தான் இருக்கிறது. எங்கள் ஊர் பாம்புகளுக்கு விஷம் இல்லையா? அல்லது இவர் நீறு போட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தான் குணப்படுத்துகிறதா என்றெல்லாம் கூடத் தோன்றியிருக்கிறது(பாழாய்ப்போன படிப்பு இந்த மாதிரியான விஷயங்களை நம்ப‌ மறுக்கிறதே). ஆனாலும் ஆராய விருப்பமில்லை. அவர் நீறு கொடுத்தார், குணமான‌து என்பதே போதுமாயிருக்கிறது.



February 20, 2010

அண்ணா ஹாக்கி லீக்


இந்த வருடம் அண்ணா ஹாக்கி லீக் ( சுருக்கமாக AHL) பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் வரை நடக்க இருக்கிற‌து. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி, நமது தேசிய விளையாட்டான ஹாக்கியின் பக்கம் ரசிகர்களின் ஆர்வத்தைக் கவ‌ரும்(நிலைமையைப் பார்த்தீர்களா?) ஒரு சிறு முயற்சி.



ஹாக்கியில் இந்தியா வல்லரசு என்பதெல்லாம் பழங்கதை. அணித் தேர்வில் விளையாடிய பணம்,வீரர்களின் அதிருப்தி, விளையாட்டை ஊக்குவிப்பதில் அரசு காட்டிய மெத்தனப்போக்கு எல்லாம் சேர்ந்து அணியைப் பலவீனமாக்கின‌. இதெல்லாம் விட முக்கியக் காரணம் நமது ஆர்வம். உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட உலகக் கோப்பை ஹாக்கிக்குத் தருவதில்லை. எல்லாம் சேர்ந்து ஹாக்கியை பழங்கதையாக‌ மாற்றிவிட்டன. இந்தியாவின் தேசிய‌ விளையாட்டு என்ற‌ அந்த‌ஸ்தை கிட்ட‌த்த‌ட்ட கிரிக்கெட் எடுத்துக்கொண்ட‌ இந்த நிலையில், ஹாக்கியைப் பிர‌ப‌ல‌ப்ப‌டுத்தும் இந்த‌ முய‌ற்சி பாராட்டுக்குரிய‌து



இனி AHL! 2008 ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கிய AHL போட்டிகளுக்கு இது மூன்றாம் ஆண்டு. முதல் வருடம் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் கொண்ட நான்கு அணிகளுடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் இப்பொழுது எம்.ஐ.டி மற்றும் வேலம்மாள் கல்லூரி அணிகளும், இன்ஃபோசில் மற்றும் சி.டி.எஸ் மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த அணிகளும் பங்குபெறுகின்றன.வரும் வருடங்களில் மேலும் பல அணிகள் பங்குபெறும் என நம்புவோம்.



பார்வையாள‌ர்க‌ளுக்கும் ப‌ரிசுகள் உண்டு. ஆட்ட‌த்தின் முத‌ல் பாதி முடிந்த‌தும் வெற்றி பெற‌ப்போகும் அணியைச் ச‌ரியாக‌க் க‌ணிப்ப‌வ‌ர்க‌ளுக்கு, பெனால்டி மூல‌ம் கோல் செய்யும் பார்வையாள‌ர்க‌ளுக்கு என பரிசுகள் காத்திருக்கின்றன.

எங்கே : அண்ணா பல்கலைக் கழக மைதானம்.
எப்போது : பிப்ரவரி 22 முதல்.



நான் போறேன்!.



டிஸ்கி : 2010 பிப்‍ 28 முதல் மார்ச் 13 வரை டெல்லியில் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடக்க இருக்கின்றன. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பது வேறு விஷயம்!


February 10, 2010

அரட்டை - 10-2-2010

காலம் கடந்து கிடைக்கும் உதவி வீண் என எங்கோ படித்தது. அது நீதிக்கும் பொருந்தும். பத்து வருடம், பதினான்கு வருடம் என வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? உதாரணத்துக்கு ருசிகா வழக்கு. 90களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட டென்னிஸ் வீராங்கனை. குற்றம் சாட்டப்பட்டவர் ரத்தோர். பத்தொன்பது ஆண்டுகள் கழித்து அவருக்குக் கிடைத்த தண்டனை ஆறு மாதம் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம். இதை விட அந்தப்பெண்ணின் தகப்பனை வேறு விதமாக‌ அசிங்க‌ப்ப‌டுத்த‌ முடியாது. இன்னும் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. ரத்தோர் குற்றமற்றவர் என்று கூட நிரூபிக்கப்படலாம் யாருக்குத் தெரியும். அப்புறம், கசாப் என்ற‌ தியாகி ஒருவரைப் பராமரித்து வருகிறோமே. அந்த வழக்கு என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை. தமிழ்நாட்டில், சங்கரராமன் கொலை வழக்கு. எல்லா சாட்சிகளும் பல்டி அடித்தாகி விட்டது. அடுத்தது என்ன? வழக்கு தள்ளுபடி. "ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது" என்பதில் பின்பாதி சரி தான். ஆனால் ஓராயிரம் குற்றவாளிகள் தப்பித்தால் என்ன ஆவது? தப்பித்துக்கொள்ளாலாம் என குற்றங்கள் பெருகாதா? தார்மீக அடிப்படையில் பார்த்தால் கூட பாதிக்கப்பட்டவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டாமா? வயசாகிப்போன நீதித்துறை!!!!!!!!


{}

முதல்வர் கலைஞருக்கு ஐநூற்றுச் சொச்சமாவது தடவையாக‌ தமிழ்த்திரையுலகினர் எடுத்த பாராட்டு விழாவில் அஜித் மனம் திறந்து குமுறியிருக்கிறார். இந்த மாதிரி விழாக்களுக்கு வரச்சொல்லி நடிகர்கள் மிரட்டப்படுவதாக‌ப் புலம்பியிருக்கிறார். இது வேறா?

அவ‌ர் வாரி வழங்குவதும், இவர்கள் விழா எடுப்பதுமாக வருடம் முழுக்க ஒரே கோலாகலம் தான். ஏதோ நல்லா இருந்தா சரி. மற்ற துறையெல்லாம் செழிப்பாக இருக்கிறது தமிழ்நாட்டில். பாவம் சினிமாத்துறை மட்டும் நொடித்துப்போய்விட்டது. நடக்கட்டும் நடக்கட்டும்

{}

கோவா பார்த்தாகிவிட்ட‌து. ஒரு வெளிநாட்டுக்காரியைப் பார்த்து ம‌ண‌ம் முடிக்கும் ல‌ட்சியம் கொண்ட‌ மூன்று இளைஞ‌ர்க‌ளின் க‌தை. (சிங்காரவேலன் கவுண்டமணி நினைவுக்கு வந்தார் : இதுவல்லவோ லட்சியம்....). ப‌ட‌ம் ஒவ்வொருக் காட்சியும் இளமைத்துள்ளல்(அட, அது இல்லீங்க!). சம்பத்,அர்விந்த் காதல் அளப்பறை. தில்லு தான் ரெண்டு பேருக்கும். தனித்தனிக் காட்சிகளாகப் பார்க்கும்போது வசீகரிக்கும் படம் மொத்த‌மாகப் பார்க்கும்போது அவ்வளவாகக் கவரவில்லை. .


{}

வலையுலகின் காதல் மன்னன் கார்க்கி' காதல் வாரம் கொண்டாடுகிறார். 'கார்ப்பரேட் கம்பர் நர்சிம்' காதலுக்காக சிலப்பதிகாரம் வரைச் சென்று காதலியின் அழகைப் பாட ஐடியா தருகிறார். ஆதி அவர்கள் ஒரு படி மேலே போய் தங்கமணி ஸ்பெஷல் என பதிவு போடுகிறார். இப்படி ஆளாளுக்குக் காதலைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். நம் பங்குக்கு ஏதாவது செய்யாவிட்டால் எப்படி?

எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது.

துன்ப‌த்திலும் ஒரு இன்ப‌ம்.
என்ன‌வ‌ளின் திரும‌ண‌த்துக்கு வ‌ந்த
அவ‌ள் தோழிக‌ள்!
What a Figures What a Figures....

நீதி : திரிஷா கிடைக்க‌லைன்னா திவ்யா!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More